/ கலி காலம்: ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 8

Saturday, September 1, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 8


பாருங்கள்...ஒரு பதிவை ஒரு வாரம் எழுதி அடுத்த வாரம் தொடர்வதற்குள் ஒன்பது ஊழல்கள் நம் நாட்டில். ரயில் திகில் எழுதலாம் என்றால் கரி கிலி கிளப்புகிறது...சரி விடுங்கள், நம் கதைக்கு மீண்டும் வருவோம்.

புதிதாக "கலி காலம்" வருபவர்கள்,  ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 7 படித்து விட்டு மீண்டும் இங்கு வரவும். அதன் தொடர்ச்சியே இந்தப் பதிவு.

என்னுடன் வந்த இளைஞர் ரயில் முழுதும் ரோந்து போய்விட்டு வந்தவுடன் என்னை திகிலடைய வைக்கும்படி அப்படி என்னதான் சொன்னார்? "S7 மட்டும் தான் நமக்கு சரிப்படும். இரண்டும் பாத்ரூம் பக்கம். வைப்பதற்கும் கவனிக்கவும் வசதி." மேலும் தனது நண்பரின் பெயரைச் சொல்லி, "அவனைத்தான் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறேன் எலித் தொல்லை வேறு கடித்து கிடித்து வைத்து விடாமல் இருக்க வேண்டும்" என்றார்.

ஆஹா... ஒரு வேளை ஒயர் கியர் பாத்ரூமில் fit பண்ணியிருப்பார்களோ? என்று என் எண்ணம் எட்டு ஊருக்கு கட்டம் போட மற்றொருவர் என் வயிற்றில் கத்தியை சொருகினார். ஆம். "சரி கத்தி யார்கிட்ட இருக்கு?" என்று அவர் கேட்டவுடன் பசியிலுள்ள வயிறு பச்சை மிளகாய் சாப்பிட்டது போல  ஒரு உணர்வு வாயிலிருந்து வயிறு வரை பரவியது. மணி பதினொன்றை தாண்டியது. அவர்களின் மேல் ஒரு பார்வையை வைத்தபடி, "upper berth" ஏறி காலை நீட்டி படுத்தபடி கண்களை அவர்கள் பக்கம் ஓட்டினேன். அனைவரும் எங்கோ கிளம்பிச் சென்றனர். 1997 டிசம்பரில் Srirangam அருகே Pandian Express ரயிலில் குண்டு வெடித்தபோது நான், குண்டு வெடித்த பாத்ரூமிற்கு பக்கத்து பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த ஞாபகம் மூளையிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட கண்களை பிளந்து வெளிவந்து விடும் போல இருந்தது.

12 மணி அடிக்க பத்து நிமிடங்கள் இருக்கையில், பெட்டியின் விளக்குகள் மீண்டும் போடப்பட்டன ‍ அவர்கள் மூன்று பேர் திரும்பி விட்டனர். அவர்களின் கையில் இப்போது ஒரு அட்டைபெட்டி இருந்தது. எல்லாம் ரெடி என்றார் ஒருவர். கட்டை விரலை உயர்த்திக் காட்டினார் மற்றொருவர். வண்டி கிளம்பியதிலிருந்து முதல் முறையாக அவர்கள் அனைவரும் செல்போனை வெளியில் எடுத்தனர். "10 minutesதான் இருக்கு எல்லாரையும் இங்க வந்துர சொல்லு" என்றார் ஒருவர். வரிசையாக நான்கைந்து போன் உரையாடல்கள் சட்சட்டென்று நடந்தேறின. போதாத குறைக்கு "ரயிலையே உலுக்கனும்டா" என்று ஒருவர் punch line வேறு வைத்தார்.அடுத்த ஐந்து நிமிடங்களில் அங்கு 7 பேர் இருந்தனர்.

இயற்கை அழைப்பின் சாக்கில் நான் berth விட்டு கீழே இறங்கினேன். நான் கீழே இறங்குவதை பார்த்த அவர்கள், என்னைப் பார்த்து குறுநகை பூத்தனர். ‍ நானோ, மூன்று நாட்கள் முன்பு செய்த‌ பூரியை வாயில் மெல்லுகையில் சிரிக்கச் சொன்னால் எப்படியிருக்குமோ அதைப் போல அவர்களை பார்த்து "ஒரு மாதிரி"யாக சிரித்து வைத்தேன்.

கழிவறையின் உள்ளே நான் இருக்கையில் "ஹோ" என்ற இரைச்சல் வெளியில் கேட்டது. ஒரு நிமிடம் கழித்து நான் என் இடத்திற்கு வந்தால்...

அந்த அட்டைப் பெட்டி பிரிக்கப்பட்டிருந்தது....ஒருவர் முகம் முழுக்க cake வழிய நின்று கொண்டிருந்தார். வேறொன்றுமில்லை சார்...அந்த நண்பர் குழுவில் ஒருவருக்கு பிறந்த நாள். ஒவ்வொருவரும் வெவ்வேறு பெட்டியில் RACயில் அகப்பட்டு கொண்டதால் இத்தனை களேபரம். அனைவரையும் தேடிப்பிடித்து கூட்டி வந்திருக்கிறார்கள். எனக்கும் சிறிது கேக் கொடுத்தார்கள். அவர்களிடம், "நான் ரயிலில் ஏறியதிலிருந்தே அல்வா சாப்பிட்டுக்கொண்டே தான் வந்தேன்" என்று சொல்ல முடியுமா? கேக், அல்வா இரண்டுமே இனிப்புதான் இல்லையா சார்? நான் வாங்கிக் கொண்ட கேக் அல்வா போன்றே இருந்தது!



1 comment:

  1. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அனுபவம், இது போல் ஏற்படுவதுண்டு... எழுத்து நடை அருமை...

    ReplyDelete