/ கலி காலம்: October 2015

Sunday, October 11, 2015

நயன்தாரா - அதிர்ச்சி தரும் ரகசியம்...!

ரகசியம் என்று சொல்லும் பொழுதே ஒரு சுகம் நம்மைத் தழுவுவதைப் போல இருக்கிறது இல்லையா சார்? அதுவும் அடுத்தவரை பற்றிய ரகசியம் என்றால் சுகமோ சுகம். சாதாரணமாகவே இப்படியென்றால் நயன்தாராவைப் பற்றிய ரகசியம் என்றால் கேட்கவா வேண்டும்? வாருங்கள், பலருக்கும்
 தெரிந்திராத‌ அப்படிப்பட்ட ரகசியத்தை படிப்போம்...

இதுவரை பார்த்திராத கேள்விப்பட்டிராத உருவில் நயன்தாராவை சென்ற வாரம் பார்க்க நேர்ந்தது...பேசாமலேயே ஆயிரம் [சமூகத்திற்கு பயனுள்ள] வார்த்தைகள் சொல்லும் கண்கள்...அடுத்தவரை கூர் தீட்டுவதற்கு ஏற்பட்ட முனை போன்ற நாசி...

இருங்க சார் இருங்க...இந்த நயன்தாரா நம் புத்திக்கும் சித்திக்கும் உணவு தரும் எழுத்தாளர். நேருவின் உறவினர். விஜயலக்ஷ்மி பண்டிட்டின் மகள். கிட்டத்தட்ட 90 வயதை நெருங்கும் முதுமையின் பக்குவ களையை முகத்தில் சுமப்பவர். இந்த வாரம் தலைப்புச் செய்திகளில் அடிபட்டார். கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதை எதிர்த்து தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை துறப்பதாக அறிவித்தது செய்தியாகியது. இப்படித்தான் சார் நயன் தாரா என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். அதுவும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அதையும் திருப்பிக் கொடுத்திருக்கிறார் என்று பல ரகசியங்கள் நமக்குத் தெரிய வந்திருக்கின்றன...விருதை திருப்பித் தருவதால் நசுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து பளபளவென ஆகி விடுமா என்பது இந்தப் பதிவுக்குப் பொருந்தாத விஷயங்கள்...எனவே அதை விட்டு விடுவோம்.

நம் சமூகத்தின் அழகே அழகு சார்...அதாவது நம் சமூக அவலத்தின் அழகே அழகு...! பரவலாக மக்களால் அறியப்படும் "தகுதி" முதலில் அயோக்கியர்களுக்கு கிடைக்கிறது பின்பு அரசியல்வாதிகளுக்கு கிடைக்கிறது (என்னய்யா எதுக்கு இரண்டையும் தனித் தனியே எழுதுகிறாய் ஒரு முறை எழுதினால் போதாதா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது) அதன் பின், நிஜத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத, சமூகத்திற்கு துரும்பேனும் கிள்ளிப் போடாத நடிக நடிகைகளுக்குக் கிடைக்கிறது. ஆசிரியர்களையும் எழுத்தாளர்களையும் "அம்போ" என்று விட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடு நடை போடும் சமூகமல்லவோ நமது...!?

சமீபத்தில் ஒரு பேருந்து பயணத்தின் பொழுது ஒரு தினசரி கையில் சிக்கியது. பசியுடன் இருக்கும் கழுதை, பெயர் பார்த்தா பேப்பர் சாப்பிடும்?
புரட்டிய பொழுது "கேள்வி பதில்" பகுதி கண்ணில் தட்டியது. சாதாரணமாக கை கால்களில் தான் புல்லரிக்கும் ஆனால் அப்பகுதியை படிக்கப் படிக்க கண்களிலேயே புல்லரிப்பு ஏற்பட்ட்டது...தீந்தமிழ் பாகெடுத்து சிந்தையில் வழிய விட்டு புத்தியில் அமிர்தம் சுரக்க வைக்கும் அறிவுசார் கேள்விகளும் அதைவிட அசரடிக்கும் பதில்களுமாய்...அதில் ஒரு கேள்வி. "நயன்தாரா நாய் வளர்க்கிறாரா?" என்னும் அந்த அற்புதமான கேள்வியை அனுப்பியவர் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தால் மன்னிக்கவும். கேள்வியை கேட்டவர் மீதோ அப்பத்திரிக்கை மீதோ அதை படிக்க வைத்த அந்த பேருந்தின் மீதோ அப்படியொரு "நேரத்தை" எனக்குக் கொடுத்த காலம் மீதோ எள்ளளவும் எனக்கு கோபமில்லை. மாறாக...நன்றிகள்...ஆம்...
நயன்தாரா பற்றிய பயனுள்ள செய்திகள் எதுவுமே இச்சமூகத்திடம் கைவசம் இல்லையா என்று அப்பொழுது தோன்றிய கனப்பொழுது எண்ணம் இன்று ஈடேறுகிறது...

அப்படிப்பட்ட ஒரு செய்தியை பகிர்ந்து கொண்ட திருப்தி எனக்கு. வாசித்த உங்களுக்கும் தானே?

பின் குறிப்பு: மாயா படம் நன்றாக இருக்கிறதாமே சார்...