/ கலி காலம்: January 2013

Sunday, January 20, 2013

புத்தகக் கண்காட்சியும் மிளகாய் பஜ்ஜியும்...

வாகன வரிசை புழுதியைக் கிளப்ப சாரை சாரையாக மக்கள் கூட்டம் திருவிழா நெரிசல் போல இருக்க‌ நந்தனம் மைதானத்தில் உண்மையிலேயே புத்தகத் திருவிழா உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இடமும் வலமுமாக மொத்தம் இருபத்தாறு வரிசைகளில் நமக்குத் தேவையான பதிப்பகத்தையும் நினைவில் வைத்திருக்கும் நூல்களையும் கண்டுபிடிக்க‌, சற்று "உழைப்பு" தேவைப்பட்டாலும் அது மனதுக்கு உற்சாகம் தரும் உழைப்பு. பதிப்பக வரிசையை பெரிய வெள்ளைத் தட்டியில் ஒவ்வொரு வரிசை முன்பாக பெரிதாக வைத்திருந்தாலும் அதன் பயன் முழுவதுமாக கிடைக்க நாம் விட்டு விடுவோமா? எனவே பலர் அதன் அருகே  chair போட்டு தங்களால் இயன்ற அளவு மறைத்தபடி அமர்ந்திருந்தனர்.

"who is வை.மு. கோதைநாயகி" என்று கேட்ட சிறுவனுக்கு பொறுமையாக பதிலளித்து, அவரின் புகைப்படத்தை காட்டுகிறேன் என்று ஒரு stall நோக்கி அழைத்துப் போன ஒரு அம்மா ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பட வைத்தார்.

வழக்கம் போல "முன்னேற்றம் காண முத்துக்கள் நூறு" போன்ற "வளர்ச்சி" பற்றிய புத்தகங்கள் நிரம்பிய ஸ்டால்களில் மக்கள் அலைகடலென திரண்டு இடித்துப் பிடித்தபடி "முன்னேற" முயன்று கொண்டிருந்தனர்.

"இங்கு RSS புத்தகங்கள் கிடைக்கும்" என்ற board தொங்கும் stall எதிரே பெரியார் புத்தகங்கள் பெருமளவு கிடைக்கும் ஸ்டால். ஜனநாயகம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்படுவதில் நாம் பெருமிதம் கொள்ளலாம் சார்...

சிறுகதைத் தொகுப்புகளை தேர்ந்தெடுப்பதில் நமக்கு மிகுந்த கவனம் வேண்டும். வெவ்வேறு தொகுப்புக்களில் ஒரே கதை மீண்டும் மீண்டும் இடம் பெறுவதை பல பதிப்பகங்களில் பார்க்க முடிந்தது. ஜெயகாந்தன் போன்றவர்களின் கதைகளுக்கு இந்த நிலை நிறைய நேர்ந்திருக்கிறது.

உயிர்மை உள்ளே லா.ச.ரா சிறுகதை தொகுப்பின் அட்டையில் வரையப்பட்டிருக்கும் அவர் முகத்தை சற்று நேரம் பார்த்தபடி இருந்தேன். அவர் எழுத்தின் மூலம் நாம் காலத்தையே வார்த்தைகளில் நிரப்பி நிரப்பி சாப்பிடலாம் இல்லையா சார்?

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் வழக்கமாக சில அரிதான பழைய புத்தகங்கள் கிடைக்கும். இந்த முறை எதுவும் சிக்கவில்லை. வருடங்கள் போகப்போக, chennai book exhibition என்பது தேடுதல் அதிகமாகவும் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் குறைவாகவும் தருவது போலத் தோன்றுகிறது. உங்களுக்கு?

முன்னரே திட்டமிட்டபடி, பத்து பதினைந்து பதிப்பகங்களில் சுமார் நான்கு மணி நேரம் நன்கே கழிந்த பின், வயிறு "நானும் இருக்கிறேன்" என்று கூவத் துவங்க, "சாப்பிட வாங்க" அழைப்பை ஏற்க நேர்ந்தது...அங்கு எனக்கு முன் "cash counter" வரிசையில் நின்றிருந்த ஒருவர், தினமும் ஒரே menuவா இல்லை வேறு வேறா என்று விசாரித்து தெரிந்து கொண்டார். பக்கத்திலிருந்த அவரின் நண்பரிடம் "நாளைக்கு மிளகாய் பஜ்ஜி try பண்ணலாம்டா" என்றார். நான் அவரைப் பார்க்கவும் அவர் என்னைப் பார்க்கவும், இருவரும் லேசாய் சிரித்துக் கொண்டோம். அப்பொழுதே நான்  மிளகாய் பஜ்ஜி "try"  பண்ணுவதற்காகத்தான் வரிசையில் நிற்கிறேன் என்று அவருக்குத் தெரியாது!

பிறகு பஜ்ஜி வாங்குவதற்கு நிற்கும் பொழுது, கல்லூரி மாணவி ஒருவர் "அஞ்ஞாடி" என்றால் என்னடி? என்று தோழியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொருவர், "வாழைக்காய் பஜ்ஜி ரொம்ப சிவப்பா இருக்கே...பவுடர் அதிகம் போட்டிருப்பானோ" என்று தன் உறவினரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எத்தனை விதமான மனிதர்கள் சார்!

Thursday, January 17, 2013

பவர் ஸ்டார் புதுக்கட்சி துவக்கம்?

என்னய்யா இது புதுசாய் ஒரு குண்டு வீசுகிறாய் என்று ஆச்சரியமா? பதிவை படித்து முடித்த பின் ஆச்சரியம் போய் எதிர்பார்ப்பும் ஒரு வித "பாசப் பிணைப்பும்" நம் பவர் ஸ்டார் மீது வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது...வாருங்கள், என்ன சேதி என்று பார்ப்போம்...

சில மாதங்கள் முன்பு வரை சிலர் மட்டுமே அறிந்திருந்த பவர் ஸ்டார், நீயா நானா கோபிநாத் "உபயத்தில்" பலரின் நெஞ்சுக்குள் இடம் பிடித்தார். பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்! தற்போது கிட்டத்தட்ட தமிழ்நாடே லட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது...

பவர் ஸ்டாரின் பண்புகள் இன்றைய அரசியலுக்கு எப்படி பொருந்தி வருகிறது என்று பட்டியலிட்டு ஒப்பிட்டு பார்ப்போம்:

பண்பு 1: பத்திரிகைகள் இவரை கோமாளி போலவே நடத்தின. இவரின் பேட்டிகளை காமெடி போல பிரசுரித்தன. பின்னர் சேனல்களில் அழைத்து, நையாண்டி என்ற பெயரில் முடிந்த அளவு அவமானப் படுத்தினர். இவை அனைத்திற்கும் இவரின் முகத்திலிருந்து சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது.

நியாயமாக கேட்கப்படும் நிருபரின் கேள்விகளுக்குக் கூட "வரியா சேர்ந்து தீக்குளிக்கலாம்" என்று தப்பிக்கும் அரசியல்வாதிகளும், நாக்கைத் துருத்தும் நாகரீகம் அற்ற அரசியல்வாதிகளும், தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் முடிந்தது கதை என்ற நிலையில் அனைவரும் தன் காலில் விழுந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில், அனைவரின் நக்கல்களுக்கும் சிரித்துக் கொண்டிருக்கும் நம்மவருக்கு "புன்னகை தலைவர்" என்று பட்டம் கொடுக்கலாம் தானே சார்?

பண்பு 2: இவர் தனக்கு 5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது காமெடிதான். ஆனால் இன்று பல letter pad கட்சிகள் தங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்றனர் என்று அடித்து விடுகிறார்களே அதை விடவா சார் இவர் காமெடி செய்கிறார்? அரசியல் அரிச்சுவடியை சரியாகத்தானே செய்கிறார்?

பண்பு 3: தானே தயாரித்து நடித்து வெளியிட்ட படத்தை பார்க்க எவரும் வராமல் தியேட்டர் காற்றாடியதால், தானே காசு கொடுத்து படத்தை ஓட்டுவதாக இவர் மீது விமர்சனம் இருக்கிறது. என்ன சார் இது அநியாயம்? நம் அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொள்வதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா? அவர் பணத்தை வைத்துக் கொண்டு அவர் publicity செய்தால் நமக்கென்ன வந்தது...

பண்பு 4: இவர் விளம்பர பிரியராம். எனவே எப்படியாவது தன் பெயர் வெளியில் தெரியுமாறே எல்லா வேலைகளையும் செய்வாராம்...ஏதாவது சாக்கில் போஸ்டர்களில் பல்லைக் காட்டிக் கொண்டு திரியும் விளம்பர மோகம் பிடித்த‌ தமிழ் நாட்டில் இதெல்லாம் ஒரு விஷயமா சார்?

குறிப்பு: சமீபகாலம் வரை அனைத்து பேட்டிகளிலும் cooling glass அணிந்து வந்தவர், இப்போது மாறி விட்டார். அற்புதமான வாய்ப்பையும் நழுவ விட்டு விட்டார். அவரின் கண்ணாடி பழக்கம் பற்றி நக்கலாக கேள்விகள் கேட்கும் பொழுது, தனது cooling glassஐ தடவியபடி, "இருட்டறையில் உள்ளதடா உலகம்" என்னும் பாரதிதாசன் வரி என்னை மிகவும் பாதித்து விட்டது. சமூகத்திற்கு வெளிச்சம் ஊட்டுவதே என் பணி என்று எப்போதும் நினைவில் நிறுத்தவே cooling glass மூலம் என்னை நானே இருட்டாக்கிக் கொள்கிறேன்" என்று ஒரு போடு போட்டிருந்தார் என்றால், நாமும் "ஆஹா, என்னே ஒரு தமிழ் ரசனை, என்னே ஒரு சமூக அக்கறை" என்று மெய்சிலிர்த்துப் போய் "பக்குவத் தமிழன் பவர் ஸ்டார்" என்று பட்டம் கொடுத்து பாராட்டியிருப்போம்...பட்டம் கொடுத்தே கெட்ட கூட்டம்தானே சார் நாம்...

இப்போது சொல்லுங்கள்...இந்த பதிவின் தலைப்பு விரைவில் உண்மையாகும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை என்று நம்மால் சொல்ல முடியுமா? 

Saturday, January 5, 2013

தமிழ்நாடு பார்த்த‌ 2012


வேறொன்றுமில்லை சார்...புது வருடம் நெருங்கினால் போன வருடத்தில் சமூகத்தில் நிகழ்ந்தவை, சிறந்தவை, மறந்தவை, கடந்தவை என்று அனைத்து ஊடகங்களும் ஆளாளுக்கு கட்டி வெளுக்கிறார்கள். நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? அதான் தமிழ் கூறும் நல்லுலகை தத்தளிக்க வைத்த முக்கிய நிகழ்வுகளை அலசுவோம் என்று புறப்பட்டால்...அப்பப்பா...எத்தனை விஷயங்கள்...மேலே படியுங்கள்...

(i)திருப்பதியில் தரப்படும் லட்டு முன்னர் போல இல்லை என்று பலர் வருத்தப்பட்டனர். நிர்வாகம், சமூகம் என அனைத்து பக்கங்களிலும் தினமும் நம்மிடம் நீட்டப்படும் "சார்...லட்டு" கசப்பது பற்றி நாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.

(ii)"ஈமு" என்றால் ஈசியான முன்னேற்றம் என்று தமிழர்களுக்கு விளக்கப்பட்டது.

(iii)கடல் திரைப்படத்திலிருந்து சமந்தா விலகக் காரணம் என்ன என்று பத்திரிகைகள் பெரும் கலக்கம் அடைந்தன. அதை படித்த நாமும் கவலை கொண்டோம்.

(iv)180 நாட்கள் கெடாமல் இருக்கும் பால் சுவைக்கும் பாக்கியம் பெற்றனர் தமிழ் மக்கள். ஆனால், அது 180 நாட்கள் வருமா என்பதை எப்படி சோதிப்பது என்று தெரியாமலும், 6 மாதம் வரை பால் வாங்காமல் நாம் பாலைவனத்திலா இருக்கப் போகிறோம் என்று புரியாமலும் விழித்தனர்.

(v)ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் சேர்ந்தாலே அதை இரண்டு முறை எண்ணிப் பார்க்கும் நம்மைப் போன்ற சாமானிய பொதுஜனம், அசால்டாக அடிக்கப்பட்ட இருநூறு கோடி முன்னூறு கோடியையெல்லாம் "இவர்கள்" எப்படி "கணக்கு" செய்வார்கள் என்று அவ்வப்பொழுது தலையை சொறிந்த படி 2012ஐ ஓட்டியது...

(vi)ஒரு கிணறு, அதுவும் வற்றாத கிணறு காணாமல் போய்விட்டது என்று சில வருடங்களுக்கு முன் வடிவேலு புகார் கொடுத்தார் ‍ - சினிமாவில். சென்ற வருடம், சில ஆறுகள், பல குளங்கள் உண்மையிலேயே காணாமல் போயின. வடிவேலுவின் காமெடி உண்மையாகிப் போனதை எண்ணி, உச்சி குளிர்ந்தபடி பொழுது போனது நமக்கு.

(vii)புகாரில் சிக்கிய பெருந்தலைகள் புன்னகைக்கும் புகைப்படத்தை, அவர்கள் அடித்த‌ கொள்ளையின் அளவுக்குத் தகுந்தாற்போல‌ பெரிதாக அச்சிட்டு அகமகிழ்ந்தன பத்திரிகைகள். வரும் ஆண்டில், "ஊழல் சிறப்பிதழ்" போன்றவற்றை படிக்கும் பேறும் நமக்குக் கிட்டலாம்.

(viii)"தர்பூசணியை டம்ளர் மறைக்குமா" என்ற புதுமொழி பொய்க்கும் வண்ணம் 120 நாட்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத ஒருவர், முன் ஜாமீன் கிடைத்த மூன்றே நாளில் சிரித்தபடி வந்து நின்று போஸ் கொடுத்ததைக் கண்டு எவரும் அதிர்ச்சியடையவில்லை. "இதெல்லாம் சகஜமப்பா" என்று அவரவர் வேலையை அவரவர் பார்த்தபடி வருடத்தைக் கடத்தினர்.

(ix)அன்னிய முதலீட்டில் அடிக்கப்பட்ட அந்தர் பல்டிகள், இந்த வருடம் நிறைய ஊர்களில் சர்க்கஸ் நடக்காத ஏமாற்றத்தை போக்கியது.

(x)வருடா வருடம் தொடர்வது போல, "மர்ம அழகிகள்" தமிழ் பத்திரிகைகளில் கைது செய்யப்பட்டனர். தாமதமாகும் நீதி பற்றிய சந்தேகங்கள் எழும்போது "சட்டம் தன் கடமையை செய்வதாக" அறம் காப்பவர்கள் பேட்டி கொடுத்தார்கள். பள்ளிக்குள்ளேயே மாணவன் ஆசிரியையை கொன்றும், பட்டப்பகலில் பல கொலைகளைக் கண்டும், இந்தியா வல்லரசாகும் கனவுக்குத் தோள் கொடுத்து தமிழகம் பீடு நடை போட்டது.

சென்ற வருட top 10 நிகழ்வுகள் எப்படி? 2012 அற்புத ஆண்டு தானே சார்? என்னப்பா நீ முக்கியமான நிகழ்வுகளை சொல்கிறேன் என்ற பெயரில் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறாய் என்பீர்கள்தானே?காதை பக்கத்தில் கொண்டு வாருங்கள். ஒரு விஷயம் சொல்கிறேன்.

"குறுவை ஒன்றுமில்லாமல் போனது. சம்பா செத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை, அரசாணை ஆக்க அவகாசம் கேட்டு ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை பற்றி கவலையின்றி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தியும் பார்த்தும் கொண்டிருக்கிறோம்..." இப்படியெல்லாம் கொஞ்சம் சீரியஸாக எழுதத்தான் சார் விருப்பம். ஆனால் "பொறுப்பு" என்பதற்கு இக்காலத்தில் "கிறுக்கு" என்று அர்த்தம் என்று என் நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். நாம் "கிறுக்கு" இல்லைதானே? அதான் சார் பேசாமல் மேற்படி list மட்டும் எழுதி முடித்து விட்டேன்.