/ கலி காலம்: December 2015

Friday, December 25, 2015

இளையராஜாவுக்கு ஒரு கடிதம்...


மூன்று தலைமுறைகளின் உணர்வுகளுக்கு ஊட்டம் கொடுத்து, இசையின் வழியே மனதின் ஆழ் அகலங்களை காண்பதற்க்கான நாட்டம் கொடுத்து, வாழ்க்கையின் எதிர்பாரா கணங்களின் தோன்றும் வாட்டம் தடுக்கும் அருமருந்தாய், மென்மையும் மேன்மையும் சிந்தனையிலும் செயலிலும் ஊட்டும் நல்விருந்தாய், எண்ணற்ற இதயங்களின் வயதின் தடங்களில் நினைவின் நொடிகளை இசையின் இழைகளின் வழியே பதியச் செய்த உங்களுக்கு, இசையுண்டு வாழும், அதன் வழியே வாழ்க்கையை காணும் கோடிக்கணக்கான மனங்களில் ஒருவனாக எழுதுவது...

இன்றைய சமூகம் தாந்தோன்றித்தனமான போக்கில் திரிவதன் முழுமுதற் காரணம் போதிய வழிகாட்டுதல்கள் இன்மையே என்பதை தங்களைப் போன்ற முதியவர்கள் நன்கு அறிவீர்கள். மூத்தோர் வாக்கை கேட்கும் நிலை இன்றைய சூழலில் இல்லை எனினும், அத்தகையோர் பேசும் தவறான தருணங்களை நன்கு உள்வாங்கிக் கொள்ளும் பொறுப்பற்ற புத்திசாலித்தனம் இங்கு நிறையவே உண்டு. எனவே பெரியவர்கள், அதுவும் பொதுவெளியில் பிரபலமான முதியவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு பல்மடங்கு வீரியமானதாக பலம் பெறுகிறது.

சமூகத்தை நல்வழிப்படுத்துவதை "லோகோ"விற்கு ஏற்ற பன்ச் லைனில் மட்டுமே வைத்துக்கொள்ள விரும்பும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு எதிர்மறை எண்ணங்களை வளர்க்கும் செய்திகளே தங்களை வளர்த்துக் கொள்ளும் தீனியாக தெரிகின்றன. எனவே தான் அவற்றை மீண்டும் மீண்டும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அப்படியொரு நிகழ்வுதான் சமீபத்தில் நீங்கள் உதிர்த்த "அறிவு இருக்கிறதா" என்னும் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வலம் வந்தது.

தனிமனித உணர்வு தத்தளிக்கும் தருணத்தில் சற்றும் பொறுப்பின்றி ஒரு நிருபரால் கேட்கப்பட்ட கேள்விதான் அதை தூண்டியது எனினும், தூண்டிலில் விழாமல் இருப்பது எப்படி என்று சொல்லித்தருவது அல்லவா பெரியோரின் கடமையும் சிறியோரின் எதிர்பார்ப்பும்...பொறுப்பற்ற தன்மையே சுதந்திரம் என்பது இன்றைய சமூகத்தில் எழுதப்படாத விதியாகி விட்டது. ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் அந்த விதியை முன்னின்று எழுதியவையே ஊடகங்கள் தான். எனவே அத்தகையோரிடம் பண்பு எதிர்பார்க்க இயலாது தான். ஆனால் உங்களிடம்....? எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே ஏமாற்றமும் இருக்கிறது. "எந்த சூழ்நிலையில் எதைப் பற்றி கேள்வி கேட்கிறாய்" என்பதோடு நின்றிருந்தால் நீங்கள் முன்மாதிரியாக எங்கள் முன் நின்றிருப்பீர்கள். அதை தாண்டியதால், எங்களுக்கு ஒருமாதிரியாக இருக்கிறது.

இசை மென்மையையும் பொறுமையையும் வளர்க்கும் என்பார்கள். தாலாட்டப்படும் வயதிலிருந்து நாயாட்டம் வாழ்க்கை நம்மை அலைக்கழிக்கும் பொழுது வரை உங்கள் இசை அத்தகைய மென்மையையும் பொறுமையுமே எங்களுக்கு தந்திருக்கிறது. இசையின் கடலிலேயே மூழ்கியிருக்கும் நீங்கள், இதனை பொய் என்று நாங்கள் நினைக்கும் வண்ணம் எந்தவொரு செயலையும் எங்கள் முன் நிகழ்த்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்....

இளையராஜாவின் இயற்பியல் படிக்க‌...