/ கலி காலம்: April 2013

Sunday, April 21, 2013

கவலைகள் போக்க எளிய வழி!


பங்களாவில் வசித்தாலும் சரி பிளாட்பாரத்தில் வசித்தாலும் சரி, வாழ்க்கையில் மேடுபள்ளங்களும், அதனால் ஆளாளுக்கு ஒரு வண்டி கவலைகளும் நம் அனைவருக்குமே இருக்கிறது...ஆனால் நுனி விரல் நோகாமல் நொங்கு தின்பதுதான் நமக்குப் பிடிக்கும். தத்துவ விசாரங்கள், பிறப்பை உய்வதற்கான‌ வழிகள் என்றெல்லாம் பேசினால் கலிகாலத்தில் எடுபடுமா சார்? கருத்தான வாழ்க்கை என்பதையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அனைத்தையும் காமெடியாக்கி திரிந்தால்தானே சார் நாமும் கலிகாலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமை கிட்டும்...எனவே அந்த வழியிலேயே சென்று கவலை நீக்க வழி கிடைத்தால் கொண்டாட்டம்தானே நமக்கு?

காலையின் பரபரப்புக்குத் தயாராகும் பொழுதும், களைத்துப் போய் இரவில் வீடு திரும்பிய பிறகும், சிறிது நேரம் டிவிக்கு கண்ணைக் கொடுக்கையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நம் தொலைக்காட்சி சேனல்கள் எத்தனை போற்றத்தகு மக்கள் சேவை ஆற்றுகிறது என்ற ஞானமும் எனக்குக் கிட்டியது.  காமெடி நிகழ்ச்சிகள் பல சேனல்களின் வந்தாலும், மக்களின் கவலை தீர்க்கும் அருமருந்தாக, "காமெடி நிகழ்ச்சி" என்ற அறிவிப்பில்லாமல், பல சேனல்களில் ஒரு நிகழ்ச்சி வருகிறது சார்..."கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நகைச்சுவை நிகழ்ச்சி அல்ல" என்று ஒரு கார்டு போட்டால் நன்றாக இருக்கும்!

நமக்கான "கனவு வீடு" எப்படி வாங்குவது என்று பல்வேறு நில பிரமோட்டர்கள் தங்கள் சரக்கை கடை விரிக்கும் விளம்பரங்கள் தான் அந்த நிகழ்ச்சி.

முதலில் அதிரடி பிண்ணனி இசையுடன் (ஏதாவது பாடலில் இருந்து கடன் வாங்கிய இசைதான்) ஒரு பொட்டல் காடு லாங் ஷாட்டில் காட்டப்படும். அதுவே நம் கனவு வீட்டிற்கான "site". இந்தப் பொட்டலைச் சுற்றி மயிலாடும் மாந்தோப்பும் புறா பறக்கும் பூந்தோப்பும் இருப்பது போன்ற ஒரு பில்டப் அந்தக் காட்சியில் இருக்கும்!

பரபரப்பான அறிமுகக் காட்சி முடிந்தவுடன், பஸ்கள் பறக்கும் நெடுஞ்சாலையில் நின்று கொண்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம் தெரிவிப்பார் பல சீரியல்களில் அழுது முடித்து, இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் நடிக்க சம்மதித்திருக்கும் தொலைக்காட்சி நடிகை ஒருவர். சில வருடங்களுக்கு முன் தாம்பரத்தில் ஆரம்பித்த இவரின் வணக்கம் இப்போது வந்தவாசி தாண்டி வந்திருக்கிறது.

இந்நிலையில், நாம், நமக்கான சிரிப்பு மருந்து தயாராகி விட்டது என்று உணர்ந்து அதை சுவைக்கத் தயாராக இருக்க வேண்டும்.எந்த "கனவு வீடு" நிகழ்ச்சி எந்த வகை காமெடியில் நம் கவலை போக்கும் என்று நமக்குத் தெரியாது. அவை அதிர்ச்சி ரகமாகவும் இருக்கும்.

உதாரணமாக, ஒரு நிகழ்ச்சியில், காக்கை அமர்ந்து போவதற்குக் கூட மரக்கொப்பற்ற வெட்டவெளியில் நின்றிருந்த நடிகர் ஒருவர், தொலைவில் இருந்த ஒரு குளிர்பான ஆலையை காட்டி, "பன்னாட்டு ஆலை பாருங்கள்...உங்கள் மனையின் பக்கத்தில்...!" என்று கூவிக் கொண்டிருந்தார். நமக்கோ, "நாங்க ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகப்போறோம்" என்ற வடிவேலுவின் காமெடி நினைவிற்கு வரும். இவர்கள் எதை விளக்க வருகிறார்கள்? ஒரு வேளை தண்ணீர் தாகம் எடுத்தால், "whole sale" விலையில் குளிர்பானம் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றா? ஓ...பன்னாட்டு ஆலை இருப்பதானால் அந்த ஏரியா டெவலப் ஆகுதாம் சார் டெவலப்!

ஞாயிற்றுக் கிழமை என்றால் சிறப்புக் (சிரிப்பு?) குலுக்கல்கள் உண்டு. இதில் கலந்து கொள்வோர்களுக்கு பிரியாணி முதற்கொண்டு பலமான "கவனிப்பு"! அதையும் விடாமல் நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். சிலசமயம் நன்றாக "கவனிக்கப்பட்டவர்கள்" பேட்டி வேறு கொடுப்பார்கள். மனையின் அருமை பெருமை...இந்த வாய்ப்பை விட்டால் வாழ்க்கையே முடிந்தது என்ற ரேஞ்சில் இவர்களுக்கு சொல்லித் தரப்பட்டிருக்கும் டயலாக்குகளை சிலர் மறந்து போய் உளறிக் கொட்டுவார்கள். இப்படித்தான், சமீபத்தில் ஒருவரிடம் நிகழ்ச்சி நடத்துனர், "எங்களிடம் மனை வாங்கிய‌ உங்க அனுபவத்தை சொல்லுங்க" என்று ஆவலுடன் கேட்க, "வெஜிடபிள் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு" என்றார். அப்பொழுது சிரிக்க ஆரம்பிக்கும் நீங்கள் நாள் முழுதும் சிரிப்பீர்களா மாட்டீர்களா?

இவர்கள் இது போன்று நமக்கு அள்ளித் தரும் நகைச்சுவைகள் எத்தனை எத்தனை...வரும் வாரம் தொடர்வோம்...