/ கலி காலம்: October 2012

Friday, October 26, 2012

காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 1


மனுசப் பயலுக பல தினுசு. அந்த ஒவ்வொரு தினுசுக்குள்ளே எத்தனை எத்தனை விதமான மனசு....அப்பப்போ பழைய நினைப்பை நிகழ்காலத்தில முக்கி எடுத்து மனசுக்குள்ள காயப் போடற பழக்கம் உள்ளவங்க ஒரு தினுசு. நான் அந்த வகை ஆசாமி. இந்தப் பதிவை படிக்கற உங்கள்ல நிறைய பேரும் அப்படித்தானே சார்? வீட்டுல இருக்கற பொருளையே அப்பப்போ தூசி தட்டி, சுத்தம் செய்யறோம்...எப்பேர்பட்ட காலம்...! அதுல எத்தனை எத்தனை பேரோட எத்தனை விதமான நினைப்பு ஒட்டிகிட்டுருக்கு...அதை எவ்வளவு பத்திரமா சுத்தப்படுத்தி வச்சுக்கனும் ? நான் சொல்றது சரிதானே?

இந்த திருப்பரங்குன்றம் யானை இறந்த செய்தி படிச்சு, ஒரு மாசமா மனசோட மூலையில ஒரு "நினைப்பு" நீந்திக்கிட்டே இருந்துச்சு சார். சமீபத்துல மதுரைக்கு போயிருந்த போது, இந்த "தூசி தட்டற" வேலைக்காக திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போயிருந்தேன். சின்ன வயசுல நூத்துக் கணக்கான  செவ்வாய் கிழமைகள் இந்தக் கோயிலுக்கு அப்பாவோட போனதுண்டு. முருகனை பார்க்க முந்தி அடிக்கற கூட்டத்துக்கு நடுவிலே, கோயிலுக்கு உள்ளே நுழைஞ்சு, கடைகளைத் தாண்டிப் போனவுடன், கண் தானாகவே வலது பக்கம் போகும் சார். அங்கே தான் தலையை ஆட்டியபடி நம்ம ஆள் நிக்கும். யானைக்கு அபார நினைவாற்றல் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு. அது தலையாட்டும் அழகைப் பார்த்தால், நம்மை ஞாபகம் வைத்துக் கொண்டு வரவேற்கிறதோ என்பது போல இருக்கும். அந்த யானை இருந்த இடத்தையும், காலடி நீளத்துக்கு நம்ம கால் விரலை கடிச்சு விளையாடும் மீன்கள் கூட்டம் கூட்டமாத் திரியும் சரவணப் பொய்கையையும் பார்க்கப் போயிருந்தேன்.

கோயில் படிகளேறி உள்ளே போனதும், இடது பக்கம் ஒரே சத்தம். நமக்குத்தான் ஏதாவது சண்டை பார்த்தா என்னன்னு கவனிக்காம‌ தாண்டிப் போனா மண்டை வெடிச்சுடுமே...சரின்னு காதைக் கொஞ்சம் தீட்டிக்கிட்டேன். விஷயம் இதுதான் சார் ‍ வெளியூர் வாசிகள் இரண்டு பேரு வெள்ளந்தி மனசோட, கோயில் அப்படின்னா அங்க நல்லவங்கதான் இருப்பாங்கன்னு வந்திருக்காங்க பாவம். காளி சிலை முன்னாடி பவ்யமா ஒருத்தர் "வெண்ணெய் சாத்துங்க" அப்படின்னு அரை நெல்லிக்காய் size வெண்ணெய் உருண்டை இரண்டு கொடுத்திருக்கார். அவங்களும், "ஆஹா...இப்படி ஒரு புண்ணிய சேவையா" அப்படின்னு அகமகிழ்ந்து போய் ஆளுக்கு ரெண்டா வாங்கி காளி மேல வீசியிருக்காங்க.

அவங்க புன்னகையை புஸ்வானம் ஆக்கற மாதிரி, 20 ரூபாய் கொடுங்க என்று வெண்ணெய் காரர் கேட்டிருக்கிறார். "நடந்து போனவனங்கள கூப்பிட்டு கொடுத்துட்டு காசு கேக்கறீங்க..." என்று அவர்கள் கேட்க, "போற வரவங்களுக்கு வெண்ணெய் சும்மா கொடுக்க நான் கேனயனா?" என்று நம்மூர்காரர் எகிற, வேலனை பார்க்க வந்த கூட்டம் வந்த வேலையை மறந்து விட்டு  குஷியாகி, வேடிக்கை பார்த்தது. கூட்டம் என்று இருந்தால் உபதேசம் செய்ய அங்கு ஒருவர் இருப்பாரே! அதுதானே நம்மூர் வழக்கம். இங்கும் ஒருவர் தோன்றினார்.

"ஏன்யா, ஒரு போர்டு கீர்டு இல்ல. சும்மா ஒரு basin வெண்ணெய் உருண்டை வெச்சுகிட்டு, போறவங்களை கூப்பிட்டு கொடுத்தா அவங்களுக்கு எப்படிய்யா தெரியும் நீ வெண்ணெய் விற்பனை செய்யறன்னு" என்று ஆரம்பித்தார். ஆளாளுக்கு ஒருவர் மற்றவரை வார்த்தை சாக்கடையில் புரட்டி எடுத்தனர். அதனால் வீசிய "நாற்றத்தை" ரசிக்கவும் கூட்டம் தவறவில்லை. எல்லாவற்றையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த காளியைப் பார்த்தேன். முப்பது ஆண்டுகள் முன்னால் என் அப்பா தன் தோள் மேல ஏத்தி, நான் வீசின வெண்ணெய் உருண்டையோட பிசுபிசுப்பு இன்னும் இந்த காளி சிலையோட ஏதோ ஒரு துளியில் ஒட்டியிருக்கும்னு தோணிச்சு - அந்த ஞாபகம் எனக்குள்ள ஒட்டியிருக்கற மாதிரி! காலம் தானே சார் கடவுள்...

என்னப்பா நீ? காலம் தான் சாமி அப்படின்னு சொல்லிட்டு "காலம் கெட்டுப் போச்சு" தலைப்பு வச்சுருக்க என்று உங்களுக்கு கேள்வி தோணுமே? அதான் சார், நாம கதவு மேல மோதிட்டு "கதவு இடிச்சுருச்சு" அப்படின்னு சொல்லுவோமே..அது மாதிரி "காலம் கெட்டு போச்சு" சார்!

சரவணப் பொய்கை கதை என்னாச்சுன்னு அடுத்த வாரம் பார்ப்போம்.

Thursday, October 18, 2012

காவிரி ‍ - ஏமாளிகளும் கோமாளிகளும்

நேரம் வந்தாச்சு. வருடம் தவறாமல் நடக்கும் காவிரி தமாஷ் இந்த வருடமும் அதே பொலிவுடன் நடைபெற ஏராளமானோர் காமெடி செய்யும் நேரம் வந்தாச்சு. ஏதோ நாம் எல்லாவற்றையும் பக்காவாக செய்வது போல, பக்கத்து மாநிலத்தை மட்டும் குற்றம் சொல்வதை தள்ளி வைத்து விட்டு நம் லட்சணத்தையும் கொஞ்சம் பார்க்கலாம் சார்...

முப்போகம் என்பதெல்லாம் முன்னோர் கதை என்றாகி, இப்போது இயற்கை இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் எவரேனும், தொலைநோக்கில் ஒரு துரும்பையாவது கடந்த முப்பது நாற்பது வருடங்களில் கிள்ளிப் போட்டிருக்கிறார்களா? காமராஜருக்குப் பிறகு நம்மூரில் ஒரு அணை கூட‌ கட்டப்படவில்லை சார். அணைகளை விடுங்கள். தடுப்பணை (check dams) கட்டுவதற்குள்ளேயே நமக்கு தட்டுத் தடுமாறி தலைசுற்றுகிறது.

நல்ல வேளை, இவர்கள் சாலை மற்றும் பாலம் கட்டும் லட்சணம் பார்த்த பின்பு அணை கட்டக் கிளம்பாமல் பேசாமல் இருக்கிறார்களே என்று நிம்மதி அடைய வேண்டியதுதான். சாலை பல்லைக் காட்டினால், மக்கள், தங்கள் தலைவிதி என்று மேடுபள்ளங்களை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டார்கள். அணை பல்லைக் காட்டினால் பல ஊர்கள் காணாமல் விடுமே சார்! அது நேராமல் நம்மை காப்பாற்றும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அநேக வந்தனங்கள்!

ஆழியாரிலிருந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் top slip வனச்சரக அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் மாதிரி வைத்திருக்கிறார்கள். அதீத வசதிகள் ஏதுமற்ற காலத்தில்  மலையை குடைந்து (tunnel) ராட்சஸ குழாய் இறக்கியிருக்கிறார்கள். அதை பராமரிப்பதற்குக் கூட இன்று நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். நம்மூர் தெருவில் சாக்கடைக் குழாய் உடைந்தாலே சரி செய்ய பல நாட்கள் ஆகிறது! என்ன செய்வது சொல்லுங்கள்?

காமராஜரை பற்றி படித்தவையும் கேட்டவையும் நினைவுக்கு வருகிறது சார். அவர் ஆட்சி காலத்தில் எத்தனை புதிய அணைகள் மூலம் எத்தனை அற்புதமான நீர் பாசன திட்டங்களை அறிமுகம் செய்தார் என்று நாம் அறிந்து கொண்டால், கடந்த நாற்பது வருடங்களில் இவர்கள் அனைவரும் எத்தனை காமெடி செய்து (அவர் பெயரைச் சொல்லியே பிழைப்பை ஓட்டும் கட்சியையும் சேர்த்து) தமிழ்நாட்டை எப்படி சீரழித்திருக்கிறார்கள் என்பது புரியும்.

ஆழியார் மட்டுமல்ல, வைகை, மணிமுத்தாறு, சாத்தனூர் என்று எத்தனை அணைகள் காமராஜரால் கட்டப்பட்டன! இதில் மற்றுமொரு நம்ப முடியாத ஆச்சரியம், தன்னை எதிர்த்த பக்தவக்சலத்தையே விவசாய மந்திரியாக ஆக்கி இத்திட்டங்களை செயல்படுத்தியது!

இப்படியிருந்த நாம், எப்படி சார் இப்படி கெட்டுப் போனோம்? காரணம் இருக்கிறது - ‍‍ நாம் நன்றி கெட்ட ஜென்மங்கள். மேற்கூறிய நீர்வளத் திட்டங்கள் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் மக்களின் தேவைகளுக்காகவே உழைத்த காமராஜரை, அவரின் சொந்த ஊரில், அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத ஒருவரை வைத்து தோற்கடித்த அற்பர்கள் அல்லவா நாம்! "தெய்வம் நின்று கொல்லும்" என்பார்கள். தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பது நமக்கு இங்கு தேவை இல்லை. ஆனால், நம் கண் முன்னே, அனைத்தையும் காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது. காலம் நின்று கொல்லும். எனவே தான், காவிரிக்கு கர்நாடகத்திடமும், கிருஷ்ணாவிற்கு ஆந்திராவிடமும், பெரியாருக்கு கேரளாவிடமும் பழியைப் போட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் கட்சிகளை வேடிக்கை பார்க்க வைத்து, என்ன செய்வதென்று தெரியாமல் நம்மை தவிக்க வைத்து, நம் மூலமே தமிழ் நாட்டை  தண்ணீருக்காக ஏங்க‌ வைத்திருக்கிறது காலம்!

பரவாயில்லை விடுங்கள் சார். "கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை" என்றொரு நல்ல பழைய பாட்டு இருக்கிறது. இன்புற கேட்போம் வாருங்கள்!



Tuesday, October 2, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 2

அடுத்த விடுமுறை எப்போது? எந்த ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் காலண்டர் தேதிகளை பார்த்துக் கொண்டிருக்கையில் பின்னாலிருந்து குரல் கொடுத்தபடி வந்தார் குத்தானந்தா. "என்ன சிஷ்யா...காந்தி ஜெயந்தி அன்று காலண்டரை பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாய்?" என்றார். "அடுத்த லீவ் எப்போது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். "நல்ல வேளை. நான் கூட, வருடா வருடம் நடக்கும் காவிரி கூத்தை இப்போது காலண்டரிலும் "காவிரி பந்த். அரசு விடுமுறை" என்று போட்டு விட்டார்களோ என்று நினைத்து விட்டேன்." என்றார் கண் சிமிட்டியபடி.

"சாமி, இந்த காவிரி சிக்கல் தீரவே தீராதா?" என்றேன். "நல்ல கேள்வி தம்பி. நம்ம "புரட்சி" "எழுச்சி" பட்டமுள்ள அல்லது பட்டமற்ற நாயகர்கள் மற்றும் கலைச்சேவை செய்யும் தவப்புதல்விகள் அனைவரும் நெய்வேலிக்கு போய் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தால் சிக்கல் தீர்ந்துவிடுமே" என்றார். "சிக்கல் பற்றி பேசினால் நக்கல் அடிக்கிறீர்கள் மக்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?" என்றேன். "அடப்போப்பா, நம்ம எல்லாரும் காவிரி பத்தி உண்மையாகவே கவலைப்பட்டிருந்தா, இந்நேரத்துக்கு என்ன செஞ்சிருப்போம் தெரியுமா?" என்றவர் தொடர்ந்தார்..."நாம தினமும் முப்பது, நாப்பது ரூபாய் கொடுத்து தண்ணீர் can வாங்கறோமே... ஆளாளுக்கு காவிரி பேரைச் சொல்லி அடிக்கிற லூட்டியை வேடிக்கை பார்க்காம, ஒரே ஒரு மாசம் அந்த தண்ணீர் can வாங்க‌ செய்யற‌ செலவை ஒவ்வொரு வீடும் கொடுத்தா, மக்களே நதி நீர் இணைப்பு செய்யலாமே....ஆனா, நம்ம வீட்டுக் குழாய்ல தண்ணி நின்னு போனாத்தானே நமக்கு ரோஷம் வரும். அப்பக்கூட பக்கத்து வீட்டிலும் "தண்ணி வருதா" என்று கேட்டு விட்டு ஆறுதல் அடையறது தானே நமக்கு பழக்கம்" என்றார்.

"ரொம்ப சூடா இருக்கீங்க போல...இந்த வார குத்து சொல்லுங்க" என்றேன்.

"விவசாயத்தை மதிக்காத வெக்கங்கெட்ட நாடு
வாய்கிழிய பேசியே பிடிச்சது பார் கேடு
தண்ணியே பார்க்காம வறண்டு போச்சு காடு
வறுமையின் வயித்திலே ஈரத்துண்டு போடு"

என்று குத்தானந்தா குதித்தார்.

"சாமி, எனக்கு எதுவும் சொல்லத் தெரியலை. ஆனா என்னமோ வருத்தமா இருக்கு. சரி விடுங்க...போன வாரம் ஏதோ நான் செய்யனும்னு சொன்னீங்களே...அதச்சொல்லுங்க" என்றேன். "டேய்,அடுத்த வாரத்திலே இருந்து ஒரு நல்ல தமிழ் இலக்கியத்திலே இருந்து நீ ஏதாவது கொண்டு வந்து விளக்கம் சொல்" என்றார். "சாமி, நல்லாருக்கு. ஆனா இலக்கியம் அப்படினா என்ன?" என்றேன். என்னை மேலும் கீழுமாக பார்த்த குத்தானந்தா,

"படிச்சா பத்திக்கணும்
மனசோட ஒட்டிக்கணும்
மண்டையில‌ ஏத்திக்கணும்
ஆயுசுக்கும் யோசிக்கணும்"

இப்படி இருக்கற எழுத்து தான் இலக்கியம் என்றார். "கிளப்பிட்டீங்க சாமி. இப்படிப்பட்ட சரக்கு தமிழ் முழுக்கக் கொட்டிக் கிடக்கு. நமக்குத் தான் தெரியல" என்றேன். "ஆனா சாமி..." என்று இழுத்த நான், "why this kolaveri பாட்டுக் கூட நிறைய பேருக்கு நீங்க மேல சொன்ன மாதிரியே இருக்குன்னு சொல்றாங்களே...அதுவும் இலக்கியமா?" என்றேன். "கலிகாலம் தம்பி கலிகாலம்"  என்று தலையில் இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்ட‌ குத்தானந்தா, "இன்னிக்கு காந்தி ஜெயந்தி. எப்படியும் குத்தாட்டம் கும்மாளம் என்று அர்த்தமில்லாமல் ஆண்டு முழுவதும் ஓ(ட்)டிக்கொண்டிருக்கும் சேனல்கள் ஏதாவது ஒன்றில், சம்பந்தமில்லாமல் "காந்தி" படம் இன்று போடுவார்கள். அந்தப் படத்துல காந்தி பத்தி Albert Einstein சொன்னதா ஒரு வரி காட்டுவாங்க "Generations to come, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth". நம்ம நாட்டுக்காரங்களுக்கு எதையுமே வெளிநாட்டில் இருந்து யாராவது சொன்னாத்தான் ஏத்துப்பாங்க‌............... பாவம் Einstein. அவர் சொன்னது பலிக்க இருநூறு முன்னூறு வருடங்களாவது ஆகும் அப்படின்னு நம்பியிருப்பார். அவருக்கு இந்தியா பத்தி தெரியல. நாமெல்லாம் யாரு? எப்படி வேகமா வளர்ந்து கிழிக்கிறோம்...அவர் சொன்ன வார்த்தைகளை எவ்வளவு சீக்கரமா எழுபது வருஷத்திலேயே உண்மையாக்கிட்டோம் பார்த்தியா..." என்றபடி டாடா காட்டினார் குத்தானந்தா...




   .