/ கலி காலம்: November 2012

Friday, November 16, 2012

இவர்களின் தீபாவளி ரகசியங்கள்...


என்ன சார்...ரகசியம் என்றவுடன் நமக்கு ஆர்வமாய் இருக்குமே...அதுவும் அடுத்தவர் பற்றிய ரகசியம் என்றால் வெறும் வாயில் போட்ட அவல் என்பதை விட வெல்லத்தில் போட்ட‌ அவல் போல நமக்கு இனிக்குமே...சரி, விஷயத்திற்கு வருவோம். பதிவை படித்த பின், நீங்கள் எதிபார்த்தது வேறு இங்கு இருப்பது வேறு என்றால் என்னை குற்றம் சொல்லாதீர்கள் என்று இப்போதே சொல்லி விடுகிறேன் சார்.

நாம் பார்க்கப் போகும் "இவர்கள்" யார்?

தீபாவளி அன்று காலை நம் அரசு பேருந்தை கடமையுடன் ஓட்டிக் கொண்டு போகும் ஓட்டுனர் மற்றும் அவரது குடும்பத்து தீபாவளி எப்படி இருக்கும்? பல வருடங்களுக்கு முன், சில தாமதங்கள் காரணமாக, முன்னரே ஊர் சேர்ந்திருக்க வேண்டிய நான், தீபாவளி காலையில் மதுரை நோக்கிய பேருந்தில் இருந்தேன். கைபேசி தன் கைவரிசையை சமூகத்தில் காட்டத் துவங்காத காலம் அது. சுமார் பதினோறு மணியளவில் வண்டியை ஒரு சிற்றூரின் துவக்கத்தில் இருந்த பெட்டிக்கடையை ஒட்டி நிறுத்தியவர், பயணிகளை நோக்கி சத்தமான குரலில், தான் நேற்றிரவே "trip" முடித்து வீடு செல்ல வேண்டியவர் என்றும், இன்னமும் "duty"யில் இருப்பதாகவும், வீட்டில் காத்துக் கொண்டிருப்பவர்களிடம் பேசிவிட்டு வருவதாகவும் சொல்லி இறங்கினார். பயணிகள் அனைவரும் அவரின் மேல் கரிசனம் கொண்டதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலோருக்கு தங்கள் வீடு மனதில் ஓட, அந்த "telephone booth" நீளமானது...அந்த ஓட்டுனர் தொலைபேசியில் தனது குழந்தையிடம், "கட்டாயம் இரவு வரும் பொழுது பட்டாசு வாங்கி வருகிறேன்" என்று  மன்றாடியதும், மதுரை வந்து சேர்ந்த பொழுது இரவாகிப் போனாலும், அப்பொழுதும் அக்கறையுடன் சில பயணிகள் பேருந்திலிருந்து இறங்கும் பொழுது ஓட்டுனரிடம், "மறக்காம பட்டாசு வாங்கிட்டு போங்க பிள்ளைங்க காத்துக் கிடக்க போகுதுங்க..." என்று சொல்லிப் போனதும்  ஒரு படி மேலே போய் ஒருவர் தான் கொண்டு போகும் மத்தாப்புகளில் ஒன்றை அவரிடம் கொடுத்ததும் இன்றும் நினைவில் நிற்கிறது.! இனி நம் சமூகத்தில் இக்காட்சி மீண்டும் நிகழ்வது அரிதினும் அரிது.

தீபாவளிக்கு முந்தைய நாட்களில் அனைத்து கடைத்தெருக்களிலும் அலைமோதும் கூட்டத்தின் நடுவே "எலி மருந்து" விற்பவர் ஒரு சிறு அட்டையில் சக்கரத்தை பொருத்தி தள்ளிக் கொண்டே போவதை பார்த்திருப்போம்.... அந்த விற்பனை பொருட்களின் மொத்த மதிப்பே இன்றைய வேகமான உலகின் சில "mobile recharge"களுக்குள் அடங்கி விடும். எலி மருந்து விற்று வரும் வருமானத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இவரைச் சார்ந்தவர்களின் தீபாவளி எதிர்பார்ப்பு எத்தனை துயரமிக்கது? அதை சுமக்கும் இவரின் முகத்தை நாம் கூர்ந்து நோக்கியிருக்கிறோமா?

தீபாவளியை காரணம் காட்டி, பல வித உணவுகளை அதிகமாக புசித்து, அதன் காரணமாக மதியம் நீண்ட தூக்கம் போட்டு, மாலையில் மறுபடியும் கேளிக்கைகளுக்குத் தயாராகும் நம் கண்ணில், தெரு முழுதும் குவிந்து கிடக்கும் வெடிப் பேப்பர்களுக்கிடையில், வெடிக்காத வெடிகளை தேடிக் கொண்டிருக்கும் சிறுவனின் முகம் கவனத்தில் விழுந்திருக்கிறதா? அந்த சிறுவனிடம் தீபாவளியை பற்றிய எத்தகைய எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்?

"இவர்கள்" பார்த்த பின் "இவரை" பார்ப்போம்...

சென்ற வாரம் பிரபல வார இதழின் தீபாவளி சிறப்பிதழில் வந்திருக்கிறது இவரின் பேட்டி. "தீபாவளி கொண்டாடுவதில்லை" என்ற தலைப்பைப் பார்த்து, "ஆஹா, ஒரு வேளை சமூக அவலங்களையும் மேற்கூறியன‌வற்றை போன்ற மனதில் வலி ஏற்படுத்தும் காட்சிகளையும் கண்டு கங்கையென பொங்கியெழுந்த மங்கை எடுத்த முடிவோ..." என்று ஆர்வத்துடன் பக்கத்தை திருப்பினால், அவரோ, "என் நாய்க்கு வெடிச்சத்தம் கண்டு பயம் எனவே நான் தீபாவளி கொண்டாடுவதில்லை" என்று போட்டிருக்கிறார் ஒரு போடு!

அடுத்த வருடம், இந்த பேட்டி வந்த இதழின் பக்கம், ஒரு லட்சுமி வெடியின் சிதறிய‌ பேப்பராக வீதியில் கிடக்கையில், வெடிக்காத வெடி தேடி வீதி வீதியாக  வரும் சிறுவன்  அந்த பேப்பரை வெறுப்புடன் வீசியெறியும் குப்பையிலிருந்து குப்பென்று அடிக்குமே ஒன்று...அதற்கு ஆன்றோரும் சான்றோருமாய் சேர்ந்து வைத்திருக்கும் பெயர் "சமூகம்".

பின் குறிப்பு: தற்காலத் திரையுலகத் தாரகைகள் மற்றும் தமிழகத்தை தாங்கிப் பிடிக்கும் புரட்சி நாயகர்கள் தங்கள் தீபாவளி ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் பதிவோ என்றெண்ணி இங்கு வந்தவர்கள் என்னை மன்னித்து அருள்வார்களாக...


Friday, November 9, 2012

தீபாவளி விளம்பரங்கள்...உஷார்!

அனுஷ்கா ஆடியபடி வந்து தீபாவளி தள்ளுபடி விலையில் பூச்சிக் கொல்லி மருந்து வாங்குங்கள் என்று விளம்பரம் செய்து விவசாயிகளின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற முயல்வதை பார்த்திருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தீபாவளிக்கு வரும் விளம்பரங்களைப் பார்த்தால், எங்கேயாவது இது போன்ற விளம்பரமும் வந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் நடைபெறவில்லை. விவசாயிகள் தப்பித்தார்கள்.

ஆனால் மற்ற வகை விளம்பரங்களில் நமக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை சார். இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வரை, தீபாவளி தள்ளுபடி என்பது துணிக்கடையில் மட்டுமே இருந்தது. பின்னர் மெதுவாக Mixie, Grinder, TV, Fridge எனப் பரவத்துவங்கியது. இன்றோ, பொதுக் கழிப்பறையில் "சிறுநீர் கழிக்க 1 ரூபாய் தீபாவளி சிறப்பு தள்ளுபடி" என்று போடாதது ஒன்றுதான் பாக்கி.

அதிலும் இந்த "பம்பர் பரிசு" இருக்கிறதே சார் பம்பர் பரிசு...எனக்கொரு தீராத சந்தேகம். ஏன் சார் நமக்கோ, நமக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ பம்பர் பரிசு விழுவதே இல்லையே?

கவிவேந்தன் மட்டும் இன்று இருந்திருந்தால்,

பம்பர் பரிசு உண்டெனும்
வம்பர் வார்த்தை பொய்
அன்பர் நன்மைக்கு - இந்த‌
கம்பர் சொல்வது மெய்.

என்று பாடியிருப்பார்!

சில நாட்களுக்கு முன் ஒரு பிரபல நிறுவனத்தின் தீபாவளி பம்பர் பரிசு விளம்பரம் பார்த்தேன். ‍அதில், இந்த தீபாவளி சீசனில், இதுவரை பரிசு பெற்றவர்கள் போட்டோ வேறு! இதில் காமெடி என்னவென்றால், பொய்யை சரியாக செய்யத் தவறி விட்டார்கள். ஒரே போட்டோவை, பக்கத்தின் இரண்டு இடத்தில், வெவ்வேறு பொருளுக்கு பரிசு பெற்றவராக, வெவ்வேறு முகவரியுடன் போட்டு விட்டார்கள்...அனேகமாக அந்த விளம்பர மேலாளருக்கு சீட்டு கிழிந்திருக்கும் என்று நம்பலாம்.

தொலைக்காட்சியின் எந்த சேனல் பக்கம் திரும்பினாலும் அல்லது பத்திரிகைகளின் எந்தப் பக்கம் திருப்பினாலும், தீபாவளி விளம்பரங்கள் எப்படியிருக்கின்றன? அந்த பொருளுக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நவநாகரீக யுவதியோ அல்லது பண்பாட்டு திலகம் போன்ற பழந்தமிழ் நங்கையோ செயற்கை புன்னகை காட்டியபடி ஒரு அகல் விளக்கின் தீபம் கைகளில் ஏந்தி செயற்கை புன்னகை சிந்துகிறார்கள்.! அதாவது அவர்கள் விளம்பரப் படுத்தும் பொருள் மூலம் நம் வீட்டில் மகிழ்ச்சி தீபம் ஒளிருமாம்...

சும்மா சொல்லக் கூடாது சார்...நம் ஆட்கள் உண்மையிலேயே "ரூம் போட்டு" யோசிப்பவர்கள் தான். இந்த வகையில், எனக்கு ஒரு விளம்பரம் பிடித்திருந்தது ‍"தீபாவளிக்கு தலையில் எண்ணெய் வைக்காமல் குளிக்கின்ற‌ வருத்தமா?" என்று கேள்வி கேட்டு, "சிகிச்சைக்கு முன்" "சிகிச்சைக்கு பின்" என்று இரண்டு போட்டோக்கள். முன்னதில் வழுக்கையுடன் இருக்கும் ஒருவர் பின்னதில் பாகவதர் போல இருக்கிறார். அதன் கீழே "விரைந்து வாருங்கள்...சிறப்பு தள்ளுபடி..." என்று நீள்கிறது விளம்பரம்!

ஆனால் நான் கீழே எழுதியிருப்பது போல் ஒரு விளம்பரத்தை இந்த வருட தீபாவளிக்கு எதிர்பார்த்தேன்:

1. ஒரு இல்லத்தரசி கம்பி மத்தாப்பை நீட்டியபடி சமையல் செய்கிறார். நாம் வியப்புடன் பார்க்கையிலேயே, "இது abc கம்பி மத்தாப்பு. நீண்ட நேரம் எரியும். சமையலே செய்யலாம்னா பாருங்களேன்..." என்பது போன்ற விளம்பரம்.

அனேகமாக, வரும் வருடங்களில் இது போன்றதொரு விளம்பரம் வந்தாலும் வியப்பில்லை:

2. தீபாவளியன்று அனைவரும் வீட்டில் அவரவரது TV அல்லது mobile phone உற்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர் - cut - பயங்கரமான தொடர் பட்டாசு சத்தம் - cut -  பின்னே ஒரு குரல், "வெளியில் சென்று, வெடியை பத்த வைத்து...எதற்கு இத்தனை கஷ்டம்...எங்கள் smart phone / smart tv மூலம் வீட்டில் அமர்ந்தபடி பற்ற வைத்து,   உட்கார்ந்த இடத்திலிருந்தே வெடி வெடித்து, அதை அப்படியே கண்டு மகிழுங்கள்..." என்பது போன்ற விளம்பரம்.

கலி காலத்தில் கண்டதெல்லாம் கெட்டுக் கிடக்கையில் தீபாவளி மட்டும் அப்படியே பழைய மாதிரியாகவேவா இருக்கும்?