/ கலி காலம்: March 2012

Sunday, March 25, 2012

சிங்காரச் சென்னையும் வெங்காய தோசையும்...

கொளுத்தும் கோடையில் சென்னைக்கு போக வேண்டும் என்ற நினைப்பே பச்சை மிளகாய் கடித்த நாக்கு போல சுளீர் என்று இருக்கும். சென்ற முறை நான் பச்சை மிளகாய் கடித்த அனுபவத்தை கேளுங்கள்...central stationஇல் இறங்கியவுடனேயே ஆங்காங்கே "ஸ்" "ஸ்" என்று சத்தம்...என்னடா இது guindy snake park எப்போது சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு மாறியது என்று யோசித்தேன். இது என்ன யோசனை என்கிறீர்களா? ஏன் சார், "அவரும்" "இவரும்" தலைமை செயலகத்தையே மாற்றி மாற்றி விளையாடலாம் என்றால் snake park எந்த மூலைக்கு? தள்ளி கேட்டுக்கொண்டிருந்த சத்தங்களில் ஒன்று பக்கத்திலேயே கேட்டது. வேறொன்றுமில்லை... பலர் போல நானும் வெய்யில் புழுக்கம் தாளாமல் "ஸ்" விட்டுக் கொண்டிருந்தேன்...

பாம்பு சத்தத்துடன்  பசியின் சத்தமும் வந்தது...சரியென்று ஸ்டேஷன் உள்ளேயே இருக்கும் அந்த ஹோட்டலுக்கு சென்று குளுகுளு அறையில் அமர்ந்தேன். சாதா தோசை சொல்லி விட்டு அக்கம் பக்கம் பார்த்தால் சிலர் விக்கிக் கொண்டிருந்தார்கள். காரம் அதிகம் போலும் என்று நினைத்து கொண்டே திரும்பிய என் கண்ணில் பட்ட விலை பட்டியல் பார்த்தவுடன் எனக்கு சாப்பிடும் முன்னரே விக்கல் வந்து விட்டது!
ஒரு தோசை 60 ரூபாயாம்! விக்கல் நின்று விட்டது. எப்படி என்கிறீர்களா? ஒரு அதிர்ச்சியை போக்க இன்னொரு அதிர்ச்சி உதவும் இல்லையா? தோசை விலை பார்த்து வந்த விக்கல் இட்லி விலை பார்த்ததும் போய் விட்டது! இப்போது தெளிவாக விளங்கியது எனக்கு. இந்த ஹோட்டல் சர்வர் கூட எப்படி "technology" உபயோகப்படுத்தி ஆர்டர் எடுக்கிறார் என்று - இவர்கள் போட்டிருக்கும் விலைக்கு சர்வர்  i-phone மூலம் ஆர்டர் எடுத்தால் கூட ஆச்சர்யபடுவதற்கில்லை...

எதிர் table ஒன்றில் பார்த்ததுமே பன்னாட்டு கம்பெனி வாசனை அடிக்கும் "tip top" நபர் ஒருவர் அமர்ந்திருந்தார்...அவர் தோசை பிரியர் என்பது,  சுற்றியிருக்கும்  வயிறுகளுக்குள் போய் கொண்டிருக்கும் வெவ்வேறு வகை தோசைகளை அவர் பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. நீ ஏன் அவரை பார்க்கிறாய் என்கிறீர்களா? என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? நம் மரபில் முக்கியமானது ஹோட்டலில் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன சாபிடுகிறார்கள் என்று கவனிப்பது இல்லையா சார்?
நமக்குத்தான் எத்தனை பெருமைமிகு மரபுகள்? Q வரிசைகளில்  "கொஞ்சம் urgent" என்று இடையில் நுழைய பார்ப்பது..., bus, train [இப்போது நிறைய பேர் வெளிநாடு வேறு பொய் வருவதால் விமானத்தையும் சேர்க்க வேண்டும்] இவற்றில் தூங்குவதோடு மட்டுமின்றி பக்கத்தில் இருப்பவர் தோளில் சாய்ந்து விழுவது...,இளநீர் முழுதும் குடித்து விட்டு "அவ்வளவு taste இல்லை" என்பது [கடைக்காரர் என்ன சார் செய்வார் இளநீர் அப்படியிருந்தால்?] ...தர்மம் கேட்பவர்களிடம் "சில்லறை இல்லை" என்று சொல்வது [இதில் கூட போலித்தனமா? கொடுக்க மனமில்லை என்று சொல்ல வேண்டியதுதானே...] என்று பட்டியல் எழுதிக் கொண்டே போகலாம்...நம்மவர்கள் கில்லாடிகள். உலக மாற்றதிற்கேற்ப மரபிலும் variety காட்டுவார்கள். அந்த வகையில், புதிய மரபுகளாக பக்கத்தில் உள்ளவர் மொபைல் phoneஐ எட்டிப் பார்ப்பது..., காதில் blue tooth அல்லது mp3 player மாட்டிக் கொண்டு தங்களுக்குள் கொப்பள்ளிக்கும் இசை ஊற்றை சாலையில் போகும் வரும் அனைவர் மேலும் தெளிக்கும்படி நடக்கும் மரபு. இந்த மரபு list  எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாது என்பதால் ஓட்டல் மரபை மட்டும் காப்பாற்றி வருகிறேன். சரிதானே?
 வந்து விட்டது தோசை - அவருக்குதான்.  இரண்டு spoons எடுத்தார் மனிதர். தோசையை சிறு துண்டாக வெட்ட ஆரம்பித்தார். தோசைக்கு எதுக்கு சார் spoon? இதை அவரிடம் கேட்க முடியுமா? இப்போதெல்லாம் வாயைத் திறந்தாலே "மனித உரிமை மீறல்" வேறு வந்து விடுகிறது.  ஏதோ நம்மால் முடிந்தது, திராணியற்ற அந்த தோசையிடமே நன்றாய்  நான்கு கேள்விகள் கேட்கவேண்டியதுதான்...
என்னப்பா தோசை... உன்னை நாங்கள் காலம் காலமாக நாங்கள் எப்படி அலுங்காமல் குலுங்காமல் எடுத்து சாம்பார் சட்னியில் குளிக்க  வைத்து உன் பிறவிப் பயன் கூட்டுகிறோம் உன்னை அவர் இப்படி சிதைத்துக் கொண்டிருக்கிறார் நீ பேசாமல் இருக்கிறாயே என்று கேட்டேன்.
"என்ன சார்? தோசை எப்படி பேசும்? லாஜிக் இல்லாமல் இருக்கிறதே" என்கிறீர்களா? சமீபத்தில் கோவாவில் ஆறே இல்லாத ஊரில் அரசு "ஆற்று பாலம்" கட்டியிருக்கிறது... தான் நியமித்த, தன் கட்சி மந்திரி போடும் budget , அந்தத் தலைவராலேயே  எதிர்க்கப்படுகிறது... உள்துறை மந்திரி தனக்கு மறதி அதிகம் என்கிறார். இப்படிப்பட்ட logic மிகுந்த பெருமைமிகு தேசத்தில் தோசை பேசாதா சார்?
தோசை என்ன சொல்லியது தெரியுமா? "நான் போராடி தோற்பவன். ஒவ்வொரு முறை spoon என்னை எடுக்கும் பொழுது அதிலிருந்து பெரும்பாலும் குதித்து விடுவேன் அப்படியும் பலமுறை முயன்றே என் ஒரு pieceஐ  அவரால் உண்ண முடியும் தெரியுமா?" என்றது தோசை!
தோசை சொல்லியபடியே அவரும் ஒரு நிமிடம் முயன்று ஒரு விள்ளல் வெற்றி பெற்றிருந்தார்...அடுத்து அவர் லட்டு ஆர்டர் செய்து விடுவாரோ என்று நான் பயந்தபடி இருந்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை.

என் தோசைக்கு காத்திருக்கும் நேரத்தில், பக்கத்தில் யாரோ படித்து விட்டு வைத்து போன "தினத்தந்தி" யில் "சென்னையில் இனி குப்பைதொட்டியில் கூட குப்பையை பார்க்க முடியாது" என்று சொல்லி புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் saidhai duraisamy. இவர் படித்தவர், சமூக அக்கறை கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போது இவர் கவிதை உள்ளம் கொண்டவரானார் சார்? அதான் பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து போன்றோர் எல்லாம் "தீயே உன்னை தீ சுடாதோ" "சாவே உனக்கு சாவு வராதோ" "வறுமைக்கு வறுமையில்லை" என்று பாடியதைப் போல இவர் "குப்பைத்தொட்டியிலும்  குப்பையில்லை" என்று சொன்னது கவிதை தானே? [எனக்கு ஒரு சந்தேகம். நம் பழக்கமோ இருக்கும் இடத்திலிருந்தே குப்பையை தூக்கி எறிவது. அது தொட்டிக்குள் விழுந்தால் தெருவின் அதிர்ஷ்டம். எவர் தலையிலேனும் விழுந்தால் அவர் துரதிர்ஷ்டம். இரண்டைப் பற்றியும் நமக்கு அக்கறை இல்லை. ஒரு வேளை குப்பைத்தொட்டி தவிர மற்ற இடத்தில் எல்லாம் குப்பையை  கொட்டி, சைதை துரைசாமி கனவை தப்பர்த்தம் செய்து கொள்வோமோ?]

என் தோசை வந்து விட்டது. சரியாக விள்ளலிட்டால் 10 கூட தேறாது - அதாவது ஒரு விள்ளல் ஆறு ரூபாய்! அதை பற்றியெல்லாம் யார் சார் கவலைப் படுகிறார்கள்? அரை மணி நேரத்தில் 50-60 தோசை ஆர்டர் போயிருக்கும். இப்படிப்பட்ட பகல் கொள்ளை ஹோட்டல்களில் தான் சார் கூட்டம் கும்மியடிக்கிறது... என்ன செய்ய?..."ரொம்ப பேசுகிறாயே நீ என்ன செய்தாய்?" என்கிறீர்களா? சாதா தோசை சாப்பிட்ட பின் ஒரு வெங்காய தோசை ஆர்டர் செய்தேன். எண்பது  ரூபாய்தான். பேச்சொன்றும் செயலொன்றுமாய் இருக்கும் என்னைப் பார்த்து வெங்காயத்திற்கு கோபம் போலும். நான் எடுக்கும் ஒவ்வொரு  விள்ளலிலும் வெங்காயங்கள் தோசையிலிருந்து வெளிநடப்பு செய்து தட்டில் விழுந்து எதிர்ப்பு காட்டின. பக்கத்திலிருந்த spoon உதவியுடன் அவற்றை கபளீகரம் செய்தேன். முன்னர் சொன்ன  "ஸ்பூன்" தோசைக்காரர் என்னையே பார்ப்பது போல் இருந்தது. கவுண்டமணி ஸ்டைலில் "கலி காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா..." என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே நடையைக் கட்டினேன். வெங்காய தோசை உண்டபின் வந்த ஏப்பம் நன்றாக இருந்தது. சாதாரண ஏப்பம் இல்லை சார். எண்பது ரூபாய் ஏப்பம்! நன்றாகத்தானே இருந்தாகே வேண்டும்....

இந்த வார pinch:
தற்போது டிவி சேனல் ஒன்றில் "பொது அறிவு" நிகழ்ச்சி ஒன்று பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதில் "சிலப்பதிகாரம்" பற்றி ஒருவரிடம் நடத்துனர் கேட்கிறார். "ஒரு பழைய TAMIL book" என்று தெரியும் என்கிறார் பதில் சொல்பவர். வேதனை இந்த பதிலோடு நிற்கவில்லை.
அரங்கில் இருப்பவர்கள் ஒரு நகைச்சுவை கேட்டது போல் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கொடுமையிலும் கொடுமை. அதனாலென்ன நமக்குத்தான் கொலைவெறி பாடல் போல பலவெறி பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றனவே கேட்டு புளுகாங்கிதம் அடைய...

ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், வாழ்க்கையை எப்படி வாழலாம் என்று ஆணி அடித்தால் போல் சொல்லும் என்றைக்கும் பொருந்தும் சிலம்பில் வரும் ஒரு பாடலின் சில வரிகளை பாருங்கள். பல வார்த்தைகளுக்கு விளக்கமே தேவையில்லை. இதில் ஏதேனும் ஒன்றையேனும் நம்மால் வாழ்க்கை முழுதும் தாங்கிப் பிடிக்க முடியுமா? எல்லாவற்றையும் சொல்லிவிட்டு பாடலின் இறுதி வரிகளில் வருகிறது "குட்டு" - இவையனைத்தும் இவ்வுலகத்தில் வாழும் நீங்கள் அடுத்து செல்லப்போகும் தேசத்திற்கும் உதவுமாம் !

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறம்சொல் போற்றுமின்;
தானம் செய்யுமின்; தவம்பல தாங்குமின்;
செய்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
அறவோர் அவைகளம் அகலாது அணுகுமின்; (பெரியவர்களை சேர்ந்திருங்கள்)
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின் (தப்பித்தவறி கூட குணத்தில் சிரியவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்)
பிறர்மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின் (துன்பப்படும் உயிர்களுக்கு உதவுங்கள்)
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்; (பயனற்ற பேச்சுக்களை விடுங்கள்)
செல்லும் தேஎத்துக்கு (தேசத்துக்கு) உறுதுணை தேடுமின்;
மல்லல் மாஞாலத்து   வாழ்வீர் ஈங்குஎன்.









   

Friday, March 16, 2012

பன்னீர் சோடாவும் பச்சைத் தமிழரும்...

சமீபத்தில் நானும் என் மனைவியும் எங்கள் சொந்த ஊரும், வளர்ச்சியின்றி நெருக்கடியில் நொந்த ஊருமான மதுரைக்கு சென்றிருந்தோம். மதுரைக்கு செல்லும் பொழுதெல்லாம் மீனாட்சியை [மதுரை மக்கள் மீனாட்சி அம்மனை தங்கள் உறவுக்காரப் பெண்  போல் மீனாட்சி என்றுதான் அழைப்பர்] பரஸ்பரம் குசலம் விசாரிக்க வேண்டும் என்பது என் மனைவியின் அவா. பிறகு கோபுர வாசலுக்கு எதிர்புறம் உள்ள பழரச கடையில் பன்னீர் சோடா குடிக்க வேண்டும் என்பது என் அவா. நான் செல்லும் ஊர்களிலெல்லாம் பன்னீர் சோடா தேடுவதை பார்த்து என் மனைவி "உங்களுக்காகத்தான் இன்னும் இதன் தயாரிப்பே நடைபெறுகிறது" என்று நகைத்தாலும் அவரும் இதை குடிக்கத் தவறுவதில்லை. நாகரீகக்  குதிரை நாலு கால் பாய்ச்சலில் பறக்கும் போது பன்னீர் சோடா போன்றவை பதுங்கு குழியில் கிடப்பதை தவிர வழியுண்டோ? இப்போதெல்லாம் சென்னையில் சைதாபேட்டை பேருந்து நிலையம் அருகிலும் மயிலாப்பூர் தெப்பக் குளம் எதிரிலும் உள்ள கடையிலுமே எப்போதும் "stock" இருக்கிறது. மற்ற இடங்களில் கிடைத்தால் "luck".
நாம் பன்னீர் சோடா கேட்டவுடன் கடைக்காரருக்கு தோன்றும் முகபாவங்கள் பல வகைப்படும். சிலர் "இந்த வஸ்துவை குடிக்கும் ஜந்துக்கள் இன்றும் உள்ளனவா" என்பது போல பார்ப்பர். சிலர், "இந்த மாசத்திற்கு ஒன்றாவது விற்றதே" என்பது போல வேகமாக எடுத்துத் தருவர்.  சில கடைகளில் பன்னீர் சோடா இல்லை வெறும் சோடா வேண்டுமா என்பர். கல்கண்டுக்கும் கல்லுக்கும் என்ன வித்தியாசமோ அதுதான் மேற்சொன்ன இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்று தெரியாதவர்கள் அவர்கள். இப்படிப்பட்ட பன்னீர் சோடாவை குடித்தபடி நின்று கொண்டிருந்தோம் அன்று...


மதுரையின் பிரசித்தி பெற்ற பொறியியல் கல்லூரியில் படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள ஒரு மாணவர் பட்டாளம் கடையில் கூடியது. சமூக பேதங்களை நாம் சரி செய்ய முயல்கிறோமோ இல்லையோ மொழியில் உச்சரிப்பு பேதங்களை களையும் அரும்பணி நாம் நிறையவே செய்கிறோம். எப்படி என்கிறீர்களா? அதான் sir, இந்த ழ,ல போன்றவற்றின் மேல் புல்டோசர் விட்டு ஏற்றி அவற்றின் வித்தியாசம் தெரியாமல் சமன் செய்யும் திருப்பணி. இதை அக்குழுவில் பலர் திறம்பட செய்தனர். இப்போதெல்லாம் நமக்கு எல்லாவற்றிலும் "brand" வேண்டும். அதன்படி பலவகை "brand" பானங்கள் அந்த கூட்டத்தின் கைகளுக்கும் போயிற்று. அதில் என்னை போல் ஒரு அரைகுறை பழம்பஞ்சாங்கம் மட்டும் பன்னீர் சோடா வாங்க, கொதித்து போனார் அவரின் சகா. "how much is this machan?" என்று கேட்க "six bucks machan" என்றார் என் சோடா நண்பர் [இப்பொழுதெல்லாம் "ருபாய்" போய் "rupees" போய் "bucks" என்று சொல்வதுதான் நமக்கு அழகு தெரியுமோ?]. "THEN it won't be good da" என்று ஒரே வரியில் ஒரு மாபெரும் சித்தாந்தத்தை உதிர்த்தார் புல்டோசர் நண்பர். அதாவது "விலை குறைந்த எதுவும் நன்றாக இராது" என்பதே கருத்து. நம் இன்றைய வாழ்க்கை முறையை இதை விட புட்டு புட்டு வைக்க முடியுமா?


வட்டையில் காபி குடித்தால் என்னாவது? ஐம்பது ரூபாய் கொடுத்து ஆறிப்போன காபியை கண்ணாடி பளபளக்கும் கடைக்குள் கதை பேசியபடி குடிதால்தானே ஒரு சுகம்? வேக வைத்த மைதா மாவை, உட்கார்ந்தால் முதுகு வலிக்கும் உயரமான இருக்கையில்  முன்னூறு ருபாய் கொடுத்து சாபிட்டால்தானே சம்பாதித்த பணம் செரிக்கும்! உணவை விடுங்கள்...diabetes test எடுக்க ஐம்பது ரூபாய் என்றால் நாம் அந்த ஆஸ்பத்திரியில் எடுப்போமா? இவர்கள் சரியாக எடுப்பார்களோ என்று சந்தேகம் வந்து விடும். செயற்கை புன்சிரிப்புடன் ஒரு nurse நுழைவு வாயிலில் இருந்து நம்முடன் வந்து வழியனுப்பும் வரை உடனிருந்து கவனிக்கும் corporate hospital "கவனிப்பில்", அதே டெஸ்டுக்கு இருநூறு ரூபாயாவது கொடுத்தால்தானே நமக்கு test சரியாக எடுக்கப்படுகிறது என்று நம்பிக்கை! முதுகு வலி என்று போனால் doctor "தினம் யோகாசனம் செய்யுங்கள்" என்றால் எவ்வளவு ஏமாற்றம்! அவர் நீளமான மருந்து list கொடுத்து சில டெஸ்டுகள் செய்யச் சொன்னால்தான் நமக்கு திருப்தி!


எல்லாவற்றிலும் நமக்கு "அதிகம்" வேண்டும் சார் அதிகம் வேண்டும்..."சோத்துக்  கத்தாழை" என்றால் "ச்சே ச்சே" என்போம். "Aloe vera lotion" உங்கள் சருமத்தை பாதுகாக்கும்  என்று தொலைக்காட்சி சொன்னால் அடுத்த வாரம் நாம் shopping mallல் தள்ளிக்கொண்டு போகும் trolley ஒன்றில் அது அமர்ந்திருக்கும். நம் பாட்டிமார்கள் சொல்லும் குறிப்புகளை காது கொடுத்து கேட்காத நாம், "beauty and naturopathy" நிலையங்களில் package (discount உண்டு sir) எடுத்து member ஆனால்தான் பெருமிதம்.  

பன்னீர் சோடா காலியானது தெரியாமல் அதன் சுவையில் ஊறி, உறிஞ்சிக்கொண்டிருந்த என்னைத் தட்டி "போதும் போகலாம்" என்றார் மனைவி. வாகன நெரிசல் மிகுந்த சாலையை கடக்கையில் "காபிப்பொடி தீர்ந்து போச்சு வாங்கிட்டு போகணும்" என்றார்.  எதிரிலேயே இருந்தது கடை. பத்து வரிகளுக்கு முன்னால் "ஆறிப்போன காப்பி" என்று  நக்கலடித்தேனே அதே "brand" கடைதான் sir. என்ன செய்வது சொல்லுங்கள்? வறட்டு சித்தாந்தம் பேசுவதற்கு நன்றாக இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையில் அவை நம்மை நட்டாற்றில் விட்டு விடும் இல்லையா? எனவே எனது முந்தைய "brand" கேலிகளை ஞாபகமாக மறந்து விட்டு அந்த கடையிலேயேகாபிப்பொடி வாங்கி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்  [நான் பள்ளி சென்ற வருடங்களில் அதே இடத்தில "நரசுஸ் காபி" இருந்தது. கல்லாவில் அமர்ந்திருக்கும் கதர் சட்டை பெரியவர் "என்ன rank வாங்கற தம்பி" என்று தவறாமல் கேட்பார்.] . உடனே ஒரு கொள்கை முடிவு எடுத்து விட்டேன். ஒரு பொருளை பயன்படுத்தும் போதோ அது நமக்கு பயன்படும்போதோ அப்போதைக்கு அதை குத்தமா கேலியோ சொல்லக்க்கூடாது என்று...  "என்ன  கொள்கை இது? வேண்டும் பொழுது மாற்றி கொள்வது அநியாயமாக இருக்கிறதே?" என்று கேட்கிறீர்களா? முன்னர் எல்லாம் இந்த மாதிரி இடத்துக்கும் நேரத்துக்கும் தகுந்த மாதிரி 
மா(ற்)றிக்கொண்டே  இருந்தால் "பச்சோந்தி" "காரியவாதி" என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது  இதை "பக்குவம்" என்கிறார்கள்! சரி நாமும் சற்று  பக்குவமாய் இருப்போம் என்றுதான்...உத்தமமான கொள்கைதானே sir?

இந்த பதிவை எப்படி முடிக்கலாம்? கைவசம் "punch" ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்போம் - ஏனென்றால் இப்போதெல்லாம் எல்லாரும் எல்லாவற்றிலும் "punch" இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நம் போன்ற சாமானியர்கள் "punch" தர முடியுமா? கீழே இருப்பதில் "punch" இல்லையென்றாலும் "pinch" இருக்கிறதா என்று பாருங்கள்...

நம்மை அழுத்தும் நுகர்வு கலாச்சாரம் ஒரு பக்கம், எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலும் கலப்படமும் மறுபக்கம். இவற்றினிடையே சகிப்புத்தன்மை நிறைய பெற்று "வேரின் பச்சை" போல அடி மனதில் பழைய புதையல்களை நினைத்து வாழும் நம்மை போன்றவர்களுக்கு "நமக்கு நாமே" [சரியாக படித்து விடுங்கள்...கொஞ்சம் பிசகினால் "நமக்கு நாமமே" என்றாகி விடப்போகிறது!]  திட்டத்தின் அடிப்படையில் "பச்சைத் தமிழன்" பட்டம் கொடுத்து கொள்வது சரிதானே?  

சில வாரங்கள் முன்  நாஞ்சில் நாடனின் "பனுவல் போற்றுதும்" படிக்கையில் அதில் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான "சூளாமணி" நூலிலிருந்து ஒரு பாடல்  சொல்லியிருந்தார்...அது:

ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி
நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ

அதாவது, ஒருவனை யானை துரத்துகிறது, அதிலிருந்து தப்பிக்க ஓடி வந்தால் எதிரே பாழுங்கிணறு அதிலோ பாம்புகள். யானையிடம் மிதிபடுவதா பாம்புகளிடம் கடிபடுவதா? இரண்டுக்குமிடையில் ஒரு புல்புதரை பற்றி கொண்டு யோசிக்கையில் பக்கத்திலிருக்கும் மரத்தில் உள்ள தேன்கூட்டிலிருந்து சொட்டும் தேனை நக்கும் விருப்பமும் தோன்றுகிறதாம்... இதுதான் வாழ்க்கையாம்...இதை இன்றைய நம் வாழ்க்கை சூழலுக்கு பொருத்திப்  பாருங்கள்!