/ கலி காலம்: June 2012

Saturday, June 30, 2012

அன்னா ஹசாரே பின்னால் போகலாமா? பகுதி 1

இன்னொரு "உண்ணாவிரத" சீசன் ஜூலை 25 துவங்குவது போலத் தெரிகிறது. புரட்சிப் பாலும் எழுச்சித் தேனும் தெருவெங்கும் கரைபுரண்டு ஓடுவது போல பத்திரிகைகளும் செய்தி சேனல்களும் ஒரிரு நாட்களோ ஒரு வாரமோ துள்ளிக் குதிக்கும். அதன்பின் "பழைய குருடி கதவைத் திறடி" என்று அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, நேரம் கிடைத்தால் உண்ணாவிரத வெற்றி தோல்விகளை கால் நீட்டி அமர்ந்தபடி வீட்டில் காபி குடித்துக் கொண்டே கதையடித்துக் கொண்டிருக்கலாமே - அடுத்த உண்ணாவிரத அறிவிப்பு வரும் வரை...

ஆஹா..."ஹசாரே பின்னால் போகலாமா?" என்று தலைப்பு இருக்கிறதே அப்படியானால் அவர் பற்றிய "விஷயம்" ஏதோ இப்பதிவில் இருக்கிறது என்றெண்ணி படிக்க வந்தோர் பயன்பெறும் வகையில் பதிவில் எதுவுமில்லை. ஏனென்றால் இப்பதிவு ஹசாரே பற்றியதல்ல. நம்மை பற்றி. வெ,மா,சூ,சொ ஆகிய‌ "நான்கு குணங்கள்" மறந்து போன நம்மை பற்றி...

உண்ணாவிரத அறிவிப்பு வந்தால் போதும். உடனே நம் அனைவருக்கும், நாம் ஒவ்வொருவரும் அரிச்சந்திரனின் அண்ணன் என்ற நினைப்பு வந்து விடும். ஆனால் நாம் தினந்தோறும் நடத்தி வரும் நாடகங்களை நினைத்துப் பார்க்கிறோமா?

நம்மில் எத்தனை பேர் அரசு அலுவலகங்களில் "சுத்தமான" முறையில் வேலை முடித்திருக்கிறோம்? கேட்டால் "கொடுத்தால்தான் file move ஆகிறது" "எத்தனை நாள் அலைவது" என்று சால்ஜாப்பு வேறு. இத்தோடு நிற்காமல், எவரேனும் நேர் வழியில் போவதாக சொல்லிக் காத்துக் கிடந்தால், "உலகம் தெரியாத ஆளாய் இருக்கிறானே அவன்" என்று அறிவுரை வேறு....

பள்ளி கல்லூரிகளில் நடக்கும் பகல் கொள்ளைகளில் "பிள்ளைகளின் படிப்பு நலன் கருதி" பல்லைக் காட்டிக் கொண்டு அதிக‌ பணத்தைக் கொடுப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?

இத்தனை பெரிய தேசத்தில் மருத்துவமனைகள் நம்மிடம் பிடுங்குவதை தவிர்க்க ஒரு சட்ட வரையறை இல்லாத வெட்கக்கேட்டை நாம் என்ன செய்திருக்கிறோம்? இருப்பதிலேயே அதிகம் சுரண்டும் மருத்துவமனையே நன்று என்று நம்பி, பிறரையும் நம்ப வைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

காவிரியும் தாமிரபரணியும் கண் முன்னே கரைகிறதே? என்ன செய்தோம்? வீட்டுக்கு வீடு can தண்ணீர் விலைக்கு வாங்கப் பழகிக் கொண்டோம்...நமக்கு மானாட மயிலாட பார்க்கவே நேரம் போதவில்லை. இதில் மண் பற்றிய அக்கறைக்கு எங்கே போவது? "Swami Nigamananda" பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கங்கைக்காக மாதக்கணக்கில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த இவருக்கு ஆதரவாகவோ இவரைப் பற்றியோ ஏன் செய்தியே வரவில்லை? இவர் இறந்த பின், ஒரு குட்டிச் செய்தியாக போட்டார்கள். ஏன் என்றால் இந்த செய்தியால் ஊடகங்களுக்கு "வரும்படி" குறைவு. தங்கள் பிழைப்பு ஓடும் வகையில் செய்திகள் இருந்தால் தானே பரபரப்பாக "ஊடக வியாபாரம்" நடக்கும்! நமக்கோ, அன்னா ஹசாரே மீது மயக்கம். வேறெதுவும் கண்ணில் படாது! பாவம்...கவனிப்பார் இன்றி இறந்து போனார் நிகமானந்தா!

இத்தனை வருடங்களாகியும் தலைநகர் சென்னையில் கூட auto meter போடுவதை கொண்டு வர இயலாமல் "அநியாயம்" என்று தினமும் புலப்பிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டத் தெரிந்திருக்கிறதே நமக்கு!

தெருவுக்கு ப‌த்து பேர் சேர்ந்தால் ஊர் முழுக்க‌ தேரே இழுக்க‌லாம் என்னும் பொழுது தேருக்கு பூ க‌ட்ட‌ நாரில்லை என்று புழுகித் த‌ப்பிப்ப‌துதானே ந‌ம் ப‌ழ‌க்க‌ம். இந்த‌ லட்சணத்தில் "I am Anna" என்று ந‌ம‌க்கு குல்லா வேறு...

எவ்வளவு நன்றாக "கவனித்து வளர்த்தாலும்" ஊருக்கு நாலு பேர் உண்மையாகவே உத்தமர்களாய் வாழும் முனைப்போடு வளர்ந்து விடுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை கதி தண்ணீரிலிருந்து தரையில் குதித்த மீன் படும் பாடுதான்...ஆனால், "உத்தமனாய் இருந்து என்னத்தை கண்டாய்?" என்று வீடும் நாடும் சாம, தான , பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி இது போன்றவர்களை "பக்குவம்" அடைந்த மனிதர்களாய் மாற்றி விடும் சார். இல்லையென்றால் நாம் தான் விட்டு வைப்போமா?


முதலில் நம் வேலையை நாம் ஒழுங்காக பார்ப்போம். பிறகு நம் தெரு, வார்டு சிக்கல்களை தீர்ப்பதில் நமக்குரிய பங்கை நம்மால் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம்.இந்த வேலைகளை நாம் செய்தாலே ஊரும் நாடும் தானாகவே உருப்படும். அதன் பிறகு நாம் "I am Anna" என்று தலையில் குல்லா மாட்டிக்கொண்டு TV சானல்கள் முன் குதித்து கூப்பாடு போடலாம். என்ன சொல்கிறீர்கள்?

அதனால் தான் இந்த உண்ணாவிரத சீசன்களுக்கு ஒரு முடிவு தேவை என்கிறேன்.உண்ணாவிரதம் குறித்து நாம் அனைவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அது என்ன? அன்னா ஹசாரேவுக்கு வயதாகி விட்டது. நம்மை பற்றியும் நம் நாட்டைப் பற்றியும் நன்றாகவே அறிந்திருந்தாலும், ஏதோ அவரின் போதாத காலம், மீண்டும் மீண்டும் உண்ணாவிரதம் என்ற போக்கிலேயே இருக்கிறார். அவரின் கொள்கைகள் பற்றியோ அவரைப் பற்றியோ விவாதம் தேவையின்றி, சரியா தவறா என்பதை விடுத்து, அதையெல்லாம் மீறி, ஒரு முதியவரின் உடல்நிலை கெடாமல் இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில், அதை மாற்ற சில "எளிய" வழிகள் சொல்லுவோம். அத்தகைய வழிகளை அடுத்த வாரம் பார்ப்போம்...


Thursday, June 21, 2012

இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

இரண்டு நாட்களாக ஒரே கூத்து சார்..."இளையராஜாவுக்கு அங்கீகாரம்" என்று தமிழ்  பத்திரிக்கைகளும் மற்ற தமிழ் ஊடகங்களும் ஆனந்த அட்டகாசம் செய்ய..."Ilayaraja song in London Olympics" என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி பரப்ப, கிடைப்பதற்கரிய அங்கீகாரம் ஒன்றை இளையராஜா பெற்று விட்டது போல ஒரு பொய் பிம்பம் நாடெங்கும் நடை போடுகிறது.

"The Times of India" பத்திரிக்கையின் செய்தியை பாருங்கள்: "Music Maestro Ilayaraja has received a rare honour. At this year's London Olympics, scheduled to begin in July, Ilayaraja's song from the 1981 Kamal Haasan flick 'Ram Lakshman' will be played along with a few other samples of world music as part of the opening ceremony." என்று போடுகிறார்கள்.

"The Hindu" சற்று பரவாயில்லை."Who would have ever thought the London Olympics, hardly six weeks away, would have a strong Chennai connection? But thanks to music composer Ilayaraja, it will. A Tamil film song composed by him in the early 1980s has made it to the playlist of the grand opening ceremony." என்று செய்தி.

நமக்கு, "எதை" "எங்கு" "வைப்பது" என்று சுட்டுப் போட்டாலும் வராதே. சம்பந்தம் இல்லாத விஷயங்களை சம்பந்தப் படுத்துவதுதானே நம் வேலையே! ஒலிம்பிக்ஸ், விளையாட்டு சம்பந்தப்பட்டது. இதில் தகுதி பெற்ற நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் அங்கீகாரமும் உலக அளவில் வரும், வர வேண்டும் என்று சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, ஒரு துவக்க நிகழ்ச்சியில் இடம்பெறும் இசை கோர்வையில் இளையராஜாவின் ஒரு துளி இடம்பெறுவதால் அவருக்கு அங்கீகாரம் என்று சொல்வது இளையராஜாவுக்கு மட்டுமல்ல, இசைக்கும் இழுக்கு. எதற்கும் எதற்கும் சார் நாம் முடிச்சு போடுகிறோம்?


சரி. தேர்வு செய்ததுதான் செய்தார்கள். எதற்கு இந்த பாட்டு? ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்ச்சியின் துவக்க விழா. "துள்ளல்" நிறைந்திருக்கும் என்பது ஏற்புடையதுதான். எனவே அங்கு "துள்ளல்" இசைதான் எடுபடும் என்பதும் சரியே. ஆனால் இளையராஜா போடாத "துள்ளல்" இசையா? அவ்வளவு ஏன் சார்? இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ராம் லட்சுமண்" படத்திலேயே "வாலிபமே வா வா" என்றொரு பாடல் உண்டு. அதன் fast beat இடையே கூட‌ அற்புதமான சங்கதிகள் வைத்திருப்பார் இளையராஜா. அது கண்ணில் படாமல் போனது எப்படி?



"வாழ்க்கை" படத்தில் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" என்ற பாடல்...இதன் தாளக்கட்டையும் வயலினையும் உலகமே ரசிக்கலாமே? "ராஜ பார்வை" படத்தின் title music  பிற்பகுதியில் வரும் அந்த western bit, புன்னகை மன்னனில் வரும் அந்த track என்று நூற்றுக்கணக்கான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாமே? அப்புறம் ஏன் இந்த பாட்டு?

லாஜிக் ஏதாவது தெரிகிறதா? எனக்கு, இப்படி ஒரு லாஜிக் இருக்குமோ என்று தோன்றுகிறது:
யாரோ ஒருவர், இளையாராஜா படங்கள் பெயரை கணிப்பொறியில் ஓட விட்டு கண்ணை மூடிக் கொண்டு, தனது கை, கணிப்பொறி திரையில் எங்கு தொடுகிறதோ அந்த இடத்தில் இருக்கும் படப்பெயரை தேர்வு செய்து இருக்கக் கூடும். இந்த வகையில் "ராம் லக்ஷ்மணன்" மாட்டிக் கொண்டிருக்கக்கூடுமோ என்ற எண்ணம் நமக்கு தோன்றுவதில் வியப்பில்லை.பிறகு இதே "முறையை" பின்பற்றி அப்படத்திலிருந்து ஒரு பாடலையும் தேர்ந்தெடுத்து விட்டார்களோ என்னவோ?

ஒரு மாபெரும் தேசத்தின் பாரம்பரியம் மிக்க தென்னிந்திய மாநிலங்களில், இரண்டு தலைமுறைகள் வளர்ந்த விதத்தையே மாற்றியமைத்த ஒருவரின் அற்புதமான ஆயிரம் compositions இருக்க, இந்த பாடலின் இசையின் மூலம் இவர்தான் இந்தியாவின் சொத்தான இளையராஜா என்று உலகம் அறிவதன் பெயரா அங்கீகாரம்?

"Another world famous composition from India" என்று "why this kolaveri" பாடலை சேர்த்து "இந்தியாவுக்கே அங்கீகாரம்" என்று நம் பத்திரிகைகள் நாட்டியம் ஆடும்படி செய்யாமல் விட்டார்களே. அந்த அளவில் ஒலிம்பிக் துவக்க விழா இசை குழுவுக்கு கோடானு கோடி வந்தனங்கள்!



முக்கியமான கருத்து:


1."இளையராஜாவின் மிகச் சாதாரணமான சராசரி பாடல்கள் கூட ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு போவதில், இளையராஜாவினால், அந்தத் துவக்க விழா அங்கீகாரம் பெறுகிறது" என்று மாற்றிச் சொல்லுவோம். உரக்கச் சொல்லுவோம். 

2. இன்று வரும் பெரும்பாலான அர்த்தமற்ற கூச்சல் சத்தமிக்க பாடல்களை விட இந்த பாடல் எவ்வளவோ நன்றாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதுவும், 1981ல் முப்பது படங்கள் இசையமைத்த இளையராஜா, "பொழுது போக்கு" நிமித்தமாக போடும் பாடல்களில் கூட எப்படிப்பட்ட‌ உழைப்பும் அர்ப்பணிப்பும் காட்டுவார் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்.

3. பள்ளி நாட்களில் கபடி விளையாட்டில் "கபடி கபடி" என்று சொல்வதற்கு பதிலாக இந்த பாடலை வேகமாக சொல்லும் சிறுவர்களுடன் விளையாடிய பொழுதுகளையும், வகுப்பறையில் விளையாட்டாக சண்டையிடும் பொழுது இப்பாடலை சொல்லியபடி ஓடி வரும் மாணவர்களையும் நினைவில் மீண்டும் கொண்டு வந்த London Olympics துவக்க விழா குழுவுக்கு நன்றி.

Saturday, June 16, 2012

மாண்புமிகு தமிழரின் மேன்மைமிகு ரிங் டோன்கள்...

எத்தனை விதமான போன்களடா அதில் எத்தனைவித ரிங் டோன்களடா... என்று ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு "ரிங் டோன்" வசதியை உபயோகப்படுத்துவதில் நாம் வெளுத்துக் க‌ட்டுகிறோம் . நம்முடைய "ரசனைகள்" பீடு நடை போட பாதை இட்டு பாடாய் படுத்துகிறது இந்த ரிங் டோன்களின் ரீங்காரம்.ஒரு வசதியை எந்த அளவு பயன்படுத்தி "போட்டுத் தாக்கு"வோம் என்பதற்கு இந்த ரிங் டோனை நாம் பயன்படுத்தும் முறைகளிலேயே அறிந்து கொள்ளலாம்.

சென்ற மாதம் ஈரோட்டில் ஒரு திருமணம். கல்யாண மண்டப கழிப்பறையில் என் பக்கத்து கழிவறையிலிருந்து ஒரு ring tone...சீர்காழி கோவிந்தராஜனின் "முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே...". அடக் கடவுளே! கலிகாலத்தில் உன் நிலைமை பார்த்தாயா? எங்கிருந்தெல்லாம் உன்னை அழைக்கிறார்கள்! இயற்கை உபாதை கழிக்கையில் கூடவா இறைவன் பாட்டு? அல்லது நம் நண்பர் மலச் சிக்கல் நீங்கி மறுமலர்ச்சி பெற‌ மொமைல் போன் மூலம் முருகனை வேண்டுகிறாரோ?

இதற்கு நேரெதிர் கோஷ்டிகளுக்கும் பஞ்சமில்லை. மீனாட்சி கோயில் பொற்றாமரை குளத்தில் அமர்ந்த படி வாழ்க்கை போகும் பாதையை வாசிக்கும் பொழுது, அருகில் அமர்ந்திருப்பவர் "அரைச்ச மாவை அரைப்போமா" என்கிறார். இவரிடம், "ஏன் சார் இப்படி ஒரு ரிங் டோன் கொலை வெறி" என்று கேட்க முடியுமா? எந்த கேள்விக்கும் ஏடாகூடமாக பதில் சொல்லத் தெரிந்தவர்கள் தானே நாம்? ஒரு வேளை நம் மாவு நண்பர்,  "முன்னோர்க்கு முன்னோர் துவங்கி அரைத்த மாவையே அரைப்பதால்தான் இவ்வுலக வாழ்க்கை இப்படி இருக்கிறது. இதைத்தான் "அரைச்ச மாவை அரைபோமா" என்று தத்துவ விசாரணை செய்கிறது இந்த பாடல்" என்று நம் மேல் வேதாந்த மாவை அவர் பூசி விட்டால் என்ன செய்வது? நம்மால் முடிந்தது இன்னும் இரண்டு படிக்கட்டுக்கள் தள்ளி அமர்ந்து தண்ணீர் இல்லாத பொற்றாமரையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்...

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தள்ளு வண்டியில் பழம் விற்பவர், "நான் அடிச்சா தாங்க மாட்ட..." என்னும் ரிங் டோன் வைத்திருக்கிறார். பேரம் பேசுகையில் இவருக்கு போன் வந்தால் நாமெல்லாம் தெறித்து ஓடி விட வேண்டியதுதான்...

ஒரு முறை நுங்கம்பாக்கத்திலிருந்து அடையார் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் நல்ல கூட்டம். கல்லூரியில் படிப்பவர் போலிருந்த பெண் ஒருவரிடமிருந்து "சும்மா நிக்காதீங்க...சொல்லும்படி வைக்காதீங்க" என்று வருகிறது ரிங் டோன். வம்பிழுக்கக் காத்திருக்கும் ஆண்களை வரவேற்கும் வகை பெண் போலும்!. இவர் போன்ற "புதுமை" பெண்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது சார். நல்ல வேளை. அதற்கு பிறகு உள்ள வரிகள் இல்லாமல் இரண்டு வரியுடன் ரிங் டோன் செட் செய்த இந்த மகளிர் குல மாணிக்கத்திற்கு மனதால் நன்றி சொல்வோம்.

இன்னும் சில பேருக்கு வீட்டில் இருக்கும் பொழுது ரிங் டோன் மாற்றி set  பண்ண மனது வராது. அடுத்தவர் நிம்மதியை கெடுத்தால்தானே நமக்கு மகிழ்ச்சி கிடைத்தாற் போல இருக்கிறது. எனவே, இவர்கள் பேருந்தில் பயணம் போகையில் ஒவ்வொரு பாட்டாக வரிக்கு வரி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எது நல்ல ரிங் டோனாக இருக்கும் என்று test செய்கிறார்களாம்!. பக்கத்தில் இருப்பவர்களுக்கோ, விருந்து சாப்பிட்டவன் எடுத்த வாந்தி போல விதவிதமாய் அரைகுறையாய் இப்படி மாறிக் கொண்டே இருக்கும் வரிகள் தலைவலியைக் கொடுக்கும். சிலர் இவ்வாறு "பணி" செய்யும் பொழுது, தானும் அந்த பாடலை வரியை உடன் பாடி இன்னும் கடுப்பேற்றுவார்கள்.

தற்போது "சத்யமேவ ஜெயதே" என்றொரு டிவி நிகழ்ச்சி பிரபலமாகி இருக்கிறது. எனவே நிறைய பேர் "satyameva jayate" ரிங் டோன் வைத்திருக்கிறார்கள் (பாட்டு நன்றாகத் தான் இருக்கிறது). ஏன் சார், வாய்மையே வெல்லும் என்பதை வாழ்க்கையில் கடைபிடிக்க நாம் என்ன வடிகட்டிய முட்டாள்களா என்ன? எந்த இடத்தில் எந்த பொய் சொன்னால் நமக்கு என்ன லாபம் என்பதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இல்லையா நாம்? அதனால்தான், காலத்துக்கு உதவாத உண்மை நேர்மை போன்றவை காலர் டோனிலாவது காற்று வாங்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில் நாலு பேர் "satyameva jayate " என்று போனில் டோன் வைத்திருக்கிறார்கள். விடுங்கள்...பாவம்.

ச‌ரி. மேலே சொன்னவற்றை தள்ளி வையுங்கள். அற்புதமான ரிங் டோன் வைத்திருக்கும் பலரையும் நாம் சட்டென்று பொது இடத்தில் கடக்கும் பொழுது, யாரென்று தெரியாமலேயே அவர்களை பிடித்துப் போய்விடுகிறது...சென்னை ரங்கநாதன் தெருவில் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் "இது ஒரு பொன் மாலைப் பொழுது", KPN பேருந்தில் எனக்கு முன் வரிசை இருக்கை பெண்ணிடமிருந்து வந்த "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு", மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு முதியவரின் "வெள்ளிப் பனி மலையின்..." என்று நிறைய மனிதர்கள் மனதிற்கு நிறைவு தரும் ரிங் டோன் வைத்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.


Sunday, June 10, 2012

புலி பார்த்த கதை...

காக்கை குருவி கூட கண்ணில் தென்படுவது குறைந்து விட்டது. இந்த லட்சணத்தில், புலி பார்த்ததாக புருடா வேறு விடுகிறாயா...என்று நீங்கள் கேட்கலாம். (வீடியோ காட்சிகள் பதிவின் இறுதியில்...). நம் வளர்ச்சியின் பொருட்டு நகரங்களை எல்லாம் நாம் பொட்டலாய் மாற்றியிருக்கிறோம். காடுகளிலும் நாம் கை வைத்து இயற்கையின் இடுப்பை ஒடிக்க நம்மாலான முயற்சி செய்கிறோம். zoo தவிர வேறெங்கும் புலி என்றொரு விலங்கு உலாவும் என்று எவரேனும் சொன்னால் நக்கலாக சிரிக்கும் அளவுக்கு அல்லவா நாம் நம் இயற்கை வளங்களை பாதுகாக்கிறோம்.

பல வருடம் பற்றுடன் காடுகளில் திரிந்தால், புலியின் புத்தியும் மனதும் இளகி நமக்கு காட்சி தரும் சாத்தியக்கூறுகள் உண்டு என்று நம்ப வைக்கிறது நான் புலி பார்த்த கதை.

குளிருக்கு போர்வை போர்த்த கோடை தயாராகும் பிப்ரவரி மாதம். வாழ்க்கையின் மறக்க முடியாத நிமிடங்களில் ஒன்றை எங்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த காலத்தின் ஒரு துளி அதிகாலை பொழுது. guide இரண்டு பேர் நாங்கள் மூன்று பேர், பல வருடம் மனதில் படிந்த‌ ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் மற்றுமொறு trekking துவங்கினோம்.புலி பற்றிய பதிவு என்பதால் காட்டின் அழகு பற்றி கதை சொல்லாமல் சட்டென்று விஷயத்திற்கு வருவோம்.

அந்த உச்சக்கட்ட நிமிடங்களுக்குள் எங்களை இழுத்துச் செல்வது போல‌ langur குரங்குகள் ஒலி எழுப்பியபடி, வழி நடத்தியபடி இருந்தன. ஒரு புலியோ சிறுத்தையோ எங்கள் பக்கத்தில் எங்கோ இருக்கிறது என்பது உறுதியாகி விட்டது.
புலியின் சென்ட் மணம் மூக்கு உணர்கிறது. அதன் கால் தடங்கள் கடவுள் போன பாதை போல பரவசம் ஏற்படுத்துகிறது.  காய்ந்த சருகுகளின் மீது நடக்கும் போது கூட, பூ மீது நடப்பது போல் சத்தமின்றி நடக்கும் சாதுரியம் மிக்க புலியை எப்படி கண்டுபிடிப்பது?..புலியே முன்வந்து "இது தான் நான். பார்த்துக் கொள் உன் ஏக்கத்தை தீர்த்துக் கொள்" என்று தானே தரிசனம் காட்டினால்தான் உண்டு.

அந்த நொடியை எதிர்பார்த்து ஏங்கி ஏங்கியே நாக்கு வறண்டு போனது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. "அபூர்வ சகோதரர்கள்" படத்தில் golf  மைதான புல்வெளியை ஒட்டியுள்ள புதர்களில் புலி வால் தெரியுமே...அது போல ஒரு வால். கனவா? நினைவா? கண்டுபிடிக்க கிள்ளிப் பார்க்க வேண்டுமே...அது கூட செய்யத் தோன்றாமல் சிலை போல நின்ற எங்களிடம் சிலிர்ப்பு என்ற உணர்வு மட்டும் உயிர் பெற்றிருந்தது.

வானவில் தரையில் நடப்பது போல் புதர்களுக்கு இடையில் இலைகளின் நிறங்களும் புலிவால் நிறமும் நகர, கண்கள் நிலைக்குத்தி காட்சியில் பதிந்தது. நாங்கள் ஒரு வெட்டவெளியை கடக்க இருக்கும் நிலையில் புலியும் காட்டின் ஒரு சோலையிலிருந்து மறு சோலைக்குள் புக‌ அதே வெட்ட வெளியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

புலியின் புத்திசாலித்த‌ன‌த்தை பாருங்க‌ள்...திற‌ந்த‌வெளிக்கு வ‌ருவ‌த‌ற்கு முன், நின்று நிதானித்து தன் முன்னே உள்ள‌ ப‌குதி முழுவ‌தையும் scan செய்த‌து. நெஞ்சின் ப‌ட‌ப‌ட‌ப்பு காத‌ருகே வைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌ ஒலிப்பெருக்கி போல‌ இடி இடிக்க‌ ச‌ர‌ணாக‌தி நிலையில் ச‌ட்டென்று அனைவ‌ரும் நேர்கோட்டில் ப‌டுத்து விட்டோம்.

புலியின் க‌ண்க‌ள் எங்க‌ளை ஒரே ஒரு நொடி நேரே துளைத்த‌து. உயிரை உறிஞ்சுவது போன்ற கூரிய பார்வை! அந்த‌ பார்வையின் வீரிய‌ம் உட‌லெங்கும் ப‌ர‌வி, காலைக் குளிரிலும் முதுகுத் த‌ண்டில் வ‌ழிய‌த் துவ‌ங்கிய‌ விய‌ர்வையில் இய‌ற்கையின் வ‌ன‌ப்பும் சிற‌ப்பும் அத‌ன் வீச்சு குறித்த‌ பிர‌மிப்பும் ஜொலித்த‌து. "ஏன்டா, க‌ணிப்பொறி முன் அமர்ந்தே காலத்தை களிப்பதாக நினைத்துக் கொண்டு கருத்தின்றி கழித்து, காய்ந்து கிடக்கும் வாழ்க்கையின் வாட்டத்தை போக்க, வார இறுதிகளில் காட்டுக்கு ஓடி வரும் கோமாளிக் கூட்டத்தில் ஒருவன் தானே நீ?" என்றொரு எக‌த்தாள‌ப் பார்வை...அந்த‌ப் பார்வையை ச‌ந்திக்க‌ முடியாம‌ல் நான் த‌லை குனிந்த‌து ப‌ய‌த்தினால் ம‌ட்டும் இருக்காது. குற்ற‌ உண‌ர்ச்சி. ந‌ம் அனைவ‌ருக்கும் இருக்க‌ வேண்டிய‌ குற்ற‌ உண‌ர்ச்சி...எப்பேர்ப‌ட்ட புவி உயிர் சுழ‌ற்சியின் அங்க‌மாக இருக்கிற‌து புலி.அது அழிந்து கொண்டிருப்ப‌தில் ந‌ம் அனைவ‌ருக்குமே ப‌ங்கிருக்கிற‌து என்ப‌தை நாம் அனைவ‌ருமே அறிவோம்.

ந‌ல்ல‌ வேளை...ம‌னுச‌ பயலுகளின் முக‌த்திலேயே முழிக்க‌க் கூடாது என்று நினைத்திருக்குமோ என்ன‌வோ, பார்வையை வேறுப‌க்க‌ம் திருப்பி குறுக்கு வாட்டில் ந‌ட‌க்க‌த் துவ‌ங்கியது. "உயிர் ஊசலாடியது" என்பதை இங்கே "உயிர் ஊஞ்சலாடியது" என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். வ‌யிற்றுக்கும் வாய்க்கும் இடையே காற்று உருளை ஓடுவது போல ஒரு ஆட்டம்...அந்த உருளை தான் உயிரோ?...இமைக‌ள் இய‌ங்க‌ ம‌றுக்க‌, மூச்சு சத்தம் மூங்கில் காற்றாக‌, விய‌ர்வை ஆறாக‌ வ‌ழிந்தோட‌, வார்த்தைக‌ள் "வ‌ன‌வாச‌ம்" போய்விட‌,மூளையின் வேலை நிறுத்த‌ம் கால் வ‌ரை தெரிந்திட‌, எண்ண‌ங்க‌ள் ஏதுமின்றி "வெற்றிட நிமிடத்தில்" துவைத்தெடுத்த‌ ம‌னதை, காய‌ப்போட்டு மாய‌ம் செய்து, க‌ண் முன்னே ம‌றைந்த புலி காலத்துக்கும் மறக்காது.

நம் corporate யோகிகள் தியான வகுப்புக்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள். இந்த புலி ஆசானை பாருங்கள்...இரு நிமிட நடையில் நமக்கு "meditation" பயிற்சி கொடுத்து விட்டு க‌ம்பீர‌மாக‌ க‌ட‌ந்து போகிற‌து...ந‌க‌ர‌த்து "ம‌ன‌ப் ப‌யிற்சி" வ‌குப்புக‌ளில் CD த‌ருவார்க‌ளே என்கிறீர்க‌ளா? எத்த‌னையோ சேன‌ல்க‌ளில் எத்த‌னையோ நேர‌ங்க‌ளில் எங்கோ ஒரு காட்டில் ஏதோ ஒரு புலி ந‌ட‌ந்து போகும் காட்சி வ‌ரும். அதை பார்த்தால் போதும் சார். அன்றைக்கு அதைவிட வேறு "meditation" தேவையில்லை.

video link: (ஆங்காங்கே வீடியோ உதறுவதில் என் பதறலும் புரியுமே!). இறுதியில் Sambar மான் செய்யும் எச்சரிக்கை ஒலியையும் ரசிக்கத் தவறாதீர்கள்!

http://www.youtube.com/watch?v=iULDmLN9xME

Sunday, June 3, 2012

ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வ‌து எப்ப‌டி ப‌குதி 6

நம் நாட்டில் பெரும்பாலான "குடும்ப ரயில்கள்" வாழ்க்கை தண்டவாளத்தில் அதிக விபத்தின்றி ஓடுவது பெண்களின் பக்குவத்தினால்தான் என்று குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் பெண்களில் சில சதவீதம் பேர் தண்டவாளத்திற்கே வேட்டு வைக்கும் "திறமை" படைத்தவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகைய திறமை படைத்த ஒரு "தீந்தமிழ் திருமதி" ஒருவரை காணும் பேறு எனக்கு வாய்த்தது.
சில மாதங்களுக்கு முன் எனது ஒரு பயணத்தில், எதிர் இருக்கையில் ஒரு "தீந்தமிழ் திருமதி" [இனிமேல் "தீ.தி" என்று அழைப்போம்], தன் ஆறு வயது இருக்கக்கூடிய மகனுடன் பயணம் செய்தார். பையன் "wafer biscut" ஒன்றை கீழே தவற விட்டான். குழந்தைகளை, குழந்தைகளாய் இருக்க விடாமல் வளர்ப்பது தானே கலியுக பெற்றோர்களின் பால பாடம். நம்மவரும் அப்படித்தான். மிகுந்த கண்டிப்பானவராம்! மகனை திட்டியபடி "Sh_t" என்றார். ஒரு முறை இரு முறையல்ல...லக்கேஜ் இழுத்து காலில் இடிபட்ட பொழுது...ஜன்னல் கண்ணாடி எளிதாக மூட வராத போது...ரயில் தாமதமான போது...என்று வரிக்கு வரி "Sh_t". இப்படிப்பட்டவர்களில் கொம்பு முளைத்தவர்கள் "bull sh_t" என்பார்கள்."மலம்" தான். ஆனால் ஆங்கிலத்தில் சொல்வதால், நமக்கு முடி முதல் அடி வரை மணக்கிறதே!

என்ன சார் "Sh_t" என்ற வார்த்தை இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்...இதற்கு போய் குதிக்கிறீர்கள் என்கிறீர்களா? மிகச்சரி. அடித்தட்டில் இருக்கும் ஒருவர் குடித்து விட்டு தெருவில் பேசும் வார்த்தைகள் நம்மை அருவருப்படைய வைக்கும். ஆனால் அதே பொருள் தரும் சொற்களை நம் இளைய சமூகம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு திரிகிறது. அசிங்கங்கள் கூட ஆங்கிலம் மூலம் அந்தஸ்து பெறும் நாடல்லவோ!

சற்று நேரம் போனது. ரயில் கொள்ளிடம் மேல் போகத்துவங்கியது. பையனுக்கு மிகப்பெரிய மண‌ல் படுகை பார்த்து உற்சாகம். "என்ன இது" என்ற பையன் நச்சரிப்பு பொறுக்காமல் "தீ.தி" "This is a river" என்றார். இத்துடன் அவர் நிறுத்தியிருக்கலாம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க இயலாது. எனவே கொள்ளிடம், காவிரி பற்றி தெரிய வேண்டும் என்றும் அவசியமில்லை.ஆனால் "தீ.தி" போன்றவர்கள் அதிமேதாவிகள் இல்லயா? எனவே "Its not attractive like Niagara" என்ற கூடுதல் "தகவல்" சொன்னார். தீ.தி அமெரிக்கா போய் வந்தவர் என்பதை நாம் இப்போது அறிவோமாக. நயகாரா அழகுதான். மறுப்பதற்கு இல்லை. ஒரு முக்கியமான விஷயம் சார் - கிடைக்கும் வாய்ப்பில் சுயபுராணம் பாடுவது இந்தியர்களின் இயல்பு இல்லையா? நானும் இந்தியன். எனவே சந்தடி சாக்கில், நானும் Niagara Falls சென்றிருக்கிறேன் என்பதை நைசாக இங்கு நுழைத்து விடுகிறேன்.மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

கொள்ளிடம் என்பது காவிரியின் கிளை ஆறு என்பதும் காவிரியின் பழமையும் வளமும் தெரியாமல் அதை நயகாராவுடன் ஒப்பிட்டு, அதுவும் அடுத்த தலைமுறைக்கு தவறான தகவல் தரும் முட்டாள்தனம் வெளிநாடு போய் வந்தோம் என்ற மமதை தருகிறதோ?அமெரிக்காவில் குடியேற்றம் நிகழ்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகாரில் வணிகம் கண்டவர்கள் நாம். காவிரிக் கரையில் நாம் கால் பதித்து கணக்கற்ற ஆண்டுகள் ஆயிற்று.பார்வைக்கு அழகாய் இருப்பதை மட்டுமே "தீ.தி" போன்றவர்கள் போற்றுவதில் ஆச்சரியமில்லை. நதி என்பது மண்ணின் ரத்த ஒட்டம் என்று இவர்களுக்கு புரியவா போகிறது...

நேரம் ஒடியது... "குடிசை மாற்று வாரியம்" பத்து மாடி கட்டடமாய் ஜொலிக்கும் நம் நாட்டில் இன்னும் ரயில் நிலையங்கள் அருகில் இருக்கும் குடிசைகள் அப்படியேதான் இருக்கின்றன "தீ.தி" வ‌கையின‌ருக்கு தீனி போட்ட‌ப‌டி...அப்ப‌டித்தான் ஒரு குடிசை ப‌குதியை ர‌யில் சிக்ன‌லுக்காக‌ மெதுவாக‌ க‌டந்த‌து. ஆடைக‌ளில் அவ‌த‌ரித்த‌ ஏழ்மையுட‌ன் அங்கிருந்த‌ சிறுவ‌ர்க‌ள் ர‌யிலை நோக்கி கைய‌சைத்த‌ன‌ர். ந‌ம் ர‌யில் பைய‌னும் கைய‌சைத்தான்...தீந்த‌மிழ் திரும‌தியின் நாக்கில் தீப்பொறி ப‌ற‌ந்த‌து. "They are poor. Don't show hands" ஒரு போடு போட்டாரே பார்க்க‌லாம். பைய‌னுக்கும் ந‌ம் ச‌மூக‌த்திற்கும் ஒன்றாக‌வே வ‌லித்திருக்கும். ச‌மூக‌ம் என்றால் என்ன‌வென்றே தெரியாம‌ல் "பெரிய‌ ஆளாக‌" வ‌ரும் வாய்ப்பு அந்த‌ பைய‌னுக்கு, அந்த அம்மாவின் புண்ணிய‌த்தில் கிடைக்க‌க்கூடும்.

அப்புற‌ம் என்ன‌...ம‌ண் ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அன்பு, அறிவு ச‌மூக‌ம் ப‌ற்றிய‌ சிந்த‌னை ஆகிய‌வ‌ற்றை "விழுங்கிய‌" "சுறா"வின் கண்கள் "women's era" ப‌டிக்க‌த் துவ‌ங்கிய‌து. என‌க்கொரு சந்தேகமும் வருத்தமும் ர‌யிலில் செல்லும் பொழுதெல்லாம் வ‌ரும். ஏன் சார் த‌மிழ் நாட்டுக்குள் ஓடும் ர‌யில்க‌ளில் கூட‌ ஜெய‌மோக‌னின் "விஷ்ணுபுர‌ம்" அல்ல‌து ராம‌ கிருஷ்ண‌னின் "யாமம்" போன்ற‌ நாவ‌ல்க‌ளோ அல்ல‌து ல‌.ச‌.ரா வின் "தாக்ஷாயிணி" போன்ற‌ சிறுக‌தைக‌ளோ அல்லது "புதுமைப் பித்தன் சிறுகதைகள்" தொகுப்போ அல்லது ஜெயகாந்தனோ அல்லது தி.ஜாவோ ப‌டித்துக் கொண்டிருக்கும் ஒருவ‌ர் கூட‌ பார்வையில் ப‌ட‌ மாட்டேன் என்கிறார்க‌ள்?
சொர்க்கத்தில் மிதப்பதாக நினைத்து சாக்கடையில் குளிக்க பழகி விட்டோமோ?