/ கலி காலம்: March 2013

Sunday, March 31, 2013

அடக்கடவுளே...உனக்குமா இந்த...?

முன்னரெல்லாம் மொட்டை அடித்துள்ள எவரையேனும் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்போம். இனிமேல், நீளமாக "punk style " முடி வைத்திருப்பர்களைப் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்க வேண்டும் என்ற நிலைமை வந்து விட்டது சார்...

அதான்...ஏப்ரல் மாதம் முதல் 31 அங்குலத்திற்கு மேல் முடி காணிக்கை கொடுப்பவர்களுக்கு இலவச லட்டு என்றுஅறிவித்திருக்கிறார்களே...புரட்சிகரமான திட்டங்களை அரசியல்வாதிகள் தான் அறிவிக்க வேண்டும் என்று யார் சொன்னது? வணிகத்தின் வாயில்களாகி விட்ட கோயில்கள் கூட நம் நாட்டில் "புரட்சி" செய்யலாம் சார்...

சரி, பக்தர்களை "பரவசப்படுத்தும்" பணியே தங்கள் கடமை என்று நினைத்திருந்தால், முடி காணிக்கை செய்வோருக்கு கூடுதல் நேர தரிசனம் என்று சொல்லியிருக்கலாம்..அதை விட்டு இதென்ன சார் காமெடி? ஒரு வேளை "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது" என்பது இது தானோ?

ஏற்கெனவே முடி வணிகம் எப்படிப்பட்ட "பிஸினஸ்" என்பது நமக்குத் தெரியும், இந்தப் புதுப் புரட்சி மூலம், முடிக் காணிக்கை செலுத்தும் இடத்திற்கு அருகிலேயே "தைலம்" விற்கும் கடைகளுக்கு காண்ட்ராக்ட் விட்டு கூடுதல் "பிஸினஸ்" பார்க்க‌த் திட்டம் போட்டிருக்கிறார்களோ என்னவோ...

ஆனால் நாம் பேசாமல் லட்டு வாங்கி வந்து விடுவோமா என்ன? நம்மூர்காரர்களுக்கும் முடிவெட்டுபவர்களுக்கும் என்னவெல்லாம் "உரையாடல்" நிகழுமோ...உதாரணமாக:

(i)"அதென்னங்க 31 அங்குலம்? இருபது, முப்பது அப்படின்னு அளக்க வசதியா வைக்காம 31? ஒரு அங்குலம் கமிஷன் அடிச்சிருவீங்களா?" என்று எவரேனும் கேட்கலாம்...

(ii)"எனக்கு முடி உதிரும் problem இருக்கு. அதனால பூந்தியாவது கொடுங்க" என்று புதுத்திட்டத்தில் பாதிப்படைந்த ஒருவர் வேண்டுகோள் விடுக்கலாம்.

(iii)இப்போது காலம் போகும் வேகத்தில் இருபது வயது காரர்களுக்கே நரைத்து விடுகிறது. கோயில் நிர்வாகம், நரை முடிக்கு இலவச லட்டு உண்டா என்று தெளிவாக சொல்லாததால் குழப்பம் ஏற்படலாம்...முடியின் வண்ணம் குறித்து வாக்குவாதம் நடந்தால், சமாதானம் செய்யும் பொருட்டு "police பந்தோபஸ்து" போடப்படலாம்.

அவ்வளவு ஏன் சார்? இலவசங்களை கொடுத்தே நம்மை இளிச்சவாயர்களாக இருக்க வைக்க முயற்சி செய்யும் நாட்டில், லட்டு சும்மா கொடுப்பதோடு நிறுத்தினால் நன்றாக இருக்குமா? விலையில்லா மடிக்கணிணி, மிக்ஸி, போல வீடுதோறும் விலையில்லா தலைமுடித் தைலம் கொடுத்தால் நாம் வேண்டாம் என்று சொல்லி விடுவோமா? அத்துடன், திருப்பதிக்கு இலவச பேருந்து சர்வீஸ், மாதந்தோறும் "திருப்பதி உதவித் தொகை" என்று அமர்க்களப்படுத்தலாமே சார்...பொறுத்திருப்போம். நம் நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

நல்ல வேளை. மக்களின் எதிர்ப்பினால் இந்த "பக்திப் புரட்சி" கைவிடப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால், எதிர்த்தால் தான் எதுவுமே மூளைக்கு ஏறும் என்றால், "சுய புத்தி" என்ற சொல் இப்போது எந்த நிர்வாகத்திலும் புழக்கத்தில் இல்லையோ?

இது போன்ற கன்றாவிகளை பார்க்கச் சகிக்காமல் கடுப்பாகிப் போன‌ கடவுள்கள், மனிதர்கள் பார்க்க இயலாத மறைவான இடத்திற்கு மாற்றலாகிப் போய் பல மாமாங்கம் ஆகியிருக்குமோ?

Sunday, March 3, 2013

இதுவும் ஒரு வகை அசிங்கமே...


பரபரப்பை மட்டுமே மூலதனமாக வைத்து பிழைப்பை வெற்றிகரமாக ஓட்டுவது எப்படி என்று நம் டிவி சேனல்கள் கற்றுத் தேர்ந்து விட்டன. எதையும் விட்டுவைக்காமல் அதில் செயற்கை பரபரப்பைத் திணித்து அவர்கள் போடும் ஆட்டம் பல சமயங்களில் காமெடியாகவும் கவலை தருவதாகவும் இருப்பதை என்னவென்று சொல்வது...

சில நாட்கள் முன்னர் +2 தேர்வுகள் துவங்கின. ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கானோர் எழுதி வரும் தேர்வு தான். ஆனால் அதை வெறும் செய்தியாக சொன்னால் அதில் என்ன சார் சுவாரஸ்யம்? எனவே, அன்று நம் டிவி சேனல்கள், தங்கள் புத்திசாலித்தனத்தில் புகுந்து விளையாட கிடைத்த வாய்ப்பாக +2 தேர்வுகளை பயன்படுத்திக் கொண்டன.

ஒரு பள்ளியின் உள்ளே நம் "சிறப்பு நிருபர்" நின்றிருந்தார். தேர்வு பற்றிய ஆர்வத்துடனும் கவனத்துடனும் போகும் மாணவர்களை மடக்கிப் பிடித்தார் நிருபர். "முதல் நாள் தேர்வு எழுதப்போகும் அனுபவம் எப்படி இருக்கிறது?" என்று கேள்வியை வீச, அதை "செய்தி நிலையத்திற்கு" நேரலை செய்து கொண்டிருந்தார். நமக்கு புத்தி மிகவும் பிசகி விட்டதோ சார்? அது சரி, மாணவர்களை பற்றிய அக்கறை இருந்தால், இவற்றிற்கு பள்ளி உரிமையாளர் (வியாபரம் என்றால், கடை வைத்திருப்பவர்களை உரிமையாளர் என்று தானே அழைக்க முடியும்) சம்மதித்திருப்பாரா? இது போன்று கவனச்சிதறல் செய்வது கோமாளித்தனம் என்று டிவி சேனல் ஆட்களை வெளியில் தள்ளியிருக்க மாட்டார்? சரியா போச்சப்பா...எந்த காலத்தில் இருக்கிறாய் நீ? பள்ளி டிவியில் வந்தால் எத்தனை விளம்பரம்...அது தெரியாமல் மாணவர்களாவது கவனச் சிதறலாவது என்கிறீர்களா? நீங்கள் சொல்வது சரியே!

இந்த நிருபர் கேட்ட கேள்விகள் சிலவற்றை பார்க்கலாம் சார்..."தம்பி எத்தனை நாட்களாக படித்து வருகிறீர்கள்?" இதற்கு சிலர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிருபரையே பார்த்தபடி இருந்தார்கள்...
"ஏன்யா பள்ளி செல்வதே தினமும் படிப்பதற்கு தானே இது என்ன கேள்வி" என்று நினைத்திருப்பார்கள் போலும். இவ்வாறு சிலரிடம் கேட்டது, தேவையான பரபரப்பு கிட்டாததால், தன் புத்தியை கூராக்கிய நிருபர், "தீவிரமாக" என்ற வார்த்தையை அந்த கேள்வியில் சேர்த்தார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவு "emotion" அல்லது "sentiment" கிடைக்கவில்லை. தற்காலத் தலைமுறை நிதானமும் யதார்த்தமுமாக பதிலளித்தது. ஒருவர் வைத்திருந்த திருநீறு பார்த்து "தேர்வு அன்று கோயிலுக்கு போய் விட்டு வருவது பழக்கமா?"  என்றார். ஒரு மாணவியிடம் "டென்ஷனாக" இருக்கிறதா என்று கேட்டார். அவர் நார்மலாக இருக்க, நிருபருக்கு ஏமாற்றமாக போயிற்று. டென்ஷன் ஏற்றுவது தானே தனது வேலை என்று முடிந்த அளவுக்கு கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டும் அந்தப் பெண் அசராமல் இருக்க, அடுத்த பலிகடாவை தேடியது நிருபரின் பார்வை.

அடுத்த வருடம் இன்னும் பயிற்சியுடன் இத்தகைய நிருபர்கள் களமிறங்கி வெளுத்துக் கட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதோடு நாம் நின்று விடமுடியுமா சார்? அவர்களுக்கு உபயோகமான சில டிப்ஸ் கொடுக்கலாம்...

பள்ளிக்குள் நின்றால் போதுமா? தேர்வு அறையிலேயே போய் உட்கார்ந்து விட வேண்டும். "இதுதான் கேள்வித்தாள். இதில் கேள்விகள் எல்லாம் அச்சடிக்கப்பட்டிருக்கும்" என்று நிருபர் ஒரு கேள்வித்தாளை காட்ட, காமெரா அதை zoom செய்யலாம்.அறையில் இருக்கும் பெஞ்சுகளை நிருபர் சுட்டிக் காட்டியபடி "இதில் அமர்ந்து தான் மாணவர்கள் தேர்வு எழுதுவது வழக்கம்" என்று அரிய கருத்து சொல்லி நமக்கு புரிய வைக்கலாம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என்று முக்கிய நகரங்களில் நிருபர்களை நிற்க வைத்து, "அங்கு தேர்வு நிலவரம் எப்படி இருக்கிறது" என்று செய்தியாளர் கேட்க, "மதுரையில பார்த்தீங்கனா காலையிலிருந்தே மாணவ மாணவிகள் கூட்டமாக கூட்டமாக பள்ளிகள் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்..." என்று போர் நிலவரம் போல buildup கொடுக்கலாம்...+2 என்பதை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு என்றும் அழைப்பார்கள் என்று கூடுதல் தகவல் சொல்லி நம்மை புல்லரிக்க வைக்கலாம்...

பறக்கும் படையினர் எவரையேனும் காப்பியடிக்கும் போது பிடித்தால், முக்கிய செய்தியாக "flash news" போட்டுக் கலக்கலாம். அதைவிட, எவ்வாறு பிடிபட்டார் என்பதை "live relay" செய்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை...என்ன...ஒரே ஒரு கவலை..."தேர்வு வரலாற்றில் முதன் முறையாக‌ உங்கள் abcd தொலைக்காட்சியில்..." என்ற அறிவிப்போடு, தேர்வு தினத்திற்கு முன்னரே வினாத்தாளை சேனல்கள் leak செய்து விட்டால்...இன்னும் அது மட்டும்தானே சார் பாக்கி?