/ கலி காலம்: அன்னா ஹசாரே பின்னால் போகலாமா? பகுதி 1

Saturday, June 30, 2012

அன்னா ஹசாரே பின்னால் போகலாமா? பகுதி 1

இன்னொரு "உண்ணாவிரத" சீசன் ஜூலை 25 துவங்குவது போலத் தெரிகிறது. புரட்சிப் பாலும் எழுச்சித் தேனும் தெருவெங்கும் கரைபுரண்டு ஓடுவது போல பத்திரிகைகளும் செய்தி சேனல்களும் ஒரிரு நாட்களோ ஒரு வாரமோ துள்ளிக் குதிக்கும். அதன்பின் "பழைய குருடி கதவைத் திறடி" என்று அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, நேரம் கிடைத்தால் உண்ணாவிரத வெற்றி தோல்விகளை கால் நீட்டி அமர்ந்தபடி வீட்டில் காபி குடித்துக் கொண்டே கதையடித்துக் கொண்டிருக்கலாமே - அடுத்த உண்ணாவிரத அறிவிப்பு வரும் வரை...

ஆஹா..."ஹசாரே பின்னால் போகலாமா?" என்று தலைப்பு இருக்கிறதே அப்படியானால் அவர் பற்றிய "விஷயம்" ஏதோ இப்பதிவில் இருக்கிறது என்றெண்ணி படிக்க வந்தோர் பயன்பெறும் வகையில் பதிவில் எதுவுமில்லை. ஏனென்றால் இப்பதிவு ஹசாரே பற்றியதல்ல. நம்மை பற்றி. வெ,மா,சூ,சொ ஆகிய‌ "நான்கு குணங்கள்" மறந்து போன நம்மை பற்றி...

உண்ணாவிரத அறிவிப்பு வந்தால் போதும். உடனே நம் அனைவருக்கும், நாம் ஒவ்வொருவரும் அரிச்சந்திரனின் அண்ணன் என்ற நினைப்பு வந்து விடும். ஆனால் நாம் தினந்தோறும் நடத்தி வரும் நாடகங்களை நினைத்துப் பார்க்கிறோமா?

நம்மில் எத்தனை பேர் அரசு அலுவலகங்களில் "சுத்தமான" முறையில் வேலை முடித்திருக்கிறோம்? கேட்டால் "கொடுத்தால்தான் file move ஆகிறது" "எத்தனை நாள் அலைவது" என்று சால்ஜாப்பு வேறு. இத்தோடு நிற்காமல், எவரேனும் நேர் வழியில் போவதாக சொல்லிக் காத்துக் கிடந்தால், "உலகம் தெரியாத ஆளாய் இருக்கிறானே அவன்" என்று அறிவுரை வேறு....

பள்ளி கல்லூரிகளில் நடக்கும் பகல் கொள்ளைகளில் "பிள்ளைகளின் படிப்பு நலன் கருதி" பல்லைக் காட்டிக் கொண்டு அதிக‌ பணத்தைக் கொடுப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?

இத்தனை பெரிய தேசத்தில் மருத்துவமனைகள் நம்மிடம் பிடுங்குவதை தவிர்க்க ஒரு சட்ட வரையறை இல்லாத வெட்கக்கேட்டை நாம் என்ன செய்திருக்கிறோம்? இருப்பதிலேயே அதிகம் சுரண்டும் மருத்துவமனையே நன்று என்று நம்பி, பிறரையும் நம்ப வைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

காவிரியும் தாமிரபரணியும் கண் முன்னே கரைகிறதே? என்ன செய்தோம்? வீட்டுக்கு வீடு can தண்ணீர் விலைக்கு வாங்கப் பழகிக் கொண்டோம்...நமக்கு மானாட மயிலாட பார்க்கவே நேரம் போதவில்லை. இதில் மண் பற்றிய அக்கறைக்கு எங்கே போவது? "Swami Nigamananda" பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கங்கைக்காக மாதக்கணக்கில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த இவருக்கு ஆதரவாகவோ இவரைப் பற்றியோ ஏன் செய்தியே வரவில்லை? இவர் இறந்த பின், ஒரு குட்டிச் செய்தியாக போட்டார்கள். ஏன் என்றால் இந்த செய்தியால் ஊடகங்களுக்கு "வரும்படி" குறைவு. தங்கள் பிழைப்பு ஓடும் வகையில் செய்திகள் இருந்தால் தானே பரபரப்பாக "ஊடக வியாபாரம்" நடக்கும்! நமக்கோ, அன்னா ஹசாரே மீது மயக்கம். வேறெதுவும் கண்ணில் படாது! பாவம்...கவனிப்பார் இன்றி இறந்து போனார் நிகமானந்தா!

இத்தனை வருடங்களாகியும் தலைநகர் சென்னையில் கூட auto meter போடுவதை கொண்டு வர இயலாமல் "அநியாயம்" என்று தினமும் புலப்பிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டத் தெரிந்திருக்கிறதே நமக்கு!

தெருவுக்கு ப‌த்து பேர் சேர்ந்தால் ஊர் முழுக்க‌ தேரே இழுக்க‌லாம் என்னும் பொழுது தேருக்கு பூ க‌ட்ட‌ நாரில்லை என்று புழுகித் த‌ப்பிப்ப‌துதானே ந‌ம் ப‌ழ‌க்க‌ம். இந்த‌ லட்சணத்தில் "I am Anna" என்று ந‌ம‌க்கு குல்லா வேறு...

எவ்வளவு நன்றாக "கவனித்து வளர்த்தாலும்" ஊருக்கு நாலு பேர் உண்மையாகவே உத்தமர்களாய் வாழும் முனைப்போடு வளர்ந்து விடுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை கதி தண்ணீரிலிருந்து தரையில் குதித்த மீன் படும் பாடுதான்...ஆனால், "உத்தமனாய் இருந்து என்னத்தை கண்டாய்?" என்று வீடும் நாடும் சாம, தான , பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி இது போன்றவர்களை "பக்குவம்" அடைந்த மனிதர்களாய் மாற்றி விடும் சார். இல்லையென்றால் நாம் தான் விட்டு வைப்போமா?


முதலில் நம் வேலையை நாம் ஒழுங்காக பார்ப்போம். பிறகு நம் தெரு, வார்டு சிக்கல்களை தீர்ப்பதில் நமக்குரிய பங்கை நம்மால் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம்.இந்த வேலைகளை நாம் செய்தாலே ஊரும் நாடும் தானாகவே உருப்படும். அதன் பிறகு நாம் "I am Anna" என்று தலையில் குல்லா மாட்டிக்கொண்டு TV சானல்கள் முன் குதித்து கூப்பாடு போடலாம். என்ன சொல்கிறீர்கள்?

அதனால் தான் இந்த உண்ணாவிரத சீசன்களுக்கு ஒரு முடிவு தேவை என்கிறேன்.உண்ணாவிரதம் குறித்து நாம் அனைவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அது என்ன? அன்னா ஹசாரேவுக்கு வயதாகி விட்டது. நம்மை பற்றியும் நம் நாட்டைப் பற்றியும் நன்றாகவே அறிந்திருந்தாலும், ஏதோ அவரின் போதாத காலம், மீண்டும் மீண்டும் உண்ணாவிரதம் என்ற போக்கிலேயே இருக்கிறார். அவரின் கொள்கைகள் பற்றியோ அவரைப் பற்றியோ விவாதம் தேவையின்றி, சரியா தவறா என்பதை விடுத்து, அதையெல்லாம் மீறி, ஒரு முதியவரின் உடல்நிலை கெடாமல் இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில், அதை மாற்ற சில "எளிய" வழிகள் சொல்லுவோம். அத்தகைய வழிகளை அடுத்த வாரம் பார்ப்போம்...


4 comments: