/ கலி காலம்: August 2014

Sunday, August 17, 2014

டெண்டுல்கர் இப்படி இருக்கலாமா?

சில நாட்களாக ஊடகங்களுக்கு கிடைத்த தீனி டெண்டுல்கர். இவர்கள் அனைவரும் அவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள் தான். ஆனால் கிரிகெட் மூலம் இனிமேல் அவரை வைத்து நேரம் ஓட்ட முடியாது. மாற்று வேண்டுமே! இந்த நிலையில் டிவி பத்திரிகைகள் கையில் வகையாய் மாட்டியிருக்கிறார் அவர்.

ஏதோ தேசத்துரோகம் செய்து விட்டது போல அவர் ராஜ்யசபாவிற்கு வராதது குறித்து ஆராயப்படுகிறது. நீங்கள் தானே "ஏற்றி" விட்டீர்கள். அப்போது கண்ணை கட்டிக் கொண்டு ஆதரித்தீர்களே? ஒரு கிரிகெட் வீரர் நாட்டை மாற்ற புரட்சி ஏதேனும் செய்வார் என்று நினைத்தீர்களோ? அவர் பாட்டுக்கு எதைப் பற்றியும் கவலையின்றி ஊர் ஊராகச் சென்று ஏதேதோ நிகழ்ச்சிகளில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விட்டு விடுங்கள் சார்...புகழின் முக்காடு போட்டுக் கொண்டிருந்த அவருக்கு "எனக்கெதுக்கு இப்பதவி என்னால் ஆக்கபூர்வமாக செயல்பட முடியாது நேரமும் இல்லை" என்று சொல்லும் நினைப்பிருந்திருக்காது. அல்லது அப்படி ஏதும் சொல்லியிருந்தால் நாம் சும்மாதான் விட்டு விடுவோமா? "என்ன ஒரு அகங்காரம்... தாய் மண்ணை காக்கும் பொறுப்பு கொடுத்தும் நேரமில்லை என்று சொல்கிறாரே" என்று அடித்து தூள் பண்ணியிருப்போமே! சொல்லுங்கள் சார், எப்படி பேசினாலும் இடக்காக பார்க்கும் கூட்டம் நிரம்பியிருக்கும் நாட்டில் அவர் என்னதான் செய்வார்? அதனால் தான் மனிதர் வாயே திறப்பதில்லை.

"வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்" என்பார்கள். அது அனைத்துக்கும் பொருந்தும். நன்றாக விளையாடியவர் என்பதால் சற்றும் சம்பந்தம் இல்லாத பொறுப்பைக் கொடுத்து உட்கார்த்தினால் இந்த லட்சணத்தில் தான் இருக்கும். நல்ல வேளை இந்தியாவின் மானத்தை கிரிகெட்டில் காப்பாற்றியிருக்கிறார் என்பதற்காக ராணுவ தளபதியாக இருந்து தாய்நாட்டை காப்பாற்றுங்கள் என்று ஏதேனும் செய்யாமல் விட்டார்களே என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்.

சரி டெண்டுல்கர் செய்த தவறு என்ன? அவரவருக்கு ஒரு எல்லை உண்டு. தன் திறமை, பண்பு, ஆர்வம், சாத்தியக்கூறுகள் அனைத்தையும் கலந்து வரையப்பட்ட எல்லை. அந்த எல்லையை அறிதல் ஒரு வகை பக்குவம். அத்தகைய பக்குவம் பெற்றோர் தான் செய்யக்கூடியது என்ன, செய்யத் தகுதியானது என்ன என்பதை அறிந்திருப்பார்கள். கெளரவம் கிடைக்கிறது என்பதற்காக கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போய் கொண்டிருக்க மாட்டார்கள். இதைத்தான் செய்யாமல் விட்டிருக்கிறார்.

யாருக்குத் தெரியும், இந்நேரம் அரசியல் பாலபாடம் ஏதேனும் கற்று வந்து, "சபைக்கு வந்தால் தான் மக்கள் சேவையா நான் மக்களுடன் மக்களாக இணைந்து களத்தில் அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தேன்" என்று ஒரே போடாக போட்டால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும்?

டெண்டுல்கருக்கு ஒரு வேண்டுகோள். சபைக்கு வாருங்கள். உங்களை விட தகுதியற்றவர்கள் எல்லாம் அங்கு ஊருக்கு உழைக்கும் உத்தமர்களாக உலா வருகிறார்கள். எண்பதுகளில் ஒரு மதுரை எம்பி பற்றி காமெடியாகச் சொல்வார்கள். அவர் வருடத்திற்கு இரண்டு முறை பாராளுமன்றத்தில் பேசுவாராம். கோடைகால கூட்டத் தொடரின் போது "ஃபேன் போடுங்க" என்பாராம். குளிர்கால கூட்டத் தொடரின் போது "ஃபேனை அணைங்க" என்பாராம். அது போலவாவது எதையாவது பேசலாமே(!?) சார்! இல்லையென்றால் "ஒவ்வொரு ஊரிலும் பட்டி தொட்டியெங்கும் கிரிகெட் மைதானங்கள் அமைக்க அரசு திட்டமிட வேண்டும்" என்று அடித்து விட்டால் சபையில் அனைவரும் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து வரவேற்பார்களே! எதற்கென்று தெரியாமலேயே மேஜையை தட்டுவது நம் சபை நாகரிகத்தில் ஒன்றல்லவா? எப்படியிருந்தாலும் மேஜையை தட்டுபவர்கள் பயனுள்ளவற்றுக்கா தட்டிக் கொண்டிருக்கிறார்கள்? எனவே யோசியுங்கள் மிஸ்டர் டெண்டுல்கர். அதற்காக ரொம்பவும் யோசிக்காதீர்கள்...நம் நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒன்றும் செய்யாமல் மட்டும் இருந்து விடக் கூடாது. எனவே எதையாவது செய்யுங்கள்! யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எதையாவது பேசியோ செய்தோ அது குண்டக்க மண்டக்க என்று ஆகிப் போனாலும் கவலையில்லை. மிஞ்சிப் போனால் நாலு நாள் தொலைகாட்சிகளில் அனல் பறக்கும் விவாதம் நடக்கும். அதற்குள் இதை விட அதிக அசிங்கமான அதிர்ச்சியூட்டும் ஏதேனும் ஒரு செய்தி வரும். எல்லோரும் அதைப் பற்றி விவாதிக்க கிளம்பி விடுவோம். இது பாரத நாட்டின் மாண்பு என்பது டெண்டுல்கருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?