/ கலி காலம்: February 2013

Sunday, February 17, 2013

அட கிறுக்குப் பய புள்ளைகளா...


பதிவின் தலைப்பு வடிவேலுவிடமிருந்து வாங்கியது. ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள், மனித மந்தையின் நெரிசல் மிகுந்த காலை நேர வாழ்க்கை சந்தையில் நானும் ஒரு ஆடாய் பேருந்தில் சிக்கியிருந்தேன். பேருந்தும் போக்குவரத்து நெரிசலில் ஒரு கல்லூரி வாசலருகே சிக்கியிருந்தது.

ஒரு நாட்டின், சமூகத்தின், சீரழிவை அதன் கல்விக் கூடங்கள் எந்தளவு வியாபர நோக்கில் செயல்படுகின்றன என்பதை வைத்தே நாம் சொல்லி விடலாம் இல்லையா சார்? எப்பொழுது கல்வி நிலையங்களும் மருத்துவமனைகளும் விளம்பரம் செய்யத் துவங்கி விட்டனவோ அப்பொழுதே சீரழிவு துவங்கி விட்டனவே...

அங்கே ஒரு "advertisement banner" கண்ணில் பட்டது. "fall admission" என்ற தலைப்பில் கல்லூரியின் "ஆள் சேர்க்கை" விளம்பரம். ஏன் சார், நம்மூரில் மரங்களையே காணோம்...அப்புறம் ஏது சார் "இலையுதிர்காலம்"? நாம் பார்ப்பதெல்லாம் கடுங்கோடை, கோடை, சற்று வாடை. இந்த மூன்றிலேயே ஆண்டின் அனைத்து பருவங்களும் போய் விடுகின்றன...இந்த லட்சணத்தில் இவர்களுக்கு "fall admission" என்று தலைப்பு வேண்டியிருக்கிறது.

வேறொன்றுமில்லை சார், மேற்கத்திய மோகம் தலைக்கு ஏறினால் இப்படித்தான் நடக்கும். மேலை நாடுகளில் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அதையெல்லாம் நாம் பின்பற்றுகிறோமா? "fall colors" என்று அங்குள்ள தாவரங்களில் அபாரமாக வெளிப்படும் நிறமாற்றத்தை அவர்கள் கொண்டாடினால் அது பொருந்தும். நமக்கேது சார் "fall"? அதுவும் கல்லூரி அட்மிஷனுக்கு!

இப்படித்தான் நாம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த பேருந்து பயணத்திலேயே அதற்கு மற்றொரு உதாரணமும் சொல்லி விடலாம். முன்னரெல்லாம், அழுக்கு படிந்த உடையுடன், குடித்து விட்டு பேருந்தில் எவரேனும் ஏறுவார். அவரின் வாயில் அச்சிலேற்ற முடியாத தரமற்ற வார்த்தைகள் சத்தமாக வரும். அனைவரும் அருவருப்புடன் அவரை பார்த்து ஒதுக்குவர். இப்போது என்ன சார் நடக்கிறது? பள்ளி கல்லூரிகளில் இருக்கும் இளம் மாணவர்கள் வாயிலிருந்து ஆங்கிலத்தில் சரமாரியாக அதே அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள், அவர்கள் பேசும் வரிகளுக்கிடையில் வந்து போகிறது. ஆனால் முன்னர் சொன்னவரை பார்க்கையில் வரும் அருவருப்பு இப்போது வரவேண்டுமே? ஹூஹூம்...ஏனென்றால் இவர்கள் ஆங்கிலத்தில் அல்லவா சொல்கிறார்கள்...நமக்குத்தான் ஆங்கிலத்தில் மலம் என்று சொன்னாலும் மல்கோவா போல இருக்குமே...அருவருப்பின் அளவுகோல்களைக் கூட‌ நம் விருப்பப்படி அசிங்கப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் தானே நாம்?...

ஒரு முறை என்னுடன் ஒரு "டிப்டாப்" ஆசாமி பயணம் செய்தார். மனிதர் பயங்கர பிஸி போலும். போன் மேல் போன் போட்டு, பொது இடத்தில் சத்தமாக பேசி அனைவரையும் எரிச்சலடைய வைத்துக் கொண்டிருந்தார். நாகரீகம் மிகவும் உச்சத்தில் போனால் அப்புறம் இடம் பொருள் ஏவல் எல்லாம் இருக்குமிடம் தெரியாதோ சார்? இருப்பினும் அவரின் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேருந்தே மயங்கிக் கிடப்பது போலத் தெரிந்தது. ஒவ்வொரு வரி இடையிலும் ஒரு வார்த்தை வந்து கொண்டே இருந்தது. பாவம், இயற்கை உபாதை இறக்க வழியின்றி தவிக்கிறார் போலும் அடக்க முடியாமல் வாய்விட்டு சொல்கிறார் என்று முதலில் நினைத்தேன். பிறகு, அது மாட்டிற்கு இயற்கை உபாதை என்று மாறியது. வேறொன்றுமில்லை, "மாட்டுச்சாணம்" "மாட்டுச்சாணம்" என்று அவர் வரிக்கு வரி சொல்லிக் கொண்டிருந்தார். நம் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படாதவை தான். ஆனால் மாடு பேருந்துக்குள் புகுந்து சாணம் போட்டுச் செல்லும் அளவு இன்னும் மோசமாகவில்லையே என்று யோசித்தேன். அப்புறம் தான் சார் தெளிவானேன் இது மாட்டின் கழிவு இல்லை வார்த்தையின் கழிவு என்று...

வார்த்தைகள் மட்டுமல்ல சார், வழக்கமே போலித்தனமாக மாறி விட்டதே...மனைவி சமீபத்தில் ஒரு நாள் மாலை தோசை வாங்கி வரச்சொல்லியிருந்தார். மனைவி சொல்லே மந்திரம் என்ற தந்திரம் தானே வாழ்க்கை எந்திரம் ஓடுவதற்கு வசதியான எண்ணெய்? எனவே மசால் தோசை வேண்டி மாலை பொழுதில் ஒரு ஓட்டலில் நின்றிருந்தேன். கவுண்டரில் "பார்சல்" என்ற வார்த்தைக்கு பதில் "take away" என்று போட்டிருந்தார்கள். இப்போதெல்லாம் இப்படித்தான் சார். எதில் போட்டி போடுகிறோமோ இல்லையோ, மேம்போக்காய் மேலைநாடுகளை காப்பி அடிப்பது தான் நம் வேலை. "பார்சல்" அழித்து "take away" என்று போட்டால் அமெரிக்காவில் அமர்ந்தபடி அரிசி மாவு தின்பது போலத் தோன்றுமோ?

சரி சார். ஊருக்கு உபதேசம் முடிந்தது. இனி நம் விஷயத்திற்கு வருவோம். "take away" என்று சொல்லிப்பார்த்தேன். பார்சல் என்ன சார் பார்சல்? "டேக் அவே" என்று சொன்னால் தித்திக்கிறதே சார்... அது மட்டுமல்ல, ஒரு "கெத்து" இருக்கிறது இல்லையா? கூட்டத்திலிருந்த மற்றொருவர், "2 ஊத்தப்பம் to go" என்று பில்லை நீட்டினார். நானும், கவுண்டரில் இருந்தவரிடம் போட்டேன் சார் ஒரு போடு..."மசால் தோசா டேக் அவே" என்று.

தலைப்பு யாருக்கு என்று இப்போது தெளிவாகி இருக்குமே...நமக்குத்தான்... நமக்கே தான்...!

Sunday, February 3, 2013

இட்லி புராணம்...

இந்த இட்லி இருக்கிறதே சார் இட்லி, அதை இத்தனை விதமாக சாப்பிட முடியுமா என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் நமக்கு ஏற்படும் வண்ணம் நம்மவர்கள் "உள்ளே இறக்கும்" நளினம் இருக்கிறதே...அதில் துவங்குகிறது ந‌ம் இட்லி புராணம்.

சிலர், இட்லிக்குள் தங்களுக்கு ஏதேனும் ரகசிய செய்தி இருக்கிறதா என்பது போல் சுரண்டிப் பார்ப்பார்கள். சிலர், இட்லியின் இரண்டு பக்கங்களையும் கண்ணாடியில் முகம் பார்ப்பது போல திருப்பிப் பார்ப்பார்கள். சிந்தனை சிகரங்கள் சில பேர் ஒரு துண்டு இட்லியை பிய்த்து கைகளில் வைத்துக் கொண்டே பல நிமிடம் உரையாடுவார்கள். உரையாடல் உச்சத்தில் இருக்கும் பொழுது வாய் வரைக்கும் இட்லி வந்து வந்து போகும்.

எப்படி இன்று தனிக் கட்சி ஆட்சி என்பது ந‌ம் நாட்டில் சாத்தியமில்லையோ அது போல், சட்னி அல்லது சாம்பார் கூட்டணி இன்றி எந்த ஒரு தட்டிலும் இட்லி ஆட்சி செய்ய முடியாது. சிலர் இட்லியின் துண்டை சாம்பாரில் போட்டு அது மூழ்கும் வரை காத்திருப்பார்கள். அந்த இடைவெளியில் வாழ்க்கையை ஒரு ரவுண்ட் சுற்றி வந்து விடுவார்கள். சாம்பாரில் முக்கிய பின் சட்னியை லேசாக தொட்டு சாப்பிடுவதும், முதலில் சட்னியில் இட்டபின் சாம்பாரில் முக்குவதுமாய் இரு வேறு மனித பிரிவுகள் இட்லி சாப்பிடும் முறையை உலகில் நிர்வகிக்கின்றன.

முன்னரெல்லாம் "பார்சல்" இட்லியை இலையில் வைத்து பேப்பரில்தான் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மேல் இலையை நீக்கினால் அடி இலையில் நசுக்கப்பட்ட சட்னியின் தரிசனம் கிடைக்கும். அந்த இலை நீக்கும் நொடி அற்புதமானது. சட்னி மெல்ல மெல்ல காட்சி கொடுக்கும் பொழுது, அளவு சரியாக இருக்கிறதா, குறைவாக வைத்து விட்டாரா என்று சராசரி உலகில் விடப்பட்ட நம் மேன்மைமிகு ஆன்மா பரிதவிக்கும் நொடி அது.

இவ்வாறு பேப்பரில் இட்லி பார்சல் வாங்கும் பொழுது, சாம்பாருக்கு தூக்கு வைத்திருக்கிறீர்களா என்று பார்சல் போடுபவர் கேட்பார். இரண்டு இட்லி பார்சல் சொல்லி விட்டு குடம் சைஸில் இருக்கும் தூக்கை நீட்டும் புத்திசாலிகள் நம்மில் பலர் இருந்தார்கள். ஒட்டல்காரரோ, "நான் எத்தனுக்கு எத்தன்டா" என்பது போல் ஒரு நக்கல் சிரிப்புடன், தற்போது அணைகளில் இருக்கும் காவிரி நீர் அளவு போல் பெரிய தூக்கின் அடியில் எட்டிப் பார்த்தால் மட்டுமே தெரிவது போல் சாம்பார் ஊற்றித் தருவார். "இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க" என்று சொல்லாத வாய் தமிழ் நாட்டில் இருந்ததா என்று தெரியவில்லை. இப்பொழுதோ, எந்த பேச்சுவார்த்தைக்கும் வழியின்றி plastic கவரில் மெளனமாகி கிடக்கிறது சாம்பார்.

இப்படி ஊரெங்கும் உலா வரும் இட்லி, சில வருடங்களாக மினி இட்லி அவதாரமும் பல ஓட்டல்களில் எடுத்திருக்கிறது. சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் உணவுக்குச் சொல்லி விட்டு காத்திருந்த போது விலைப் பட்டியல் கண்ணில் விழுந்தது. அதில் மினி இட்லி (3cm) என்று bracket போட்டிருந்தார்கள். நான் கணிதம் பயின்றவன் என்ற கர்வம் ஏற்படும் வண்ணம் மூளை ஒரு கேள்வி எழுப்பியது ‍ இட்லியோ வட்ட வடிவம். 3cm என்பது அதன் diameter or radius? அதை விட, இவ்வாறு இட்லியின் அளவை எழுத வைக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? ஒரு நிமிடம் ஓட்டலில் அனைவரும் scale உதவியுடன் இட்லியை அளந்து அளந்து சாப்பிடுவது போல் காட்சி மனதில் தோன்ற, பதறியபடி கனவையும் கணிதத்தையும் விரட்டினேன்.


இதை விட அதிர்ச்சி மற்றொரு ஓட்டலில் காத்திருந்தது. அங்கு "அனிமல் இட்லி" ["animal idli"] என்று போட்டிருந்தார்கள். ஆர்வம் தாங்காமல் சர்வரிடம் அதென்ன அனிமல் இட்லி என்று கேட்டேன். காட்டை காலி செய்து விட்டோம். எனவே மீதமிருக்கும் கொஞ்ச நஞச புலி சிங்கங்களையும் "animal idli" என்று தீர்த்துக் கட்டுகிறோமோ என்று கலக்கம் பரவியது. நல்ல வேளை. "பல வித மிருகங்கள் வடிவில் இட்லி செய்து தருகிறோம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்" என்றார்...!

"என்னப்பா நீ? பதிவில் எப்போதும் "கருத்து" சொல்வாய். இட்லி புராணத்தில் punch message இல்லையா?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இட்லி வைத்தே ஒரு பஞ்ச் மெசேஜ் ரெடி பண்ணி விடலாம்...

இந்த இட்லியை பாருங்கள்...சாதி, மதம் என்று வேறுபட்டு அடித்துக் கொள்ளும் சமூகத்தில் இட்லியை தீண்டாதவர்கள் உண்டா? அமைதியின் வண்ணமான வெள்ளை நிறத்துடன் சமூக நல்லிணக்கத்தின் சான்றாக இருக்கிறதே சார் இட்லி. வர்க்க பேதத்தை கூட எடுத்துக் கொள்ளுங்கள். அன்றாடங்காய்ச்சிகள் "அக்கா கடை இட்லி" சாப்பிடுகிறார்கள். "rich" மக்கள் நட்சத்திர ஓட்டலில் "rice cake" சாப்பிடுகிறார்கள். உள்ளே போவது என்னமோ அரிசியும் உளுந்தும் தான். நடுத்தர வர்க்கமோ, தாங்கள் பிசாக்களுடன் பிறந்து பர்கர்களிலேயே வளர்ந்தது போல பாவனை காட்டினாலும், அவர்கள் போகும் இடங்களில் எல்லாம் துரத்தி, இப்போது pizza கடைகளிலும்  coffee day உள்ளேயும் புகுந்து, நீக்கமற நிறைந்து தன் ஆளுமையை பறைசாற்றி கொண்டிருக்கிறதே சார் நம் இட்லி! நம்மூரில் யார் யாரோ "சமூக நீதி காவலர்" பட்டத்துடன் உலா வருகிறார்கள். இட்லிக்கு அந்தத் தகுதி இல்லையா சார்? நீங்களே சொல்லுங்கள்...