/ கலி காலம்: December 2012

Thursday, December 20, 2012

தமிழரும் தண்ணீரும்...


"பொங்கல் சாப்பிடு தமிழா, பொங்கல் சாப்பிடு" - இந்த வாசகத்தை நீங்கள் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில், ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ளே சாலையின் சுவர்களில், நான் சிறுவனாக இருந்த வருடங்களில் இது நிரந்தரமாக இருந்தது.

பொங்கல் சாப்பிடச் சொல்லும் வரிக்கு மேலும் கீழும் அன்றைய சமூக சூழலுக்கு பொருத்தமான‌ "சிக்கல்களை" மாற்றி மாற்றி எழுதுவார்கள். இன்று,  அந்த சுவரில்  "கொக்கோ கோலா" குடித்தால் ஏற்படும் குதூகலம் குறித்து தமிழர்களுக்கு ஒரு விளம்பர யுவதி விளக்கிக் கொண்டிருக்கிறார்...

பழைய வரியும் சுவரும் இன்று இருந்திருந்தால், "நிலத்தில் நீர் தங்கலை நீ வைக்காதே பொங்கலை" என்று எழுதியிருப்பார்கள்.

இன்று 1 டிஎம்சிக்கும் 2 டிஎம்சிக்கும் காய்ந்து கிடக்கும் நம் நீர் மேலாண்மை (water management) எப்படிப் பட்டது? கல்லணையை எடுத்துக் கொள்வோம்... நம்மவர்களுக்கு, செய்யும் வேலைக்கு அலங்காரமாக பெயர்கள் வைத்து விளம்பரப்படுத்த தெரியவில்லை அல்லது மனமில்லை. எனவே, கல்லணை ஆயிரம் வருடமாக‌ இருக்கிறது என்பதை தவிர நமக்கு வேறெதுவும் தெரியவில்லை. இது ஒரு அற்புதமான முன்னோடி என்பதை சொல்வதற்கும் நமக்கு ஆங்கிலேயர்கள் வேண்டியிருந்தது. அமெரிக்காவில் 19ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் முயற்சிக்கப்பட்ட "rock fill method" என்பது வேறொன்றுமில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன் வெவ்வேறு அளவுகளில் உள்ள கற்களை வெவ்வேறு காலங்களில் கொட்டி, கட்டப்பட்ட கல்லணையின் "design" தான். இப்படிப்பட்ட நுணுக்கங்களை அன்றே வடிவமைத்த நாம் எப்பொழுது இத்தகைய ஆற்றல்களை இழக்கத் துவங்கினோம்?

பிரபலமான தேசிய ஊடகங்கள் எதிலும் காவிரி பற்றி ஒரு விவாதம் கூட வரவில்லையே...ஏன்? அதிலும், சமூக பொறுப்புகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல காட்டிக் கொள்ளும் ஒரு சேனலின் "செய்தி நேரத்தில்" கூட இது அரசியல் தவிர வேறு காரணங்களுக்காக வருவதில்லையே...ஏன்? ஆனால், இதே சேனலுக்கு, "கொலை வெறி" பாடலின் மகத்துவத்தை நாட்டுக்கு விளக்க பத்து நிமிடம் ஒதுக்க முடிகிறது...வெட்கக்கேடு!

உள்ளூர் சேனல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை...நடிகைகளின் பாதி முகத்தைக் காட்டி அவர் யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லும் புல்லரிக்கும் புதிர்கள் போடவே இவைகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. காவிரி பற்றி இவர்களை நிகழ்ச்சி தயாரிக்கச் சொன்னால், ஒகேனக்கல் அருவி வரும் சினிமா படக் காட்சிகளாகக் காட்டி ஒப்பேற்றினாலும் வியப்பில்லை. அத்தகைய அறிவுக் களஞ்சியங்கள் கொட்டிக் கிடக்கின்றன பல தமிழ் சேனல்களில்...

எதையும் அரசியலாக்க மட்டும் நாம் நன்றாக கற்று விட்டோம். மற்றவற்றையெல்லாம் விற்று விட்டோம். நதியை காக்க மறக்கும் சமூகத்தின் கதி அதோகதி தான் என்பதை அறிய‌ விதி தேவையில்லை. சாதாரண மதி போதும்.

நான் விவசாயி அல்ல. என்னிடமும் நிலமும் இல்லை. ஆனால், தினமும் தொலைக்காட்சித் திரையின் அடியில் ஓடும் மேட்டூர் அணையின் அளவு குறைந்து கொண்டே வருவதை பார்க்கும் பொழுது மனதுக்குள் ஏதோ ஒன்று சட்டென்று குத்தி விட்டு போகிறது. உங்களுக்கும் அதே உணர்வு இருக்கும்.
நமக்கே இப்படி என்றால், நாளை காலை தனது பயிர் குடிக்க நீர் இல்லை என்பதை நினைக்கும் விவசாயிக்கு எப்படியிருக்கும்?

நமக்கு iphone 5 modelல் என்னவெல்லாம் புதுசு என்று பார்த்து முன்னேறத் துடிப்பதற்கே நேரமில்லை. இதில் ஐஆர் எட்டு என்னவானால் என்ன? பொங்கல் சாப்பிடுவோம் சார் பொங்கல்!

Friday, December 14, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 3


தெரு முனையில் இருக்கும் ""அண்ணாச்சி"" கடையில் உப்பு வாங்கிக் கொண்டிருந்தேன். "அஞ்சு ரூபாய்க்கு மிளகு"..."நூறு உளுத்தம் பருப்பு" என்ற குரல்களை தினசரி பேப்பரை கிழித்து மடமடவென்று பொட்டலமாக்கிக் கொண்டிருந்தார் "555 சோப் நன்றாக வெளுக்கும்" என்று உலகுக்கு அறிவிக்கும் முண்டா பனியன் போட்டிருந்த நம்மூர் "அண்ணன்".

"அன்னிய முதலீடு பாரு
பண்ணிடும் நாட்டுக்கு கேடு
சில்லறை வணிகம்னு பேரு
கல்லறை ஆகிடும் ஊரு"

என்று பாடியபடி வந்தார் குத்தானந்தா. "என்ன தம்பி உப்பு வாங்குறயா? உப்பத் தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும்" என்றார். "சாமி, உப்பை வச்சே பாட்டுக்குள்ளெ "பொடி" தூவறீங்களோ?" என்றேன். "என்னப்பா செய்யறது...அப்படி இப்படி நாட்டோட‌ அடிமடியிலேயே கைவச்சுருவாங்க போல" என்று சீறுவதற்கு தயாரானார்.

"சாமி, அன்னிய முதலீடு நல்லது தானே...சில்லிடும் அடுக்கு மாடி கடைகளில் மிடுக்குடன் பொருள் வாங்கி மிதப்புடன் இருந்து நம் மக்கள் மகிழ்வார்களே...அத்துடன், பருப்பு முதல் செருப்பு வரை, நமக்காய் காய் உணவு முதல் நாய்க்கான உணவு வரை, கீரை, கெட்டி மோரை, விட்டால் ஊரையே அமுக்கி பிளாஸ்டிக் கவரில் போட்டு விற்பனைக்கு வைத்திருப்பதில் எத்தனை வசதி..." என்றேன்.

"உன்னைய மாதிரி ஏட்டுச் சுரைக்காய்க்கு எத்தனை பாட்டு படிச்சாலும் புத்தியில் ஏறாது" என்று கத்திய குத்தானந்தா, "தம்பி, பகட்டா இருக்கும் எதுவும் கரெக்டா இருக்கும்னு நினைக்கற காலமாகிப் போச்சு...விலை நிறைய அப்படின்னா தரமும் அதிகம்னு நம்புற நாகரீக கோமாளிகள் தானே நாம்.

"சாமி, இதுனால நமக்கு என்ன நஷ்டம், தெளிவா சொல்லுங்க..." என்றேன்.

"முதல்ல சில்லறை வர்த்தகம் அப்படினுதான் ஆரம்பிக்கும். அப்புறம், சீப்பா கிடைக்கறதுனால இறக்குமதி பண்றேன், அதை சேமிச்சு வைக்க கோடவுன் கட்றோம்னு இடம் போடுவான். ஆயிரக்கணக்கான‌ ஏக்கர் நிலத்தை வாங்கி, "corporate agriculture join venture" விவசாயம் பண்றேன் அப்படின்னு ஒட்டகத்தை கூடாரத்துக்குள்ள விடுவான். அதுல விதையை போடுறானா விஷத்தைப் போடுறானா நம்ம அரசாங்கமா பார்க்கப் போகுது? எவ்வளவு சீக்கிரம் லாபம் பார்க்கலாமோ அதுக்குத் தகுந்த மாதிரி "BT கத்திரிக்காய்" "BT வெண்டைக்காய்" அப்படினு இயற்கைக்கு எதிரா உருவாக்கின பொருட்களை புழக்கத்துல விடுவான். பார்க்க பளபளப்பா, கவர்ல போட்டு ரெடியா இருக்கும். நம்மூர் இல்லத்தரசிகளின் இன்னல் குறைக்கறேன்னு காய்கறியை வெட்டி கவர்ல போட்டு அதுக்கு விலையை ரெண்டு மடங்காக்கி laebl ஒட்டி விற்பான்...பாலிஷ் செய்யப்பட்ட பருப்பை நமக்கு plastic பாக்கெட்டில் போடுவான்...லாபத்தை அள்ளி தனது பாக்கெட்டில் போடுவான்"

பத்து பதினஞ்சு வருஷத்துக்கு நாமளும், "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்..." கணக்கா பந்தா பண்ணுவோம். அப்புறம் அடுத்த இளிச்சவாய நாடு ஏதாவது மாட்டும். நம்ம நாட்டை விட அங்க லாபம் அதிகமா வரும் அப்படின்னா "வந்தாரை வாழ வைக்கும் நன்னாடே...உனக்கு மொத்தமா டாடாடே" என்று அனைத்தையும் மூடி விட்டு போவான். அப்புறம் நம்ம நிலத்தை உழுதா புழு கூட வராது...கட்டாந்தரையான நிலத்தை காலால சுரண்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான்" என்றார்.

எனக்கு லேசாக கவலை வந்தது. "உணவு பொருட்களுக்கு மட்டும் முதலீட்டுக்கு தடை விதிக்கலாமே" என்றேன். "ஓ நீ அப்படி வரயா?" என்ற குத்தானந்தா "அன்னிய முதலீடு எதுலப்பா வரும்?" என்றார். "டாலர்ல‌ சாமி" என்றேன்.

"அங்கதான் இருக்கு நமக்கு அடுத்த ஆப்பு" என்ற சொல்லியபடி, "அதை அடுத்த வாரம் சொல்றேன். இந்த வாரத்துக்கான உன்னோட இலக்கியப் பாட்டு எங்க?" என்றார். "ஆஹா மாட்டிகிட்டோமே என்று முழித்த என் கண்ணில் peacock brand அரிசி மாவு பாக்கெட் கண்ணில் பட்டது. போன வாரம் படித்த பாட்டு வரி நினைவுக்கு வந்தது ‍ - "மயிலடி இலைய மாக்குரல் நொச்சி".  சாமி, இந்தப் பாட்டு எழுதி ஆயிரம் வருஷத்துக்கு மேல ஆச்சு...எத்தனை ரசனையான மனுசங்க நம்ம மண்ணுல வாழ்ந்து போயிருக்காங்க சாமி...மயில், குயில் அப்படினு நிறைய பாட்டு பார்த்திருக்கோம். ஆனா இந்த வரியிலே, மயிலோட காலடி வடிவம் நொச்சி இலை மாதிரி இருக்கும்னு சொல்றாரு சாமி...என்றேன். "இப்ப நம்மூருல மயிலையே பார்க்க முடியல இதுல அதனோட காலடிய எப்படி பார்க்கறது...அது சரி, நொச்சி இலை பார்த்திருக்கிறாயா? என்றார்...". "அடுத்த வாரம் பேசலாம் சாமி" என்று கடையை விட்டு நகர்ந்தேன்.

Wednesday, December 5, 2012

காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 2


சென்ற பதிவில், திருப்பரங்குன்றம் கோயிலில் நுழைந்த உடனேயே, "காலம் கெட்டுப் போச்சு" என்பதற்கு கந்தன் காட்டிய "sample" பார்த்தோம். அப்படியே "யானை மகால்" பக்கம் சென்றேன். சுத்தமாக இருந்த அந்த விசாலமான அறையில் யானையின் போட்டோவிற்கு மாலை போட்டு வைத்திருந்தார்கள். அறை முழுதுவதும் யானை வாசம் இன்னும் வீசிக்கொண்டிருந்தது. இப்படித்தானே சார் நம் எல்லோருக்கும், கால யானை கடந்து போன பின்னும் மன அறையில் ஞாபக வாசனை வீசிக் கொண்டிருக்கிறது...

"புது யானை எப்போ வரும்" என்று அங்கிருந்தவரிடம் கேட்டேன். என் "யானை(க்) காதல்" தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவர், "லூசா நீ" என்பது போல் என்னைப் பார்த்து விட்டு, நாகரீகம் கருதி "கொஞ்ச நாள் ஆகுங்க" என்றார். முப்பது வருடங்களுக்கு முன், என் அப்பாவின் பாதுகாப்பில், நான் வாரம் தோறும் வருடிக் கொடுத்த திருப்பரங்குன்றம் யானையின் கரும்புள்ளிகள் நிறைந்த ரோஸ் நிற தும்பிக்கை நிழல் படமாய் வீற்றிருக்க, அங்கிருந்து நகர்ந்து, உள்ளத்திற்கு உவகை தரும் பொய்கைக்கு போனேன்.

சரவணப் பொய்கையில் முன்னரெல்லாம் பொரி தூவிய சில நிமிடங்களில் அதற்கான அடையாளமே நீரில் இருக்காது. கால் வைத்த மறு நொடி, மீன்கள் கூட்டம் கூட்டமாக கடிக்கத் துவங்கும். இப்பொழுதோ, ஒரு மீன் கூட கண்ணிலும் காலிலும் படவில்லை. யாரோ எப்பொழுதோ போட்ட பொறி கூட நீரில் மிதக்கிறது...நம் பொய் வாழ்க்கை முறையை எள்ளல் செய்யும் விதமாக பொய்கையிலும் மீன்கள் பொய்த்து போனது போலும்...கோயில் குளத்து மீன்கள் நம்மை விட்டு விலக சில ஆண்டுகள் என்றால், நம் கோயில்களில் இருந்து கடவுள்கள் புறப்பட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்குமோ? logic சரிதானே சார்?

அங்கிருந்து சன்னதிக்கு வரும் வழியில் நந்த‌வனத்தில் ஒரு பெருங்குரங்கு பூச்செடிகளை சேதம் செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. தமிழ் தெரிந்த குரங்கோ என்று எனக்கொரு சந்தேகம் ‍ அதாவது "உள்ளுறை உவமம்" வைத்து நம்மையும் நம் சமூகத்தையும் நக்கல் செய்கிறதோ அந்த குரங்கு என்று தோன்றியதில் வெட்கம் வந்ததால் வேகமாக நடையைக் கட்டினேன்...

கோயில் நிர்வாகம் பக்தர்களை குஷிப்படுத்த புதிர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது சார்...அதிர்ச்சியடையாதீர்கள்! பத்திரிகைகளில் ஒரு சிக்கலின் ஒரு நுனியில் நுழைந்து மறு நுனியில் வெளியில் வரச் சொல்லி புதிர் வருமே...அது போல, ஏகத்துக்கும் அங்கிட்டும் இங்கிட்டுமாய் சாரம் கட்டி வழியை மறித்து, மறைத்து...பாவம் முதியவர்கள்... படிகள் நிறைந்த கோயிலில் இந்த "புதிர்கள்" வேறு அலைக்கழிக்க, பெருமூச்சுடன் பேரின்பம் தேடி நடந்தார்கள்.

மலையின் பாறைகள் தெரிவதனால், அவையே கூரையாக இருப்பதால், இந்த சன்னதி எனக்கு எப்பொழுதுமே பிடித்தமான ஒன்று. எத்தனை யுகமாக‌ அவை இங்கிருக்கிறதோ...எத்தனை தலைமுறைகளின் வேண்டுதல்களை அவை பார்த்துக் கொண்டிருக்கிறதோ...!

சட்டென்று என் கையில் ஒரு "அபிஷேக பாட்டில்" ஒன்றை கொடுத்தார் பட்டர். பிளாஸ்டிக் மூடி இன்னும் திறக்கப்படாததால், கடையில் இருந்து "direct"டாக‌ வந்தது என்று தெரிந்தது. கொடுத்ததோடு மட்டுமல்லாமல் "இருபது ரூபாய்" என்றார். அவரிடம் பாட்டிலை திருப்பிக் கொடுத்தேன். முருகனின் முகம் அசைவற்று இருந்தது. கலி காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று முருகனுக்கு முன்னரே தெரிந்திருந்து தான் அசைவின்றி இருக்கிறார் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயம்தானே சார்?