/ கலி காலம்: September 2012

Saturday, September 22, 2012

விருப்பப்படி விலையேற்றுவோம் ‍- சிதம்பரம் அதிரடி!



டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. கட்சிகளும் வழக்கம் போல தங்கள் நாடகங்களை ஆரம்பித்துள்ளன. நம் நாட்டில் தான் என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே சார். எனவே, வரும் வாரம் இந்தப் பதிவில் வருவதைப் போல ஏதேனும் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. அப்படி ஏதும் நிகழ்ந்து விடாமல் இருக்க பாரத மாதாவை வேண்டிக் கொள்வோம். இனி கற்பனைக்கு போகலாம். இன்றைய கற்பனை நம் நாட்டில் நாளைய செய்தி ஆகாது என்று என்ன சார் நிச்சயம்?

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு குறித்து மன்மோகன் சிங், சிதம்பரத்திற்கு போன் செய்கிறார். "என்னப்பா சிதம்பரம், மக்கள் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே...நாம் எதில் கை வைத்தாலும் கதை கந்தலாகிறதே...ஏதாவது செய்யப்பா" என்கிறார். சிதம்பரம், "கவலைப்படாதீர்கள். நம் மக்கள் எந்த எதிர்ப்பையும் நாலு நாள் செய்வார்கள். பிறகு ஆர்வம் வேறு விஷயங்களின் மீது போய் விடும். இருந்தாலும், நான் என் கடமையை செய்யாமல் இருக்க முடியுமா? நாளையே பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். நான் பேசுவதற்கு தலையாட்ட இரண்டு அமைச்சர்களை வரச்சொல்லுங்கள்" என்கிறார்.

கூட்டம் ஏற்பாடாகிறது. "Times Now" போன்ற TV channels நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இனி பத்திரிகையாளர்களின் கேள்விகளையும், சிதம்பரத்தின் பதில்களையும் பார்ப்போம்:

பத்தி: சார், மீண்டும் ஒரு விலையேற்றமா என்று மக்கள் கொதிக்கிறார்கள். அரசு என்ன செய்யப் போகிறது?

சிதம்பரம்: நீங்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாராட்டுகிறேன். எதையுமே செய்ய முடியாத அரசை பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஆக்கபூர்வமாக கேள்வி கேட்டதற்கு நன்றி.

பத்தி: நீங்கள் இன்னும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

சிதம்பரம்: மன்மோகன் சிங் ஏற்கனவே, ஒரு மெளனம் ஓராயிரம் பதில்களுக்கு சமம் என்று உங்களிடம்தானே போன வாரம் சொன்னார்? அவரின் அமைச்சரின் மெளனம் ஐநூறு மெளனங்களுக்காவது சமம் என்பதுதான் என் பதில்.

பத்தி: டீசல் விலை ஏறினால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறி விடுமே?

சிதம்பரம்: நாங்கள் இறங்கி விடும் என்று சொன்னோமா?

பத்தி: நீங்கள் மூத்த அமைச்சர். மக்கள் உங்களிடமிருந்து தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர்.

சிதம்பரம்: நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் உங்கள் சம்பளம் எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). இப்போது எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). (இன்னொருவரை எழுப்பி இதே கேள்வி கேட்கிறார். அவரும் பதில் சொல்கிறார்). பாருங்கள், அனைவரின் சம்பளமும் வருடா வருடம் கூடிகிறது. விலைவாசி கூடினால் மட்டும் குறை சொல்கிறீர்கள்? சம்பளம் கூடினால் வரும் அதிக பணத்தை விலைவாசி கூடினால் தானே செலவழிக்க முடியும்? (பதிலைக் கேட்ட பலர் மயக்கம் போட்டு விழுகின்றனர்!).

பத்தி: அப்படியென்றால் எந்த பொருளின் விலை உயர்ந்தாலும் நீங்கள் தடுக்க மாட்டீர்களா?

சிதம்பரம்: நாங்கள் டீசல் விலையைத்தான் உயர்த்தினோம். மற்ற பொருட்களின் விலை உயர்ந்தால், அந்தந்த அமைச்சர்கள் உங்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

பத்தி: இந்த காஸ் சிலிண்டர் ரேஷன் முறை....(அவர் முடிக்கும் முன் சிதம்பரம் பதில் சொல்கிறார்)

சிதம்பரம்: என்ன கேள்வி இது? நம்ம நாட்டில் எத்தனை வீட்டில் தினமும் சமைக்கிறார்கள்? Pizza சாப்பிட்டு விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிலிண்டர் எதற்கு?

பத்தி: சார், உங்க ice cream - அரிசி விளக்கம் மாதிரிதானே சார் இதுவும்? நல்லா தெளிவாயிடுச்சு. நன்றி.

சிதம்பரம்: தலைப்புச் செய்தியா போடுங்க. அது மட்டுமில்லை. விருப்பப்பட்டா நாங்க விலையேத்துவோம்.அதையும் தெளிவாக போடுங்க...

(இதைக் கேள்விப்பட்டு நாடே கொந்தளிக்கிறது. நிலைமையை சமாளிக்க அடுத்த நாளே மற்றொமொரு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடாகிறது)

சிதம்பரம்: பத்திரிகையாளர்கள் பொறுப்புடன் செய்திகள் போட வேண்டும். நான் "விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று சொன்னேன். ஆனால் யார் விருப்பப்படி என்று நீங்கள் கேட்டீர்களா? கேட்டிருந்தால், "மக்கள் விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று தெளிவுபடுத்தியிருப்பேன்...இப்போது பாருங்கள்...நான் சொன்னது எவ்வளவு தவறாக மக்களிடம் போய்ச்சேர்ந்திருக்கிறது...


என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் பிளந்தபடி நின்றிருந்த நிருபர்கள் வாயில் சிவகங்கையிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்டிருந்த அல்வா வைக்கும்படி தன் உதவியாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் சிதம்பரம்.

நிருபர்களுக்கு மட்டுமா? நம் அனைவருக்குமே கொடுக்கக் கூடிய திறமையுள்ளவர்தானே அவர்!


Saturday, September 15, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 1

ஞாயிறு காலை...சூரியன் முதுகை சுட்டு எழுப்பும் சோம்பல் மிகுந்த வேளை..."உங்கள் tooth pasteல் உப்பு இருக்கிறதா" என்று தொலைக்காட்சியில் ஒருவர் நம்மை விசாரித்துக் கொண்டிருக்க, பற்களின் மேலும் கீழுமாய் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன எனக்கு நம்பகமான பற்பசையை தாங்கிய tooth brush.

தண்ணீரை முகத்தில் நனைத்து துடைத்தபடி கண்ணாடியை பார்த்தால், என்னைப் பார்த்து சிரித்தபடி ஒரு உருவம் நின்றிருந்தது. ""அய்யா, யார் நீங்கள்?" என்றேன்..."நித்தம் ஓடியாடி சித்தம் ஓய்ந்து போகும் மக்களை குத்துப் பாட்டு மூலம் குஷிப்படுத்த வந்திருக்கும் குத்தானந்தா நான்" என்றார் அவர். "அய்யா, "ஆனந்தா" என்று முடியும் பெயர்கள் கேட்டாலே ஆத்திரத்தில் மக்கள் கொதிக்கும் நேரத்தில் இப்படி ஒரு பெயர் தேவையா?" என்று கேட்க நினைத்தேன். அதற்குள் அவரே,"நான் வெறும் குத்தானந்தா அல்ல. ஸ்ரீ குத்தானந்தா" என்று விளக்கம் கொடுத்தார். இப்பொழுதெல்லாம் தகுதி இருக்கிறதோ இல்லையோ, பெயருக்குப் முன்னாலும் பின்னாலும் எதையாவது சேர்த்துக் கொள்வதுதானே fashion என்று சொல்லத் தோன்றியது. "நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா" என்று கண்ணதாசன் ஒரு பாட்டு வரியில் சொல்வாரே அதைப் போல் பேசாமல் இருந்து விட்டேன்.

"கலிகாலம் சாமி. பன்னாட்டு கம்பெனி போல செயல்படும் ஆன்மீக குருக்கள் புற்றீசல் போல கிளம்பி விட்டார்கள். அவர்களைப் போல உங்கள் புகழும் பல நாடுகள் பரவ வேண்டுமென்றால் ஒரு "ஸ்ரீ " போதாது இரண்டு "ஸ்ரீ " குறைந்தபட்சம் போட்டுக் கொள்ள வேண்டும்" என்றேன். குதூகலமான குத்தானந்தா, "சபாஷ் தம்பி. உன்னை போன்றவர்கள்தான் சிஷ்யர்களாக தகுதி படைத்தவர்கள். இரண்டு ஸ்ரீ  போட்டுக்கொள்ளலாம்" என்று தன் பெயரை "ஸ்ரீ  ஸ்ரீ  குத்தானந்தா" என்று சில முறை சொல்லிப் பார்த்துக் கொண்டார். "ஆனால் சாமி, அதை சற்று தமிழாக்கம் செய்தால் "சீ சீ குத்தானந்தா" என்று வருமே...அழைப்பதற்கும் கேட்பதற்கும் ஒரு மாதிரியாக இருக்குமே..." என்றேன். "ஓ நீ என்னையே ஆழம் பார்க்கிறாயா" என்று கோபம் கொண்டார் குத்தானந்தா. கபால் என்று காலில் விழுந்து "என்னை மன்னித்து சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற என் கெஞ்சலுக்கு கொஞ்சம் செவி சாய்த்து, "சரி சரி எழுந்திரு" என்றார்.

நன்றி சாமி. குத்துப்பாட்டு என்பதன் இலக்கணம் என்ன? என்றேன் நான்.

"மிதமிஞ்சிய சந்தம்
குத்துக்கு சொந்தம்
பொருளற்ற சத்தம்
குத்துக்கு குத்தம்"

என்று பாட்டாகவே ஒரு போடு போட்டார். "சாமி இதுவே ஒரு குத்து போல இருக்கிறதே" என்றேன்."ரொம்ப ice வைக்காதே. நான் ஒன்றும் இலவசமாய் உனக்கு குத்துப்பாட்டு சொல்ல மாட்டேன். பதிலுக்கு நீ வாரம் ஒன்று தர வேண்டும். என்னவென்று அடுத்த வாரம் சொல்கிறேன் என்றார். "சரி சாமி" என்று ஒத்துக் கொண்ட நான், "நம் நாட்டில் திட்டம் நல்லாத்தான் போடுவோம். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. அது போல வாரா வாரம் உங்கள் குத்துப் பாட்டை பதிவாக போடும் திட்டத்திற்கு தடையாக நாட்டில் ஆயிரம் அக்கிரமங்கள் நடந்து அதைப் பற்றிய‌ பதிவு போடும்படி தூண்டுமே சாமி என்ன செய்வது?" என்றேன். "அதற்கென்ன சீடா...நம் நாட்டில் நம் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஜனநாயகம் என்பதற்கு புதிய அர்த்தம் கொடுப்பவர்கள் அல்லவா நாம்" என்று சொன்னதோடு நில்லாமல், "சமீபத்திய எடுத்துக்காட்டு சொல்கிறேன் கேள்" என்றார்...

"சீடா, சென்ற வாரம் ஏதோ ஒரு உப்புச்சப்பில்லாத இலங்கை பல்கலைகழக அணி தமிழ்நாட்டில் விளையாட வந்ததற்காக இங்குள்ள address இல்லா அமைப்புகள் முதல் அரசாங்கம் வரை அப்படியொரு குதிகுதித்து அவர்களை திருப்பி அனுப்பினவே...அடுத்த வாரம் t20 cricket world cup இலங்கையில் நடக்க உள்ளது. இந்திய அணியில் தமிழ்நாட்டின் Ashwin விளையாடுகிறார். அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இலங்கை சென்று விளையாடுகிறார். இது மட்டும் சரியா? சொல்லு பார்ப்போம் என்றார். "சாமி நீங்க டேஞ்சரான ஆசாமியா இருப்பீங்க போலிருக்கே, குத்துப் பாட்டு நடுவிலே நிறைய "உள்குத்து" வேற குத்துவீங்க போல..." என்றேன்.

"கண்ணாடியோட என்ன பேச்சு" என்று கடுப்பாகிப் போன என் மனைவியின் குரல் கேட்க அப்புறம் பார்க்கலாம் என்று அவசரமாக காணாமல் போனார் குத்தானந்தா...

Saturday, September 8, 2012

முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும்படி சிரியுங்கள்!

ஆமாம் சார். நமக்கிருக்கும் தினசரி சிக்கல்களில் சிரிப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கிறது? ஆனால், அதிகம் சிரித்தால் ஆரோக்கியம் என்று சொல்கிறார்களே! எனவே தான் நம் மத்திய அரசு, "நகைச்சுவை வளர்ச்சித் துறை" என்று தனியே ஒரு இலாகா துவக்கியுள்ளது.

"என்னய்யா இது எந்த பத்திரிகைகளிலும் வராத செய்தியாக இருக்கிறதே!" என்கிறீர்களா? ஏன் சார், அரசாங்க ரகசியங்கள் எல்லாம் வெளிவரும் பொழுது, இது போன்ற, வெளியே  தெரிய வேண்டிய விஷயங்கள் ரகசியமாகத்தானே இருக்கும்?

இந்த "நகைச்சுவை வளர்ச்சித் துறை"யில் நீண்ட நாட்களாகவே சிதம்பரமும் கபில் சிபலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். நகைச்சுவையிலும், உருக்கமான நகைச்சுவை என்று ஒன்று இருக்க முடியும் என்று அவ்வப்போது மன்மோகன் சிங் நிரூபித்து வந்தார். இவர்கள் மட்டுமே நாட்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தால் போதுமா சார்? பார்த்தார்கள் மற்ற அமைச்சர்கள். எப்படியும் எந்தத் துறையிலும் உருப்படியான வேலை எதுவும் நடைபெறவில்லை. நாமும் ஏன் "நகைச்சுவை வளர்ச்சித் துறை"யில் பணியாற்றக் கூடாது என்று கிளம்பி விட்டார்கள்.

இதில் புதிதாக சேர்ந்திருப்பவர் தான் "பெனி பிரசாத் வர்மா". என்ன சார் இது, கேள்விப்படாத பெயராக இருக்கிறதே...இப்படி ஒரு அமைச்சரா? என்று கேட்பீர்கள்தானே? சரிதான் சார். முன்னரெல்லாம் ஒரு மந்திரி பல ஆண்டுகள் ஒரு துறையில் இருப்பார். வேலையும் செய்வார். நமக்கெல்லாம் அந்த மந்திரியின் பெயர் மட்டுமின்றி மற்ற தகவல்களும் நினைவில் இருக்கும். இப்பொழுதோ நாளொரு மந்திரி பொழுதொரு துறைக்கு வருகிறார் போகிறார். நாட்டுப்பணி என்று எந்த வேலையும் கிடையாது. அப்புறம் எப்படி சார் மந்திரியின் பெயர்கள் நமக்குத் தெரியும்? எனவே, பெனி பிரசாத் வர்மா ஒரு மந்திரி சார். எந்தத் துறை என்பதெல்லாம் நமக்கு எதற்கு? எந்த வேலையுமே நடைபெறாத நாட்டில் எந்தத் துறைக்கு யார் மந்திரியாக‌ இருந்தால் என்ன?

இவர், "நகைச்சுவை அமைச்சகத்தின்" புதிய உறுப்பினராகி சில முத்துக்களை உதிர்த்திருக்கிறார். "விலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் பயன்பெறுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார் இவர். நாம் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். மன்மோகன் சிங், "விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது. தூக்கம் கூட எனக்கு கிடையாது" என்று சொல்லியிருக்கிறார். இந்த வர்மா, சிங்கின் அமைச்சரவையில் உள்ளவர். அவரோ மகிழ்ச்சியில் திளைக்கிறார். மன்மோகனோ துயரத்தில் உழல்கிறார்.
அதுவும் ஒரே விஷயத்திற்காக!

அதாவது, ஒரே விஷயத்திற்காக பிரதமர் கவலைப்படுவதாக கூறுகிறார். அவரின் அமைச்சரோ, அதே விஷயம் சந்தோஷமாக இருக்கிறது என்கிறார். என்ன சார் நடக்கிறது? இப்படி ஆளாளுக்கு தங்கள் விருப்பப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறீர்களே என்று கேட்டால் போச்சு...அவ்வளவுதான். சிதம்பரமோ கபில்சிபலோ பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். அங்கு அவர்கள் அளிக்கும் விளக்கமோ, சம்பந்தப்பட்டவர் முன்னர் பேசியதே பரவாயில்லை என்ற அளவுக்கு நம்மை கொண்டு போய் விடும்.

எனக்கு இந்த சிதம்பரம் மீது சந்தேகம் சார். அதாவது, முன்னரெல்லாம் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நடு நடுவே திருக்குறள் சிலவற்றை எடுத்து விடுவார். நமக்கும், "ஆஹா! தமிழர் ஒருவர் நாட்டுக்கு பட்ஜெட் சமர்க்கிறார்...அந்த உரையில் திருக்குறள் வேறு சொல்கிறார்" என்று புல்லரித்து போவோம் (இப்போது இவரது பேச்சுக்கள் செல்லரித்து கிடக்கின்றன என்பது வேறு விஷயம்). ஒரு வேளை இவர் சம்பந்தம் இல்லாமல் "இடுக்கண் வருங்கால் நகுக" குறளை வர்மாவுக்கு சொல்லிக் கொடுத்து, "சும்மா பேசி வைங்க. ஏதாவது சிக்கலாச்சுனா வள்ளுவரே சொல்லியிருக்கார்னு விளக்கம் கொடுத்துரலாம்" என்று சொல்லியிருப்பாரோ?

இப்போது சொல்லுங்கள் நாம் பற்கள் அனைத்தும் தெரியும்படி சிரிக்க வேண்டுமா வேண்டாமா?



Saturday, September 1, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 8


பாருங்கள்...ஒரு பதிவை ஒரு வாரம் எழுதி அடுத்த வாரம் தொடர்வதற்குள் ஒன்பது ஊழல்கள் நம் நாட்டில். ரயில் திகில் எழுதலாம் என்றால் கரி கிலி கிளப்புகிறது...சரி விடுங்கள், நம் கதைக்கு மீண்டும் வருவோம்.

புதிதாக "கலி காலம்" வருபவர்கள்,  ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 7 படித்து விட்டு மீண்டும் இங்கு வரவும். அதன் தொடர்ச்சியே இந்தப் பதிவு.

என்னுடன் வந்த இளைஞர் ரயில் முழுதும் ரோந்து போய்விட்டு வந்தவுடன் என்னை திகிலடைய வைக்கும்படி அப்படி என்னதான் சொன்னார்? "S7 மட்டும் தான் நமக்கு சரிப்படும். இரண்டும் பாத்ரூம் பக்கம். வைப்பதற்கும் கவனிக்கவும் வசதி." மேலும் தனது நண்பரின் பெயரைச் சொல்லி, "அவனைத்தான் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறேன் எலித் தொல்லை வேறு கடித்து கிடித்து வைத்து விடாமல் இருக்க வேண்டும்" என்றார்.

ஆஹா... ஒரு வேளை ஒயர் கியர் பாத்ரூமில் fit பண்ணியிருப்பார்களோ? என்று என் எண்ணம் எட்டு ஊருக்கு கட்டம் போட மற்றொருவர் என் வயிற்றில் கத்தியை சொருகினார். ஆம். "சரி கத்தி யார்கிட்ட இருக்கு?" என்று அவர் கேட்டவுடன் பசியிலுள்ள வயிறு பச்சை மிளகாய் சாப்பிட்டது போல  ஒரு உணர்வு வாயிலிருந்து வயிறு வரை பரவியது. மணி பதினொன்றை தாண்டியது. அவர்களின் மேல் ஒரு பார்வையை வைத்தபடி, "upper berth" ஏறி காலை நீட்டி படுத்தபடி கண்களை அவர்கள் பக்கம் ஓட்டினேன். அனைவரும் எங்கோ கிளம்பிச் சென்றனர். 1997 டிசம்பரில் Srirangam அருகே Pandian Express ரயிலில் குண்டு வெடித்தபோது நான், குண்டு வெடித்த பாத்ரூமிற்கு பக்கத்து பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த ஞாபகம் மூளையிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட கண்களை பிளந்து வெளிவந்து விடும் போல இருந்தது.

12 மணி அடிக்க பத்து நிமிடங்கள் இருக்கையில், பெட்டியின் விளக்குகள் மீண்டும் போடப்பட்டன ‍ அவர்கள் மூன்று பேர் திரும்பி விட்டனர். அவர்களின் கையில் இப்போது ஒரு அட்டைபெட்டி இருந்தது. எல்லாம் ரெடி என்றார் ஒருவர். கட்டை விரலை உயர்த்திக் காட்டினார் மற்றொருவர். வண்டி கிளம்பியதிலிருந்து முதல் முறையாக அவர்கள் அனைவரும் செல்போனை வெளியில் எடுத்தனர். "10 minutesதான் இருக்கு எல்லாரையும் இங்க வந்துர சொல்லு" என்றார் ஒருவர். வரிசையாக நான்கைந்து போன் உரையாடல்கள் சட்சட்டென்று நடந்தேறின. போதாத குறைக்கு "ரயிலையே உலுக்கனும்டா" என்று ஒருவர் punch line வேறு வைத்தார்.அடுத்த ஐந்து நிமிடங்களில் அங்கு 7 பேர் இருந்தனர்.

இயற்கை அழைப்பின் சாக்கில் நான் berth விட்டு கீழே இறங்கினேன். நான் கீழே இறங்குவதை பார்த்த அவர்கள், என்னைப் பார்த்து குறுநகை பூத்தனர். ‍ நானோ, மூன்று நாட்கள் முன்பு செய்த‌ பூரியை வாயில் மெல்லுகையில் சிரிக்கச் சொன்னால் எப்படியிருக்குமோ அதைப் போல அவர்களை பார்த்து "ஒரு மாதிரி"யாக சிரித்து வைத்தேன்.

கழிவறையின் உள்ளே நான் இருக்கையில் "ஹோ" என்ற இரைச்சல் வெளியில் கேட்டது. ஒரு நிமிடம் கழித்து நான் என் இடத்திற்கு வந்தால்...

அந்த அட்டைப் பெட்டி பிரிக்கப்பட்டிருந்தது....ஒருவர் முகம் முழுக்க cake வழிய நின்று கொண்டிருந்தார். வேறொன்றுமில்லை சார்...அந்த நண்பர் குழுவில் ஒருவருக்கு பிறந்த நாள். ஒவ்வொருவரும் வெவ்வேறு பெட்டியில் RACயில் அகப்பட்டு கொண்டதால் இத்தனை களேபரம். அனைவரையும் தேடிப்பிடித்து கூட்டி வந்திருக்கிறார்கள். எனக்கும் சிறிது கேக் கொடுத்தார்கள். அவர்களிடம், "நான் ரயிலில் ஏறியதிலிருந்தே அல்வா சாப்பிட்டுக்கொண்டே தான் வந்தேன்" என்று சொல்ல முடியுமா? கேக், அல்வா இரண்டுமே இனிப்புதான் இல்லையா சார்? நான் வாங்கிக் கொண்ட கேக் அல்வா போன்றே இருந்தது!