/ கலி காலம்: January 2015

Sunday, January 11, 2015

ரகசியமாய் கேட்டுக்குங்க...

ஆமாம் சார். கொஞ்சம் காதை பக்கத்தில் கொடுங்க. இந்த விஷயத்தை சத்தமில்லாம காதில் சொல்லி விடுகிறேன். ஏற்கெனவே உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமோ இல்லையோ எப்படி இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களை இன்னொரு முறை சொல்வதில் எந்த நஷ்டமும் இல்லை.

சரி, என்ன ரகசியம் என்கிறீர்களா? ரகசியம் என்றால் வெளியில் தெரியாமல் இருப்பது தானே? அப்படியென்றால், நல்ல புத்தகம் என்பதே ஒரு ரகசியமான விஷயம் போல ஆகிவிட்டது இல்லையா? வருடா வருடம் போல் இந்த வருடமும் புத்தகக் கண்காட்சி துவங்கி விட்டது. வீட்டுக்கு ஒரு விவேகான‌ந்தர் இல்லையென்றாலும் வீட்டுக்கு ஒரு எழுத்தாளர் தமிழ் நாட்டில் இருக்கிறார்களோ என்று நினைக்கும் அளவுக்கு,  எந்த புத்தகத்தை வாசிப்பது என்று பெருங்குழப்பம் ஏற்படும் அளவுக்கு, ஏகப்பட்ட புது புத்தகங்கள்...

மேலும், "அந்த காலத்து" அற்புதங்களையே இன்னும் படித்து முடிக்கவில்லையாதலால் புதியன உடனே வாங்குவதில் நிறைய தயக்கங்கள் உண்டு. இருப்பினும், புதிய வருகைகள் பற்றி அறிந்து கொள்வதற்கேனும் புத்தகக் கண்காட்சி நிரம்ப உதவுகிறது. சென்னையில் வசித்தால் தான் புத்தகக் கண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. எந்தெந்த ஊர்களில் இருந்தெல்லாமோ ஏதேதோ "புண்ணிய தலங்களுக்கு" செல்வதை விட, கண்காட்சியில் புத்தகங்களை திரட்டுவதும் அதன் மூலம் சிந்தனை வித்துக்களை நமக்குள் விதைப்பதும் அதிக புண்ணியம் சேர்க்கும் வழியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

இந்த முறை, ஒரு நல்ல (புது) கவிதை புத்தகத்தையேனும் தேடிப் பிடித்து விட வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன். இப்போது வரும் கவிதை புத்தகங்களை மனது ஏற்க‌ மாட்டேன் என்கிறது. கவிதை என்ற பெயரில் உரைநடையை, இன்னும் சொல்லப் போனால் பேச்சு நடையை வரிகளுக்கிடையில் மடக்கி நீட்டி எழுதும் வகையே இன்று கவிதை என்று அழைக்கபடுவது மிகவும் வருந்தத்தக்கது. இது போன்ற கவிதைகள் எழுதுவோரையும் வெளியிடுவோரையும் "மொழித் துரோகம்" என்றொரு புதிய சட்டப் பிரிவு ஏற்படுத்தி தண்டித்தால் தேவலையோ? மனதுக்குள் நீண்ட காலம் உழலும் ஒரு வரியேனும் ஒரு கவிதை புத்தகத்தில் இருக்காதா என்ற ஆயாசம் இந்த முறை நீங்கும் என்ற நம்பிக்கை...

தற்போதைய சமூக இருப்பில், பன்னுயிர் பேணுதல் நம் அனைவரும் பங்கெடுக்க வேண்டிய முக்கிய தேவையாக மாறி விட்டது. இயற்கையை சீரழிப்பதன் மூலம் அவ்வாறு ஆக்கி வைத்திருக்கிறோம் நாம். தியோடர் பாஸ்கரன் எளிய தமிழில் எழுதியிருக்கும் கானுயிர் கட்டுரைகள் மாணவர்கள் முதல் முதியோர் வரை படிக்க வேண்டிய ஒன்று.

தமிழ் இலக்கணம் ஒரு எளிய அறிமுகம், வண்னதாசனின் "நொடி நேர அரை வட்டம்",  நாஞ்சில் நாடனின் "வல்விருந்து", மகுடேஸ்வரனின் "களிநயம்", எஸ்.ராவின் "சஞ்சாரம்" ஆகியவை இவ்வருடம் வசீகரிக்கின்றன. "தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்" என்றொரு புத்தகம் தமிழினி மூலம் வந்திருக்கிறது. வெங்கட் சாமிநாதனின் "நினைவுகளின் சுவட்டில்" இரண்டாம் பாகத்தை மெய்ப்பொருள் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.

புத்தகங்கள் வாங்குகிறோமோ இல்லையோ...சில வருடங்கள் கண்காட்சிக்கு போய் வந்தால், ஒரு புத்தகம் எத்தனை கவர்ச்சியான அட்டை மற்றும் கட்டுமானம் கொண்டிருந்தாலும் அதில் ஏமாறாமல் சில வரிகளை படித்தவுடன் அந்த புத்தகத்தை எந்த "இடத்தில்" வைக்கலாம் என்று எடை போட பயிற்சி பெறும் சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதுவே புத்தக கண்காட்சி நமக்குத் தரும் மிகப்பெரிய அனுபவம்.

மற்றபடி, கண்ணதாசனின் "நீ எனக்காக உணவு உண்ண எப்படி முடியும்?" பாடல் வரி போல, அவரவர் வாசிப்பு அவரவர் "வயிறு" சம்பந்தப்பட்டது. அஜீரணம் ஏற்படாமல் உடலுக்கும் மனதுக்கும் "சாப்பாடு" சாப்பிடுவது அவரவர் விருப்பம். சரி தானே?