/ கலி காலம்: May 2014

Sunday, May 4, 2014

பிரபலங்களின் ஓட்டு - திடுக்கிடும் தகவல்கள்!

கடந்த வாரம் தேர்தல் நடந்தாலும் நடந்தது... எந்த பத்திரிகையை புரட்டினாலும் சரி ஒரே ஓட்டு சமாச்சாரம் தான்..."ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" ஞாபகம் வரும் வண்ணம் எப்படியெல்லாம் செய்தி போடுகிறார்கள் சார்! மக்களின் பொது அறிவை மேலும் வளர்க்கும் வண்ணம் எப்பேர்ப்பட்ட பெரும்பணி ஆற்றுகின்றன நம் பத்திரிகைகள்...!இதையெல்லாம் படித்த பின் நமக்கும் செய்தியாளர் ஆகும் ஆசை வராமல் இருக்குமா சொல்லுங்கள்? இதோ நம் கை வண்ணத்தில் "தேர்தல் தினம்" பற்றிய செய்திகள் நீங்கள் படித்து மகிழ...!

          "பிரபலங்கள் ஓட்டு - திடுக்கிடும் தகவல்கள்!"

நமது சிறப்பு நிருபர் ‍-

நேற்று நடந்த தேர்தலில் தமிழ் நாட்டின் பிரபலங்கள் பலர் ஓட்டு போட்டதால் சென்னை முழுவதும் பரபரப்பு நிலவியது. இது குறித்த விபரங்கள் வருமாறு:

தேர்தல்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. சுதந்திரம் அடைந்தது முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நம் நாட்டில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். முன் எப்போதும் இருந்திராத அளவில் இந்த முறை தேர்தல் களம் சூடு பிடித்து பல வாரங்கள் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் நேற்று
தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு துவங்கிய காலை ஏழு மணி முதலே ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு

விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் சுமார் 73% சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. இதில் ஆண்கள் 72% சதவீதமும் பெண்கள் 74% சதவீதமும் வாக்கு பதிவு செய்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நமது சிறப்பு நிருபர் குழு தமிழகம் முழுவதும் திரட்டிய தகவல்களின் படி ஆண்களில் 60% பேர் சர்ட் அணிந்து வந்து ஓட்டளித்ததாகவும் 30% பேர் டி‍‍சர்ட் அணிந்து வந்ததாகவும் தெரிகிறது. வெயில் அதிகம் இருப்பதால் தான் பருத்தியிலான டிசர்ட் அணிந்து வந்திருப்பதாக சேலத்தில் முதல் முறையாக வாக்களித்த சேகர் என்னும் இளைஞர் நமது நிருபரிடம் தெரிவித்தார்.

ஐந்தாம் பத்தி பார்க்க‌...

<<..மர்ம அழகி மாயம்! போலீஸ் வலைவீச்சு....!! >>

இரண்டாம் பத்தி தொடர்ச்சி...

கமல்

நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டின் அருகில் உள்ள வாக்கு மையத்தில் தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், "ஓட்டளிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. ஜனநாயக உரிமை என்றும் சொல்லலாம். கடமை என்பதே உரிமையான ஒன்று. கடமையற்ற உரிமையும் உரிமையற்ற கடமையும், உரிமைக்கும் கடமைக்கும் உரிமையான கடமைக்குரிய பயன் அளிக்காது. உரிமையாகவோ கடமையாகவோ அது இருக்காது" என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் நிருபர்கள் குழம்பிய நிலையில் நின்றிருந்தனர்.

ரஜினி

நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரஜினி காந்த். இவரின் இயற்பெயர் சிவாஜி ராவ். நேற்றைய தேர்தலில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டார்.

முதல் ஓட்டு

காலை 7.02க்கு ரஜினி ஓட்டு பொத்தானை அமுக்கி தனது ஒட்டை பதிவு செய்தார். அதற்கு முன் எவரும் அங்கு ஓட்டு போடவில்லை. எனவே ரஜினியின் ஓட்டே முதல் ஓட்டாக அமைந்தது. ஓட்டளித்த பின் வெளியே வந்த ரஜினி தனது மை தடவப்பட்ட விரலை உயர்த்திக் காட்டினார். வெள்ளை உடையணிந்து ரஜினி ஓட்டு பதிவு செய்தார். அவர் தற்போது பெரும்பாலும் வெள்ளை உடை அணிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்

அமராவதி படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் அஜித். இவர் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். பொதுமக்கள் பாராட்டும் வண்ணம் இவர் வரிசையில் நின்று வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னும் பின்னும் வரிசையில் பலர் நின்றிருந்தனர். வாக்களிக்க வரும் முன் ஷாலினி அஜித்தின் இடது பக்கமாகவும், வாக்களித்த பின் வலது பக்கமாகவும் நடந்து வந்தார்.

ஜெயலலிதா

தமிழ் நாட்டின் முதல்வரும் அதிமுக தலைவரும் ஆன ஜெயலலிதா, சசிகலாவுடன் இணைந்து வந்து வாக்களித்தார். ஜெயலலிதாவின் கண்ணாடி சசிகலாவின் பையில் இருந்தது. 10.23க்கு தனக்குக் கண்ணாடி வேண்டும் என்று சசிகலாவை நோக்கி ஜெயலலிதா சைகை செய்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. பிறகு கண்ணாடி அணிந்தபடி ஜெயலலிதா தனது வாக்கை பதிவு செய்தார்.

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது தனது ஜனநாயக கடமை ஆற்றினார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் கருணாநிதி ஐந்து முறை தொண்டையை செருமிக் கொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் இரண்டு கேள்விகளின் போது அவர் இடது கையை வலது கையின் மேல் வைத்தபடி பதிலளித்தார்.

தேனி!

ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள கம்மாபட்டி கிராமத்தில் வாக்குச்சாவடியின் உள்ளே தேனி ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறையின் சுவரில் வைக்கப்பட்டிருந்த ஏணியில் தேனி அமர்ந்திருந்ததாகவும் அவ்வப்பொழுது பறந்து வந்து இடையூறு செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை

நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 16ஆம் தேதி துவங்கும் என்றும் துவங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுகள் வெளிவரும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபலங்கள் நேற்று ஓட்டு அளிக்க பெருமளவில் வந்ததால் சென்னையில் பரபரப்பு நிலவியது.