/ கலி காலம்: மாண்புமிகு தமிழரின் மேன்மைமிகு ரிங் டோன்கள்...

Saturday, June 16, 2012

மாண்புமிகு தமிழரின் மேன்மைமிகு ரிங் டோன்கள்...

எத்தனை விதமான போன்களடா அதில் எத்தனைவித ரிங் டோன்களடா... என்று ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு "ரிங் டோன்" வசதியை உபயோகப்படுத்துவதில் நாம் வெளுத்துக் க‌ட்டுகிறோம் . நம்முடைய "ரசனைகள்" பீடு நடை போட பாதை இட்டு பாடாய் படுத்துகிறது இந்த ரிங் டோன்களின் ரீங்காரம்.ஒரு வசதியை எந்த அளவு பயன்படுத்தி "போட்டுத் தாக்கு"வோம் என்பதற்கு இந்த ரிங் டோனை நாம் பயன்படுத்தும் முறைகளிலேயே அறிந்து கொள்ளலாம்.

சென்ற மாதம் ஈரோட்டில் ஒரு திருமணம். கல்யாண மண்டப கழிப்பறையில் என் பக்கத்து கழிவறையிலிருந்து ஒரு ring tone...சீர்காழி கோவிந்தராஜனின் "முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே...". அடக் கடவுளே! கலிகாலத்தில் உன் நிலைமை பார்த்தாயா? எங்கிருந்தெல்லாம் உன்னை அழைக்கிறார்கள்! இயற்கை உபாதை கழிக்கையில் கூடவா இறைவன் பாட்டு? அல்லது நம் நண்பர் மலச் சிக்கல் நீங்கி மறுமலர்ச்சி பெற‌ மொமைல் போன் மூலம் முருகனை வேண்டுகிறாரோ?

இதற்கு நேரெதிர் கோஷ்டிகளுக்கும் பஞ்சமில்லை. மீனாட்சி கோயில் பொற்றாமரை குளத்தில் அமர்ந்த படி வாழ்க்கை போகும் பாதையை வாசிக்கும் பொழுது, அருகில் அமர்ந்திருப்பவர் "அரைச்ச மாவை அரைப்போமா" என்கிறார். இவரிடம், "ஏன் சார் இப்படி ஒரு ரிங் டோன் கொலை வெறி" என்று கேட்க முடியுமா? எந்த கேள்விக்கும் ஏடாகூடமாக பதில் சொல்லத் தெரிந்தவர்கள் தானே நாம்? ஒரு வேளை நம் மாவு நண்பர்,  "முன்னோர்க்கு முன்னோர் துவங்கி அரைத்த மாவையே அரைப்பதால்தான் இவ்வுலக வாழ்க்கை இப்படி இருக்கிறது. இதைத்தான் "அரைச்ச மாவை அரைபோமா" என்று தத்துவ விசாரணை செய்கிறது இந்த பாடல்" என்று நம் மேல் வேதாந்த மாவை அவர் பூசி விட்டால் என்ன செய்வது? நம்மால் முடிந்தது இன்னும் இரண்டு படிக்கட்டுக்கள் தள்ளி அமர்ந்து தண்ணீர் இல்லாத பொற்றாமரையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்...

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தள்ளு வண்டியில் பழம் விற்பவர், "நான் அடிச்சா தாங்க மாட்ட..." என்னும் ரிங் டோன் வைத்திருக்கிறார். பேரம் பேசுகையில் இவருக்கு போன் வந்தால் நாமெல்லாம் தெறித்து ஓடி விட வேண்டியதுதான்...

ஒரு முறை நுங்கம்பாக்கத்திலிருந்து அடையார் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் நல்ல கூட்டம். கல்லூரியில் படிப்பவர் போலிருந்த பெண் ஒருவரிடமிருந்து "சும்மா நிக்காதீங்க...சொல்லும்படி வைக்காதீங்க" என்று வருகிறது ரிங் டோன். வம்பிழுக்கக் காத்திருக்கும் ஆண்களை வரவேற்கும் வகை பெண் போலும்!. இவர் போன்ற "புதுமை" பெண்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது சார். நல்ல வேளை. அதற்கு பிறகு உள்ள வரிகள் இல்லாமல் இரண்டு வரியுடன் ரிங் டோன் செட் செய்த இந்த மகளிர் குல மாணிக்கத்திற்கு மனதால் நன்றி சொல்வோம்.

இன்னும் சில பேருக்கு வீட்டில் இருக்கும் பொழுது ரிங் டோன் மாற்றி set  பண்ண மனது வராது. அடுத்தவர் நிம்மதியை கெடுத்தால்தானே நமக்கு மகிழ்ச்சி கிடைத்தாற் போல இருக்கிறது. எனவே, இவர்கள் பேருந்தில் பயணம் போகையில் ஒவ்வொரு பாட்டாக வரிக்கு வரி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எது நல்ல ரிங் டோனாக இருக்கும் என்று test செய்கிறார்களாம்!. பக்கத்தில் இருப்பவர்களுக்கோ, விருந்து சாப்பிட்டவன் எடுத்த வாந்தி போல விதவிதமாய் அரைகுறையாய் இப்படி மாறிக் கொண்டே இருக்கும் வரிகள் தலைவலியைக் கொடுக்கும். சிலர் இவ்வாறு "பணி" செய்யும் பொழுது, தானும் அந்த பாடலை வரியை உடன் பாடி இன்னும் கடுப்பேற்றுவார்கள்.

தற்போது "சத்யமேவ ஜெயதே" என்றொரு டிவி நிகழ்ச்சி பிரபலமாகி இருக்கிறது. எனவே நிறைய பேர் "satyameva jayate" ரிங் டோன் வைத்திருக்கிறார்கள் (பாட்டு நன்றாகத் தான் இருக்கிறது). ஏன் சார், வாய்மையே வெல்லும் என்பதை வாழ்க்கையில் கடைபிடிக்க நாம் என்ன வடிகட்டிய முட்டாள்களா என்ன? எந்த இடத்தில் எந்த பொய் சொன்னால் நமக்கு என்ன லாபம் என்பதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இல்லையா நாம்? அதனால்தான், காலத்துக்கு உதவாத உண்மை நேர்மை போன்றவை காலர் டோனிலாவது காற்று வாங்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில் நாலு பேர் "satyameva jayate " என்று போனில் டோன் வைத்திருக்கிறார்கள். விடுங்கள்...பாவம்.

ச‌ரி. மேலே சொன்னவற்றை தள்ளி வையுங்கள். அற்புதமான ரிங் டோன் வைத்திருக்கும் பலரையும் நாம் சட்டென்று பொது இடத்தில் கடக்கும் பொழுது, யாரென்று தெரியாமலேயே அவர்களை பிடித்துப் போய்விடுகிறது...சென்னை ரங்கநாதன் தெருவில் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் "இது ஒரு பொன் மாலைப் பொழுது", KPN பேருந்தில் எனக்கு முன் வரிசை இருக்கை பெண்ணிடமிருந்து வந்த "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு", மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு முதியவரின் "வெள்ளிப் பனி மலையின்..." என்று நிறைய மனிதர்கள் மனதிற்கு நிறைவு தரும் ரிங் டோன் வைத்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.


2 comments:

  1. Romba anubavichu solli irukkeenga

    ReplyDelete
  2. நல்ல அலசல்....

    இறந்தவர் வீட்டில், ஒரு நாள், “அப்படிப் போடு போடு...” என்ற பாடல் கூட கேட்டதுண்டு.... :(

    ReplyDelete