/ கலி காலம்: தீபாவளி விளம்பரங்கள்...உஷார்!

Friday, November 9, 2012

தீபாவளி விளம்பரங்கள்...உஷார்!

அனுஷ்கா ஆடியபடி வந்து தீபாவளி தள்ளுபடி விலையில் பூச்சிக் கொல்லி மருந்து வாங்குங்கள் என்று விளம்பரம் செய்து விவசாயிகளின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற முயல்வதை பார்த்திருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தீபாவளிக்கு வரும் விளம்பரங்களைப் பார்த்தால், எங்கேயாவது இது போன்ற விளம்பரமும் வந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் நடைபெறவில்லை. விவசாயிகள் தப்பித்தார்கள்.

ஆனால் மற்ற வகை விளம்பரங்களில் நமக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை சார். இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வரை, தீபாவளி தள்ளுபடி என்பது துணிக்கடையில் மட்டுமே இருந்தது. பின்னர் மெதுவாக Mixie, Grinder, TV, Fridge எனப் பரவத்துவங்கியது. இன்றோ, பொதுக் கழிப்பறையில் "சிறுநீர் கழிக்க 1 ரூபாய் தீபாவளி சிறப்பு தள்ளுபடி" என்று போடாதது ஒன்றுதான் பாக்கி.

அதிலும் இந்த "பம்பர் பரிசு" இருக்கிறதே சார் பம்பர் பரிசு...எனக்கொரு தீராத சந்தேகம். ஏன் சார் நமக்கோ, நமக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ பம்பர் பரிசு விழுவதே இல்லையே?

கவிவேந்தன் மட்டும் இன்று இருந்திருந்தால்,

பம்பர் பரிசு உண்டெனும்
வம்பர் வார்த்தை பொய்
அன்பர் நன்மைக்கு - இந்த‌
கம்பர் சொல்வது மெய்.

என்று பாடியிருப்பார்!

சில நாட்களுக்கு முன் ஒரு பிரபல நிறுவனத்தின் தீபாவளி பம்பர் பரிசு விளம்பரம் பார்த்தேன். ‍அதில், இந்த தீபாவளி சீசனில், இதுவரை பரிசு பெற்றவர்கள் போட்டோ வேறு! இதில் காமெடி என்னவென்றால், பொய்யை சரியாக செய்யத் தவறி விட்டார்கள். ஒரே போட்டோவை, பக்கத்தின் இரண்டு இடத்தில், வெவ்வேறு பொருளுக்கு பரிசு பெற்றவராக, வெவ்வேறு முகவரியுடன் போட்டு விட்டார்கள்...அனேகமாக அந்த விளம்பர மேலாளருக்கு சீட்டு கிழிந்திருக்கும் என்று நம்பலாம்.

தொலைக்காட்சியின் எந்த சேனல் பக்கம் திரும்பினாலும் அல்லது பத்திரிகைகளின் எந்தப் பக்கம் திருப்பினாலும், தீபாவளி விளம்பரங்கள் எப்படியிருக்கின்றன? அந்த பொருளுக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நவநாகரீக யுவதியோ அல்லது பண்பாட்டு திலகம் போன்ற பழந்தமிழ் நங்கையோ செயற்கை புன்னகை காட்டியபடி ஒரு அகல் விளக்கின் தீபம் கைகளில் ஏந்தி செயற்கை புன்னகை சிந்துகிறார்கள்.! அதாவது அவர்கள் விளம்பரப் படுத்தும் பொருள் மூலம் நம் வீட்டில் மகிழ்ச்சி தீபம் ஒளிருமாம்...

சும்மா சொல்லக் கூடாது சார்...நம் ஆட்கள் உண்மையிலேயே "ரூம் போட்டு" யோசிப்பவர்கள் தான். இந்த வகையில், எனக்கு ஒரு விளம்பரம் பிடித்திருந்தது ‍"தீபாவளிக்கு தலையில் எண்ணெய் வைக்காமல் குளிக்கின்ற‌ வருத்தமா?" என்று கேள்வி கேட்டு, "சிகிச்சைக்கு முன்" "சிகிச்சைக்கு பின்" என்று இரண்டு போட்டோக்கள். முன்னதில் வழுக்கையுடன் இருக்கும் ஒருவர் பின்னதில் பாகவதர் போல இருக்கிறார். அதன் கீழே "விரைந்து வாருங்கள்...சிறப்பு தள்ளுபடி..." என்று நீள்கிறது விளம்பரம்!

ஆனால் நான் கீழே எழுதியிருப்பது போல் ஒரு விளம்பரத்தை இந்த வருட தீபாவளிக்கு எதிர்பார்த்தேன்:

1. ஒரு இல்லத்தரசி கம்பி மத்தாப்பை நீட்டியபடி சமையல் செய்கிறார். நாம் வியப்புடன் பார்க்கையிலேயே, "இது abc கம்பி மத்தாப்பு. நீண்ட நேரம் எரியும். சமையலே செய்யலாம்னா பாருங்களேன்..." என்பது போன்ற விளம்பரம்.

அனேகமாக, வரும் வருடங்களில் இது போன்றதொரு விளம்பரம் வந்தாலும் வியப்பில்லை:

2. தீபாவளியன்று அனைவரும் வீட்டில் அவரவரது TV அல்லது mobile phone உற்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர் - cut - பயங்கரமான தொடர் பட்டாசு சத்தம் - cut -  பின்னே ஒரு குரல், "வெளியில் சென்று, வெடியை பத்த வைத்து...எதற்கு இத்தனை கஷ்டம்...எங்கள் smart phone / smart tv மூலம் வீட்டில் அமர்ந்தபடி பற்ற வைத்து,   உட்கார்ந்த இடத்திலிருந்தே வெடி வெடித்து, அதை அப்படியே கண்டு மகிழுங்கள்..." என்பது போன்ற விளம்பரம்.

கலி காலத்தில் கண்டதெல்லாம் கெட்டுக் கிடக்கையில் தீபாவளி மட்டும் அப்படியே பழைய மாதிரியாகவேவா இருக்கும்?

4 comments:

  1. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  2. ம்ம்ம். வெர்ச்சுவல் தீபாவளி என்கிற காலம் வந்தாலும் வரக் கூடும். விளம்பரங்கள் விஷயத்தில் எனக்கும் உங்கள் கருத்துக்களுடன் சம்மதமே. நன்கு சொன்னீர்கள் நண்பரே.

    ReplyDelete
  3. அனுஷ்கா ஆடியபடி வந்து தீபாவளி தள்ளுபடி விலையில் பூச்சிக் கொல்லி மருந்து வாங்குங்கள் என்று விளம்பரம் செய்து விவசாயிகளின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற முயல்வதை பார்த்திருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தீபாவளிக்கு வரும் விளம்பரங்களைப் பார்த்தால், எங்கேயாவது இது போன்ற விளம்பரமும் வந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். ஹி ஹி ஹி பின்னிட்டேள்

    ReplyDelete