/ கலி காலம்: குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 1

Saturday, September 15, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 1

ஞாயிறு காலை...சூரியன் முதுகை சுட்டு எழுப்பும் சோம்பல் மிகுந்த வேளை..."உங்கள் tooth pasteல் உப்பு இருக்கிறதா" என்று தொலைக்காட்சியில் ஒருவர் நம்மை விசாரித்துக் கொண்டிருக்க, பற்களின் மேலும் கீழுமாய் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன எனக்கு நம்பகமான பற்பசையை தாங்கிய tooth brush.

தண்ணீரை முகத்தில் நனைத்து துடைத்தபடி கண்ணாடியை பார்த்தால், என்னைப் பார்த்து சிரித்தபடி ஒரு உருவம் நின்றிருந்தது. ""அய்யா, யார் நீங்கள்?" என்றேன்..."நித்தம் ஓடியாடி சித்தம் ஓய்ந்து போகும் மக்களை குத்துப் பாட்டு மூலம் குஷிப்படுத்த வந்திருக்கும் குத்தானந்தா நான்" என்றார் அவர். "அய்யா, "ஆனந்தா" என்று முடியும் பெயர்கள் கேட்டாலே ஆத்திரத்தில் மக்கள் கொதிக்கும் நேரத்தில் இப்படி ஒரு பெயர் தேவையா?" என்று கேட்க நினைத்தேன். அதற்குள் அவரே,"நான் வெறும் குத்தானந்தா அல்ல. ஸ்ரீ குத்தானந்தா" என்று விளக்கம் கொடுத்தார். இப்பொழுதெல்லாம் தகுதி இருக்கிறதோ இல்லையோ, பெயருக்குப் முன்னாலும் பின்னாலும் எதையாவது சேர்த்துக் கொள்வதுதானே fashion என்று சொல்லத் தோன்றியது. "நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா" என்று கண்ணதாசன் ஒரு பாட்டு வரியில் சொல்வாரே அதைப் போல் பேசாமல் இருந்து விட்டேன்.

"கலிகாலம் சாமி. பன்னாட்டு கம்பெனி போல செயல்படும் ஆன்மீக குருக்கள் புற்றீசல் போல கிளம்பி விட்டார்கள். அவர்களைப் போல உங்கள் புகழும் பல நாடுகள் பரவ வேண்டுமென்றால் ஒரு "ஸ்ரீ " போதாது இரண்டு "ஸ்ரீ " குறைந்தபட்சம் போட்டுக் கொள்ள வேண்டும்" என்றேன். குதூகலமான குத்தானந்தா, "சபாஷ் தம்பி. உன்னை போன்றவர்கள்தான் சிஷ்யர்களாக தகுதி படைத்தவர்கள். இரண்டு ஸ்ரீ  போட்டுக்கொள்ளலாம்" என்று தன் பெயரை "ஸ்ரீ  ஸ்ரீ  குத்தானந்தா" என்று சில முறை சொல்லிப் பார்த்துக் கொண்டார். "ஆனால் சாமி, அதை சற்று தமிழாக்கம் செய்தால் "சீ சீ குத்தானந்தா" என்று வருமே...அழைப்பதற்கும் கேட்பதற்கும் ஒரு மாதிரியாக இருக்குமே..." என்றேன். "ஓ நீ என்னையே ஆழம் பார்க்கிறாயா" என்று கோபம் கொண்டார் குத்தானந்தா. கபால் என்று காலில் விழுந்து "என்னை மன்னித்து சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற என் கெஞ்சலுக்கு கொஞ்சம் செவி சாய்த்து, "சரி சரி எழுந்திரு" என்றார்.

நன்றி சாமி. குத்துப்பாட்டு என்பதன் இலக்கணம் என்ன? என்றேன் நான்.

"மிதமிஞ்சிய சந்தம்
குத்துக்கு சொந்தம்
பொருளற்ற சத்தம்
குத்துக்கு குத்தம்"

என்று பாட்டாகவே ஒரு போடு போட்டார். "சாமி இதுவே ஒரு குத்து போல இருக்கிறதே" என்றேன்."ரொம்ப ice வைக்காதே. நான் ஒன்றும் இலவசமாய் உனக்கு குத்துப்பாட்டு சொல்ல மாட்டேன். பதிலுக்கு நீ வாரம் ஒன்று தர வேண்டும். என்னவென்று அடுத்த வாரம் சொல்கிறேன் என்றார். "சரி சாமி" என்று ஒத்துக் கொண்ட நான், "நம் நாட்டில் திட்டம் நல்லாத்தான் போடுவோம். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. அது போல வாரா வாரம் உங்கள் குத்துப் பாட்டை பதிவாக போடும் திட்டத்திற்கு தடையாக நாட்டில் ஆயிரம் அக்கிரமங்கள் நடந்து அதைப் பற்றிய‌ பதிவு போடும்படி தூண்டுமே சாமி என்ன செய்வது?" என்றேன். "அதற்கென்ன சீடா...நம் நாட்டில் நம் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஜனநாயகம் என்பதற்கு புதிய அர்த்தம் கொடுப்பவர்கள் அல்லவா நாம்" என்று சொன்னதோடு நில்லாமல், "சமீபத்திய எடுத்துக்காட்டு சொல்கிறேன் கேள்" என்றார்...

"சீடா, சென்ற வாரம் ஏதோ ஒரு உப்புச்சப்பில்லாத இலங்கை பல்கலைகழக அணி தமிழ்நாட்டில் விளையாட வந்ததற்காக இங்குள்ள address இல்லா அமைப்புகள் முதல் அரசாங்கம் வரை அப்படியொரு குதிகுதித்து அவர்களை திருப்பி அனுப்பினவே...அடுத்த வாரம் t20 cricket world cup இலங்கையில் நடக்க உள்ளது. இந்திய அணியில் தமிழ்நாட்டின் Ashwin விளையாடுகிறார். அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இலங்கை சென்று விளையாடுகிறார். இது மட்டும் சரியா? சொல்லு பார்ப்போம் என்றார். "சாமி நீங்க டேஞ்சரான ஆசாமியா இருப்பீங்க போலிருக்கே, குத்துப் பாட்டு நடுவிலே நிறைய "உள்குத்து" வேற குத்துவீங்க போல..." என்றேன்.

"கண்ணாடியோட என்ன பேச்சு" என்று கடுப்பாகிப் போன என் மனைவியின் குரல் கேட்க அப்புறம் பார்க்கலாம் என்று அவசரமாக காணாமல் போனார் குத்தானந்தா...

6 comments:

  1. அருமை குத்தானந்த குத்து மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

    ReplyDelete
  2. குத்தானந்தாவின் குத்துகள் நல்லாத்தான் இருக்கு.
    தொடர்க.
    தமிழ்மணத்தில இணையுங்க. follower gadjet add பண்ணுங்க. ரெகுலரா வரேன்.

    ReplyDelete
  3. அடிக்கடி எழுதுங்க.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கடவுளே! வாழ்த்து

    ReplyDelete