/ கலி காலம்: முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும்படி சிரியுங்கள்!

Saturday, September 8, 2012

முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும்படி சிரியுங்கள்!

ஆமாம் சார். நமக்கிருக்கும் தினசரி சிக்கல்களில் சிரிப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கிறது? ஆனால், அதிகம் சிரித்தால் ஆரோக்கியம் என்று சொல்கிறார்களே! எனவே தான் நம் மத்திய அரசு, "நகைச்சுவை வளர்ச்சித் துறை" என்று தனியே ஒரு இலாகா துவக்கியுள்ளது.

"என்னய்யா இது எந்த பத்திரிகைகளிலும் வராத செய்தியாக இருக்கிறதே!" என்கிறீர்களா? ஏன் சார், அரசாங்க ரகசியங்கள் எல்லாம் வெளிவரும் பொழுது, இது போன்ற, வெளியே  தெரிய வேண்டிய விஷயங்கள் ரகசியமாகத்தானே இருக்கும்?

இந்த "நகைச்சுவை வளர்ச்சித் துறை"யில் நீண்ட நாட்களாகவே சிதம்பரமும் கபில் சிபலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். நகைச்சுவையிலும், உருக்கமான நகைச்சுவை என்று ஒன்று இருக்க முடியும் என்று அவ்வப்போது மன்மோகன் சிங் நிரூபித்து வந்தார். இவர்கள் மட்டுமே நாட்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தால் போதுமா சார்? பார்த்தார்கள் மற்ற அமைச்சர்கள். எப்படியும் எந்தத் துறையிலும் உருப்படியான வேலை எதுவும் நடைபெறவில்லை. நாமும் ஏன் "நகைச்சுவை வளர்ச்சித் துறை"யில் பணியாற்றக் கூடாது என்று கிளம்பி விட்டார்கள்.

இதில் புதிதாக சேர்ந்திருப்பவர் தான் "பெனி பிரசாத் வர்மா". என்ன சார் இது, கேள்விப்படாத பெயராக இருக்கிறதே...இப்படி ஒரு அமைச்சரா? என்று கேட்பீர்கள்தானே? சரிதான் சார். முன்னரெல்லாம் ஒரு மந்திரி பல ஆண்டுகள் ஒரு துறையில் இருப்பார். வேலையும் செய்வார். நமக்கெல்லாம் அந்த மந்திரியின் பெயர் மட்டுமின்றி மற்ற தகவல்களும் நினைவில் இருக்கும். இப்பொழுதோ நாளொரு மந்திரி பொழுதொரு துறைக்கு வருகிறார் போகிறார். நாட்டுப்பணி என்று எந்த வேலையும் கிடையாது. அப்புறம் எப்படி சார் மந்திரியின் பெயர்கள் நமக்குத் தெரியும்? எனவே, பெனி பிரசாத் வர்மா ஒரு மந்திரி சார். எந்தத் துறை என்பதெல்லாம் நமக்கு எதற்கு? எந்த வேலையுமே நடைபெறாத நாட்டில் எந்தத் துறைக்கு யார் மந்திரியாக‌ இருந்தால் என்ன?

இவர், "நகைச்சுவை அமைச்சகத்தின்" புதிய உறுப்பினராகி சில முத்துக்களை உதிர்த்திருக்கிறார். "விலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் பயன்பெறுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார் இவர். நாம் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். மன்மோகன் சிங், "விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது. தூக்கம் கூட எனக்கு கிடையாது" என்று சொல்லியிருக்கிறார். இந்த வர்மா, சிங்கின் அமைச்சரவையில் உள்ளவர். அவரோ மகிழ்ச்சியில் திளைக்கிறார். மன்மோகனோ துயரத்தில் உழல்கிறார்.
அதுவும் ஒரே விஷயத்திற்காக!

அதாவது, ஒரே விஷயத்திற்காக பிரதமர் கவலைப்படுவதாக கூறுகிறார். அவரின் அமைச்சரோ, அதே விஷயம் சந்தோஷமாக இருக்கிறது என்கிறார். என்ன சார் நடக்கிறது? இப்படி ஆளாளுக்கு தங்கள் விருப்பப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறீர்களே என்று கேட்டால் போச்சு...அவ்வளவுதான். சிதம்பரமோ கபில்சிபலோ பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். அங்கு அவர்கள் அளிக்கும் விளக்கமோ, சம்பந்தப்பட்டவர் முன்னர் பேசியதே பரவாயில்லை என்ற அளவுக்கு நம்மை கொண்டு போய் விடும்.

எனக்கு இந்த சிதம்பரம் மீது சந்தேகம் சார். அதாவது, முன்னரெல்லாம் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நடு நடுவே திருக்குறள் சிலவற்றை எடுத்து விடுவார். நமக்கும், "ஆஹா! தமிழர் ஒருவர் நாட்டுக்கு பட்ஜெட் சமர்க்கிறார்...அந்த உரையில் திருக்குறள் வேறு சொல்கிறார்" என்று புல்லரித்து போவோம் (இப்போது இவரது பேச்சுக்கள் செல்லரித்து கிடக்கின்றன என்பது வேறு விஷயம்). ஒரு வேளை இவர் சம்பந்தம் இல்லாமல் "இடுக்கண் வருங்கால் நகுக" குறளை வர்மாவுக்கு சொல்லிக் கொடுத்து, "சும்மா பேசி வைங்க. ஏதாவது சிக்கலாச்சுனா வள்ளுவரே சொல்லியிருக்கார்னு விளக்கம் கொடுத்துரலாம்" என்று சொல்லியிருப்பாரோ?

இப்போது சொல்லுங்கள் நாம் பற்கள் அனைத்தும் தெரியும்படி சிரிக்க வேண்டுமா வேண்டாமா?



1 comment:

  1. அகில உலக அணு விஞ்ஞானியும் அணு உலைக் குழுத் தலைவருமாகிய திரு.நாராணயசாமியை விட்டு விட்டீர்களே.
    வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete