/ கலி காலம்: ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 7

Friday, August 17, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 7


இப்போதெல்லாம் நம்மூர் ரயிலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் சார். பெண்ணைத் தூக்கி வெளியில் வீசுகிறார்கள், பெட்டி திடீரென்று தீப்பிடித்து எரிகிறது, கழிவறையில் மலைப்பாம்பு பயணம் செய்கிறது...இப்படி கற்பனைக்கு எட்டாத களேபரங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே ஒவ்வொரு ரயில் பயணமும் "எதிர்பார்ப்பு" மிக்கதாக ஆகி விட்டது இல்லையா?

சமீபத்தில் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இரவு நேரத்தில் ரயில் ஏறினேன். அமர்ந்த சற்று நேரத்தில் மூன்று இளைஞர்கள் அருகிலுள்ள இருக்கைகளுக்கு வந்தார்கள். இந்த காது இருக்கிறதே சார் காது...நாம் சும்மா இருந்தாலும் அது சும்மா இருக்காமல் அக்கம் பக்கத்து பேச்சுகளை வாங்கி மூளைக்கு அனுப்பியபடியே இருக்கும். பயணங்களில் ஒரு "பக்க" பேச்சு மட்டும் கேட்டால் போதுமா? எனவேதான் இரண்டு காதுகள் நமக்கு இருக்கிறது போலும்!

அந்த இளைஞர்கள் "புதிதாக வேலை"க்கு சேர்ந்தவர்கள் என்பதும் பெங்களூரில் ஒன்றாக அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்பதும் சில நிமிடங்களிலேயே புரிந்து போனது. மூவருமே "நான் அடிச்சா தாங்க மாட்ட" என்று பாட்டுப் பாடும் தகுதி பெற்ற திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்தனர். திடுக்கிடும் திருப்பங்கள் இனிமேல் தான் துவங்கின."அந்தப்பக்கம் காட்டுப்பள்ளம், இந்தப்பக்கம் உச்சிமலை. நடுவில இருக்கிற மூங்கில்காடு வழியா போனா  check post போகலாம்" என்று ஒரு map வைத்துக் கொண்டு காட்டில் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு திட்டம் போடுவாரே விஜயகாந்த்...அது போல ஒரு பேப்பரை மூன்று பேரும் சூழ்ந்து குசுகுசுவென ஏதோ பேசிக்கொண்டனர்.

ஒருவர் சத்தமாக பேசினால் கூட கவனிக்காமல் விட்டுவிடுவோம். ஆனால் ரகசியம் பேசுவது போல பேசினால் நம் காது சும்மா இருக்குமா சார்? எனவே காதை தீட்டிய போதுதான் ஒரு இளைஞர் என் வயிற்றில் "குண்டு" போட்டார். "S7ல‌ இரண்டு, S11 ஒன்னு, S4ல‌ இரண்டு" என்று அவர் சொல்ல, S7ல‌ இரண்டுமே toilet பக்கம் இருக்கு.வைக்கறதுக்கும் கவனிக்கறதுக்கும் வசதியாக இருக்கும்." என்று மற்றொருவர் சொல்ல...சந்தேகப் பொறி சட்டென மனதில் அமர்ந்தது. இவர்களை பார்த்தால் அப்படிப்பட்ட செயல்கள் செய்பவர்கள் போலத்தெரியவில்லையே என்று ஒரு மனது சொன்னாலும், இந்தக் காலத்தில் எவரையுமே நம்ப முடியாது என்று மற்றொரு மனது சொல்ல, இவர்களிடம் பேசித்தான் பார்ப்போமே என்று பேச்சு கொடுத்தேன்...

நட்பு பூசிய சிரிப்புடன் அவர்களும் பேச, நம்பிக்கை பூத்தது எனக்கு. ஆனாலும், நம்ப வைத்து கழுத்தறுப்பதில் நாம் அனைவருமே கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே...எனவே சந்தேக சைத்தான் மீண்டும் எனக்குள் ஏறியது.

மூவரில் ஒருவர் வேகமாக எங்கோ போனார். போனவர் சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பினார். இந்த இடைவெளியில் " "நான் ஈ புகழ்" நடிகை சமந்தாவுக்கு கடல்நீர் அலர்ஜியா?" போன்ற நாட்டை உலுக்கும் சிக்கல்களையும், திரிஷா வீட்டின் மூன்று நாய்குட்டிகளின் பெயர்களை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் "பொது அறிவு" களஞ்சிய பக்கங்களையும் கொண்ட பத்திரிகைகளைப் புரட்டி முடித்தேன் நான்.

போனவர் திரும்பி வந்தார். ரயில் பெட்டிகள் அனைத்திற்கும் சென்று வந்திருப்பார் போலும். அவர் அமர்ந்தபடி மற்றவரிடம் சொன்ன வரிகளை கேட்டு, மீனாட்சி பவனின் வாங்கி வந்த இட்லியை சாப்பிட ஆரம்பித்திருந்த எனது நம்பிக்கை அந்த இட்லிகளுக்கடியில் இருந்த சட்னி போல நசுங்கியது.

அப்படி என்ன சொன்னார் அவர்? அடுத்த வாரம் தொடர்வோம்...ஏன் சார், தொடர்கதையிலும் சினிமாவிலும் தான் suspense வைக்கலாமா? வலைப்பதிவிலும் வைத்துப் பார்ப்போமே சார்.


2 comments:

  1. அடுத்த பகிர்வு எப்போ சார்...?

    நன்றி..

    ReplyDelete
  2. சார் இது கொஞ்சம் ஓவர்

    ReplyDelete