/ கலி காலம்: தமிழரும் தண்ணீரும்...

Thursday, December 20, 2012

தமிழரும் தண்ணீரும்...


"பொங்கல் சாப்பிடு தமிழா, பொங்கல் சாப்பிடு" - இந்த வாசகத்தை நீங்கள் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில், ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ளே சாலையின் சுவர்களில், நான் சிறுவனாக இருந்த வருடங்களில் இது நிரந்தரமாக இருந்தது.

பொங்கல் சாப்பிடச் சொல்லும் வரிக்கு மேலும் கீழும் அன்றைய சமூக சூழலுக்கு பொருத்தமான‌ "சிக்கல்களை" மாற்றி மாற்றி எழுதுவார்கள். இன்று,  அந்த சுவரில்  "கொக்கோ கோலா" குடித்தால் ஏற்படும் குதூகலம் குறித்து தமிழர்களுக்கு ஒரு விளம்பர யுவதி விளக்கிக் கொண்டிருக்கிறார்...

பழைய வரியும் சுவரும் இன்று இருந்திருந்தால், "நிலத்தில் நீர் தங்கலை நீ வைக்காதே பொங்கலை" என்று எழுதியிருப்பார்கள்.

இன்று 1 டிஎம்சிக்கும் 2 டிஎம்சிக்கும் காய்ந்து கிடக்கும் நம் நீர் மேலாண்மை (water management) எப்படிப் பட்டது? கல்லணையை எடுத்துக் கொள்வோம்... நம்மவர்களுக்கு, செய்யும் வேலைக்கு அலங்காரமாக பெயர்கள் வைத்து விளம்பரப்படுத்த தெரியவில்லை அல்லது மனமில்லை. எனவே, கல்லணை ஆயிரம் வருடமாக‌ இருக்கிறது என்பதை தவிர நமக்கு வேறெதுவும் தெரியவில்லை. இது ஒரு அற்புதமான முன்னோடி என்பதை சொல்வதற்கும் நமக்கு ஆங்கிலேயர்கள் வேண்டியிருந்தது. அமெரிக்காவில் 19ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் முயற்சிக்கப்பட்ட "rock fill method" என்பது வேறொன்றுமில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன் வெவ்வேறு அளவுகளில் உள்ள கற்களை வெவ்வேறு காலங்களில் கொட்டி, கட்டப்பட்ட கல்லணையின் "design" தான். இப்படிப்பட்ட நுணுக்கங்களை அன்றே வடிவமைத்த நாம் எப்பொழுது இத்தகைய ஆற்றல்களை இழக்கத் துவங்கினோம்?

பிரபலமான தேசிய ஊடகங்கள் எதிலும் காவிரி பற்றி ஒரு விவாதம் கூட வரவில்லையே...ஏன்? அதிலும், சமூக பொறுப்புகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல காட்டிக் கொள்ளும் ஒரு சேனலின் "செய்தி நேரத்தில்" கூட இது அரசியல் தவிர வேறு காரணங்களுக்காக வருவதில்லையே...ஏன்? ஆனால், இதே சேனலுக்கு, "கொலை வெறி" பாடலின் மகத்துவத்தை நாட்டுக்கு விளக்க பத்து நிமிடம் ஒதுக்க முடிகிறது...வெட்கக்கேடு!

உள்ளூர் சேனல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை...நடிகைகளின் பாதி முகத்தைக் காட்டி அவர் யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லும் புல்லரிக்கும் புதிர்கள் போடவே இவைகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. காவிரி பற்றி இவர்களை நிகழ்ச்சி தயாரிக்கச் சொன்னால், ஒகேனக்கல் அருவி வரும் சினிமா படக் காட்சிகளாகக் காட்டி ஒப்பேற்றினாலும் வியப்பில்லை. அத்தகைய அறிவுக் களஞ்சியங்கள் கொட்டிக் கிடக்கின்றன பல தமிழ் சேனல்களில்...

எதையும் அரசியலாக்க மட்டும் நாம் நன்றாக கற்று விட்டோம். மற்றவற்றையெல்லாம் விற்று விட்டோம். நதியை காக்க மறக்கும் சமூகத்தின் கதி அதோகதி தான் என்பதை அறிய‌ விதி தேவையில்லை. சாதாரண மதி போதும்.

நான் விவசாயி அல்ல. என்னிடமும் நிலமும் இல்லை. ஆனால், தினமும் தொலைக்காட்சித் திரையின் அடியில் ஓடும் மேட்டூர் அணையின் அளவு குறைந்து கொண்டே வருவதை பார்க்கும் பொழுது மனதுக்குள் ஏதோ ஒன்று சட்டென்று குத்தி விட்டு போகிறது. உங்களுக்கும் அதே உணர்வு இருக்கும்.
நமக்கே இப்படி என்றால், நாளை காலை தனது பயிர் குடிக்க நீர் இல்லை என்பதை நினைக்கும் விவசாயிக்கு எப்படியிருக்கும்?

நமக்கு iphone 5 modelல் என்னவெல்லாம் புதுசு என்று பார்த்து முன்னேறத் துடிப்பதற்கே நேரமில்லை. இதில் ஐஆர் எட்டு என்னவானால் என்ன? பொங்கல் சாப்பிடுவோம் சார் பொங்கல்!

3 comments: