/ கலி காலம்: குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 3

Friday, December 14, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 3


தெரு முனையில் இருக்கும் ""அண்ணாச்சி"" கடையில் உப்பு வாங்கிக் கொண்டிருந்தேன். "அஞ்சு ரூபாய்க்கு மிளகு"..."நூறு உளுத்தம் பருப்பு" என்ற குரல்களை தினசரி பேப்பரை கிழித்து மடமடவென்று பொட்டலமாக்கிக் கொண்டிருந்தார் "555 சோப் நன்றாக வெளுக்கும்" என்று உலகுக்கு அறிவிக்கும் முண்டா பனியன் போட்டிருந்த நம்மூர் "அண்ணன்".

"அன்னிய முதலீடு பாரு
பண்ணிடும் நாட்டுக்கு கேடு
சில்லறை வணிகம்னு பேரு
கல்லறை ஆகிடும் ஊரு"

என்று பாடியபடி வந்தார் குத்தானந்தா. "என்ன தம்பி உப்பு வாங்குறயா? உப்பத் தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும்" என்றார். "சாமி, உப்பை வச்சே பாட்டுக்குள்ளெ "பொடி" தூவறீங்களோ?" என்றேன். "என்னப்பா செய்யறது...அப்படி இப்படி நாட்டோட‌ அடிமடியிலேயே கைவச்சுருவாங்க போல" என்று சீறுவதற்கு தயாரானார்.

"சாமி, அன்னிய முதலீடு நல்லது தானே...சில்லிடும் அடுக்கு மாடி கடைகளில் மிடுக்குடன் பொருள் வாங்கி மிதப்புடன் இருந்து நம் மக்கள் மகிழ்வார்களே...அத்துடன், பருப்பு முதல் செருப்பு வரை, நமக்காய் காய் உணவு முதல் நாய்க்கான உணவு வரை, கீரை, கெட்டி மோரை, விட்டால் ஊரையே அமுக்கி பிளாஸ்டிக் கவரில் போட்டு விற்பனைக்கு வைத்திருப்பதில் எத்தனை வசதி..." என்றேன்.

"உன்னைய மாதிரி ஏட்டுச் சுரைக்காய்க்கு எத்தனை பாட்டு படிச்சாலும் புத்தியில் ஏறாது" என்று கத்திய குத்தானந்தா, "தம்பி, பகட்டா இருக்கும் எதுவும் கரெக்டா இருக்கும்னு நினைக்கற காலமாகிப் போச்சு...விலை நிறைய அப்படின்னா தரமும் அதிகம்னு நம்புற நாகரீக கோமாளிகள் தானே நாம்.

"சாமி, இதுனால நமக்கு என்ன நஷ்டம், தெளிவா சொல்லுங்க..." என்றேன்.

"முதல்ல சில்லறை வர்த்தகம் அப்படினுதான் ஆரம்பிக்கும். அப்புறம், சீப்பா கிடைக்கறதுனால இறக்குமதி பண்றேன், அதை சேமிச்சு வைக்க கோடவுன் கட்றோம்னு இடம் போடுவான். ஆயிரக்கணக்கான‌ ஏக்கர் நிலத்தை வாங்கி, "corporate agriculture join venture" விவசாயம் பண்றேன் அப்படின்னு ஒட்டகத்தை கூடாரத்துக்குள்ள விடுவான். அதுல விதையை போடுறானா விஷத்தைப் போடுறானா நம்ம அரசாங்கமா பார்க்கப் போகுது? எவ்வளவு சீக்கிரம் லாபம் பார்க்கலாமோ அதுக்குத் தகுந்த மாதிரி "BT கத்திரிக்காய்" "BT வெண்டைக்காய்" அப்படினு இயற்கைக்கு எதிரா உருவாக்கின பொருட்களை புழக்கத்துல விடுவான். பார்க்க பளபளப்பா, கவர்ல போட்டு ரெடியா இருக்கும். நம்மூர் இல்லத்தரசிகளின் இன்னல் குறைக்கறேன்னு காய்கறியை வெட்டி கவர்ல போட்டு அதுக்கு விலையை ரெண்டு மடங்காக்கி laebl ஒட்டி விற்பான்...பாலிஷ் செய்யப்பட்ட பருப்பை நமக்கு plastic பாக்கெட்டில் போடுவான்...லாபத்தை அள்ளி தனது பாக்கெட்டில் போடுவான்"

பத்து பதினஞ்சு வருஷத்துக்கு நாமளும், "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்..." கணக்கா பந்தா பண்ணுவோம். அப்புறம் அடுத்த இளிச்சவாய நாடு ஏதாவது மாட்டும். நம்ம நாட்டை விட அங்க லாபம் அதிகமா வரும் அப்படின்னா "வந்தாரை வாழ வைக்கும் நன்னாடே...உனக்கு மொத்தமா டாடாடே" என்று அனைத்தையும் மூடி விட்டு போவான். அப்புறம் நம்ம நிலத்தை உழுதா புழு கூட வராது...கட்டாந்தரையான நிலத்தை காலால சுரண்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான்" என்றார்.

எனக்கு லேசாக கவலை வந்தது. "உணவு பொருட்களுக்கு மட்டும் முதலீட்டுக்கு தடை விதிக்கலாமே" என்றேன். "ஓ நீ அப்படி வரயா?" என்ற குத்தானந்தா "அன்னிய முதலீடு எதுலப்பா வரும்?" என்றார். "டாலர்ல‌ சாமி" என்றேன்.

"அங்கதான் இருக்கு நமக்கு அடுத்த ஆப்பு" என்ற சொல்லியபடி, "அதை அடுத்த வாரம் சொல்றேன். இந்த வாரத்துக்கான உன்னோட இலக்கியப் பாட்டு எங்க?" என்றார். "ஆஹா மாட்டிகிட்டோமே என்று முழித்த என் கண்ணில் peacock brand அரிசி மாவு பாக்கெட் கண்ணில் பட்டது. போன வாரம் படித்த பாட்டு வரி நினைவுக்கு வந்தது ‍ - "மயிலடி இலைய மாக்குரல் நொச்சி".  சாமி, இந்தப் பாட்டு எழுதி ஆயிரம் வருஷத்துக்கு மேல ஆச்சு...எத்தனை ரசனையான மனுசங்க நம்ம மண்ணுல வாழ்ந்து போயிருக்காங்க சாமி...மயில், குயில் அப்படினு நிறைய பாட்டு பார்த்திருக்கோம். ஆனா இந்த வரியிலே, மயிலோட காலடி வடிவம் நொச்சி இலை மாதிரி இருக்கும்னு சொல்றாரு சாமி...என்றேன். "இப்ப நம்மூருல மயிலையே பார்க்க முடியல இதுல அதனோட காலடிய எப்படி பார்க்கறது...அது சரி, நொச்சி இலை பார்த்திருக்கிறாயா? என்றார்...". "அடுத்த வாரம் பேசலாம் சாமி" என்று கடையை விட்டு நகர்ந்தேன்.

No comments:

Post a Comment