/ கலி காலம்: இந்தியர்களுக்கு எதிரான ஒலிம்பிக்ஸ் சதிகள்...

Wednesday, August 1, 2012

இந்தியர்களுக்கு எதிரான ஒலிம்பிக்ஸ் சதிகள்...


நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தால் என்ன? நூறு பேர் கூட லண்டன் ஒலிம்பிக்ஸுக்கு தகுதி பெற முடியாத வெட்கக்கேட்டை எப்படி எதிர்கொள்வது?கவலை வேண்டாம். மக்களுக்காகவே வாழும் நம் அரசியல்வாதிகளின் ஐடியாவையே நாமும் கடைபிடிப்போம். அதான் சார், ஒரு சிக்கலை எதிர்கொள்ள முடியாவிட்டால், "இதில் அன்னிய சக்திகளின் சதி இருக்கிறது" என்று அறிக்கை விடுகிறார்கள் இல்லையா, அது போல நாமும் இதில் சதி இருக்கிறது என்று சொன்னால் போயிற்று!எப்படிப்பட்ட சதி என்று பார்ப்போம் வாருங்கள்.

குதிரையேற்றம்: இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்பதே நமக்கு ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டு போட்டிகளை பார்க்கும் போதுதான் ஞாபகம் வரும். இந்தியர்கள் குண்டுச்சட்டியில் மட்டுமே நன்றாக குதிரை ஓட்டுவார்கள் என்று உலகத்திற்கு நன்றாக தெரிந்திருக்கிறது. நம் வாழ்க்கை முறையும் அப்படித்தானே இருக்கிறது. போனால் போகிறது என்று வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவமாக ஊட்டி, சிம்லா போன்ற இடங்களில் குதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதோடு சரி. எனவே தான் நிஜக்குதிரை ஏற்றம் என்று விளையாட்டை சேர்த்திருக்கிறார்கள். வன்மையாக கண்டிப்போம் சார். ஏன் கழுதையேற்றம் இல்லை என்று நாம் போர்க்கொடி தூக்குவோம்.

வில்வித்தை: கண்ணைக் கட்டிக் கொண்டு வில்லால் மாம்பழம் அடித்தவர்களை புராணத்தில் படித்து விட்டு நம்மவர்களின் வில்வித்தை பார்க்க வேண்டும் சார். பார்க்கும் குறி இருக்கிறதே...அப்பப்பா! எவ்வளவு அதிக நேரம் குறி பார்க்கிறார்களோ அவ்வளவு குறைவாக "மதிப்பெண்" வாங்கும் விசித்திரம் நமக்கு மட்டுமே சாத்தியம். அதுவும், நாட்டுப்பற்று தேவைக்கு அதிகமாகவே உள்ள நம் வர்ணனையாளர்கள், "காற்று அதிகம் வீசி விட்டது", "மழைத் தூறல் குறிக்கீடு" என்று நம் வீரர்களை சாக்கு மூட்டைக்குள் அமுக்கும் போது நம்மால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியாது. மற்ற வீரர்களும் அதே காற்று மழையில்தான் விளையாடுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கு தெரியாது என்று நினைத்து விட்டார்கள் போதும். இது நம்மவர்களே நமக்கு செய்யும் சதி."எங்கள் சொல் ஒவ்வொன்றும் வில்" என்று மேடையில் முழங்குபவர்களை வேண்டுமானால் அனுப்பிப் பார்க்கலாமா சார்?

வாள்வீச்சு: எத்தனை முறை பார்த்தாலும் இந்த விளையாட்டின் விதிகள் தெரிய மாட்டேன் என்கிறது சார். நம்மூர்களில் இதை விளையாடுபவர்களை விரல் விட்டு எண்ண, கால் கூட தேவைப்படாது என்பது உறுதி. இந்த விளையாட்டில் நம் மக்களுக்கு ஈடுபாடு இல்லாததற்கு சரித்திரமே சதி செய்து விட்டது. பின் என்ன சார்? புலியை கூட முறத்தால் விரட்டுவோம் நாம் என்று தெரிந்தபின் வாள் எதற்கு சார் நமக்கு?

ஜிம்னாஸ்டிக்ஸ்: மற்ற நாட்டு வீரர்கள் "நாட்டியம்" ஆடும் இந்த களத்தில் நம் ஆட்கள் நடந்து போகவாவது மாட்டார்களா என்ற ஏக்கம் நமக்கு இருக்கும் (துவக்க விழாவில் திடீரென்று புகுந்த நம்மூர் பெண், gymnastics அரங்கத்தில் புகுந்திலிருந்தாவது "gymnastics அரங்கில் இந்தியப் பெண்" என்ற பெயர் கிடைத்திருக்கும்!). இந்த விளையாட்டிலிருந்து நாம் விலகியிருப்பது மேற்கத்திய நாடுகளின் சதி சார். நாம் "மொழி உணர்வு" மிக்கவர்கள் என்று தெரிந்து கொண்டு சரியான தமிழ் பெயர் கிடைக்காமல் இவர்கள் திண்டாடட்டும் என்று வேண்டுமென்றே "gymnastics" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழில் பெயர் வைக்க முடியாததால் gymnastics விளையாட தன்மானம் இடம் தரவில்லை என்று நாம் அறிக்கை விட்டால் முடிந்தது கதை!

ஜூடோ (Judo): உண்மையிலேயே நாம் அதிர்ச்சி அடைய வேண்டியது இந்த விளையாட்டுக்காகத்தான். அடுத்தவரை கவிழ்த்துவதும், கீழே தள்ளி அமுக்குவதில்லும் நாம் தலைமுறை தலைமுறையாக எப்படி சிறந்து விளங்குகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். ஆனால் ஜூடோவில் கூட நாம் சோடை போவது ஏன்? புரியவே இல்லை சார். பேசாமல் ஒரு விசாரணை கமிஷன் வைத்தால்தான் காரணம் தெரியும். அது வரை, "ஜூடோ ரத்னம்" சினிமாவுக்கு போனதால்தான் நமக்கு ஒரு பதக்கம் போயிற்று என்று சொன்னால் யார் எதிர் கேள்வி கேட்கப்போகிறார்கள்?

படகுப் போட்டி: அநியாயத்தை பாருங்கள்! நீரில் பலம் யாருக்கு என்று போட்டி வைக்கிறார்களே, கரையில் பலம் யாருக்கு என்று போட்டி வைத்தார்களா? தேம்ஸ் நதிக்கரையில் மண் அள்ளும் போட்டி வைத்தால் நாம் மண்ணையும் பதக்கத்தையும் சேர்த்தே அள்ளிக் கொண்டு வருவோமே...சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சதி வேலை சார் இது. பாவம். அப்படி ஒரு போட்டி வைத்தால் நம்மவர்கள் புண்ணியத்தில் இங்கிலாந்து மக்கள் தேம்ஸ் நதியை தேட வேண்டியிருக்கும் என்று அவர்கள் பயந்திருக்கக் கூடும்...


என்னய்யா நீ? நம் நிலை பற்றி கவலைப்படாமல் கிண்டல் பேச்சு பேசுகிறாய் என்று கேட்கிறீர்களா? நம் நூறு கோடி பேர்களுக்கும் சேர்த்து கவலைப்படுவதற்கென்றே நாம் ஒருவரை டெல்லி செங்கோட்டையில் அமர்த்தியிருக்கிறோம். அவர் அனைத்துக்கும் கவலைப்படுவார். சீனாவின் அத்துமீறல் துவங்கி சீயக்காய் விலை உயர்வு வரை தினமும் கவலைப்படுவது மட்டுமே அவர் வேலை. அதுவும் "மக்களில் ஒருவராக" கவலைப்படுவார். விரைவில் "ஒலிம்பிக்ஸ் போட்டியில் நாம் பதக்கங்கள் குவிக்காததற்கு மக்களில் ஒருவனாக நான் கவலைப்படுகிறேன்" என்று அறிக்கை விட்டாலும் விடுவார். அப்புறம் எதற்கு சார் நமக்கு கவலை?

பின் குறிப்பு: இந்தப் பதிவை "சாமானியனின் ஒலிம்பிக்ஸ் கனவுகள்... பகுதி 2" என்றும் தலைப்பாக வைத்துக் கொள்ளலாம்.


3 comments:

  1. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ..

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. எல்லா துறையிலும் அரசியலும், பண பலமும் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறது.. இதில் பதக்கம் வாங்குவதெங்கே! கடையில் வேண்டுமானால் வாங்கி வைத்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
  3. india kattayam medal vanga venduma? olympic reservation policy follow panna solli poraduvom indiavukku itthanai gold and silver medal enru reserve seidhu vittalae podhum

    ReplyDelete