/ கலி காலம்: ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 2

Sunday, August 12, 2012

ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 2


நம்மூர் பேருந்து நிலையங்களில் இருக்கும் பெட்டிக்கடைகளில் கூட, அங்கு தொங்க விடப்பட்டிருக்கும் தண்ணீர் பாட்டில், பழங்களுக்கு இடையில் "இங்கு சிம் கார்டு கிடைக்கும்" என்று அட்டையில் எழுதி தொங்க விட்டு சில ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த அளவு "முன்னேற்றம்" கண்டிருக்கிறது நம் நாடு. இப்படிப்பட்ட நிலையில்தான் android phone வாங்க கடையில் நுழைந்த அந்த நன்னாள் வந்தது.

கடையில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ஒரு மாணவர் கும்பல். நம் காலத்தில் மாணவர் கூட்டம் கடலை மிட்டாய் வாங்கும். மிஞ்சிப் போனால் நீளமான பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட பெப்ஸி ஐஸ் வாங்கும். இப்போது செல் போன் வாங்குகிறது. அதில் ஒரு மாணவர் போன் கேமராவை பரிசோதிக்கும் பொருட்டு தெருவில் போய் வருபவர்களை குறிப்பாக பெண்களை படம் எடுத்து போனை "பரிசோதனை" செய்து கொண்டிருந்தார். அவரைப் போன்றவர்களின் விரலில், வயது, விஷம் ஏற்றாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

"tie" கட்டிக் கொண்டிருந்த ஒரு விற்பனையாளர், விருந்தோம்பலின் சாயலில் என்னை "tablet" இருந்த வரிசை பக்கம் தள்ளிக்கொண்டு போனார். சமீபகாலமாக விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிறுவன "tablet" ஒன்றை கையில் எடுத்தேன். அவர் விற்பனை மந்திரங்களை "side"ல் ஓதத்துவங்கினார். அதாவது, இது கையில் இருந்தால் உலகத்தில் சகல சம்பத்துக்களோடும் நீங்கள் 24 மணி நேரமும் "தொடர்பில்" இருக்கலாமாம். பொதுவாக "tablet" மாடல்களில் போன் வசதி இருக்காது. இதில் voice call வசதியும் உண்டாம். "பத்து ரூபாய்க்கு மேல் கொடுத்தவங்க எல்லாம் கையை தூக்குங்க" என்னும் "தாயத்து" காமெடி ஞாபகம் இருக்கிறதா? அதில் வடிவேலு சொல்வாரே..."நாங்க ஏன்டா தாயத்தை கட்டிகிட்டு நடு ராத்திரி சுடுகாட்டுக்கு போகப்போறோம்" ‍- அதுதான் என் நினைவுக்கு வந்தது. விலைமதிப்பற்ற ஒரு நாளை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை ஒரு தகவல் தொழில்நுட்ப சாதனம் தீர்மானிக்க முடிகிற நிலையில்தான் நாம் உறவுகளையும், நம்மையும் வைத்திருக்கிறோம் போலும். அதனால்தான் நம்மால் உலகின் மறு கோடியில் இருப்பவருடன் "இன்று இட்லிக்கு சட்னியா" என்று கேட்க முடிகிறது. பக்கத்து வீட்டுகாரருடன் பேசி பல நாட்கள் ஆகிறது.முன்னேற்றம் சார் முன்னேற்றம்.

சமீபத்தில் கொடைக்கானலில் ஒரு பெண்மணி மாலை முரசை நான்காக மடித்தது போன்ற சைஸில் இருந்த  "tablet" பயன்படுத்தி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். பொருத்தமற்ற வசதிகளை ஒரே சாதனத்தின் உள்ளே வைத்தால் எப்படியிருக்கும்? கொடுமையாகத்தான் இருக்கும். அதைவிட அவரின் குடும்பத்தினர், அவர் அதை கீழே போட்டுவிடப்போகிறாரே என்ற டென்ஷனுடன் உலவியதை பார்க்க தமாஷாக இருந்தது. அனேகமாக டூர் முடிந்து ஊர் திரும்பும் வரை அவர்கள் நிம்மதியாக இருந்திருக்க மாட்டார்கள். பாவம், அவர்கள் எந்த நிம்மதி பெற சுற்றுலா வந்தார்களோ?

நான் "tablet" வாங்கப்போகும் ஆளாகத் தெரியவில்லை என்று நொந்து போன விற்பனையாளர், அடுத்த பிரிவுக்கு நான் போவதற்கு காத்திருந்தார். போகும் வழியில் ஒரு பெண் ஒரு போனை பார்த்தபடி உதட்டுச்சாயம் பூசிக்கொண்டிருந்தார். உலகம் போகும் போக்கில், போன் உள்ளேயிருந்து உதட்டுச்சாயம் ஊறி வந்தாலும் ஆச்சரியப்படமுடியாதுதான். நல்ல வேளை. இந்த போன் அவ்வளவு தூரம் போகவில்லை. ஆனால் "கண்ணாடி" வைத்திருக்கிறார்கள் (உண்மையிலேயே இந்த வெள்ளை கலர் போனைத் தயாரிக்கும் சீனா கம்பெனி, ரூம் போட்டு யோசித்திருப்பாய்ங்களோ?). போதாத குறைக்கு இந்த போனை சுற்றி டை"மண்டு"கள் வேறு!

சரி சார், கடை முழுதும் கும்பலாய் இருக்கிறதே...ஆளாளுக்கு ஒரு போனை எடுத்து "நோண்டி"க் கொண்டிருக்கிறார்களே...ஒருவர் கூட போனின் அடிப்படை  வேலையான, voice  நன்றாக கேட்குமா...அலைவரிசை துல்லியம் எவ்வளவு என்றெல்லாம் பார்ப்பதாக தெரியவில்லை. அதாவது, ஒரு கல்யாணப் பந்தியில் முழுதும் பரிமாறப்பட்ட இலையில், ஓரத்தில் இருக்கும் ஊறுகாய் போன்றவை நன்றாய் இருக்கிறதா என்று பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நாம் போன் வாங்குகிறோம்...என்ன பைத்தியக்காரனாக இருக்கிறாய்? உனக்கு பழைய காலத்தில் விரல் விட்டு சுழற்றும் சிகப்பு கலர் கறுப்பு கலர் போனே போதுமே உன்னை யார் கடைக்கு போகச்சொன்னது என்கிறீர்களா?

அடப்போங்க சார்... பழைய போனை வைத்து நாம் என்ன சாதித்தோம்? ஆனால் இந்த மொபைல் போனைப் பாருங்கள்...நம் நாட்டுக்குள் புகுந்து பதினைந்து ஆண்டுகள் கூட ஆகவில்லை...ஆனால் அதை வைத்து குருவி என்ற உயிரினத்தையே காலி செய்த நம் சாதனை சாதாரணமானதா?  முன்னெல்லாம் மாலைப்பொழுதில் வானத்தைப் பார்த்தால் கூட்டம் கூட்டமாக பறவையினங்கள் கூடு நோக்கிப் பறக்கும் காட்சி உள்ளத்தை நிறைக்கும். இப்போது வானத்தை பார்க்கவே நமக்கு நேரமில்லை. இதில் கொக்காவது குருவியாவது?

ஊருக்குள் பறவைகளை காலி செய்த மகிழ்ச்சி மட்டும் போதுமா நமக்கு? எனவேதான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். என்ன என்கிறீர்களா? அதான் சார், நாம் உழைத்து உழைத்து களைத்துப் போனால் இப்போது "உல்லாச சுற்றுலா" என்ற பெயரில் இயற்கை வளமிக்க இடங்களுக்குப் போகிறோமே...அங்கெல்லாம் கூட்டம் பின்னியெடுக்கிறதே ...அங்கெல்லாம் சும்மா போக முடியுமா? மொமைல் போன் சகிதமாகத் தானே போகிறோம். போதாத குறைக்கு, வனாந்தரத்தில் சிக்னல் கிடைக்கவில்லை என்று கோபம் வேறு நமக்கு வரும். இன்னும் ஒரு இருபது முப்பது வருடங்களில் மற்ற பறவையினங்களையும் அழித்தால் தானே சார் நமக்கு திருப்தி? அப்புறம் ஒய்யாரமாக உட்கார்ந்து "angry birds" விளையாடி மகிழலாமே? அது போரடித்தால் "angry மயில்" "angry குயில்" என்று விதவிதமாய் விளையாட்டு கண்டுபிடிக்க மாட்டோமா என்ன? உயிருள்ள மயிலையும் குயிலையும் பற்றி கவலைப்பட நமக்கு என்ன பைத்தியமா?

3 comments:

  1. மனுசனுக்கு செல்போன் இருந்துட்டா அப்புறம் வேற என்ன வேண்டும் சார்?

    ReplyDelete
  2. நன்றாக சொல்லியுள்ளீர்கள்!

    ReplyDelete
  3. ஆதங்கம் புரிகிறது... என்ன செய்வது....?

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete