/ கலி காலம்: அன்னா ஹசாரே பின்னால் போகலாமா? பகுதி 2

Friday, July 6, 2012

அன்னா ஹசாரே பின்னால் போகலாமா? பகுதி 2

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, அன்னா ஹசாரே தன் உண்ணாவிரத திட்டங்களை கைவிடுவதற்கு சில "ஆலோசனைகள்" இந்த வாரம் வழங்குவோம்."அவர் எங்கே நீ எங்கே? யார் போய் யாருக்கு ஆலோசனை சொல்வது?" என்கிறீர்களா? என்ன சார் நீங்கள்...நம் நாட்டில் எவர் வேண்டுமானாலும் எவருக்கு வேண்டுமானாலும் ஆலோசனைகளை அள்ளி வீசலாம் சார். ஜனநாயக நாடென்றால் சும்மாவா? தனக்குத் தோன்றியதை பேசுவதும் செய்வதும்தான் ஜனநாயகம் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் புண்ணியத் திருநாட்டில் நாமும் நம் பங்கை செய்யாமல் இருந்தால் எப்படி?

ஆலோசனைகள்:

1. கிரிகெட்டுக்கும் தேசபக்திக்கும் வித்தியாசம் தெரியாத கோமாளிகள் நாம். கிரிகெட்டே தேசபக்தி என்ற கிறுக்குத்தனம் இங்கு தழைத்தோங்கி வருடக்கணக்காகி விட்டது. எனவே, உண்ணாவிரதத்தின் போது இந்தியா பாகிஸ்தான் போட்டி வைத்தால் போயிற்று. நாடே டீவியின் முன் அமர்ந்திருக்க உண்ணாவிரத மைதானம் காத்தாடுமே சார். "i am Anna" என்று குதித்துக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் "sachin is the best" என்று கூப்பாடு போட்டுக் கொண்டு மைதானங்களில் குவிய மாட்டோமா என்ன? இந்த மாதிரி சில முறை நடந்தால், உண்ணாவிரத எண்ணம் ஹசாரேவுக்கு எப்படி வரும் சொல்லுங்கள்?

2.பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் இல்லையா? அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன செய்தி போட்டால் எப்படி விற்கும் என்று தெரியாதா? இப்போது "Jism 2" என்றொரு படம் தயாரிப்பில் இருப்பதாக தினமும் செய்தி வருகிறது. நம் பண்பாட்டை உலகத் தரத்திற்கு உயர்த்தும் படமாம். இந்த "Jism 2" படத்தில் Sunny Leone என்றொரு நடிகை கலைத்தாயின் காலடியில் கிடந்து கலைக்கும் சமூகத்திற்கும் மாபெரும் சேவை புரிந்து வருவதாக ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன. அதோடு நில்லாமல், தினமும், அவரின் கலைச்சேவையை போற்றும்படியான புகைப்படம் வேறு. ...இந்த Sunny Leone படத்தை அரைப்பக்கத்திலும் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத செய்தியை பெட்டிச் செய்தியாக குட்டியாக போடும் கன்றாவி நம் நாட்டில் நிகழாது என்று என்ன உத்திரவாதம்? அப்படி நடந்தால், இப்படியொரு தேசத்திற்காகவா நாம் உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று தோன்றி அன்னா "விழித்துக் கொள்ள" மாட்டாரா?


இந்த "Times Now" சேனலை எடுத்துக் கொள்ளுங்கள்...முதல் உண்ணாவிரதத்தின் போது "Live Telecast" என்று அத்தனை களேபரம் செய்தார்கள். சுருதி சற்று இறங்கி, அடுத்த உண்ணாவிரதம் பொழுது தலைப்பு செய்தியாக மாறியது. மூன்றாவது உண்ணாவிரதம் பிசுபிசுக்கிறது என்று தெரிந்தவுடன், பத்தில் ஒரு செய்தியாக மாறிப்போனது...இதுதான் சார் நாம்.

3.மிக எளிமையான வழி ஒன்று இருக்கிறது. அன்னா ஹசாரேவை தமிழ் நாட்டுக்கு வரவழைப்போம். காவிரி நீர் சிக்கல் துவங்கி இலங்கை தமிழர் வரை, அரை நாள் ஒரு நாள் உண்ணாவிரதத்தின் மூலம் அனைத்து சிக்கல்களையும் தீர்த்ததாக சொல்லித் திரியும் ஆற்றல்மிகு தலைவர்கள் கொண்ட அற்புதத் தமிழ் நாட்டுக்கு அன்னா ஹசாரேயை வரவழைப்போம். உடல் நோகாமல் உண்ணாவிரதம் இருக்கும் "கலை"யை இந்தத் தலைவர்கள் அன்னாவுக்கு சொல்லித் தர மாட்டார்களா என்ன?

4.அன்னாவுக்கு தமிழ் நாட்டுக்கு வர இயலாது என்று வைத்துக் கொள்வோம். பரவாயில்லை சார். எல்லாவற்றுக்கும் வழி தமிழ் நாட்டில் உண்டு. நம் தலைவர்கள் "தபால்" கலையில் சிறந்தவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டுமா? தமிழ் நாட்டின் அனைத்து வகை சிக்கல்களையும் நம் தலைவர்கள் டெல்லிக்கு தபால் மூலம் மட்டுமே தெரிவிக்கிறார்கள்! ஏன் சார், தலைமைச் செயலகம், தலைவர்கள் வீடுகள் இங்கெல்லாம் டெலிபோன் கிடையாதா? அல்லது கடிதம் எழுதுதலே கழகங்களின் பண்பாடா? நல்ல வேளை, "மூவேந்தர்கள் ஆண்ட தமிழ் நாடு" எனவே புறா மூலம் தான் டெல்லிக்கு செய்தி அனுப்புவோம் என்று புறாவின் காலில் கடிதத்தை சுற்றி அனுப்பாமல் விட்டார்களே. நம் பெருந்தலைவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.

இவர்கள் தயவு கூர்ந்து இத்தகைய கடிதம் எழுதும் கலையை அன்னா ஹசாரேவுக்கு (தபால் மூலமே பயிற்சி அளிக்கலாம்) கற்றுத் தந்தால் அவரும் தினமும் டெல்லிக்கு நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் குறித்து கடிதம் எழுதி தள்ளிக் கொண்டே இருக்கலாமே! மன்மோகன் சிங்கும் முன்னேறி விட்டார். அவரும் டெலிபோன் பயன்படுத்துவதில்லை. நேற்று கூட இலங்கை தமிழர் நிலைமை குறித்து பதில் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார் என்று செய்தியில் சொன்னார்கள்.அன்னா ஹசாரேவும் மன்மோகன் சிங்கும் தினமும் கடிதம் எழுதிக் கொண்டால் தொலைக்காட்சிகளுக்கு குஷி தானே! Arnab Goswami "I have a copy of letter from Manmohan Singh dated... " என்று தினமும் இரவு ஒன்பது மணிக்கு கடிதத்தின் நகலை நமக்குக் காட்டுவார். அனைவருக்கும் நன்றாய் பொழுது போகும்...

5. அன்னா ஹசாரே கட்டாயம் மொபைல் போன் வைத்திருப்பார். அவர் Spectrum 2g அலைவரிசையையும் பயன்படுத்தியிருப்பார். எனவே அவருக்கு மறைமுகமாக 2G சம்பந்தம் இருக்கிறது என்று எவரேனும் (அர்த்தமில்லாமல்) வழக்கு போட்டால் போதும். சில மாதங்கள் அந்த பரபரப்பில் உண்ணாவிரதம் உப்புச் சப்பில்லாமல் போகாதா என்ன?

6. நமக்கு கதை கேட்பது என்றால் கரும்பு சாப்பிடுவது போல...அதுவும் ஊர் கதை உலகக் கதை என்றால் உற்சாகத்துக்கு அளவே இல்லையே சார்...ஒவ்வொரு ஊராக "அன்னா ஹசாரே அழைக்கிறார்" என்று "flex board" வைத்து கூட்டம் சேர்த்து, Baba Ramdev, Ravi Shankar போன்றோரிடம் ஹசாரேவுக்கு நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை மேடை போட்டு சுவையாக பேசச் சொல்லலாம். நம் அரசியல்வாதிகளின் காமெடி பேச்சுக்களையே எத்தனை நாள் சார் கேட்பது? போரடிக்காது?

மேற்கூறிய ஆலோசனைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்ளாமல் இருக்கவும், அவரின் உடல்நிலை மோசமாகாமல் இருக்கவும் நாம் வேண்டிக் கொள்வோம்.

2 comments: