/ கலி காலம்: ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 3

Sunday, May 13, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 3

பகல் நேர ரயில் பயணம் என்பது, வீட்டின் விட்டத்தில் இருக்கும் பல்லி நம் மேல் விழுந்து விடுமோ என்று நிலைகொள்ளாமல் அமர்ந்து இருப்பதை போன்றது. அதிலும் மூன்று பேர் அமரும் இருக்கையில் இரண்டு பேருக்கு நடுவில் அமர, ஏவிஎம் சரவணன் எப்போதும் காட்டும் "மரியாதை" pose மட்டுமே கைக்கொடுக்கும். நம்மை பார்ப்பதற்கு கைகட்டி மரியாதையாக உட்கார்ந்திருப்பது போல இருந்தாலும் நடு இருக்கையில் அமர்ந்திருக்கையில் நம் முழங்கைகொண்டு அடுத்தவரை இடிப்பதன் மூலம் நம் இருக்கை பிரதேச எல்லைகளை மெளனமாக கைப்பற்றலாம். மூன்று பேருக்கு இடையில் இந்த  எல்லைச் சிக்கல், பிரயாணம் முழுதும் அடுத்தவர் அறியாதபடி தொடர்ந்து கொண்டிருக்கும். நடுவில் நாம் தெரியாமல் இடித்தது போல் அவ்வபொழுது "sorry" சொல்லிவிட வேண்டும். நாகரீகம் தெரியாதவர்களா சார் நாம்? 

அந்த காலத்தில் "தர்க்க சாஸ்திரம்" என்று ஒன்று உண்டு. அரசனுக்கு பொழுது போக வில்லை என்றால் இந்த தர்க்க சாஸ்திர "நிபுணர்களை" வரவழைத்து வாக்குவாதம் செய்யச் சொல்வார் (அதாவது இருவரை வம்புக்கு இழுத்து வேடிக்கை பார்ப்பார்). இந்த தர்க்க சாஸ்திரம் நம் உதிரத்தில் அப்படியே ஊறி விட்டது போலும். அதனால் தான் நமக்கு வம்பு பேசுவதும், வாய்ச்சண்டை போடுவதும், தேனில் ஊறிய பலா தின்பது போல இனிக்கிறது. ரயில் பெட்டிகளில், இந்தக்கால தர்க சாஸ்திர நிபுணர்கள் எப்போதுடா நமக்கு வேலை வரும் என்று ஆவலுடன் அமர்ந்திருப்பர். சமீபத்தில் சென்னையிலிருந்து பெங்களுருக்கு மதியம் வந்து கொண்டிருந்தேன். சுத்த போர் என்று நினைத்திருந்த வெய்யில் வாட்டிய பயணம், ஆம்பூர் தாண்டியதும் அக்கப்போர் ஆரம்பித்து சுவை கூட்டியது. மூன்று இருக்கை முன்னே இருந்த நபர் ஒருவர் போண்டா உட்கொள்ளத் துவங்கினார். "ஏண்டா நாம் போண்டா வாங்கினோம்..." என்று அவர் அரைமணி நேரத்தில் நொந்து போக போகிறார் என்று அப்போது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.

காற்றடித்தால் கவிழ்ந்து விடும் அபாயமுள்ள கனமற்ற பேப்பர் ப்ளேட்டில் ஆண்டாண்டு காலமாக போண்டா தருகிறது railway catering. ரயிலின் ஆட்டத்திற்கேற்ப ஆறாக ஓடும் சட்னியும் உண்டு. நம் போண்டா நண்பரும் அருகில் அமர்ந்திருந்த நபரும் திடீரென்று எழுந்து நின்றனர். படித்து கொண்டிருந்த, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த  அனைவரும் (ஊரோடு ஒத்து வாழ வேண்டும் இல்லையா? எனவே நானும் சேர்த்தி) ஓசியில் ஒரு சண்டை படம் நமக்காக தயாராகிறது என்ற மகிழ்ச்சியுடன் கண்ணையும் காதையும் தீட்டி கொண்டோம். விஷயம் இதுதான்: போண்டாவுடன் மட்டுமே உறவாட வேண்டிய சட்னி, பக்கத்தில் இருந்தவரின் சட்டை மேல் பற்று கொண்டு விட்டது! விடுவாரா சட்டையின் உரிமையாளர்?

ஓடும் ரயிலின் இரைச்சலில் இது போன்ற சண்டைகளை தெளிவாக காதுக்குள் வாங்குவது லேசுப்பட்ட காரியம் இல்லை. அதற்கென்ன தனி பயிற்சி வேண்டும். எழுந்து நின்று வேடிக்கை பார்ப்பதை decency தடுக்கும். என்ன சண்டை என்ற ஆர்வம் மண்டையை பிளக்கும். பாவம்தானே நாம்? இது போன்ற இரண்டும்கெட்டான் நிலைமை சிலருக்கு இல்லை. அப்படித்தான், கதவருகில் காற்று வாங்க நின்றிருந்த  இருவர், "அங்க ஏதோ சண்டை போல வா போய் பார்க்கலாம்" என்று என்னை கடந்து சென்றனர். நமக்குத்தான் என்னே ஒரு சமூக அக்கறை!  நமக்கெல்லாம், இது போன்று, நேரிடையாக சண்டையை ரசிப்பது கௌரவ குறைச்சல் இல்லையா? எனவே கண்டும் காணாதது போல் சுற்றி நடப்பதை உற்று நோக்க  வேண்டும். நடித்து நடித்து தானே நாம் நாகரீக கனவான்களாக வலம் வருகிறோம் வளமும் பெறுகிறோம் ...என்ன சொல்கிறீர்கள்?

சண்டைக்கான முஸ்தீபுகள் மும்முரமாக இருக்க, பெட்டியின் கடைசியிலிருந்து ஒருவர் "விடுங்கப்பா இன்னும் கொஞ்ச நேரம்... எல்லாரும் அவங்க அவங்க  வேலைய பார்க்கப்போறோம்...இதுக்கெல்லாம் போய் சண்டை போட்டுட்டு..." என்று சொல்லியபடி எழுந்து வந்தார். எப்படி சார் நம் நாட்டில் ஊருக்கு உழைப்பவர்கள் அனைவருமே பேருந்திலோ ரயிலிலோ கடைசி இருக்கையிலிருந்து குரல் கொடுக்கிறார்கள்? இதன் பின்னணி என்ன என்று சரித்திர ஆர்வலர்கள் உற்று நோக்க வேண்டும் அல்லது நமக்குத்தான் கண்டதுக்கு எல்லாம் கமிஷன் வைத்து விசாரிப்பது வழக்கமே...இதற்கும் ஒன்று போட்டால் போயிற்று..."தமிழனை பார்த்தால் worldடே ஏன் நடுங்குது தெரியுமா?" என்று விவேக் ஒரு படத்தில் கேட்பார். அதன் அர்த்தம் அன்று பெட்டியில் இருந்தவர்களுக்கும் முக்கியமாக, அந்த ஊருக்கு நல்லது சொல்லும் உத்தமருக்கும் புரிந்திருக்கும்.உங்களுக்கும் தொடர்ந்து படித்தால் தெரிந்து விடும்...

போண்டாவும் சட்டையும் கோதாவில் இறங்க, அருகில் இருந்தவர்கள் மூல காரணத்தை கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கினர். ஒருவர் "பேப்பர் plate கொஞ்சம் பெரிதாய் தரலாம்" என்றார். "பெரிதாய் தந்தால்  அதற்கும் அதிகம் காசு கேட்பர்" என்றார் மற்றொருவர். "வெறும் போண்டா போதுமே சார் எதுக்கு சட்னி" என்றார் சட்னி எதிரி ஒருவர். "போண்டாவை விட சட்னி நன்றாக இருக்கிறது" என்றார் இன்னொருவர். குறுநில மன்னர்களின் சண்டைகள் போல சிறு சிறு குழுக்களாய் வாக்குவாதம் வகை வகையாய் தொடர்ந்தது. நாம் "main show" status பார்க்கலாம்...ஊருக்கு உழைப்பவரின் கெட்ட  நேரம், அவர் பேச்சில் சனி bench போட்டு உட்கார்ந்திருந்தது போலும்."சட்டைதானே...தோய்த்தால் போய்  விடும்" என்று சனி தன் பணி செய்தது. சட்டைக்கரருக்கு வந்ததே கோவம்..."உங்க  சட்டையிலே விழுந்தா விட்ருவீங்களா" என்று ஆரம்பித்தது அடுத்த ரவுண்டு. காரணகர்த்தாவான  போண்டாகாரரோ இப்போது தனகென்ன  வந்தது என்று "நாணயம் விகடன்" படித்து கொண்டிருந்தார்...(எனக்கெப்படி தெரியும் என்கிறீர்களா? இது போன்ற சண்டைகளின் பொது அவ்வபொழுது வேறு வேலையாக போவது போல் சண்டை நடக்கும் இடத்தைத் தாண்டி சென்று வர வேண்டும் என்பது "பொது"அறிவு இல்லையா?.). பாவம் நம் பரோபகாரி நண்பர். போண்டா சண்டை தீர்க்கப் போய் அல்வா சாப்பிடும் அவல நிலை தோன்றிய  அதிர்ச்சி. நமக்கும்தான். சும்மா விடுமா தமிழ் வீரம்?
இன்னும் சிலர் அல்வாவில் தங்களுக்கும் பங்கு கேட்கும் ஆவலுடன் "என்ன சார்? கொட்டினது அவர். இவரோட  சண்டை போடுறீங்க" என்று நியாயம் உரைக்க, நம் சட்டசபைகளில் நிலவும் "கூச்சலும் குழப்பமும்" இங்கும் உலவியது. இதன் உச்சக்கட்ட காமெடி ஒரு மணி நேரம் கழித்து நடந்தது...குப்பம் station தாண்டியபோது போண்டாவும் சட்டையும் "tomato soup" குடித்தபடி இடைதேர்தலில் captain களமிறங்குவது பற்றி உரையாடல் செய்து கொண்டிருந்தனர். உள்ளம் கொதிக்க,  கடைசி இருக்கைக்காரர் என்ன செய்கிறார் என்று பார்க்கும்  உணர்வு துடிக்க அங்கு சென்றால், "எவனுக்கும் உதவி செய்ய போகக்கூடாது அவனுங்க சேர்ந்து நம்பள நடுவுல மாட்டி விட்ருவாங்க " என்று பக்கத்து மனிதரிடம் பொங்கிக் கொண்டிருந்தார் நம் பொதுநல விரும்பி ....

நான் ரயில் விட்டு இறங்கும் போது, தமிழ் கூறும் நல்லுலகில் நிம்மதியாய் பயணம் செய்ய இரண்டு முடிவுகள் எடுத்தேன்:

(i) நீர்த்தன்மை உள்ளவற்றை ஊர் சேரும் வரை வாங்கக் கூடாது. வாங்கினால், ரயில் ஓடும் லயத்திற்கேற்ப நாம் ஆடும் கலை பயில வேண்டும். 

(ii) கலிகாலத்தில், நீதிக்குரல் எழுப்பினால் பாதிப்புகள் நமக்குத்தான் என்று உணர்ந்து நம் வாயை மூடிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். இல்லையேல் இருக்கவோ இருக்கிறது பாரதத்தின் பரம்பரை பொழுதுபோக்கு - நாடு இருக்கும் அவலம், நீதி நேர்மை போன்றவை காணாமல் போனது என்று பக்கத்தில் இருப்பவருடன் உரையாடி மகிழ்வது - நாம் காந்தி போல நடித்தால் பக்கத்தில் இருப்பவர் காமராஜர் போல் நடிப்பார்; நாம் நேதாஜி போல நடித்தால் அவர் படேல் போல வெடிப்பார்; நன்றாய் பொழுது போகும். இறங்கும் இடம் வந்தவுடன், நீதி, நேர்மை ஆகியவை இன்று குடியிருக்கும்  குப்பைத்தொட்டியில் நம் "யோக்கியன்" நடிப்பையும் வீசிவிட்டு வீட்டுக்கு போய் நம் வேலையை கவனிப்பது நமக்கு கைவந்த கலைதானே...

கக்கன் போன்ற நேர்மையாளரை  கவர்மென்ட் ஆஸ்பத்திரி கட்டாந்தரையில் படுக்க வைத்து வேடிக்கை பார்த்த  பெருமைமிகு நாட்டில் வாழும் நாம்  வேறு எப்படி திரிவோம்?






6 comments:

  1. Thanks for giving the day's laughter.

    Visualised things which i have seen.

    Sridhar

    ReplyDelete
  2. சகோதரர் குமரன்..நல்ல எழுத்து..இயல்பான பேச்சுத்தமிழில் படிக்க,இன்னும் தொடர்ந்து படிக்கும்படியான போர் அடிக்காத எழுத்து...

    நல்லா எழுதுரீங்க..நிதர்சனத்துடன் பொருந்திப்போகும் நிகழ்வுகள்..பல இடங்களில் என்னைப் பொருத்திப்பார்த்து சிரித்துக்கொண்டேன்...:)

    //நாம் காந்தி போல நடித்தால் பக்கத்தில் இருப்பவர் காமராஜர் போல் நடிப்பார்; நாம் நேதாஜி போல நடித்தால் அவர் படேல் போல வெடிப்பார்; நன்றாய் பொழுது போகும். //

    நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது..

    வாழ்த்துக்கள்..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  3. nice article...

    congrats...

    mano

    ReplyDelete
  4. நன்று...வார்த்தை பிரயோகம்...அருமை..

    ReplyDelete
  5. நான் நாலாவது கம்பார்ட்மென்டுல இருந்து இப்பத்தான் சட்னி சண்டை பார்க்க வந்தேன்.

    சும்மா அசத்துறீங்க குமரன்!

    ReplyDelete
  6. அசத்தல்... சண்டையை நேரில் பார்த்த உணர்வு.

    ReplyDelete