/ கலி காலம்: ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 4

Saturday, May 19, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 4

ரயிலும் பேருந்திலும் உட்கார்ந்தபடி தூங்கும் நம்மில் பலர், சித்தர்களின் சீடர்கள் என்பதை நாம் அறிவோமா? "அதிர்ச்சி தரும் தகவலை அள்ளி வீசுகிறானே இவன்" என்று ஆர்வமாக  இருக்கிறதா? மேலும் படியுங்கள்...நம்மில் பலருக்கு பல விஷயங்களிலும் பாதி கிணறு தாண்டுவதுதான் பழக்கம். மீதி கிணறை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் அல்லது வேறு எவரேனும் தாண்டட்டும் என்ற "விவேகம்" நமக்குண்டு.அதுமட்டுமல்ல - கிணற்றின் எந்த பாதியை நாம் தாண்டலாம் என்று சமயோசிதமாக யோசிக்க தெரிந்த கில்லாடிகள் நாம்."என்னய்யா நீ? ரயில் பயணம், கிணறு, சித்தர் என்று சம்பந்த சம்பந்தமில்லாமல் எதையோ எழுதுகிறாய்" என்று கேட்கத் தோன்றுகிறது இல்லையா? சம்பந்தப் படுத்துவோம் வாருங்கள்....

முன் குறிப்பு: தயவு செய்து பின் குறிப்பை இப்போதே படித்து விட்டு மீண்டும் இங்கு வரவும்.

பட்டினத்தார் பற்றி நாம் அறிந்திருப்போம். இவரின் சிஷ்யர் "பத்திரகிரியார்" (பெயர்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப சுருக்கி அழைக்கும் IT / SOFTWARE தலைமுறை, இவரை "Pat" என்று அழைக்காமல் இருக்க  பிராத்திப்போம்.). "மெய்ஞான புலம்பல்" என்ற தலைப்பில் "எக்காலம்?" என்று முடிவது போல் ஏராளமான பாடல்களில் ஞானம் வேண்டி புலம்பியிருக்கிறார்! இவரின் முதல் பாட்டே நம் மூச்சை திணறடிக்கும். "ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டெரித்து தூங்காமல் தூங்கிச்  சுகம் பெறுவது எக்காலம்?" என்று ஆரம்பிக்கிறார் இவர்.

என்ன சார் இது? ஆங்காரம் என்பதே வெளிக்காட்டத்தானே இருக்கிறது? வெளியே காட்டினால்தானே அது ஆங்காரம்...அப்புறம் எதற்கு உள்ளடக்க வேண்டும் என்று நாம் கேட்போம். ஐம்புலனை சுட்டெரிப்பதா? அட போங்க சார்...ஐம்புலனும் ஜம்மென்று இருக்க கலியுகத்தில் எத்தனை கண்டுபிடிப்புகள்? ஒவ்வொரு புலனுக்கும் தீனி போட எத்தனை கூத்துக்கள் ஊரெங்கும் பொங்கி வழிகிறது....புலன்களுக்கு மகிழ்ச்சி ஊட்டி பூரித்து பொழுதை போக்கத்தானே நாம் பிறந்தே இருக்கிறோம்?
ஐம்புலனை சுட்டெரித்து விட்டு நாம் என்ன செய்வது? என்றெல்லாம் நமக்கு கேள்வி கேட்கத் தெரியாதா என்ன? பணத்தினால் பண்பையும் பண்பினால் பணத்தையும் இந்த இரண்டினால் நம் வாழ்வின் பொருளையும் ஒரே நேரத்தில் அசிங்கப்படுத்தும் கோமாளித்தனத்தில் நாம் ஈடுபட்டிருப்பதே புலன்களை மகிழ்விக்கத்தானே? பாதிக்கிணறு, எந்த பாதி என்பதெல்லாம் இப்போது தெளிவாகியிருக்கும்... இனி மிச்சப்பிருப்பது என்ன? - "தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல்". ஒன்றை நமக்குத் தகுந்தபடி வாசிப்பதிலும் யோசிப்பதிலும் நாம் சளைத்தவர்களா என்ன? "தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல்" ஆஹா... சொல்லும் பொழுதே என்னே ஒரு இன்பம்...

முன்னர் சொன்ன சீடர்களான நம் அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம்...பத்திரகிரியார் நம் ஆள் சார்...எப்படி நம் கஷ்டத்தை அந்நாளிலேயே தீர்க்க தரிசனத்துடன் பாடியிருக்கிறார் என்று சிலிர்த்து போய் சீடர்களாகி, இந்த "தூங்காமல் தூங்கி..." வரியை நமக்கேற்றவாறு புரிந்து கொண்டால் போயிற்று...! பயணத்தில் தூங்குபவர்களை கிண்டல் செய்கிறாயா என்று கோபம் கொள்ளாதீர்கள். ரயிலில் அமர்ந்தபடி தூங்குவதற்கு தனி திறமை வேண்டும் என்பதை புரிந்து கொள்வோம்!

முதலில் கால் நீட்ட இடம் வேண்டும். நினைத்தவுடன் நீட்டுவதற்கு எதிர் இருக்கையில் ஒரு ஏமாளி வேண்டும். இல்லையென்றால் அவர் எல்லைக்குள் நாம் அத்து மீறியதற்கு முறைப்பார். இருக்கவே இருக்கிறது "ஆழம் பார்க்காமல் காலை விடாதே" முன்னோர் மொழி. அதன்படி, முதலில் காலை மெதுவாக நகர்த்தி எதிர் இருக்கையின் கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டி பைகளை சாமர்த்தியமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு inch வீதம் வேறு பக்கம் இடம்பெயர வைக்க வேண்டும். "Pothys", "Saravana Stores" பை வகைகள் கவிழாதவாறு நகர்த்திடல் நலம். இப்போது கால் நன்றாகவே நீட்டிக் கொள்ளலாம்.

இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பதுதானே நம் அடுத்த வேலை?அண்டவெளியில் கண்டபடி திரியும் கட்டுக்கடங்காத காலப்ரவாகத்தில்  நமக்கு பிடித்தமான நொடி ஒன்றில் சட்டென்று காலைத் தூக்கி எதிர் இருக்கை மேல் வைத்து விட வேண்டும். மெத்தபடித்த மேதாவி நீங்கள் என்றால் போட்டுக்கொண்டிருக்கும் shoe / செருப்பு கழற்றாமல் இவ்வாறு செய்தால் நீங்கள் நாகரீக படிக்கட்டில் எத்தனையாவது தட்டில் குடி கொண்டிருக்கிறீர்கள் என்பதை சகபயணிகள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இன்னும் சிலர், இது போதாதென்று காலை வேறு ஆட்டி கடுப்பேற்றுவார்கள். 

அரைகுறை படுக்கை "pose" உதவியுடன் அற்புதமாக அமர்ந்தாயிற்று. அடுத்து என்ன? தூங்க வேண்டியதுதான்..."ஏங்க? நாம என்னிக்கு ரயிலில் சும்மா தூங்கியிருக்கோம்" என்ற கேள்வி நம் மனதில் எழும். தூங்கும் போதும் நாம் செய்யும் தொந்தரவுகள் என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

பின் குறிப்பு:

(i)இது போன்ற சாதாரண பதிவுக்கு சித்தர் பாடலை பயன்படுத்த மனசாட்சி உறுத்துகிறது. ஆறேழு வரியேனும் அடிமனதிலிருந்து எழுதினால்தான் சற்றேனும் நிம்மதி கிட்டும். சில புத்தகங்கள் மேலோட்டமாக ருசிக்கும். சில , படித்தால் அறிவுக்கு பசிக்கும். சில, படித்து முடித்து பலகாலம் ஆனாலும் நம்மோடு வசிக்கும். சில , நம்மையே புசிக்கும்...இவற்றையெல்லாம் கடந்து, வருடக்கணக்கில் படித்தாலும் விளங்காமல், ஒவ்வொரு முறை படிக்கையிலும் நம்மை இன்னும் சற்று ஆழத்தில் இறக்கி விடுவது போல்...வாழ்க்கை முழுதும், ஏதோ ஒரு அனுபவத்தில், எதிர்பாராமல் பொருள் விளங்கும் சித்தர் பாடல்கள்தான் எத்தனை எத்தனை....இதற்குள் அடங்காமல் இருக்கும்  பல வரிகள் புரியவே நாம் பல முறை பிறக்க வேண்டியிருக்குமோ? இவர்கள் யார்? எப்படி இத்தகைய சிந்தனைகள் இவர்களுக்குள் தோன்றின? எதை கடைந்து கடைந்து இவர்கள் இப்படிப்பட்ட அமுதம் எடுத்தார்கள்? இவர்கள் இருந்தது தமிழ் நாடு என்று வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.

(ii)"பழனி"க்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் "சித்தன் வாழ்வு" என்று பெயர் இருந்தது. ஊரின் பெயரில் கூட தொன்மங்களை தோய்த்து எடுக்கும் பக்குவம் எத்தனை நாடுகளில் பார்க்க முடியும்? அர்த்தமில்லாமல் ஊரின் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறோமே...ஒரு மாறுதலுக்கு ஏன்  நாம் பழனியை மீண்டும் "சித்தன் வாழ்வு" என்று அழைக்கக்கூடாது? யோசித்து பாருங்கள் எப்படி இருக்குமென்று..."நான் சித்தன் வாழ்வுக்கு சென்று வருகிறேன்" என்போம்....ரயிலும் பேருந்திலும் "டிக்கெட்" எடுப்பவர்கள் "எனக்கு சித்தன் வாழ்வு ஒன்று கொடுங்கள்" என்பார்கள்...நம் பேச்சே ஞானத்துக்கு ஏங்கும் வேண்டுதல் போல இருக்குமே!




2 comments:

  1. சித்தன் பாடல் துவங்கி சித்தன் வாழ்வு வரையா!பாசஞ்சரோ?

    ReplyDelete
  2. நான் என்னமோ பாசஞ்சர்ன்னுதான் முதலில் நினைத்தேன்.ஆனால் கம்பார்ட்டுமென்ட்டு கம்பார்ட்டுமென்டா சுற்றியதில் ரயில் பயணமே என் பக்கத்து சீட்டுல வந்து உட்கார்ந்துகிச்சு!

    எந்த சீட்டு மூலையில் இவ்வளவு நாள் ஒளிஞ்சிகிட்டிருந்தீங்க நீங்க:)

    ReplyDelete