/ கலி காலம்: இதுவும் ஒரு வகை அசிங்கமே...

Sunday, March 3, 2013

இதுவும் ஒரு வகை அசிங்கமே...


பரபரப்பை மட்டுமே மூலதனமாக வைத்து பிழைப்பை வெற்றிகரமாக ஓட்டுவது எப்படி என்று நம் டிவி சேனல்கள் கற்றுத் தேர்ந்து விட்டன. எதையும் விட்டுவைக்காமல் அதில் செயற்கை பரபரப்பைத் திணித்து அவர்கள் போடும் ஆட்டம் பல சமயங்களில் காமெடியாகவும் கவலை தருவதாகவும் இருப்பதை என்னவென்று சொல்வது...

சில நாட்கள் முன்னர் +2 தேர்வுகள் துவங்கின. ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கானோர் எழுதி வரும் தேர்வு தான். ஆனால் அதை வெறும் செய்தியாக சொன்னால் அதில் என்ன சார் சுவாரஸ்யம்? எனவே, அன்று நம் டிவி சேனல்கள், தங்கள் புத்திசாலித்தனத்தில் புகுந்து விளையாட கிடைத்த வாய்ப்பாக +2 தேர்வுகளை பயன்படுத்திக் கொண்டன.

ஒரு பள்ளியின் உள்ளே நம் "சிறப்பு நிருபர்" நின்றிருந்தார். தேர்வு பற்றிய ஆர்வத்துடனும் கவனத்துடனும் போகும் மாணவர்களை மடக்கிப் பிடித்தார் நிருபர். "முதல் நாள் தேர்வு எழுதப்போகும் அனுபவம் எப்படி இருக்கிறது?" என்று கேள்வியை வீச, அதை "செய்தி நிலையத்திற்கு" நேரலை செய்து கொண்டிருந்தார். நமக்கு புத்தி மிகவும் பிசகி விட்டதோ சார்? அது சரி, மாணவர்களை பற்றிய அக்கறை இருந்தால், இவற்றிற்கு பள்ளி உரிமையாளர் (வியாபரம் என்றால், கடை வைத்திருப்பவர்களை உரிமையாளர் என்று தானே அழைக்க முடியும்) சம்மதித்திருப்பாரா? இது போன்று கவனச்சிதறல் செய்வது கோமாளித்தனம் என்று டிவி சேனல் ஆட்களை வெளியில் தள்ளியிருக்க மாட்டார்? சரியா போச்சப்பா...எந்த காலத்தில் இருக்கிறாய் நீ? பள்ளி டிவியில் வந்தால் எத்தனை விளம்பரம்...அது தெரியாமல் மாணவர்களாவது கவனச் சிதறலாவது என்கிறீர்களா? நீங்கள் சொல்வது சரியே!

இந்த நிருபர் கேட்ட கேள்விகள் சிலவற்றை பார்க்கலாம் சார்..."தம்பி எத்தனை நாட்களாக படித்து வருகிறீர்கள்?" இதற்கு சிலர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிருபரையே பார்த்தபடி இருந்தார்கள்...
"ஏன்யா பள்ளி செல்வதே தினமும் படிப்பதற்கு தானே இது என்ன கேள்வி" என்று நினைத்திருப்பார்கள் போலும். இவ்வாறு சிலரிடம் கேட்டது, தேவையான பரபரப்பு கிட்டாததால், தன் புத்தியை கூராக்கிய நிருபர், "தீவிரமாக" என்ற வார்த்தையை அந்த கேள்வியில் சேர்த்தார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவு "emotion" அல்லது "sentiment" கிடைக்கவில்லை. தற்காலத் தலைமுறை நிதானமும் யதார்த்தமுமாக பதிலளித்தது. ஒருவர் வைத்திருந்த திருநீறு பார்த்து "தேர்வு அன்று கோயிலுக்கு போய் விட்டு வருவது பழக்கமா?"  என்றார். ஒரு மாணவியிடம் "டென்ஷனாக" இருக்கிறதா என்று கேட்டார். அவர் நார்மலாக இருக்க, நிருபருக்கு ஏமாற்றமாக போயிற்று. டென்ஷன் ஏற்றுவது தானே தனது வேலை என்று முடிந்த அளவுக்கு கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டும் அந்தப் பெண் அசராமல் இருக்க, அடுத்த பலிகடாவை தேடியது நிருபரின் பார்வை.

அடுத்த வருடம் இன்னும் பயிற்சியுடன் இத்தகைய நிருபர்கள் களமிறங்கி வெளுத்துக் கட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதோடு நாம் நின்று விடமுடியுமா சார்? அவர்களுக்கு உபயோகமான சில டிப்ஸ் கொடுக்கலாம்...

பள்ளிக்குள் நின்றால் போதுமா? தேர்வு அறையிலேயே போய் உட்கார்ந்து விட வேண்டும். "இதுதான் கேள்வித்தாள். இதில் கேள்விகள் எல்லாம் அச்சடிக்கப்பட்டிருக்கும்" என்று நிருபர் ஒரு கேள்வித்தாளை காட்ட, காமெரா அதை zoom செய்யலாம்.அறையில் இருக்கும் பெஞ்சுகளை நிருபர் சுட்டிக் காட்டியபடி "இதில் அமர்ந்து தான் மாணவர்கள் தேர்வு எழுதுவது வழக்கம்" என்று அரிய கருத்து சொல்லி நமக்கு புரிய வைக்கலாம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என்று முக்கிய நகரங்களில் நிருபர்களை நிற்க வைத்து, "அங்கு தேர்வு நிலவரம் எப்படி இருக்கிறது" என்று செய்தியாளர் கேட்க, "மதுரையில பார்த்தீங்கனா காலையிலிருந்தே மாணவ மாணவிகள் கூட்டமாக கூட்டமாக பள்ளிகள் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்..." என்று போர் நிலவரம் போல buildup கொடுக்கலாம்...+2 என்பதை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு என்றும் அழைப்பார்கள் என்று கூடுதல் தகவல் சொல்லி நம்மை புல்லரிக்க வைக்கலாம்...

பறக்கும் படையினர் எவரையேனும் காப்பியடிக்கும் போது பிடித்தால், முக்கிய செய்தியாக "flash news" போட்டுக் கலக்கலாம். அதைவிட, எவ்வாறு பிடிபட்டார் என்பதை "live relay" செய்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை...என்ன...ஒரே ஒரு கவலை..."தேர்வு வரலாற்றில் முதன் முறையாக‌ உங்கள் abcd தொலைக்காட்சியில்..." என்ற அறிவிப்போடு, தேர்வு தினத்திற்கு முன்னரே வினாத்தாளை சேனல்கள் leak செய்து விட்டால்...இன்னும் அது மட்டும்தானே சார் பாக்கி?

2 comments:

  1. ஒன்னும் சொல்வதற்கில்லை... நடந்தாலும் குறிப்பிட்ட அசிங்கம் நடக்கும்... ஏனென்றால் கலி காலம்...

    ReplyDelete