/ கலி காலம்: அட கிறுக்குப் பய புள்ளைகளா...

Sunday, February 17, 2013

அட கிறுக்குப் பய புள்ளைகளா...


பதிவின் தலைப்பு வடிவேலுவிடமிருந்து வாங்கியது. ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள், மனித மந்தையின் நெரிசல் மிகுந்த காலை நேர வாழ்க்கை சந்தையில் நானும் ஒரு ஆடாய் பேருந்தில் சிக்கியிருந்தேன். பேருந்தும் போக்குவரத்து நெரிசலில் ஒரு கல்லூரி வாசலருகே சிக்கியிருந்தது.

ஒரு நாட்டின், சமூகத்தின், சீரழிவை அதன் கல்விக் கூடங்கள் எந்தளவு வியாபர நோக்கில் செயல்படுகின்றன என்பதை வைத்தே நாம் சொல்லி விடலாம் இல்லையா சார்? எப்பொழுது கல்வி நிலையங்களும் மருத்துவமனைகளும் விளம்பரம் செய்யத் துவங்கி விட்டனவோ அப்பொழுதே சீரழிவு துவங்கி விட்டனவே...

அங்கே ஒரு "advertisement banner" கண்ணில் பட்டது. "fall admission" என்ற தலைப்பில் கல்லூரியின் "ஆள் சேர்க்கை" விளம்பரம். ஏன் சார், நம்மூரில் மரங்களையே காணோம்...அப்புறம் ஏது சார் "இலையுதிர்காலம்"? நாம் பார்ப்பதெல்லாம் கடுங்கோடை, கோடை, சற்று வாடை. இந்த மூன்றிலேயே ஆண்டின் அனைத்து பருவங்களும் போய் விடுகின்றன...இந்த லட்சணத்தில் இவர்களுக்கு "fall admission" என்று தலைப்பு வேண்டியிருக்கிறது.

வேறொன்றுமில்லை சார், மேற்கத்திய மோகம் தலைக்கு ஏறினால் இப்படித்தான் நடக்கும். மேலை நாடுகளில் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அதையெல்லாம் நாம் பின்பற்றுகிறோமா? "fall colors" என்று அங்குள்ள தாவரங்களில் அபாரமாக வெளிப்படும் நிறமாற்றத்தை அவர்கள் கொண்டாடினால் அது பொருந்தும். நமக்கேது சார் "fall"? அதுவும் கல்லூரி அட்மிஷனுக்கு!

இப்படித்தான் நாம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த பேருந்து பயணத்திலேயே அதற்கு மற்றொரு உதாரணமும் சொல்லி விடலாம். முன்னரெல்லாம், அழுக்கு படிந்த உடையுடன், குடித்து விட்டு பேருந்தில் எவரேனும் ஏறுவார். அவரின் வாயில் அச்சிலேற்ற முடியாத தரமற்ற வார்த்தைகள் சத்தமாக வரும். அனைவரும் அருவருப்புடன் அவரை பார்த்து ஒதுக்குவர். இப்போது என்ன சார் நடக்கிறது? பள்ளி கல்லூரிகளில் இருக்கும் இளம் மாணவர்கள் வாயிலிருந்து ஆங்கிலத்தில் சரமாரியாக அதே அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள், அவர்கள் பேசும் வரிகளுக்கிடையில் வந்து போகிறது. ஆனால் முன்னர் சொன்னவரை பார்க்கையில் வரும் அருவருப்பு இப்போது வரவேண்டுமே? ஹூஹூம்...ஏனென்றால் இவர்கள் ஆங்கிலத்தில் அல்லவா சொல்கிறார்கள்...நமக்குத்தான் ஆங்கிலத்தில் மலம் என்று சொன்னாலும் மல்கோவா போல இருக்குமே...அருவருப்பின் அளவுகோல்களைக் கூட‌ நம் விருப்பப்படி அசிங்கப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் தானே நாம்?...

ஒரு முறை என்னுடன் ஒரு "டிப்டாப்" ஆசாமி பயணம் செய்தார். மனிதர் பயங்கர பிஸி போலும். போன் மேல் போன் போட்டு, பொது இடத்தில் சத்தமாக பேசி அனைவரையும் எரிச்சலடைய வைத்துக் கொண்டிருந்தார். நாகரீகம் மிகவும் உச்சத்தில் போனால் அப்புறம் இடம் பொருள் ஏவல் எல்லாம் இருக்குமிடம் தெரியாதோ சார்? இருப்பினும் அவரின் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேருந்தே மயங்கிக் கிடப்பது போலத் தெரிந்தது. ஒவ்வொரு வரி இடையிலும் ஒரு வார்த்தை வந்து கொண்டே இருந்தது. பாவம், இயற்கை உபாதை இறக்க வழியின்றி தவிக்கிறார் போலும் அடக்க முடியாமல் வாய்விட்டு சொல்கிறார் என்று முதலில் நினைத்தேன். பிறகு, அது மாட்டிற்கு இயற்கை உபாதை என்று மாறியது. வேறொன்றுமில்லை, "மாட்டுச்சாணம்" "மாட்டுச்சாணம்" என்று அவர் வரிக்கு வரி சொல்லிக் கொண்டிருந்தார். நம் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படாதவை தான். ஆனால் மாடு பேருந்துக்குள் புகுந்து சாணம் போட்டுச் செல்லும் அளவு இன்னும் மோசமாகவில்லையே என்று யோசித்தேன். அப்புறம் தான் சார் தெளிவானேன் இது மாட்டின் கழிவு இல்லை வார்த்தையின் கழிவு என்று...

வார்த்தைகள் மட்டுமல்ல சார், வழக்கமே போலித்தனமாக மாறி விட்டதே...மனைவி சமீபத்தில் ஒரு நாள் மாலை தோசை வாங்கி வரச்சொல்லியிருந்தார். மனைவி சொல்லே மந்திரம் என்ற தந்திரம் தானே வாழ்க்கை எந்திரம் ஓடுவதற்கு வசதியான எண்ணெய்? எனவே மசால் தோசை வேண்டி மாலை பொழுதில் ஒரு ஓட்டலில் நின்றிருந்தேன். கவுண்டரில் "பார்சல்" என்ற வார்த்தைக்கு பதில் "take away" என்று போட்டிருந்தார்கள். இப்போதெல்லாம் இப்படித்தான் சார். எதில் போட்டி போடுகிறோமோ இல்லையோ, மேம்போக்காய் மேலைநாடுகளை காப்பி அடிப்பது தான் நம் வேலை. "பார்சல்" அழித்து "take away" என்று போட்டால் அமெரிக்காவில் அமர்ந்தபடி அரிசி மாவு தின்பது போலத் தோன்றுமோ?

சரி சார். ஊருக்கு உபதேசம் முடிந்தது. இனி நம் விஷயத்திற்கு வருவோம். "take away" என்று சொல்லிப்பார்த்தேன். பார்சல் என்ன சார் பார்சல்? "டேக் அவே" என்று சொன்னால் தித்திக்கிறதே சார்... அது மட்டுமல்ல, ஒரு "கெத்து" இருக்கிறது இல்லையா? கூட்டத்திலிருந்த மற்றொருவர், "2 ஊத்தப்பம் to go" என்று பில்லை நீட்டினார். நானும், கவுண்டரில் இருந்தவரிடம் போட்டேன் சார் ஒரு போடு..."மசால் தோசா டேக் அவே" என்று.

தலைப்பு யாருக்கு என்று இப்போது தெளிவாகி இருக்குமே...நமக்குத்தான்... நமக்கே தான்...!

1 comment: