/ கலி காலம்: காவிரி ‍ - ஏமாளிகளும் கோமாளிகளும்

Thursday, October 18, 2012

காவிரி ‍ - ஏமாளிகளும் கோமாளிகளும்

நேரம் வந்தாச்சு. வருடம் தவறாமல் நடக்கும் காவிரி தமாஷ் இந்த வருடமும் அதே பொலிவுடன் நடைபெற ஏராளமானோர் காமெடி செய்யும் நேரம் வந்தாச்சு. ஏதோ நாம் எல்லாவற்றையும் பக்காவாக செய்வது போல, பக்கத்து மாநிலத்தை மட்டும் குற்றம் சொல்வதை தள்ளி வைத்து விட்டு நம் லட்சணத்தையும் கொஞ்சம் பார்க்கலாம் சார்...

முப்போகம் என்பதெல்லாம் முன்னோர் கதை என்றாகி, இப்போது இயற்கை இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் எவரேனும், தொலைநோக்கில் ஒரு துரும்பையாவது கடந்த முப்பது நாற்பது வருடங்களில் கிள்ளிப் போட்டிருக்கிறார்களா? காமராஜருக்குப் பிறகு நம்மூரில் ஒரு அணை கூட‌ கட்டப்படவில்லை சார். அணைகளை விடுங்கள். தடுப்பணை (check dams) கட்டுவதற்குள்ளேயே நமக்கு தட்டுத் தடுமாறி தலைசுற்றுகிறது.

நல்ல வேளை, இவர்கள் சாலை மற்றும் பாலம் கட்டும் லட்சணம் பார்த்த பின்பு அணை கட்டக் கிளம்பாமல் பேசாமல் இருக்கிறார்களே என்று நிம்மதி அடைய வேண்டியதுதான். சாலை பல்லைக் காட்டினால், மக்கள், தங்கள் தலைவிதி என்று மேடுபள்ளங்களை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டார்கள். அணை பல்லைக் காட்டினால் பல ஊர்கள் காணாமல் விடுமே சார்! அது நேராமல் நம்மை காப்பாற்றும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அநேக வந்தனங்கள்!

ஆழியாரிலிருந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் top slip வனச்சரக அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் மாதிரி வைத்திருக்கிறார்கள். அதீத வசதிகள் ஏதுமற்ற காலத்தில்  மலையை குடைந்து (tunnel) ராட்சஸ குழாய் இறக்கியிருக்கிறார்கள். அதை பராமரிப்பதற்குக் கூட இன்று நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். நம்மூர் தெருவில் சாக்கடைக் குழாய் உடைந்தாலே சரி செய்ய பல நாட்கள் ஆகிறது! என்ன செய்வது சொல்லுங்கள்?

காமராஜரை பற்றி படித்தவையும் கேட்டவையும் நினைவுக்கு வருகிறது சார். அவர் ஆட்சி காலத்தில் எத்தனை புதிய அணைகள் மூலம் எத்தனை அற்புதமான நீர் பாசன திட்டங்களை அறிமுகம் செய்தார் என்று நாம் அறிந்து கொண்டால், கடந்த நாற்பது வருடங்களில் இவர்கள் அனைவரும் எத்தனை காமெடி செய்து (அவர் பெயரைச் சொல்லியே பிழைப்பை ஓட்டும் கட்சியையும் சேர்த்து) தமிழ்நாட்டை எப்படி சீரழித்திருக்கிறார்கள் என்பது புரியும்.

ஆழியார் மட்டுமல்ல, வைகை, மணிமுத்தாறு, சாத்தனூர் என்று எத்தனை அணைகள் காமராஜரால் கட்டப்பட்டன! இதில் மற்றுமொரு நம்ப முடியாத ஆச்சரியம், தன்னை எதிர்த்த பக்தவக்சலத்தையே விவசாய மந்திரியாக ஆக்கி இத்திட்டங்களை செயல்படுத்தியது!

இப்படியிருந்த நாம், எப்படி சார் இப்படி கெட்டுப் போனோம்? காரணம் இருக்கிறது - ‍‍ நாம் நன்றி கெட்ட ஜென்மங்கள். மேற்கூறிய நீர்வளத் திட்டங்கள் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் மக்களின் தேவைகளுக்காகவே உழைத்த காமராஜரை, அவரின் சொந்த ஊரில், அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத ஒருவரை வைத்து தோற்கடித்த அற்பர்கள் அல்லவா நாம்! "தெய்வம் நின்று கொல்லும்" என்பார்கள். தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பது நமக்கு இங்கு தேவை இல்லை. ஆனால், நம் கண் முன்னே, அனைத்தையும் காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது. காலம் நின்று கொல்லும். எனவே தான், காவிரிக்கு கர்நாடகத்திடமும், கிருஷ்ணாவிற்கு ஆந்திராவிடமும், பெரியாருக்கு கேரளாவிடமும் பழியைப் போட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் கட்சிகளை வேடிக்கை பார்க்க வைத்து, என்ன செய்வதென்று தெரியாமல் நம்மை தவிக்க வைத்து, நம் மூலமே தமிழ் நாட்டை  தண்ணீருக்காக ஏங்க‌ வைத்திருக்கிறது காலம்!

பரவாயில்லை விடுங்கள் சார். "கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை" என்றொரு நல்ல பழைய பாட்டு இருக்கிறது. இன்புற கேட்போம் வாருங்கள்!



2 comments:

  1. கலிகாலம் தான்... உண்மையான ஆதங்கங்கள்... முடிவில் நீங்கள் சொல்வது போல் பாட்டு பாட வேண்டியது தான்...

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க

    ReplyDelete