/ கலி காலம்: குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 2

Tuesday, October 2, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 2

அடுத்த விடுமுறை எப்போது? எந்த ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் காலண்டர் தேதிகளை பார்த்துக் கொண்டிருக்கையில் பின்னாலிருந்து குரல் கொடுத்தபடி வந்தார் குத்தானந்தா. "என்ன சிஷ்யா...காந்தி ஜெயந்தி அன்று காலண்டரை பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாய்?" என்றார். "அடுத்த லீவ் எப்போது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். "நல்ல வேளை. நான் கூட, வருடா வருடம் நடக்கும் காவிரி கூத்தை இப்போது காலண்டரிலும் "காவிரி பந்த். அரசு விடுமுறை" என்று போட்டு விட்டார்களோ என்று நினைத்து விட்டேன்." என்றார் கண் சிமிட்டியபடி.

"சாமி, இந்த காவிரி சிக்கல் தீரவே தீராதா?" என்றேன். "நல்ல கேள்வி தம்பி. நம்ம "புரட்சி" "எழுச்சி" பட்டமுள்ள அல்லது பட்டமற்ற நாயகர்கள் மற்றும் கலைச்சேவை செய்யும் தவப்புதல்விகள் அனைவரும் நெய்வேலிக்கு போய் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தால் சிக்கல் தீர்ந்துவிடுமே" என்றார். "சிக்கல் பற்றி பேசினால் நக்கல் அடிக்கிறீர்கள் மக்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?" என்றேன். "அடப்போப்பா, நம்ம எல்லாரும் காவிரி பத்தி உண்மையாகவே கவலைப்பட்டிருந்தா, இந்நேரத்துக்கு என்ன செஞ்சிருப்போம் தெரியுமா?" என்றவர் தொடர்ந்தார்..."நாம தினமும் முப்பது, நாப்பது ரூபாய் கொடுத்து தண்ணீர் can வாங்கறோமே... ஆளாளுக்கு காவிரி பேரைச் சொல்லி அடிக்கிற லூட்டியை வேடிக்கை பார்க்காம, ஒரே ஒரு மாசம் அந்த தண்ணீர் can வாங்க‌ செய்யற‌ செலவை ஒவ்வொரு வீடும் கொடுத்தா, மக்களே நதி நீர் இணைப்பு செய்யலாமே....ஆனா, நம்ம வீட்டுக் குழாய்ல தண்ணி நின்னு போனாத்தானே நமக்கு ரோஷம் வரும். அப்பக்கூட பக்கத்து வீட்டிலும் "தண்ணி வருதா" என்று கேட்டு விட்டு ஆறுதல் அடையறது தானே நமக்கு பழக்கம்" என்றார்.

"ரொம்ப சூடா இருக்கீங்க போல...இந்த வார குத்து சொல்லுங்க" என்றேன்.

"விவசாயத்தை மதிக்காத வெக்கங்கெட்ட நாடு
வாய்கிழிய பேசியே பிடிச்சது பார் கேடு
தண்ணியே பார்க்காம வறண்டு போச்சு காடு
வறுமையின் வயித்திலே ஈரத்துண்டு போடு"

என்று குத்தானந்தா குதித்தார்.

"சாமி, எனக்கு எதுவும் சொல்லத் தெரியலை. ஆனா என்னமோ வருத்தமா இருக்கு. சரி விடுங்க...போன வாரம் ஏதோ நான் செய்யனும்னு சொன்னீங்களே...அதச்சொல்லுங்க" என்றேன். "டேய்,அடுத்த வாரத்திலே இருந்து ஒரு நல்ல தமிழ் இலக்கியத்திலே இருந்து நீ ஏதாவது கொண்டு வந்து விளக்கம் சொல்" என்றார். "சாமி, நல்லாருக்கு. ஆனா இலக்கியம் அப்படினா என்ன?" என்றேன். என்னை மேலும் கீழுமாக பார்த்த குத்தானந்தா,

"படிச்சா பத்திக்கணும்
மனசோட ஒட்டிக்கணும்
மண்டையில‌ ஏத்திக்கணும்
ஆயுசுக்கும் யோசிக்கணும்"

இப்படி இருக்கற எழுத்து தான் இலக்கியம் என்றார். "கிளப்பிட்டீங்க சாமி. இப்படிப்பட்ட சரக்கு தமிழ் முழுக்கக் கொட்டிக் கிடக்கு. நமக்குத் தான் தெரியல" என்றேன். "ஆனா சாமி..." என்று இழுத்த நான், "why this kolaveri பாட்டுக் கூட நிறைய பேருக்கு நீங்க மேல சொன்ன மாதிரியே இருக்குன்னு சொல்றாங்களே...அதுவும் இலக்கியமா?" என்றேன். "கலிகாலம் தம்பி கலிகாலம்"  என்று தலையில் இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்ட‌ குத்தானந்தா, "இன்னிக்கு காந்தி ஜெயந்தி. எப்படியும் குத்தாட்டம் கும்மாளம் என்று அர்த்தமில்லாமல் ஆண்டு முழுவதும் ஓ(ட்)டிக்கொண்டிருக்கும் சேனல்கள் ஏதாவது ஒன்றில், சம்பந்தமில்லாமல் "காந்தி" படம் இன்று போடுவார்கள். அந்தப் படத்துல காந்தி பத்தி Albert Einstein சொன்னதா ஒரு வரி காட்டுவாங்க "Generations to come, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth". நம்ம நாட்டுக்காரங்களுக்கு எதையுமே வெளிநாட்டில் இருந்து யாராவது சொன்னாத்தான் ஏத்துப்பாங்க‌............... பாவம் Einstein. அவர் சொன்னது பலிக்க இருநூறு முன்னூறு வருடங்களாவது ஆகும் அப்படின்னு நம்பியிருப்பார். அவருக்கு இந்தியா பத்தி தெரியல. நாமெல்லாம் யாரு? எப்படி வேகமா வளர்ந்து கிழிக்கிறோம்...அவர் சொன்ன வார்த்தைகளை எவ்வளவு சீக்கரமா எழுபது வருஷத்திலேயே உண்மையாக்கிட்டோம் பார்த்தியா..." என்றபடி டாடா காட்டினார் குத்தானந்தா...




   .

No comments:

Post a Comment