/ கலி காலம்: சாமானியனின் ஒலிம்பிக்ஸ் கனவுகள்...பகுதி 1

Sunday, July 29, 2012

சாமானியனின் ஒலிம்பிக்ஸ் கனவுகள்...பகுதி 1


இந்த ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் போது நம் விளையாட்டுத் துறை மற்றும் பல்வேறு வாரியங்களின் நகைச்சுவை உணர்வு நாட்டு மக்களுக்கு நல்லதொரு பொழுது போக்கைத் தரும். இந்த இரண்டு போட்டிகளுமே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதில் ஏதேனும் ஒன்று மாறி மாறி வந்து இவர்களை காப்பாற்றி விடும்.

எப்படிகாப்பாற்றும்? ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு நிர்வாகக் குழு உண்டு. இதன் தலைவர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பார். ஆசிய விளையாட்டுப் போட்டி வந்தால், "ஆஹா, இது எங்கள் அடுத்த ஒலிம்பிக்ஸுக்கு சரியான பயிற்சி களம்!" என்பார். அடுத்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது, "அடுத்த தலைமுறை வீரர்களுக்கான‌ பயிற்சி களம் இது!" என்பார். இப்படியே மாற்றி மாற்றி அறிக்கை விட்டே அவர் காலத்தை ஓட்ட, வீரர்கள் ஓய்வு பெற்று அவர்களின் பேரன் பேத்திகள் வயதுடையோர் "பயிற்சி" செய்ய ஆரம்பித்து விடுவார்கள். நம்மவர் அப்பொழுதும் அந்தப் பதவியில் இருப்பார் ஏராளமான சொத்துக்கள் மற்றும் மாறாத அதே பேச்சுடன்...!

சீனா போன்ற நாடுகள் 2028 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இப்போதே பயிற்சி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கின்றன. பெருமைமிகு பாரதத் திருநாட்டில், நாளை லண்டன் செல்ல வேண்டிய தடகள வீரர், தனக்கு "shoe" இல்லை என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சரோ, தன் கோடி ரூபாய் காரின் கண்ணாடியை ஜம்பமாக இறக்கி விட்டபடி லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்கங்கள் அள்ளும் என்று பேட்டி கொடுக்கிறார்.
வாழ்க பாரதம்!

சார், சுமார் நாற்பது வருடங்கள் "hockey" என்ற ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டினோம். நம் நாட்டில் ஒரு அற்புத பழக்கம் உண்டு. ஒன்றை அவமானம் செய்ய வேண்டுமென்றால் அதை "தேசிய அடையாளம்" என்று அறிவித்தால் போதும். தானாகவே அது அவமானப்பட்டு விடும். இப்படித்தான் புலி "தேசிய விலங்கு" என்றார்கள். முடிந்த வரை  அதை உண்டு இல்லை என்று ஒருவழி செய்தோம்.. இப்போது ஆயிரம் புலிகளே இருக்கின்றன என்றவுடன் நம் சிந்தனை செம்மல்கள் என்ன செய்யலாம் என்று முழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் ஹாக்கியும்...ஒலிம்பிக்ஸில் எட்டுத் தங்கம் என்று வீராப்பு பேசியே வீணான நாம், 1980 முடிந்தவுடன், "தேசிய விளையாட்டு"க்கு "தேசிய வினை" பிடித்து
சறுக்குகிறது என்று தெரிந்தவுடன் அடுத்து எதை வைத்து காலம் கழிக்கலாம் என்று பார்த்தோம். மாட்டினார் P.T Usha. ஏன் சார், இத்தனை பெரிய தேசத்தில், இரண்டு ஒலிம்பிக்ஸை, எட்டு வருடங்களை இந்த ஒரே ஒருவரின் பெயரைச் சொல்லியே கழித்தோமே...அநியாயமாக இல்லை?

Mohammad Shahid என்றொரு ஹாக்கி வீரர் என்பதுகளில் இந்திய அணியில் இருந்தார். அவரின் stick work கண்கட்டு வித்தை போல் அற்புதமாய் இருக்கும். kapil dev மேல் மட்டுமே கண் வைத்திருந்த நாம், இவரை கவனிக்கவில்லை. நாம் மட்டுமில்லை. ஹாக்கி அமைப்பும் முடிந்த வரை அவமானப்படுத்தியது. பிறகு தன்ராஜ் பிள்ளை வந்தார். கிரிகெட் போல் எங்களையும் கவனியுங்கள் என்று கத்திப் பார்த்தார். விடுவோமா நாம்? நமக்குத் தோதான விளையாட்டைதானே சார் நாம் பார்ப்போம்? கிரிகெட் என்றால் ஒரு பந்துக்கும் மற்றொரு பந்துக்கும் இடையே ஊர் கதை, உலகக் கதை பேசலாம், ஒரு நாள் முழுதும் உட்கார்ந்தே பொழுதை தேய்க்கலாம்...இதுதானே சார் நமக்கு சரி வரும். அதை விடுத்து ஒரு நொடி கூட நிற்காமல் லாவகமாய் பந்தை தட்டிக் கொண்டு போவதும், நமக்கு கண் சிமிட்டக் கூட நேரம் இல்லாமல் ஆட்டம் பறப்பதும் நமக்கு ஒத்து வருமா சார்? அதான் ஹாக்கி மட்டைகளை நாம் பள்ளிகளில் சாக்கில் கட்டி வைத்து விட்டோம். விளையாடுவதை விடுங்கள் சார். யாரேனும் டிவியில் ஹாக்கி போட்டி பார்க்கிறேன் என்று சொன்னால் அவரை "யார் இந்த விசித்திர பிராணி" என்று பார்க்கும் அளவிற்கல்லவா நாம் ஹாக்கியை ஆக்கி வைத்திருக்கிறோம்...

தொடர்வோம்...

பின் குறிப்பு: சிதம்பரத்தின் பேச்சும் ஒலிம்பிக்ஸும் வந்து நம் ஆடையில்லா மனிதன் சொன்ன ஆன்ட்ராய்ட் கதையின் அடுத்த பகுதியை தள்ளிப் போட்டு விட்டது சார்!

1 comment: