/ கலி காலம்: காலம் கெட்டு கெடக்கு...

Sunday, December 7, 2014

காலம் கெட்டு கெடக்கு...

வழக்கமான மாத மளிகை சாமான் வாங்கிட கடைக்கு போயிருந்தேன். அண்ணாச்சி கடையல்ல. அவை அழியத்துவங்கிதான் ஆண்டுகள் பல ஆகி விட்டதே...வர்ணஜாலங்களுடன் வசீகரிக்கும் வணிகவளாகங்கள் தானே திசையெங்கும் கடை பரப்பி நிற்கின்றன...வாழ்க்கையே வணிகமாகி விட்ட பிறகு இத்தகைய வணிக வசீகரங்கள் சமூகத்தை ஈர்ப்பதில் விசித்திரமுமில்லை வியப்புமில்லை. ஊரோடு ஒத்து வாழ் என்று சும்மாவா சொன்னார்கள்? எனவே அதை சாக்கிட்டு நானும் அந்த பல்பொருள் விற்பனை அங்காடியில் மக்கள் திரள் நடுவே "டிராலி" தள்ளியபடி நகர்ந்து கொண்டிருந்தேன்...

கீரை கிழவிகளை ஊரை விட்டு அனுப்பிய பின், அவர்களிடம் பேரம் பேசி வீரம் காட்டிய நடுத்தர வர்க்கத்து சிங்கங்கள் ஒரு கட்டு பத்து ரூபாயெனினும் பாக்கெட்டிலிருப்பதால் பதவிசானது என்றெண்ணி மெளனமாய் அள்ளிப்போடும் கீரைகள் பகுதி தாண்டி தானியங்கள் பிரிவு அருகில் வருகையில் சத்தமும் குழப்பமுமாய் இருந்தது. தெருவாக இருந்தாலும், பளபளப்பு காட்டும் பலமாடி அங்காடியாக இருந்தாலும், ஏதேனும் சத்தம் வந்தாலே சண்டையாக இருக்குமோ என்ற‌ அவல் கிடைக்கக்கூடும் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்கும் இயல்பு நமக்குள் ஊறிப் போன ஒன்றாயிற்றே...என்ன நடக்கிறது என்று கூட்டத்திற்குள் நுழைந்து பார்த்தேன்.

கடை சீருடை அணிந்த‌ ஒரு பெண் சிப்பந்தி சற்றே தலை குனிந்தவாறு நின்றிருந்தார். அவரின் மானேஜர் "சாரி மேடம்" என்று தற்கால "முன்னேற்றம் மற்றும் உரிமை" அடையாளங்களின் நாகரீக நகல் போன்று இருந்த ஒரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தார். "you people are cheating. I should complain " என்று மேனேஜரை விளாசிய அவர் அங்கிருந்து விருட்டென்று விலகிப் போன பின் ஆங்காங்கே பேச்சும் சிரிப்பும் கேட்டது. மேனேஜர் சிப்பந்தியிடம் வந்து, "சரி விடும்மா...கஸ்டமராக இருக்கப்போய் இதெல்லாம் பொறுத்துக்க வேண்டியிருக்கு" என்று சொல்லிச் சென்றார்.

நமக்கு இருப்பு கொள்ளுமா? விஷயம் என்னவென்று தெரியா விட்டால் தலை வெடித்து விடுமே...இன்னும் சிலர் அந்த விஷயத்தை பேசிக்கொண்டு இருந்ததால் தலை தப்பியது. இதான் சார் விஷயம். அந்தப் பெண் அரிசி வாங்க வந்திருக்கிறார். பெரிய பெரிய டின்களில் அரிசியும், அதன் மேல் ஒரு அட்டையில் அதன் வகையின் பெயரையும் எத்தனை வருடம் பழையது என்பதையும் எழுதிச் சொருகியிருப்பார்கள் இல்லையா? அதைப் பார்த்து அந்தப் பெண் "ஒரு வருடம்" என்று எழுதிய "பொண்ணி"யில் தருமாறு சிப்பந்தியிடம் கேட்டிருக்கிறார். அடுத்தவருக்கு உதவலாம் என்று நீங்கள் நினைத்தால் பெரும்பாலும் இன்றைய உலகில் ஆபத்து உங்களுக்குத்தானே? பாவம் சிப்பந்தி. "மூணு வருஷம்" போட்டுருக்கறத எடுத்துக்குங்க பழைய அரிசி" என்றிருக்கிறார். நாகரிக நகலுக்கு பெரும் கோபம் வந்திருக்கிறது. புதுசு இருக்க பழையதை தன்னிடம் தள்ளி விடப் பார்க்கிறார் என்ற கோபம்!
பழைய அரிசிதான் நல்லாயிருக்கும் என்று சிப்பந்தி சொன்னதை ஏமாற்று வேலையாக பார்த்திருக்கிறார் அப்பெண்.

இதில் உச்சக்கட்ட தமாஷ் அருகில் இருந்தவர் அடித்த கமெண்ட்தான். "இப்படித்தான் நம்மூர்ல இப்பெல்லாம் குடும்பம் ஓடுது போல" என்ற முதியவரிடம் பக்கத்தில் இருந்தவர், "ஐயா, வீடுகளிலெல்லாம் சமையல் இன்னும் நடக்குதுன்னு நினைச்சு சந்தோஷப்படுங்க..." என்று சொன்ன போது தலை தாழ்த்தி நின்ற சிப்பந்தி அம்மாவும் சேர்ந்து சிரித்தார். அரிசியை கண்ணால் பார்த்தே அதன் வரலாறு பூகோளத்தை புட்டுப் புட்டு வைக்கும் நம் பாட்டிமார்கள் ஞாபகத்துக்கு வந்தனர். ஒரு வேளை "உரிமை", "முன்னேற்றம்", "சுதந்திரம்" என்பதையெல்லாம் விருப்பம் போல அர்த்தம் பண்ணிக் கொண்டால் கால்கள் தரையில் பாவாமல் இப்படித்தான் அரிசி கதை போல் ஆகுமோ சார்? சிகரம் தொடும் பொருட்டு முன்னேறி மேலேறுவது எல்லாம் சரிதான்...ஆனால் தரையில் நடக்கத் தெரியாது, நடக்க‌ விருப்பமுமில்லை என்றால் சிகரத்தில் ஏறி என்ன பயன்? காலம் கெட்டுத்தான் கெடக்கு சார்...!

1 comment: