/ கலி காலம்: பாரத ரத்னா யாருக்கு?

Saturday, December 7, 2013

பாரத ரத்னா யாருக்கு?

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அறிவித்ததில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் அது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நமக்கு எப்பொழுதுமே எந்த விஷயத்திலுமே இரண்டு எல்லைகள் மட்டுமே தெரியும். ஒன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது இல்லையேல் காலில் போட்டு மிதிப்பது. ஒன்றை ஆராய்ந்து அதற்குரிய இடத்தில் வைப்பது என்பதை பற்றியெல்லாம் நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

முதலில் கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி, அதை ரசிப்பது என்பதை தாண்டி, கிரிகெட்டை தேசப்பற்றுடன் தொடர்புபடுத்தும் முட்டாள்தனத்தை நாம் நன்றாகவே வளர்த்துள்ளோம். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அது இரு நாடுகளின் போர் போல, வடிவேலு பாணியில் சொல்வதானால் "உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளப் படுத்த...", நாமே அதற்கு ஒரு சாயம் அடித்து களேபரப்படுத்துகிறோம். இதனால், கிரிகெட் வீரர்கள் தேசத்தை காப்பாற்றும் மாபெரும் தொண்டாற்றும் கள வீரர்கள் போல சித்தரிக்கப்பட்டு நம் அடிப்படை சிந்தனைகளே சிதிலமடைந்து கிடக்கிறது. இதன் மேல் எழுப்பப்படும் எத்தகைய எண்ணத்திலும் "லாஜிக்" இருக்குமா?

சச்சின் ஒரு மிகச் சிறந்த கிரிகெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை. கிரிகெட் விளையாட்டுக்காகவும், இந்தியா கிரிகெட்டில் பெரும் வெற்றிகள் பெறவும் அவரின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் மகத்தானவை. அவரின் திறமைக்காக இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள விளையாட்டுத் துறைகளின் எத்தனை விருது வழங்கினாலும் தகும். ஆனால், அத்துடன் அந்த வட்டத்தின் எல்லை நின்று விடுகிறது. சமூகத்திற்கும் அவரின் திறமைக்கும் பொழுது போக்கைத் தவிர வேறெந்த நலன் சார்ந்த தொடர்பும் இல்லை. பலர் அவரை "நாட்டின் தூதுவர்" போலச் சித்தரிக்கின்றனர். அதுவும் முழுமையல்ல. முன்னர் ஒரு முறை வெளிநாட்டு கார் ஒன்று அவருக்கு வழங்கப்பட்ட போது அதற்கான வரி செலுத்துதலில் அவர் நழுவிய பொழுது முதன் முதலாக அவரின் "சமூக இருப்பு" பற்றிய நம்பிக்கை சறுக்கியது. அந்த விவகாரத்தை முடிக்க, காரை வேறொருவருக்கு விற்றதில் மேலும் வழுக்கியது...

ராஜ்ய சபா எம்.பி ஆனார். இதுவரை ஏதேனும் பேசியிருக்கிறாரா?
முதலில், ஆண்டு முழுவதும் போட்டிகளில் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்குமே இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டால் அவையில் என்ன பங்களிப்பு நாம் செய்ய முடியும் என்று சிந்தித்திருந்தால், "ஓய்வு பெறுவதற்கு முன் இந்தப் பதவி எனக்குப் பொருந்தாது" என்று சொல்லியிருப்பார். நாம் அவரிடம் உள்ள பொது நேர்மை குறித்து கொண்டாடியிருப்போம்.

இவர் சில வருடங்களாக ரன்கள் எடுக்கத் திணறிய போது விமர்சனங்கள் எழுந்தன. அப்பொழுது அவர் "எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று நான் தான் முடிவு செய்வேன்" என்றார். சற்றே நிதானம் இழந்தது போலத்தான் இருந்தது. நல்ல வேளை, மேலும் ஏதேனும் அவர் பேசி தன் மதிப்பை மேலும் இழப்பதற்கு முன், பல ஆண்டுகள் அவரின் பங்களிப்பை கருத்தில் கொண்டு காலம் அவருக்கு நூறாவது சதத்தை வழங்கியது. இல்லையேல் நம் கிரிகெட் வாரியம் ஏதேனும் செய்து ஆப்கானிஸ்தானுக்கு கூட "டெஸ்ட் ஸ்டேட்டஸ்" வாங்கிக் கொடுத்து அங்கு சச்சினுக்கு போட்டி ஏற்பாடு செய்து சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கும் என்பது வேறு விஷயம்!

இன்றைய கால கட்டத்தில் "மனிதர்களை" பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இதில் "மாமனிதர்" ஒருவரை எளிதில் பார்க்க முடியுமா என்ன? "பாரத ரத்னா என்பது மிகப்பெரிய விருது. நான் சமூகத்திற்கு அத்தகைய பங்களிப்பு செய்யவில்லை என்று நினைக்கிறேன்" என்று அவர் விருதை நிராகரித்திருந்தால் அவர் மாமனிதர் ஆகியிருப்பார்.

நம்மால் நிதானமாக, கூறு கூறாக எதையும் ஆய்ந்து அதன் பல்வேறு பக்கங்களைப் பிரித்து பார்க்க முடியவில்லை. கிரிகெட்டை தேசபக்தியாக நினைக்கும் முட்டாள்தனம் நம்மிடம் இருக்கும் வரை, இது போன்ற பொருத்தமற்ற செயல்கள் நாட்டில் நடந்து கொண்டேதான் இருக்கும். நல்ல வேளை சச்சின், மைதானத்திலும் வெளியிலும் தனது துறை சார்ந்த ஒழுக்கத்தில் சிற‌ப்பாக நடந்து கொண்டிருக்கிறார் என்று நாம் நிம்மதி அடைய வேண்டியதுதான்.
ஏனென்றால், இப்பொழுது புதிதாக் கிளம்பியிருக்கும் விராட் கோலி என்னும் வீரர் ரன்களாக வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார். ரசிக வர்க்கம் அவரை தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறது. அவர் சென்ற ஆண்டு, புகழ் பெறத் துவங்கும் பொழுதே அதன் போதை தலையில் ஏறி, பல கோடி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு போட்டியின் போதே அச்சில் ஏற்ற முடியாத அநாகரீக செய்கை செய்து நம்மை தலை குனிய வைத்தார். அதெல்லாம் நமக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது. ஒரு சிக்ஸ்ர் அடித்தாலே அனைத்தும் மறைந்தோடி விடுமே...எனவே எதுவும் நம் நாட்டில் நடக்கும். அவருக்கும் பல ஆண்டுகள் கழித்து பாரத ரத்னா விருது வழங்கினாலும் வழங்குவோம். ஏனென்றால் நமக்கு கிரிகெட் என்றால் தேசபக்தி. வேறெதுவும் யோசிக்கவும் தேவையில்லை யோசனைக்கும் வாராது!தகுதியற்றவர்கள் விருது பெறுவதும் தகுதியுள்ளவர்கள் அங்கீகாரம் இன்றி இருப்பதும் நம் நாட்டில் புதிய விஷயமா என்ன?




2 comments:

  1. யார் யாருக்கோ கொடுக்குறீங்க எனக்கு ஒன்னு குடுங்கப்பா...

    ReplyDelete
  2. this is crap. if sachin cant get who should get?

    ReplyDelete