/ கலி காலம்

Sunday, July 29, 2012

சாமானியனின் ஒலிம்பிக்ஸ் கனவுகள்...பகுதி 1


இந்த ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் போது நம் விளையாட்டுத் துறை மற்றும் பல்வேறு வாரியங்களின் நகைச்சுவை உணர்வு நாட்டு மக்களுக்கு நல்லதொரு பொழுது போக்கைத் தரும். இந்த இரண்டு போட்டிகளுமே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதில் ஏதேனும் ஒன்று மாறி மாறி வந்து இவர்களை காப்பாற்றி விடும்.

எப்படிகாப்பாற்றும்? ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு நிர்வாகக் குழு உண்டு. இதன் தலைவர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பார். ஆசிய விளையாட்டுப் போட்டி வந்தால், "ஆஹா, இது எங்கள் அடுத்த ஒலிம்பிக்ஸுக்கு சரியான பயிற்சி களம்!" என்பார். அடுத்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது, "அடுத்த தலைமுறை வீரர்களுக்கான‌ பயிற்சி களம் இது!" என்பார். இப்படியே மாற்றி மாற்றி அறிக்கை விட்டே அவர் காலத்தை ஓட்ட, வீரர்கள் ஓய்வு பெற்று அவர்களின் பேரன் பேத்திகள் வயதுடையோர் "பயிற்சி" செய்ய ஆரம்பித்து விடுவார்கள். நம்மவர் அப்பொழுதும் அந்தப் பதவியில் இருப்பார் ஏராளமான சொத்துக்கள் மற்றும் மாறாத அதே பேச்சுடன்...!

சீனா போன்ற நாடுகள் 2028 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இப்போதே பயிற்சி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கின்றன. பெருமைமிகு பாரதத் திருநாட்டில், நாளை லண்டன் செல்ல வேண்டிய தடகள வீரர், தனக்கு "shoe" இல்லை என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சரோ, தன் கோடி ரூபாய் காரின் கண்ணாடியை ஜம்பமாக இறக்கி விட்டபடி லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்கங்கள் அள்ளும் என்று பேட்டி கொடுக்கிறார்.
வாழ்க பாரதம்!

சார், சுமார் நாற்பது வருடங்கள் "hockey" என்ற ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டினோம். நம் நாட்டில் ஒரு அற்புத பழக்கம் உண்டு. ஒன்றை அவமானம் செய்ய வேண்டுமென்றால் அதை "தேசிய அடையாளம்" என்று அறிவித்தால் போதும். தானாகவே அது அவமானப்பட்டு விடும். இப்படித்தான் புலி "தேசிய விலங்கு" என்றார்கள். முடிந்த வரை  அதை உண்டு இல்லை என்று ஒருவழி செய்தோம்.. இப்போது ஆயிரம் புலிகளே இருக்கின்றன என்றவுடன் நம் சிந்தனை செம்மல்கள் என்ன செய்யலாம் என்று முழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் ஹாக்கியும்...ஒலிம்பிக்ஸில் எட்டுத் தங்கம் என்று வீராப்பு பேசியே வீணான நாம், 1980 முடிந்தவுடன், "தேசிய விளையாட்டு"க்கு "தேசிய வினை" பிடித்து
சறுக்குகிறது என்று தெரிந்தவுடன் அடுத்து எதை வைத்து காலம் கழிக்கலாம் என்று பார்த்தோம். மாட்டினார் P.T Usha. ஏன் சார், இத்தனை பெரிய தேசத்தில், இரண்டு ஒலிம்பிக்ஸை, எட்டு வருடங்களை இந்த ஒரே ஒருவரின் பெயரைச் சொல்லியே கழித்தோமே...அநியாயமாக இல்லை?

Mohammad Shahid என்றொரு ஹாக்கி வீரர் என்பதுகளில் இந்திய அணியில் இருந்தார். அவரின் stick work கண்கட்டு வித்தை போல் அற்புதமாய் இருக்கும். kapil dev மேல் மட்டுமே கண் வைத்திருந்த நாம், இவரை கவனிக்கவில்லை. நாம் மட்டுமில்லை. ஹாக்கி அமைப்பும் முடிந்த வரை அவமானப்படுத்தியது. பிறகு தன்ராஜ் பிள்ளை வந்தார். கிரிகெட் போல் எங்களையும் கவனியுங்கள் என்று கத்திப் பார்த்தார். விடுவோமா நாம்? நமக்குத் தோதான விளையாட்டைதானே சார் நாம் பார்ப்போம்? கிரிகெட் என்றால் ஒரு பந்துக்கும் மற்றொரு பந்துக்கும் இடையே ஊர் கதை, உலகக் கதை பேசலாம், ஒரு நாள் முழுதும் உட்கார்ந்தே பொழுதை தேய்க்கலாம்...இதுதானே சார் நமக்கு சரி வரும். அதை விடுத்து ஒரு நொடி கூட நிற்காமல் லாவகமாய் பந்தை தட்டிக் கொண்டு போவதும், நமக்கு கண் சிமிட்டக் கூட நேரம் இல்லாமல் ஆட்டம் பறப்பதும் நமக்கு ஒத்து வருமா சார்? அதான் ஹாக்கி மட்டைகளை நாம் பள்ளிகளில் சாக்கில் கட்டி வைத்து விட்டோம். விளையாடுவதை விடுங்கள் சார். யாரேனும் டிவியில் ஹாக்கி போட்டி பார்க்கிறேன் என்று சொன்னால் அவரை "யார் இந்த விசித்திர பிராணி" என்று பார்க்கும் அளவிற்கல்லவா நாம் ஹாக்கியை ஆக்கி வைத்திருக்கிறோம்...

தொடர்வோம்...

பின் குறிப்பு: சிதம்பரத்தின் பேச்சும் ஒலிம்பிக்ஸும் வந்து நம் ஆடையில்லா மனிதன் சொன்ன ஆன்ட்ராய்ட் கதையின் அடுத்த பகுதியை தள்ளிப் போட்டு விட்டது சார்!

Saturday, July 21, 2012

பால் ஐஸ் சாப்பிடுவாரா ப.சிதம்பரம்?

சிறுவயதில் தொலைக்காட்சியில் சிதம்பரத்தை பார்க்கும் பொழுது அவரின் நடையின் பொலிவும் பேச்சின் தெளிவும் பார்த்து, இவர் உண்மையிலேயே நாட்டுக்காக உழைப்பதற்கு மந்திரியானவர் போலும் என்று எண்ணியிருக்கிறேன். நாம் எவரை அதிகம் நம்புகிறோமோ அவர்களிடம் அதிகம் ஏமாறுவதுதானே சார் உலக வழக்கம். இதிலும் அப்படித்தான். சில வருடங்களாகவே சிதம்பரம் "படிப்படியாக‌ இறங்கி" வருகிறார். உங்கள் வேகம் போதாது என்று எவரேனும் இவரிடம் சொல்லியிருப்பார்கள் போலும். சமீப காலமாக இரண்டு இரண்டு படிகளாக தாவித் தாவி "இறங்க" முயற்சி செய்கிறார். அவரின் பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கின்றன.

அதான் சமீப காலமாக இவர் வாயைத் திறந்தாலே என்ன பேசப் போகிறாரோ என்று பயமாக இருக்கிறது. சில மாதங்கள் முன்னர் ஊழல் பற்றிய முக்கியமான கேள்விக்கு, "எனக்கு மறதி அதிகம்" என்றார். மக்களுக்கு மறதி அதிகம் என்று தெரிந்துதானே இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார்கள், பிறகு தங்கள் வசதிக்கேற்ப மாற்றி சொல்லிக் கொள்ளலாமே...
மறதி அதிகமாக இருப்பவர் கையிலா நம் தேசத்தின் முக்கியமான பொறுப்புகளை கொடுத்து வைத்திருக்கிறோம்? சரி விடுங்கள். போன மாதம், தான் election வழக்கில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆன போது, தனக்கே வெற்றி என்றார். என்ன சார் இது? தான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனால் தனக்கு வெற்றி என்று சொல்வதை மூளைக்குள் எப்படி விட்டுப் பார்த்தாலும் logic உதைக்கிறதே...சரி இதையும் விடுங்கள். சென்ற வாரம் இவரின் அறிவு ஊற்றில் பெருகி வழிந்த சிந்தனை ஆற்றில் சராசரி மக்கள் மூச்சு முட்டியல்லவா போனார்கள்?



சிதம்பரம் என்ன சொல்கிறார்? மக்களே, நாளும் பொழுதும் இருபது ரூபாய் கொடுத்து ice cream சாப்பிடுகிறீர்களே, அரிசி விலை ஒரு ரூபாய் ஏறினால் ஏன் கூப்பாடு போடுகிறீர்கள் என்கிறார். இதற்கு எதிர்ப்பு வந்த பின் அவர் தந்த பின் விளக்கம் அதை விட அற்புதம். இந்த விலையேற்றம் செய்வதே விவசாயிகள் வாழ்வை உயர்த்தத்தானாம்...நல்ல வேளை நம் ஊரில் காது குத்தும் பழக்கம் இன்னும் இருக்கிறது. விவசாயிகள் வாழ்வா? நாற்பது ஆண்டு காலத்தில் நதிகளை தேசியமயமாக்கவும், இணைப்பு செய்யவும் ஒரு கல்லை கூட நகர்த்தாத  இவர் சார்ந்திருக்கும் அரசு, விவசாயம் பற்றி பேசுகிறது! உணவு கோடவுனில் லட்சக்கணக்கான தானியங்கள் வீண் செய்தாலும் செய்வோம். இலவசமாக ஏழைகளுக்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிய இவர் சார்ந்திருக்கும் அரசு விவசாயிகளின் ஏற்றம் பற்றி பேசுகிறது! சபாஷ் போடுவோம் சார்.

மினரல் வாட்டர் விலை கொடுத்து வாங்கி குடிக்கத் தெரிகிறதே என்கிறார்...அய்யா சிதம்பரம் அவர்களே, நாங்களா மினரல் வாட்டர் குடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டா வளர்ந்தோம்? தேசத்தின் குறுக்கும் நெடுக்கும் உள்ள ஆறுகளில் மண் அள்ளப்படுவதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் அரசுகள், நாடு வளர்கிறது என்ற பெயரில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சொகுசு கட்டடங்கள் கட்ட ஊக்குவிக்கும் அரசுகள், முறையான கழிவு நீரேற்றுத் திட்டம் போடக்கூடத் தெரியாத அரசுகளினால் குடி நீரில் கலக்கும் கழிவு, எந்த தொழிற்சாலையும் எந்த ஆற்றிலும் எதையும் கலக்கலாம் என்ற உங்கள் அரசின் பெருந்தன்மை இதெல்லாம் சேர்ந்து வீட்டில் குழாய் நீர் இன்றி எங்களை பாட்டில் நீர் குடிக்க வைத்திருக்கிறது திரு சிதம்பரம் அவர்களே...

இருபது வருடங்கள் முன்பு வரை, நம் தெருக்களில் மதிய வேளையில் "ஐஸ் பால் ஐஸ்" என்று கூவிக்கொண்டே "டப் டப்" என்று ஐஸ் பெட்டி மூடியை திறந்து மூடியபடி வண்டியை தள்ளிக் கொண்டு வருவாரே...அந்த பால் ஐஸ் தான் நம் நாட்டில் கோடிக் கணக்கான பேர் அறிந்த "ice cream". கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான குப்பன்களும் சுப்பன்களும் குளுகுளு அறையில் அமர்ந்தபடி ice cream சாப்பிடுவதில்லை. இருபது ரூபாய் இ சாப்பிடுகிறீர்களே என்கிறார் நம் நாட்டின் மூத்த அமைச்சர்!

சரி, இவர் சொல்லும் வாதத்தையே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் வசதி படைத்தவர்களுக்கு அதிக‌ விலை ஏழைகளுக்கு குறைந்த‌ விலை என்றல்லவா சொல்ல வேண்டும். அப்படி இவர் சொல்லவில்லையே? என்ன வேண்டுமானாலும் பேசலாம் பிறகு எப்படி வேண்டுமானாலும் விளக்கம் சொல்லலாம் என்று இருக்கும் நாட்டில் இவர் இத்தோடு விட்டாரே என்று நிம்மதியாக போக வேண்டியதுதான்.


இல்லையென்றால்,

"தினமும் காபி குடிக்காமலா இருக்கிறீர்கள்? பால் விலை உயர்ந்தால் மட்டும் ஏன் பொங்குகிறீர்கள்" என்று இவர் கேட்டாலும் கேட்பார்.

"தெருவில் வடை கடைகளில் எப்போதும் கூட்டமாக இருக்கிறதே...பஜ்ஜி வடை சாப்பிடத் தெரிகிறது எண்ணெய் விலை ஏறினால் எதற்கு கேள்வி கேட்கிறீர்" என்று இவர் கேட்கலாம்.

"எல்லோரும் மாட்டு வண்டியிலா போகிறீர்கள்? ஏதோ ஒரு வாகனத்தில் தானே போகிறீர்கள். பெட்ரோல் டீசல் விலை உயரத்தானே செய்யும்?" எனலாம்.

தான் பேசியது தவறு, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது என்பதை சிதம்பரத்திற்கு எப்படி புரிய வைக்கலாம்? அன்பால் அரவணைப்பது தான் தமிழர் பண்பாடு. எனவே இவரின் தொகுதி மக்கள் அடுத்த தேர்தல் முடிந்தபின் ஐந்து வருடங்கள் இவரை சிவகங்கையிலேயே வைத்துப் பார்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு பால் ஐஸ் மற்றும் மினரல் வாட்டர் கேன் கொடுத்து உபசரிக்கலாம். ஓய்வாக‌ வீட்டில் அமர்ந்து இவர் யோசிக்கையில், தான் பேசியது தவறு என்று தோன்றாமல் போய் விடுமா என்ன?

ஒரு மிகப்பெரிய நாட்டின் மூத்த அமைச்சர், உலகமே பார்க்கும் தொலைக்காட்சியில் இவ்வளவு பக்குவமின்றி பேசுகிறார் என்றால், இவர்கள் நான்கு சுவர்களுக்குள் நடத்தும் மந்திரி சபை கூட்டங்களில் எப்படியெல்லாம் பேசுவார்கள்? "முகமது பின் துக்ளக்" படத்தில் சோ நடத்தும் மந்திரிசபையை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட மாட்டார்கள்?

Saturday, July 14, 2012

ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 1



ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்றார்கள் நம் முன்னோர்கள். இப்போதோ, ஆள் பாதி Android மீதி என்று ஆகி, காலைக்கடன் தவிர மற்ற அனைத்து "கடன்"களையும் mobile போனிலேயே செய்யக் கூடிய நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஊரே வடக்கு பக்கம் போகும் போது நாம் வராண்டாவில் உட்கார்ந்து வானத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? பழமொழிகள் எல்லாம் எதற்கு இருக்கின்றன? நமக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளத் தானே? எனவே "ஊரோடு ஒத்து வாழ்" என் உதவிக்கு வர, நானும் "latest" android mobile ஒன்றை வாங்க முடிவு செய்தேன்.

முன்னரெல்லாம் தள்ளுவண்டியில் பேரிச்சம்பழத்தை மலை போல் குவித்து கூவி விற்பார்கள். கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் மொமைல் சந்தையும் இருக்கிறது. ஆனால் நாம் ரோட்டில் விற்கும் பொருட்களை வாங்குவோமா? எனவேதான் மொமைல் கம்பெனிகள் குளுகுளு கடையில் புன்னகை பொருந்திய விற்பனை பிரதிநிதிகளின் புழுகு மூட்டைகளுடன்ன் ஒன்றுக்கு பத்தாய் விலை சொல்லி விற்கிறது. அதில் ஒன்றை வாங்கி கையில் வைத்துக்கொண்டே திரிந்தால் தானே நமக்கு ஒரு கெத்து?

பல் குத்தும் குச்சியில் கூட "brand" பார்த்து வாங்கும் இன்றைய காலத்தில் ஏதோ ஒரு மொபைலை வாங்கி விட முடியுமா? ஆராய்ச்சி தேவைபடுகிறது sir ஆராய்ச்சி!.முதலில் நாம் வாங்க வேண்டிய பொருளுக்கு சந்தையில் உள்ள‌ "brands" பற்றி ஊரில் என்ன பேச்சு உலவுகிறது என்று கண்ணையும் காதையும் தீட்டி வைத்துக் கொண்டு சில நாட்களோ வாரங்களோ கழிக்க வேண்டும்.

"Phone for humans" என்றொரு mobile phone விளம்பரம் வருகிறது. அதாவது "நீ மனுசனா இருந்தா இந்த போன் வாங்கு" என்பதை நாசூக்காக சொல்கிறார்களாம். கூடவே ஒரு டம்பளரில் தண்ணீர் வைத்துக் கொண்டே இதைப் பார்ப்பது நலம். இதன் விலை கேட்டால் "மனுசனுக்கு" விக்கல் வருவது நிச்சயம். நாற்பதாயிரம் ரூபாயாம். ந‌ம் மன்மோகன் சிங்கின் பொய் கணக்கு படி பார்த்தால் கூட, வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் நான்கு குடும்பங்களின் ஆண்டு வருமானம் இது. எப்படி இப்படிப்பட்ட விலையில் போன் விற்கிறார்கள்? இந்த விலையில் போன் வாங்கினால் நம் வாழ்க்கை சாமியார் பூனை வளர்த்த கதை ஆகி விடாதா சார்? இந்த போனை வைத்து கொண்டு பஸ்ஸில் போக முடியுமா? கார் வேண்டியிருக்கும். ரயிலில் போக முடியுமா? கொஞ்சம் அசந்தால் நம்மூர் ரயில்களில் நம்மையே அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்...போனை விடுவார்களா? எனவே விமானத்தில் தான் போக வேண்டும். போன் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்தே ஏதேனும் "mobile phone syndrome" ஏதேனும் வந்தாலும் வந்து விடும். எனவே இந்த "மனுசனா இருந்தா இந்த போனை வாங்கு" விளம்பரம் பார்க்கும் போது பூனை "மியாவ் மியாவ்" என்று காதில் கத்துகிறது. ஒரு சிக்கல் பெரிதாகிக் கொண்டே வந்தால் உடனே பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு மன்மோகன் சிங் ஏற்பாடு செய்து விளக்கம் சொல்வது வழக்கம். அது போல் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து, "பாருங்கள் பத்திரிகையாளர்களே, எங்கள் அரசின் வறுமை கோடு விளக்கத்தை விமர்சித்தீர்களே...நம் நாட்டில் எத்தனை நாற்பதாயிரம் போன்கள் விற்கின்றன பாருங்கள் இன்னுமா நாட்டில் ஏழைகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்" என்று கேட்டால் நாம் வாயை மட்டுமா மூடிக்கொள்வோம்? ஒன்பது வாசல்களும் தானே மூடிக்கொள்ளாதா என்ன?

Android phone வாங்கும் திட்டத்தை செயல்படுத்த காத்திருந்த ஒரு நாள், busஸில் செல்லும் பொழுது ஒரு இளைஞர் கூட்டம் ஏறியது. அவர்கள் பேச்சில் "ginger bread வந்து மாதக்கணக்காச்சு,  ice cream sandwich வர இவ்வளவு தாமதமாகும் என்று நினைக்கவில்லை. எவ்வளவு பேர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்" என்று காதில் விழுந்தது. ஆஹா! நம் இளைஞர்கள் சுயநலம் மிக்கவர்கள், சமூக நலன் பற்றிய அக்கறை குறைவு என்று யார் சொன்னது என்று எனக்குள் ஆத்திரம் பொங்கியது. எத்தியோப்பியாவில் ரொட்டி கூட கிடைக்காமல் அன்னிய நாடுகளின் உதவிக்காக உணவின்றி காத்திருக்கும் மக்களைப் பற்றித் தான் இந்த இளைஞர் கூட்டம் அக்கறை காட்டுகிறதோ என்று நினைத்து அவர்களை உச்சி முகர நினைத்து எழுந்தேன். உள்மனம் என்னை இரண்டு உதை விட்டு "பேசாமல் கிட. அவர்கள் android latest version ice cream sandwich பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று அமர வைத்தது. நல்ல வேளை. நாடு அதன் போக்கில்தான் இருக்கிறது என்ற நிம்மதியுடன் பயணத்தை தொடர்ந்தேன்...

நானும் ஆன்ட்ராய்ட் சமூகத்தின் அங்கத்தினன் ஆகப் போகிறேன் என்பதை கேள்விப்பட்ட நண்பன், "tablet" வாங்கு என்றான். எனக்கோ இந்த tablet விளம்பரங்கள் பார்க்கும் பொழுது ஒரே கவலையாக இருக்கும். உலகம் போகும் போக்கில், ஏதேனும் ஒரு "காந்தக் கண்ணழகி" தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றி, "இன்னும் நீங்கள் சாப்பாடா சாப்பிடுகிறீர்கள்...தினமும் ஒரு மணி நேரம் சாப்பாட்டில் வீணடிக்கலாமா? எப்படி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்? இந்த tablet வாங்கினீர்கள் என்றால் சாப்பிடத் தேவையில்லை. tabletடே உங்களை நாள் முழுதும் தேவையான energy கொடுத்து சார்ஜ் செய்து விடும்" என்று ஏதேனும் சொல்லித் தொலைத்தால் நாம் சும்மா இருப்போமா? வாங்கி விடுவோமே...நல்ல வேளை, விஞ்ஞானம் அந்தளவு இன்னும் வளரவில்லை போலும். தப்பித்தோம். இப்போது வரைக்கும் tablet அதன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது நாம் செய்த புண்ணியம்.

ஒரு வழியாக சில phone மாடல்களையும் brandகளையும் மனதில் நிறுத்தி கடைக்கு கிளம்பினோம். இது நாள் வரை "விரல் நுனியில் உலகம்" என்ற android வலையிலிருந்து தப்பித்திருந்த ஆடு, தன் தலையில் தானே மஞ்சள் தண்ணியை ஊற்றியபடி mobile phone கடைக்குள் நுழைவதை மகிழ்ச்சியுடன் பார்த்தபடி உடன் வந்தார் மனைவி. கடையில் கண்ட கதைகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

Friday, July 6, 2012

அன்னா ஹசாரே பின்னால் போகலாமா? பகுதி 2

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, அன்னா ஹசாரே தன் உண்ணாவிரத திட்டங்களை கைவிடுவதற்கு சில "ஆலோசனைகள்" இந்த வாரம் வழங்குவோம்."அவர் எங்கே நீ எங்கே? யார் போய் யாருக்கு ஆலோசனை சொல்வது?" என்கிறீர்களா? என்ன சார் நீங்கள்...நம் நாட்டில் எவர் வேண்டுமானாலும் எவருக்கு வேண்டுமானாலும் ஆலோசனைகளை அள்ளி வீசலாம் சார். ஜனநாயக நாடென்றால் சும்மாவா? தனக்குத் தோன்றியதை பேசுவதும் செய்வதும்தான் ஜனநாயகம் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் புண்ணியத் திருநாட்டில் நாமும் நம் பங்கை செய்யாமல் இருந்தால் எப்படி?

ஆலோசனைகள்:

1. கிரிகெட்டுக்கும் தேசபக்திக்கும் வித்தியாசம் தெரியாத கோமாளிகள் நாம். கிரிகெட்டே தேசபக்தி என்ற கிறுக்குத்தனம் இங்கு தழைத்தோங்கி வருடக்கணக்காகி விட்டது. எனவே, உண்ணாவிரதத்தின் போது இந்தியா பாகிஸ்தான் போட்டி வைத்தால் போயிற்று. நாடே டீவியின் முன் அமர்ந்திருக்க உண்ணாவிரத மைதானம் காத்தாடுமே சார். "i am Anna" என்று குதித்துக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் "sachin is the best" என்று கூப்பாடு போட்டுக் கொண்டு மைதானங்களில் குவிய மாட்டோமா என்ன? இந்த மாதிரி சில முறை நடந்தால், உண்ணாவிரத எண்ணம் ஹசாரேவுக்கு எப்படி வரும் சொல்லுங்கள்?

2.பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் இல்லையா? அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன செய்தி போட்டால் எப்படி விற்கும் என்று தெரியாதா? இப்போது "Jism 2" என்றொரு படம் தயாரிப்பில் இருப்பதாக தினமும் செய்தி வருகிறது. நம் பண்பாட்டை உலகத் தரத்திற்கு உயர்த்தும் படமாம். இந்த "Jism 2" படத்தில் Sunny Leone என்றொரு நடிகை கலைத்தாயின் காலடியில் கிடந்து கலைக்கும் சமூகத்திற்கும் மாபெரும் சேவை புரிந்து வருவதாக ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன. அதோடு நில்லாமல், தினமும், அவரின் கலைச்சேவையை போற்றும்படியான புகைப்படம் வேறு. ...இந்த Sunny Leone படத்தை அரைப்பக்கத்திலும் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத செய்தியை பெட்டிச் செய்தியாக குட்டியாக போடும் கன்றாவி நம் நாட்டில் நிகழாது என்று என்ன உத்திரவாதம்? அப்படி நடந்தால், இப்படியொரு தேசத்திற்காகவா நாம் உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று தோன்றி அன்னா "விழித்துக் கொள்ள" மாட்டாரா?


இந்த "Times Now" சேனலை எடுத்துக் கொள்ளுங்கள்...முதல் உண்ணாவிரதத்தின் போது "Live Telecast" என்று அத்தனை களேபரம் செய்தார்கள். சுருதி சற்று இறங்கி, அடுத்த உண்ணாவிரதம் பொழுது தலைப்பு செய்தியாக மாறியது. மூன்றாவது உண்ணாவிரதம் பிசுபிசுக்கிறது என்று தெரிந்தவுடன், பத்தில் ஒரு செய்தியாக மாறிப்போனது...இதுதான் சார் நாம்.

3.மிக எளிமையான வழி ஒன்று இருக்கிறது. அன்னா ஹசாரேவை தமிழ் நாட்டுக்கு வரவழைப்போம். காவிரி நீர் சிக்கல் துவங்கி இலங்கை தமிழர் வரை, அரை நாள் ஒரு நாள் உண்ணாவிரதத்தின் மூலம் அனைத்து சிக்கல்களையும் தீர்த்ததாக சொல்லித் திரியும் ஆற்றல்மிகு தலைவர்கள் கொண்ட அற்புதத் தமிழ் நாட்டுக்கு அன்னா ஹசாரேயை வரவழைப்போம். உடல் நோகாமல் உண்ணாவிரதம் இருக்கும் "கலை"யை இந்தத் தலைவர்கள் அன்னாவுக்கு சொல்லித் தர மாட்டார்களா என்ன?

4.அன்னாவுக்கு தமிழ் நாட்டுக்கு வர இயலாது என்று வைத்துக் கொள்வோம். பரவாயில்லை சார். எல்லாவற்றுக்கும் வழி தமிழ் நாட்டில் உண்டு. நம் தலைவர்கள் "தபால்" கலையில் சிறந்தவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டுமா? தமிழ் நாட்டின் அனைத்து வகை சிக்கல்களையும் நம் தலைவர்கள் டெல்லிக்கு தபால் மூலம் மட்டுமே தெரிவிக்கிறார்கள்! ஏன் சார், தலைமைச் செயலகம், தலைவர்கள் வீடுகள் இங்கெல்லாம் டெலிபோன் கிடையாதா? அல்லது கடிதம் எழுதுதலே கழகங்களின் பண்பாடா? நல்ல வேளை, "மூவேந்தர்கள் ஆண்ட தமிழ் நாடு" எனவே புறா மூலம் தான் டெல்லிக்கு செய்தி அனுப்புவோம் என்று புறாவின் காலில் கடிதத்தை சுற்றி அனுப்பாமல் விட்டார்களே. நம் பெருந்தலைவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.

இவர்கள் தயவு கூர்ந்து இத்தகைய கடிதம் எழுதும் கலையை அன்னா ஹசாரேவுக்கு (தபால் மூலமே பயிற்சி அளிக்கலாம்) கற்றுத் தந்தால் அவரும் தினமும் டெல்லிக்கு நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் குறித்து கடிதம் எழுதி தள்ளிக் கொண்டே இருக்கலாமே! மன்மோகன் சிங்கும் முன்னேறி விட்டார். அவரும் டெலிபோன் பயன்படுத்துவதில்லை. நேற்று கூட இலங்கை தமிழர் நிலைமை குறித்து பதில் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார் என்று செய்தியில் சொன்னார்கள்.அன்னா ஹசாரேவும் மன்மோகன் சிங்கும் தினமும் கடிதம் எழுதிக் கொண்டால் தொலைக்காட்சிகளுக்கு குஷி தானே! Arnab Goswami "I have a copy of letter from Manmohan Singh dated... " என்று தினமும் இரவு ஒன்பது மணிக்கு கடிதத்தின் நகலை நமக்குக் காட்டுவார். அனைவருக்கும் நன்றாய் பொழுது போகும்...

5. அன்னா ஹசாரே கட்டாயம் மொபைல் போன் வைத்திருப்பார். அவர் Spectrum 2g அலைவரிசையையும் பயன்படுத்தியிருப்பார். எனவே அவருக்கு மறைமுகமாக 2G சம்பந்தம் இருக்கிறது என்று எவரேனும் (அர்த்தமில்லாமல்) வழக்கு போட்டால் போதும். சில மாதங்கள் அந்த பரபரப்பில் உண்ணாவிரதம் உப்புச் சப்பில்லாமல் போகாதா என்ன?

6. நமக்கு கதை கேட்பது என்றால் கரும்பு சாப்பிடுவது போல...அதுவும் ஊர் கதை உலகக் கதை என்றால் உற்சாகத்துக்கு அளவே இல்லையே சார்...ஒவ்வொரு ஊராக "அன்னா ஹசாரே அழைக்கிறார்" என்று "flex board" வைத்து கூட்டம் சேர்த்து, Baba Ramdev, Ravi Shankar போன்றோரிடம் ஹசாரேவுக்கு நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை மேடை போட்டு சுவையாக பேசச் சொல்லலாம். நம் அரசியல்வாதிகளின் காமெடி பேச்சுக்களையே எத்தனை நாள் சார் கேட்பது? போரடிக்காது?

மேற்கூறிய ஆலோசனைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்ளாமல் இருக்கவும், அவரின் உடல்நிலை மோசமாகாமல் இருக்கவும் நாம் வேண்டிக் கொள்வோம்.

Saturday, June 30, 2012

அன்னா ஹசாரே பின்னால் போகலாமா? பகுதி 1

இன்னொரு "உண்ணாவிரத" சீசன் ஜூலை 25 துவங்குவது போலத் தெரிகிறது. புரட்சிப் பாலும் எழுச்சித் தேனும் தெருவெங்கும் கரைபுரண்டு ஓடுவது போல பத்திரிகைகளும் செய்தி சேனல்களும் ஒரிரு நாட்களோ ஒரு வாரமோ துள்ளிக் குதிக்கும். அதன்பின் "பழைய குருடி கதவைத் திறடி" என்று அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, நேரம் கிடைத்தால் உண்ணாவிரத வெற்றி தோல்விகளை கால் நீட்டி அமர்ந்தபடி வீட்டில் காபி குடித்துக் கொண்டே கதையடித்துக் கொண்டிருக்கலாமே - அடுத்த உண்ணாவிரத அறிவிப்பு வரும் வரை...

ஆஹா..."ஹசாரே பின்னால் போகலாமா?" என்று தலைப்பு இருக்கிறதே அப்படியானால் அவர் பற்றிய "விஷயம்" ஏதோ இப்பதிவில் இருக்கிறது என்றெண்ணி படிக்க வந்தோர் பயன்பெறும் வகையில் பதிவில் எதுவுமில்லை. ஏனென்றால் இப்பதிவு ஹசாரே பற்றியதல்ல. நம்மை பற்றி. வெ,மா,சூ,சொ ஆகிய‌ "நான்கு குணங்கள்" மறந்து போன நம்மை பற்றி...

உண்ணாவிரத அறிவிப்பு வந்தால் போதும். உடனே நம் அனைவருக்கும், நாம் ஒவ்வொருவரும் அரிச்சந்திரனின் அண்ணன் என்ற நினைப்பு வந்து விடும். ஆனால் நாம் தினந்தோறும் நடத்தி வரும் நாடகங்களை நினைத்துப் பார்க்கிறோமா?

நம்மில் எத்தனை பேர் அரசு அலுவலகங்களில் "சுத்தமான" முறையில் வேலை முடித்திருக்கிறோம்? கேட்டால் "கொடுத்தால்தான் file move ஆகிறது" "எத்தனை நாள் அலைவது" என்று சால்ஜாப்பு வேறு. இத்தோடு நிற்காமல், எவரேனும் நேர் வழியில் போவதாக சொல்லிக் காத்துக் கிடந்தால், "உலகம் தெரியாத ஆளாய் இருக்கிறானே அவன்" என்று அறிவுரை வேறு....

பள்ளி கல்லூரிகளில் நடக்கும் பகல் கொள்ளைகளில் "பிள்ளைகளின் படிப்பு நலன் கருதி" பல்லைக் காட்டிக் கொண்டு அதிக‌ பணத்தைக் கொடுப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?

இத்தனை பெரிய தேசத்தில் மருத்துவமனைகள் நம்மிடம் பிடுங்குவதை தவிர்க்க ஒரு சட்ட வரையறை இல்லாத வெட்கக்கேட்டை நாம் என்ன செய்திருக்கிறோம்? இருப்பதிலேயே அதிகம் சுரண்டும் மருத்துவமனையே நன்று என்று நம்பி, பிறரையும் நம்ப வைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

காவிரியும் தாமிரபரணியும் கண் முன்னே கரைகிறதே? என்ன செய்தோம்? வீட்டுக்கு வீடு can தண்ணீர் விலைக்கு வாங்கப் பழகிக் கொண்டோம்...நமக்கு மானாட மயிலாட பார்க்கவே நேரம் போதவில்லை. இதில் மண் பற்றிய அக்கறைக்கு எங்கே போவது? "Swami Nigamananda" பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கங்கைக்காக மாதக்கணக்கில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த இவருக்கு ஆதரவாகவோ இவரைப் பற்றியோ ஏன் செய்தியே வரவில்லை? இவர் இறந்த பின், ஒரு குட்டிச் செய்தியாக போட்டார்கள். ஏன் என்றால் இந்த செய்தியால் ஊடகங்களுக்கு "வரும்படி" குறைவு. தங்கள் பிழைப்பு ஓடும் வகையில் செய்திகள் இருந்தால் தானே பரபரப்பாக "ஊடக வியாபாரம்" நடக்கும்! நமக்கோ, அன்னா ஹசாரே மீது மயக்கம். வேறெதுவும் கண்ணில் படாது! பாவம்...கவனிப்பார் இன்றி இறந்து போனார் நிகமானந்தா!

இத்தனை வருடங்களாகியும் தலைநகர் சென்னையில் கூட auto meter போடுவதை கொண்டு வர இயலாமல் "அநியாயம்" என்று தினமும் புலப்பிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டத் தெரிந்திருக்கிறதே நமக்கு!

தெருவுக்கு ப‌த்து பேர் சேர்ந்தால் ஊர் முழுக்க‌ தேரே இழுக்க‌லாம் என்னும் பொழுது தேருக்கு பூ க‌ட்ட‌ நாரில்லை என்று புழுகித் த‌ப்பிப்ப‌துதானே ந‌ம் ப‌ழ‌க்க‌ம். இந்த‌ லட்சணத்தில் "I am Anna" என்று ந‌ம‌க்கு குல்லா வேறு...

எவ்வளவு நன்றாக "கவனித்து வளர்த்தாலும்" ஊருக்கு நாலு பேர் உண்மையாகவே உத்தமர்களாய் வாழும் முனைப்போடு வளர்ந்து விடுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை கதி தண்ணீரிலிருந்து தரையில் குதித்த மீன் படும் பாடுதான்...ஆனால், "உத்தமனாய் இருந்து என்னத்தை கண்டாய்?" என்று வீடும் நாடும் சாம, தான , பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி இது போன்றவர்களை "பக்குவம்" அடைந்த மனிதர்களாய் மாற்றி விடும் சார். இல்லையென்றால் நாம் தான் விட்டு வைப்போமா?


முதலில் நம் வேலையை நாம் ஒழுங்காக பார்ப்போம். பிறகு நம் தெரு, வார்டு சிக்கல்களை தீர்ப்பதில் நமக்குரிய பங்கை நம்மால் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம்.இந்த வேலைகளை நாம் செய்தாலே ஊரும் நாடும் தானாகவே உருப்படும். அதன் பிறகு நாம் "I am Anna" என்று தலையில் குல்லா மாட்டிக்கொண்டு TV சானல்கள் முன் குதித்து கூப்பாடு போடலாம். என்ன சொல்கிறீர்கள்?

அதனால் தான் இந்த உண்ணாவிரத சீசன்களுக்கு ஒரு முடிவு தேவை என்கிறேன்.உண்ணாவிரதம் குறித்து நாம் அனைவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அது என்ன? அன்னா ஹசாரேவுக்கு வயதாகி விட்டது. நம்மை பற்றியும் நம் நாட்டைப் பற்றியும் நன்றாகவே அறிந்திருந்தாலும், ஏதோ அவரின் போதாத காலம், மீண்டும் மீண்டும் உண்ணாவிரதம் என்ற போக்கிலேயே இருக்கிறார். அவரின் கொள்கைகள் பற்றியோ அவரைப் பற்றியோ விவாதம் தேவையின்றி, சரியா தவறா என்பதை விடுத்து, அதையெல்லாம் மீறி, ஒரு முதியவரின் உடல்நிலை கெடாமல் இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில், அதை மாற்ற சில "எளிய" வழிகள் சொல்லுவோம். அத்தகைய வழிகளை அடுத்த வாரம் பார்ப்போம்...


Thursday, June 21, 2012

இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

இரண்டு நாட்களாக ஒரே கூத்து சார்..."இளையராஜாவுக்கு அங்கீகாரம்" என்று தமிழ்  பத்திரிக்கைகளும் மற்ற தமிழ் ஊடகங்களும் ஆனந்த அட்டகாசம் செய்ய..."Ilayaraja song in London Olympics" என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி பரப்ப, கிடைப்பதற்கரிய அங்கீகாரம் ஒன்றை இளையராஜா பெற்று விட்டது போல ஒரு பொய் பிம்பம் நாடெங்கும் நடை போடுகிறது.

"The Times of India" பத்திரிக்கையின் செய்தியை பாருங்கள்: "Music Maestro Ilayaraja has received a rare honour. At this year's London Olympics, scheduled to begin in July, Ilayaraja's song from the 1981 Kamal Haasan flick 'Ram Lakshman' will be played along with a few other samples of world music as part of the opening ceremony." என்று போடுகிறார்கள்.

"The Hindu" சற்று பரவாயில்லை."Who would have ever thought the London Olympics, hardly six weeks away, would have a strong Chennai connection? But thanks to music composer Ilayaraja, it will. A Tamil film song composed by him in the early 1980s has made it to the playlist of the grand opening ceremony." என்று செய்தி.

நமக்கு, "எதை" "எங்கு" "வைப்பது" என்று சுட்டுப் போட்டாலும் வராதே. சம்பந்தம் இல்லாத விஷயங்களை சம்பந்தப் படுத்துவதுதானே நம் வேலையே! ஒலிம்பிக்ஸ், விளையாட்டு சம்பந்தப்பட்டது. இதில் தகுதி பெற்ற நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் அங்கீகாரமும் உலக அளவில் வரும், வர வேண்டும் என்று சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, ஒரு துவக்க நிகழ்ச்சியில் இடம்பெறும் இசை கோர்வையில் இளையராஜாவின் ஒரு துளி இடம்பெறுவதால் அவருக்கு அங்கீகாரம் என்று சொல்வது இளையராஜாவுக்கு மட்டுமல்ல, இசைக்கும் இழுக்கு. எதற்கும் எதற்கும் சார் நாம் முடிச்சு போடுகிறோம்?


சரி. தேர்வு செய்ததுதான் செய்தார்கள். எதற்கு இந்த பாட்டு? ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்ச்சியின் துவக்க விழா. "துள்ளல்" நிறைந்திருக்கும் என்பது ஏற்புடையதுதான். எனவே அங்கு "துள்ளல்" இசைதான் எடுபடும் என்பதும் சரியே. ஆனால் இளையராஜா போடாத "துள்ளல்" இசையா? அவ்வளவு ஏன் சார்? இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ராம் லட்சுமண்" படத்திலேயே "வாலிபமே வா வா" என்றொரு பாடல் உண்டு. அதன் fast beat இடையே கூட‌ அற்புதமான சங்கதிகள் வைத்திருப்பார் இளையராஜா. அது கண்ணில் படாமல் போனது எப்படி?



"வாழ்க்கை" படத்தில் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" என்ற பாடல்...இதன் தாளக்கட்டையும் வயலினையும் உலகமே ரசிக்கலாமே? "ராஜ பார்வை" படத்தின் title music  பிற்பகுதியில் வரும் அந்த western bit, புன்னகை மன்னனில் வரும் அந்த track என்று நூற்றுக்கணக்கான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாமே? அப்புறம் ஏன் இந்த பாட்டு?

லாஜிக் ஏதாவது தெரிகிறதா? எனக்கு, இப்படி ஒரு லாஜிக் இருக்குமோ என்று தோன்றுகிறது:
யாரோ ஒருவர், இளையாராஜா படங்கள் பெயரை கணிப்பொறியில் ஓட விட்டு கண்ணை மூடிக் கொண்டு, தனது கை, கணிப்பொறி திரையில் எங்கு தொடுகிறதோ அந்த இடத்தில் இருக்கும் படப்பெயரை தேர்வு செய்து இருக்கக் கூடும். இந்த வகையில் "ராம் லக்ஷ்மணன்" மாட்டிக் கொண்டிருக்கக்கூடுமோ என்ற எண்ணம் நமக்கு தோன்றுவதில் வியப்பில்லை.பிறகு இதே "முறையை" பின்பற்றி அப்படத்திலிருந்து ஒரு பாடலையும் தேர்ந்தெடுத்து விட்டார்களோ என்னவோ?

ஒரு மாபெரும் தேசத்தின் பாரம்பரியம் மிக்க தென்னிந்திய மாநிலங்களில், இரண்டு தலைமுறைகள் வளர்ந்த விதத்தையே மாற்றியமைத்த ஒருவரின் அற்புதமான ஆயிரம் compositions இருக்க, இந்த பாடலின் இசையின் மூலம் இவர்தான் இந்தியாவின் சொத்தான இளையராஜா என்று உலகம் அறிவதன் பெயரா அங்கீகாரம்?

"Another world famous composition from India" என்று "why this kolaveri" பாடலை சேர்த்து "இந்தியாவுக்கே அங்கீகாரம்" என்று நம் பத்திரிகைகள் நாட்டியம் ஆடும்படி செய்யாமல் விட்டார்களே. அந்த அளவில் ஒலிம்பிக் துவக்க விழா இசை குழுவுக்கு கோடானு கோடி வந்தனங்கள்!



முக்கியமான கருத்து:


1."இளையராஜாவின் மிகச் சாதாரணமான சராசரி பாடல்கள் கூட ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு போவதில், இளையராஜாவினால், அந்தத் துவக்க விழா அங்கீகாரம் பெறுகிறது" என்று மாற்றிச் சொல்லுவோம். உரக்கச் சொல்லுவோம். 

2. இன்று வரும் பெரும்பாலான அர்த்தமற்ற கூச்சல் சத்தமிக்க பாடல்களை விட இந்த பாடல் எவ்வளவோ நன்றாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதுவும், 1981ல் முப்பது படங்கள் இசையமைத்த இளையராஜா, "பொழுது போக்கு" நிமித்தமாக போடும் பாடல்களில் கூட எப்படிப்பட்ட‌ உழைப்பும் அர்ப்பணிப்பும் காட்டுவார் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்.

3. பள்ளி நாட்களில் கபடி விளையாட்டில் "கபடி கபடி" என்று சொல்வதற்கு பதிலாக இந்த பாடலை வேகமாக சொல்லும் சிறுவர்களுடன் விளையாடிய பொழுதுகளையும், வகுப்பறையில் விளையாட்டாக சண்டையிடும் பொழுது இப்பாடலை சொல்லியபடி ஓடி வரும் மாணவர்களையும் நினைவில் மீண்டும் கொண்டு வந்த London Olympics துவக்க விழா குழுவுக்கு நன்றி.

Saturday, June 16, 2012

மாண்புமிகு தமிழரின் மேன்மைமிகு ரிங் டோன்கள்...

எத்தனை விதமான போன்களடா அதில் எத்தனைவித ரிங் டோன்களடா... என்று ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு "ரிங் டோன்" வசதியை உபயோகப்படுத்துவதில் நாம் வெளுத்துக் க‌ட்டுகிறோம் . நம்முடைய "ரசனைகள்" பீடு நடை போட பாதை இட்டு பாடாய் படுத்துகிறது இந்த ரிங் டோன்களின் ரீங்காரம்.ஒரு வசதியை எந்த அளவு பயன்படுத்தி "போட்டுத் தாக்கு"வோம் என்பதற்கு இந்த ரிங் டோனை நாம் பயன்படுத்தும் முறைகளிலேயே அறிந்து கொள்ளலாம்.

சென்ற மாதம் ஈரோட்டில் ஒரு திருமணம். கல்யாண மண்டப கழிப்பறையில் என் பக்கத்து கழிவறையிலிருந்து ஒரு ring tone...சீர்காழி கோவிந்தராஜனின் "முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே...". அடக் கடவுளே! கலிகாலத்தில் உன் நிலைமை பார்த்தாயா? எங்கிருந்தெல்லாம் உன்னை அழைக்கிறார்கள்! இயற்கை உபாதை கழிக்கையில் கூடவா இறைவன் பாட்டு? அல்லது நம் நண்பர் மலச் சிக்கல் நீங்கி மறுமலர்ச்சி பெற‌ மொமைல் போன் மூலம் முருகனை வேண்டுகிறாரோ?

இதற்கு நேரெதிர் கோஷ்டிகளுக்கும் பஞ்சமில்லை. மீனாட்சி கோயில் பொற்றாமரை குளத்தில் அமர்ந்த படி வாழ்க்கை போகும் பாதையை வாசிக்கும் பொழுது, அருகில் அமர்ந்திருப்பவர் "அரைச்ச மாவை அரைப்போமா" என்கிறார். இவரிடம், "ஏன் சார் இப்படி ஒரு ரிங் டோன் கொலை வெறி" என்று கேட்க முடியுமா? எந்த கேள்விக்கும் ஏடாகூடமாக பதில் சொல்லத் தெரிந்தவர்கள் தானே நாம்? ஒரு வேளை நம் மாவு நண்பர்,  "முன்னோர்க்கு முன்னோர் துவங்கி அரைத்த மாவையே அரைப்பதால்தான் இவ்வுலக வாழ்க்கை இப்படி இருக்கிறது. இதைத்தான் "அரைச்ச மாவை அரைபோமா" என்று தத்துவ விசாரணை செய்கிறது இந்த பாடல்" என்று நம் மேல் வேதாந்த மாவை அவர் பூசி விட்டால் என்ன செய்வது? நம்மால் முடிந்தது இன்னும் இரண்டு படிக்கட்டுக்கள் தள்ளி அமர்ந்து தண்ணீர் இல்லாத பொற்றாமரையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்...

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தள்ளு வண்டியில் பழம் விற்பவர், "நான் அடிச்சா தாங்க மாட்ட..." என்னும் ரிங் டோன் வைத்திருக்கிறார். பேரம் பேசுகையில் இவருக்கு போன் வந்தால் நாமெல்லாம் தெறித்து ஓடி விட வேண்டியதுதான்...

ஒரு முறை நுங்கம்பாக்கத்திலிருந்து அடையார் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் நல்ல கூட்டம். கல்லூரியில் படிப்பவர் போலிருந்த பெண் ஒருவரிடமிருந்து "சும்மா நிக்காதீங்க...சொல்லும்படி வைக்காதீங்க" என்று வருகிறது ரிங் டோன். வம்பிழுக்கக் காத்திருக்கும் ஆண்களை வரவேற்கும் வகை பெண் போலும்!. இவர் போன்ற "புதுமை" பெண்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது சார். நல்ல வேளை. அதற்கு பிறகு உள்ள வரிகள் இல்லாமல் இரண்டு வரியுடன் ரிங் டோன் செட் செய்த இந்த மகளிர் குல மாணிக்கத்திற்கு மனதால் நன்றி சொல்வோம்.

இன்னும் சில பேருக்கு வீட்டில் இருக்கும் பொழுது ரிங் டோன் மாற்றி set  பண்ண மனது வராது. அடுத்தவர் நிம்மதியை கெடுத்தால்தானே நமக்கு மகிழ்ச்சி கிடைத்தாற் போல இருக்கிறது. எனவே, இவர்கள் பேருந்தில் பயணம் போகையில் ஒவ்வொரு பாட்டாக வரிக்கு வரி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எது நல்ல ரிங் டோனாக இருக்கும் என்று test செய்கிறார்களாம்!. பக்கத்தில் இருப்பவர்களுக்கோ, விருந்து சாப்பிட்டவன் எடுத்த வாந்தி போல விதவிதமாய் அரைகுறையாய் இப்படி மாறிக் கொண்டே இருக்கும் வரிகள் தலைவலியைக் கொடுக்கும். சிலர் இவ்வாறு "பணி" செய்யும் பொழுது, தானும் அந்த பாடலை வரியை உடன் பாடி இன்னும் கடுப்பேற்றுவார்கள்.

தற்போது "சத்யமேவ ஜெயதே" என்றொரு டிவி நிகழ்ச்சி பிரபலமாகி இருக்கிறது. எனவே நிறைய பேர் "satyameva jayate" ரிங் டோன் வைத்திருக்கிறார்கள் (பாட்டு நன்றாகத் தான் இருக்கிறது). ஏன் சார், வாய்மையே வெல்லும் என்பதை வாழ்க்கையில் கடைபிடிக்க நாம் என்ன வடிகட்டிய முட்டாள்களா என்ன? எந்த இடத்தில் எந்த பொய் சொன்னால் நமக்கு என்ன லாபம் என்பதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இல்லையா நாம்? அதனால்தான், காலத்துக்கு உதவாத உண்மை நேர்மை போன்றவை காலர் டோனிலாவது காற்று வாங்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில் நாலு பேர் "satyameva jayate " என்று போனில் டோன் வைத்திருக்கிறார்கள். விடுங்கள்...பாவம்.

ச‌ரி. மேலே சொன்னவற்றை தள்ளி வையுங்கள். அற்புதமான ரிங் டோன் வைத்திருக்கும் பலரையும் நாம் சட்டென்று பொது இடத்தில் கடக்கும் பொழுது, யாரென்று தெரியாமலேயே அவர்களை பிடித்துப் போய்விடுகிறது...சென்னை ரங்கநாதன் தெருவில் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் "இது ஒரு பொன் மாலைப் பொழுது", KPN பேருந்தில் எனக்கு முன் வரிசை இருக்கை பெண்ணிடமிருந்து வந்த "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு", மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு முதியவரின் "வெள்ளிப் பனி மலையின்..." என்று நிறைய மனிதர்கள் மனதிற்கு நிறைவு தரும் ரிங் டோன் வைத்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.