/ கலி காலம்

Sunday, May 31, 2015

ஒரு பரபரப்பான செய்தி...

நடிகை வீட்டு நாய் குட்டிக்கு நகம் வெட்டப்பட்டது துவங்கி பள்ளத்தில் விழுந்த பேருந்தில் சிக்கிய கள்ளக் காதல் ஜோடி தப்பிய தகவல் வரை (அதென்ன சார் "கள்ளக் காதல்"? கலிகாலத்தில் இது ஒரு பொருட் பன்மொழி அல்லவா? சரி விடுங்கள் இந்தப் பதிவு அதை விட பயனுள்ள பொருள் பற்றியது என்று நம்புவோம்...) நம் பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் கிளப்பும் பரபரப்புக்கு பஞ்சமேயில்லை. பரபரப்பு இருந்தால் தான் அது செய்தி என்ற நிலைக்கு நாம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே நம் பங்குக்கு நாமும் பரபரப்பு செய்தி கொடுக்க வேண்டாமா? என்ன,  மேற்சொன்ன உதாரணங்கள் போன்றவற்றை செய்தியாய் கருத மனசாட்சி உறுத்துவதால் சற்றே "பரபரப்பு குறைந்த" செய்தி ஒன்றைத் தருகிறேன். வாசித்து மகிழுங்கள்....


இரண்டு வருடங்களாய் பொழுது விடிந்தால் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது சார்...எப்படி என்று கேளுங்கள்...உதாரணமாக ஒரு உற்சாக நிகழ்வு ஒன்றை பகிர்கிறேன்..சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தொட்டியில் வெண்டைக்காய் விதை போட்டு மொட்டை மாடியில் வைத்தோம். "தொட்டியில வெண்டைக்காய் வரும்னு நினைக்கிற மண்டைக்குள்ள மண் தான் இருக்கும்" என்று கூட சிலர் சொன்னார்கள். நாங்களும் ஒரு வேளை அப்படித்தானோ என்று சந்தேகப்பட்டோம். ஆனால் சில வாரங்களில் பச்சை நிற சீரியல் பல்புகள் போல சில மொட்டுக்கள் தோன்றின.



தினமும் அந்த மொட்டுக்கள் என்னவாயிற்று என்ற எதிர்பார்ப்பு காலை பல் துலக்கும் போதே முளைத்து விட, ஆளாளுக்கு மொட்டை மாடிக்கு போய் ஒரு பார்வை பார்த்து "பரபரப்பை" தனித்துக் கொள்வோம். ஒரு வாரம் கழித்து அந்த மொட்டுக்களில் இருந்து மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கத் துவங்கின.





அக்கம் பக்கத்தார் மகரந்த சேர்க்கை இல்லாமல் பூ அடுத்த கட்டத்தை எட்டாது என்று அச்சம் ஏற்றினர். எங்களின் அதிகாலை பரபரப்பு இன்னும் அதிகமானது...மேனிக்கே தண்ணீர் கிட்டாத கான்கிரீட் கூடுகள் நிறைந்த நகரத்தின் இடுக்குகளில் தேனியை தேடித் திரிவது பைத்தியக்காரத்தனம் தான்... ஆனால் நம் கண்ணுக்குத் தெரியா அதிசயங்களை இயற்கை நொடி தோறும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆம். ஒரு காலைப் பொழுதில் தண்ணீர் விடச் சென்ற நானும் மனைவியும் கண்களை அகல விரித்து பார்க்கும் வகையில் ஆச்சரியம் நிகழ்ந்திருந்தது. மலர் வாடுமோ என்ற எங்கள் அலர் நீக்கும் வகையில் பூத்திருந்த மலர்கள் அனைத்தும் பூசியடைத்தது போல் மூடி புடைத்தபடி இருந்தன நக அளவு வெண்டைகளாய் மாறி,,,!





ஒரு வாரம் உச்சகட்ட பரபரப்பு. ஆனால் பரபரப்பு எப்படி அமைதி தரும்? கட்டாயம் தரும். செடி நன்றாக வளர வேண்டும் என்ற பரபரப்பு மனதுக்கு அமைதியைதான் தருகிறது. இயற்கையின் எத்தகைய பரபரப்பும் அமைதியை நோக்கி தான் நம்மை இட்டுச் செல்லுமோ? ஒரு வாரத்தில் விரல் நீளத்தை தாண்டிய வெண்டைக்காய்கள் எங்களை பார்த்து கைகொடுப்பது போல தொட்டி முழுதும் நீண்டு நின்றபோது மனதுக்குள் ஒரு அற்புதமான வாசனை பரவுவது போன்ற "பரபரப்பு" தோன்றியது. மண் வாசனையாக இருக்குமோ?

சொல்லுங்கள் சார்...அர்த்தமற்ற, அறிவை மழுங்கடிக்க வைத்து, மனதை அழுகிப் போக வைக்கும் செய்திகளை விட இதில் சற்று பரபரப்பு குறைவு எனினும் இந்த "செய்தி" எப்படி? இச்செய்தி உங்களுக்கு புதிதென்றால், பிடித்தமென்றால், நீங்களும் முயன்று பாருங்கள். ஒரு தொட்டி மண்ணும் சில விதைகளும் உங்கள் நாட்களை எத்தகைய "பரபரப்பு" மிகுந்தவை ஆக்குகின்றன என்று...அதிலும், அனுதினமும் அந்த பரபரப்பு உங்களுக்கு தரும் அமைதியை...ஆனந்தத்தை...பரபரப்பின் அடியிலும் அமைதி உண்டு என்னும் ஆச்சரியத்தை...!


Sunday, May 3, 2015

இது தேவையா?

தமிழர்களாகிய நாம் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் சும்மா உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதோடு நிறுத்தினால் நம் பெருமை என்னாவது? எனவே அவ்வப்பொழுது நாம் கண்மூடித்தனமாக உணர்ச்சிவசப்படுவோம் என்பதையும் காட்டிக் கொண்டால் தானே "உணர்ச்சிவசப்படுதல்" பெருமையை புதியதொரு தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்!.

அதன் மற்றொரு பரிமாணமாக நாம் சமீபத்தில் கண்டது தான் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" குறித்த பரபரப்பு. ஒரு குழுவோ கூட்டமோ நினைத்தால் ஐந்து வருடத்திற்கு முன்பு வந்த ஒரு நாவலை எடுத்து, அதிலிருந்து சில பக்கங்களை பிரதியெடுத்து பிரம்மாண்டமாக்கி போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி, அதை எழுதியவரை "இனி எழுதப்போவது இல்லை" என்று சொல்ல வைக்க முடியும். அந்த எழுத்தாளரும் நம் போல தமிழர் தானே? அவரும் போராட்டக்காரர்களுக்கு இணையாக உணர்ச்சிவசப்படுவார் இல்லையா? பட்டார்..."உள்ளே இருக்கும் எழுத்தாளன் இறந்து விட்டான். நாவலின் அத்தனை பிரதிகளையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டார். மக்கள் தான் இப்படி... சமூகத்தை காக்கும் அதிகார வர்க்கம்? அவர்கள் என்ன சளைத்தவர்களா? காவல்துறையும் தன் பங்குக்கு, "எதற்கு வீண் சிக்கல்கள்" என்ற ரீதியில் எழுத்தாளருக்கு அறிவுரை (எச்சரிக்கை?) கொடுக்க, வெறும் வாய்க்கு கிடைத்த அவலாக "கருத்து சுதந்திரம்" என்று ஒரு கூட்டம் வழக்கமான குரலெழுப்ப, பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் ஒரு வாரம் நல்ல தீனி.

முதலில் பெருமாள் முருகனை பார்ப்போம். அவர் ஒரு ஆசிரியர். ஒரு உண்மையான நிகழ்வாகவே இருந்தாலுமே, அதைப் பற்றி பேசுவதாலோ எழுதுவதாலோ யோசிப்பதாலோ எப்பயனும் இல்லையெனிலோ அல்லது பலர் மனதை புண்படுத்தக் கூடும் எனிலோ அதை தவிர்க்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர் பணி செய்பவர். அத்தகைய தவிர்த்தல் என்பது கருத்துப் பக்குவம் ஆகும். கருத்துச் சுதந்திரத்தை விட கருத்துப் பக்குவம் சாலச் சிறந்தது என்று அவர் அறிந்திருக்க மாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனாலும், மேற்சொன்ன விளக்கத்தின் படி, கருத்துப் பக்குவம் அற்றது என்று கருத்தில் கொள்ள வேண்டிய‌ ஒரு நிகழ்வை தன் படைப்பினூடே வெளியிடுகிறார். "கருத்துப் பக்குவம்" அவரிடமிருந்து அக்கணமே நீங்கி விடுகிறது. மீதமுள்ள பரிமாணமான கருத்துச் சுதந்திரத்தையாவது அவர் உறுதியாக பற்றினாரா? அப்படியென்றால், எக்காரணத்தைக் கொண்டும் அவர் "இனி எழுதுவதில்லை" என்பது போன்ற நிலைக்குச் சென்றிருக்க முடியாது.

எழுத்து என்பது தெய்வத்தை தொழுதல் போன்றது. நம்பிக்கை அற்று அதை செய்ய இயலாது. பெருமாள் முருகன், அவர் தன் எழுத்தின் மீது, மேற்சொன்ன கருத்துப் பக்குவம், கருத்துச் சுதந்திரம் என்ற இருவகை நம்பிக்கைகளையும் இழந்து விட்டவராகவே நமக்குத் தெரிகிறார். எதிர்ப்பை தீவிரமாக முன் நின்று எதிர்கொண்டு ஏன் தன் எழுத்தை தொழவில்லை பெருமாள் முருகன்?

இப்போது "பற்ற" வைத்த‌ பண்பாளர்களைப் பார்ப்போம்...இவர்கள் உண்மையிலேயே மேற்சொன்ன "கருத்துப் பக்குவத்தின்" கூறுகள் குறித்த அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால், நாவல் எழுதியவரை ஒரு குழுவாக தனியே சந்தித்து சில பகுதிகளின் தேவையற்ற தன்மை குறித்து விவாதித்து, அதை நீக்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்தால் அவர்கள் எப்படி "வெளியே" தெரிவார்கள்? விஷயம் முடிவுக்கு வருவதா முக்கியம்? அது எத்தனை பெரிதாக வெளியில் தெரிகிறதோ அதில் தானே "வெற்றி" இருக்கிறது? எனவே இவர்களிடமிருந்து அப்படிப்பட்ட அணுகுமுறையை நாம் எதிர்பார்க்க முடியாது. சரி, ஒரு நாவலில் எழுதப்பட்ட பழைய நடைமுறையை சினங்கொண்டு எதிர்க்கும் சிங்கங்களாகிய இவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவைத் தாண்டி, ஒட்டு மொத்த மனிதப் பண்பாடு, உறவு மற்றும் உணர்வு முறைகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து, காணச் சகிக்காத  வக்கிரங்களை காட்சிகளிலும் கேட்கச் சகிக்காதவற்றை பாடல்களாகவும் தமிழ்நாடு முழுக்க புகட்டிக் கொண்டே இருக்கும் படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒன்றும் பேசாமல் இருப்பதெப்படி? ."பற்ற" வைக்கும் சிங்கங்கள் இந்த அசிங்கங்கள் பற்றி வாய் திறவாமல் இருப்பது ஏனோ? ஒரு வேளை இலக்கியத்தை மட்டும் தான் இவர்கள் எதிர்ப்பார்களோ?

மீடியாவுக்கு வருவோம். அவை என்ன செய்தன? பரபரப்பாக பேசக் கூடிய பத்து பேரை நாளுக்கு ஒன்றாய் அழைத்து வந்து பிழைப்பை பார்த்தன. "மாதொரு பாகன்" முழுதாக நீங்கள் படித்து விட்டுத்தான் பேசுகிறீர்களா என்று கேட்கவா முடியும்?

ஆக மொத்தம் அத்தனை கோணங்களிலும் அனைத்து வகை கோணல்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பேணி வளர்த்து வரும் தமிழ் சமூகத்திற்கு இது போன்றதொரு பரபரப்பு தேவைப்படுகிறது. தேவைப்படுவதை எப்படியேனும் உருவாக்கி பெரிதாக்கி உற்சாகம் அடைபவர்களில் நம்மிலும் சிறந்தோர் உலகினில் உண்டோ?

சரி சார்...என்னய்யா நீ? ஜனவரி மாதம் நடந்ததைப் பற்றி இப்போது எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஆனால் காரணம் இருக்கிறது சார். நம்முடைய தேசத்தின் சிறப்பு குணமே எதிலும் "இன்ஸ்டண்ட்" முறையில் வெட்கம் மானம் ரோஷம் காட்டி விட்டு, பின் அதை மறந்து விடுவதுதான். மறக்கக் கூடாதவற்றை மறந்து போன நேரத்தில் ஞாபகப்படுத்துவது தானே சரி?


Sunday, January 11, 2015

ரகசியமாய் கேட்டுக்குங்க...

ஆமாம் சார். கொஞ்சம் காதை பக்கத்தில் கொடுங்க. இந்த விஷயத்தை சத்தமில்லாம காதில் சொல்லி விடுகிறேன். ஏற்கெனவே உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமோ இல்லையோ எப்படி இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களை இன்னொரு முறை சொல்வதில் எந்த நஷ்டமும் இல்லை.

சரி, என்ன ரகசியம் என்கிறீர்களா? ரகசியம் என்றால் வெளியில் தெரியாமல் இருப்பது தானே? அப்படியென்றால், நல்ல புத்தகம் என்பதே ஒரு ரகசியமான விஷயம் போல ஆகிவிட்டது இல்லையா? வருடா வருடம் போல் இந்த வருடமும் புத்தகக் கண்காட்சி துவங்கி விட்டது. வீட்டுக்கு ஒரு விவேகான‌ந்தர் இல்லையென்றாலும் வீட்டுக்கு ஒரு எழுத்தாளர் தமிழ் நாட்டில் இருக்கிறார்களோ என்று நினைக்கும் அளவுக்கு,  எந்த புத்தகத்தை வாசிப்பது என்று பெருங்குழப்பம் ஏற்படும் அளவுக்கு, ஏகப்பட்ட புது புத்தகங்கள்...

மேலும், "அந்த காலத்து" அற்புதங்களையே இன்னும் படித்து முடிக்கவில்லையாதலால் புதியன உடனே வாங்குவதில் நிறைய தயக்கங்கள் உண்டு. இருப்பினும், புதிய வருகைகள் பற்றி அறிந்து கொள்வதற்கேனும் புத்தகக் கண்காட்சி நிரம்ப உதவுகிறது. சென்னையில் வசித்தால் தான் புத்தகக் கண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. எந்தெந்த ஊர்களில் இருந்தெல்லாமோ ஏதேதோ "புண்ணிய தலங்களுக்கு" செல்வதை விட, கண்காட்சியில் புத்தகங்களை திரட்டுவதும் அதன் மூலம் சிந்தனை வித்துக்களை நமக்குள் விதைப்பதும் அதிக புண்ணியம் சேர்க்கும் வழியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

இந்த முறை, ஒரு நல்ல (புது) கவிதை புத்தகத்தையேனும் தேடிப் பிடித்து விட வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன். இப்போது வரும் கவிதை புத்தகங்களை மனது ஏற்க‌ மாட்டேன் என்கிறது. கவிதை என்ற பெயரில் உரைநடையை, இன்னும் சொல்லப் போனால் பேச்சு நடையை வரிகளுக்கிடையில் மடக்கி நீட்டி எழுதும் வகையே இன்று கவிதை என்று அழைக்கபடுவது மிகவும் வருந்தத்தக்கது. இது போன்ற கவிதைகள் எழுதுவோரையும் வெளியிடுவோரையும் "மொழித் துரோகம்" என்றொரு புதிய சட்டப் பிரிவு ஏற்படுத்தி தண்டித்தால் தேவலையோ? மனதுக்குள் நீண்ட காலம் உழலும் ஒரு வரியேனும் ஒரு கவிதை புத்தகத்தில் இருக்காதா என்ற ஆயாசம் இந்த முறை நீங்கும் என்ற நம்பிக்கை...

தற்போதைய சமூக இருப்பில், பன்னுயிர் பேணுதல் நம் அனைவரும் பங்கெடுக்க வேண்டிய முக்கிய தேவையாக மாறி விட்டது. இயற்கையை சீரழிப்பதன் மூலம் அவ்வாறு ஆக்கி வைத்திருக்கிறோம் நாம். தியோடர் பாஸ்கரன் எளிய தமிழில் எழுதியிருக்கும் கானுயிர் கட்டுரைகள் மாணவர்கள் முதல் முதியோர் வரை படிக்க வேண்டிய ஒன்று.

தமிழ் இலக்கணம் ஒரு எளிய அறிமுகம், வண்னதாசனின் "நொடி நேர அரை வட்டம்",  நாஞ்சில் நாடனின் "வல்விருந்து", மகுடேஸ்வரனின் "களிநயம்", எஸ்.ராவின் "சஞ்சாரம்" ஆகியவை இவ்வருடம் வசீகரிக்கின்றன. "தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்" என்றொரு புத்தகம் தமிழினி மூலம் வந்திருக்கிறது. வெங்கட் சாமிநாதனின் "நினைவுகளின் சுவட்டில்" இரண்டாம் பாகத்தை மெய்ப்பொருள் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.

புத்தகங்கள் வாங்குகிறோமோ இல்லையோ...சில வருடங்கள் கண்காட்சிக்கு போய் வந்தால், ஒரு புத்தகம் எத்தனை கவர்ச்சியான அட்டை மற்றும் கட்டுமானம் கொண்டிருந்தாலும் அதில் ஏமாறாமல் சில வரிகளை படித்தவுடன் அந்த புத்தகத்தை எந்த "இடத்தில்" வைக்கலாம் என்று எடை போட பயிற்சி பெறும் சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதுவே புத்தக கண்காட்சி நமக்குத் தரும் மிகப்பெரிய அனுபவம்.

மற்றபடி, கண்ணதாசனின் "நீ எனக்காக உணவு உண்ண எப்படி முடியும்?" பாடல் வரி போல, அவரவர் வாசிப்பு அவரவர் "வயிறு" சம்பந்தப்பட்டது. அஜீரணம் ஏற்படாமல் உடலுக்கும் மனதுக்கும் "சாப்பாடு" சாப்பிடுவது அவரவர் விருப்பம். சரி தானே?

Sunday, December 28, 2014

அம்மாடி...! ஐயோடி...!

"அம்மாடி...அந்த நாளை மறக்க முடியுமா...!"  இப்படியெல்லாம் இந்தக் காலத்தில் வார்த்தைகளை பயன்படுத்தி கேட்டிருக்கிறோமா?
சிறு வயதில் நம்மூர்களில் ஆச்சரியத்தையும் ஆயாசத்தையும் தெரிவிக்க "அம்மாடி" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது நம் ஞாபகத்தில் இருக்கக்கூடும். இன்று உலகமயமாக்கலின் சூறாவளியில் இது போன்ற வார்த்தைகள் காணாமல் போனதோடு மட்டுமின்றி பயன்படுத்தினால் நம் இமேஜுக்கு இழுக்கு வந்து விடுமோ என்று தமிழ் சமூகம் அஞ்சும் அளவுக்கு நாம் முன்னேறி விட்டோம்! "சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்டா" என்ற வடிவேலு காமெடி போல், ஆங்கிலம் பேசினால் அவர்கள் அறிவுடையவர்கள் என்ற ஆணித்தரமான நம்பிக்கை நமக்கு உண்டு. அதிலும், நாக்கில் நகாசு வேலை செய்து "wow..." "" என்று உச்சரித்தால் உள்ளூரக் கிடைக்கும் கிளுகிளுப்பு "அம்மாடி"யில் இல்லையோ?

நாகரிக கோமான்கள் என்ற நினைப்பு நம் அனைவருக்குமே உண்டு. உலகமயமாக்கல் அந்த எண்ணத்திற்கு நன்றாகவே தூபம் போட்டு வைத்திருக்கிறது...உதாரணமாக நானும் நீங்களும் தஞ்சாவூர் பெரியகோயிலில் அண்ணாந்து அதன் கோபுரத்தை பார்த்தால் வாயில் "wow..."தான் வருகிறது. "அம்மாடி"யெல்லாம் பிரயோகத்தை விட்டு வெகுதூரம் பிரயாணம் போய் விட்டது.

சரி சரி, விஷயத்துக்கு வாருங்கள் என்கிறீர்களா? சென்ற வாரம் "அஞ்ஞாடி" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதாக செய்தி வெளியானது. தலைப்பும் புத்தகத்தின் சைசும் புது வாசிப்பாளர்களை பயப்பட வைக்கும். ஆனால் தமிழ் நாட்டில் 1800களின் இறுதியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களையும் அதனிடையே மனிதர்களின் உணர்வுகளையும் ஊடாட விட்டு அற்புதமான ஒரு படைப்பை தந்திருக்கும் பூமணி,  பல ஆண்டுகள் உழைத்திருக்கக்கூடும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

நாவல் முழுவதும் மண் வாசனை  வீசிக் கொண்டே இருக்கிறது. அவர் பயண்படுத்தும் சொல் வழக்குகள் புழங்கிய பகுதியில் நாமோ நம் மூத்த குடியோ இல்லாதிருந்திருப்பினும் அச்சமூகத்தினுள் கொண்டு போய் நம்மை அமர்த்துகிறது இந்நாவலின் நடை அழகு!

ஆனால், வாசிப்பு ஆர்வம் உள்ள ஒரு சராசரி தமிழன், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்குவானா? வாங்க முடியுமா? இது போன்ற ஒரு படைப்பு, எச்சமூகத்தின் பின் புலத்தை முன் வைக்கிறதோ, அதை சார்ந்த மக்களை சென்றடைய வேண்டாமா? 2013 சென்னை புத்தகச் சந்தையில் [அந்த கண்காட்சி பற்றிய பதிவு இங்கே ] "அஞ்ஞாடி" நிறைய இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. புத்தகத்தை வாங்க விலையைப் பார்த்து "அம்மாடி!" என்றேன் நான்...ஆமாம் சார், "அஞ்ஞாடி" என்பதன் அர்த்தம் விலையிலும் பிரபலித்தது வருந்தத்தக்க ஒன்று. அற்புதமான புத்தகங்களுக்கு விலையில்லை எனினும், அது, படைப்பின் அஞ்ஞாடியை பரவலாக தடையாகப் போய் விடும்!

அந்த வருடம், கண்காட்சி அரங்கை விட கூட்டம் நிறைந்து வழிந்த கேண்டீனில், பஜ்ஜி வாங்குவதற்கு நின்று கொண்டிருந்த‌ பொழுது, கல்லூரி மாணவி ஒருவர் "அஞ்ஞாடி" என்றால் என்னடி? என்று தோழியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். வரிசையில் இருந்த இன்னொருவர், "வாழைக்காய் பஜ்ஜி ரொம்ப சிவப்பா இருக்கே...பவுடர் அதிகம் போட்டிருப்பானோ" என்று தன் உறவினரிடம் சத்தமாக‌ கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் மற்றொரு மாணவி "அஞ்ஞாடி"க்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என்ற என் ஆர்வம் பஜ்ஜி வாசனையில் கரைந்து போனது...

இரண்டு வருடம் கழித்து சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறது இந்நாவல். தரமான எதுவும் எளிதில் வெளியில் தெரிவதில்லை. தரமான கதைகள் தரும் பூமணியையும் அவரின் கதைகளையும் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்றும் தெரியவில்லை. இந்த விருது அக்குறையினை ஓரளவேனும் நீக்கும் என்று நம்புவோம். இன்றைய உலக இருப்புக்கு பொருத்தமான பாணியில் அஞ்ஞாடியை சொல்ல வேண்டுமென்றால், "voila! this novel has a wow factor" என்று தூய தமிழில்  சொன்னால்தான் தமிழ் சமூகத்திற்கு இந்நாவல் பற்றிய ஈர்ப்பு பிறக்கும்!

அம்மாடி! ஐயோடி! அஞ்ஞாடி!

Sunday, December 7, 2014

காலம் கெட்டு கெடக்கு...

வழக்கமான மாத மளிகை சாமான் வாங்கிட கடைக்கு போயிருந்தேன். அண்ணாச்சி கடையல்ல. அவை அழியத்துவங்கிதான் ஆண்டுகள் பல ஆகி விட்டதே...வர்ணஜாலங்களுடன் வசீகரிக்கும் வணிகவளாகங்கள் தானே திசையெங்கும் கடை பரப்பி நிற்கின்றன...வாழ்க்கையே வணிகமாகி விட்ட பிறகு இத்தகைய வணிக வசீகரங்கள் சமூகத்தை ஈர்ப்பதில் விசித்திரமுமில்லை வியப்புமில்லை. ஊரோடு ஒத்து வாழ் என்று சும்மாவா சொன்னார்கள்? எனவே அதை சாக்கிட்டு நானும் அந்த பல்பொருள் விற்பனை அங்காடியில் மக்கள் திரள் நடுவே "டிராலி" தள்ளியபடி நகர்ந்து கொண்டிருந்தேன்...

கீரை கிழவிகளை ஊரை விட்டு அனுப்பிய பின், அவர்களிடம் பேரம் பேசி வீரம் காட்டிய நடுத்தர வர்க்கத்து சிங்கங்கள் ஒரு கட்டு பத்து ரூபாயெனினும் பாக்கெட்டிலிருப்பதால் பதவிசானது என்றெண்ணி மெளனமாய் அள்ளிப்போடும் கீரைகள் பகுதி தாண்டி தானியங்கள் பிரிவு அருகில் வருகையில் சத்தமும் குழப்பமுமாய் இருந்தது. தெருவாக இருந்தாலும், பளபளப்பு காட்டும் பலமாடி அங்காடியாக இருந்தாலும், ஏதேனும் சத்தம் வந்தாலே சண்டையாக இருக்குமோ என்ற‌ அவல் கிடைக்கக்கூடும் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்கும் இயல்பு நமக்குள் ஊறிப் போன ஒன்றாயிற்றே...என்ன நடக்கிறது என்று கூட்டத்திற்குள் நுழைந்து பார்த்தேன்.

கடை சீருடை அணிந்த‌ ஒரு பெண் சிப்பந்தி சற்றே தலை குனிந்தவாறு நின்றிருந்தார். அவரின் மானேஜர் "சாரி மேடம்" என்று தற்கால "முன்னேற்றம் மற்றும் உரிமை" அடையாளங்களின் நாகரீக நகல் போன்று இருந்த ஒரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தார். "you people are cheating. I should complain " என்று மேனேஜரை விளாசிய அவர் அங்கிருந்து விருட்டென்று விலகிப் போன பின் ஆங்காங்கே பேச்சும் சிரிப்பும் கேட்டது. மேனேஜர் சிப்பந்தியிடம் வந்து, "சரி விடும்மா...கஸ்டமராக இருக்கப்போய் இதெல்லாம் பொறுத்துக்க வேண்டியிருக்கு" என்று சொல்லிச் சென்றார்.

நமக்கு இருப்பு கொள்ளுமா? விஷயம் என்னவென்று தெரியா விட்டால் தலை வெடித்து விடுமே...இன்னும் சிலர் அந்த விஷயத்தை பேசிக்கொண்டு இருந்ததால் தலை தப்பியது. இதான் சார் விஷயம். அந்தப் பெண் அரிசி வாங்க வந்திருக்கிறார். பெரிய பெரிய டின்களில் அரிசியும், அதன் மேல் ஒரு அட்டையில் அதன் வகையின் பெயரையும் எத்தனை வருடம் பழையது என்பதையும் எழுதிச் சொருகியிருப்பார்கள் இல்லையா? அதைப் பார்த்து அந்தப் பெண் "ஒரு வருடம்" என்று எழுதிய "பொண்ணி"யில் தருமாறு சிப்பந்தியிடம் கேட்டிருக்கிறார். அடுத்தவருக்கு உதவலாம் என்று நீங்கள் நினைத்தால் பெரும்பாலும் இன்றைய உலகில் ஆபத்து உங்களுக்குத்தானே? பாவம் சிப்பந்தி. "மூணு வருஷம்" போட்டுருக்கறத எடுத்துக்குங்க பழைய அரிசி" என்றிருக்கிறார். நாகரிக நகலுக்கு பெரும் கோபம் வந்திருக்கிறது. புதுசு இருக்க பழையதை தன்னிடம் தள்ளி விடப் பார்க்கிறார் என்ற கோபம்!
பழைய அரிசிதான் நல்லாயிருக்கும் என்று சிப்பந்தி சொன்னதை ஏமாற்று வேலையாக பார்த்திருக்கிறார் அப்பெண்.

இதில் உச்சக்கட்ட தமாஷ் அருகில் இருந்தவர் அடித்த கமெண்ட்தான். "இப்படித்தான் நம்மூர்ல இப்பெல்லாம் குடும்பம் ஓடுது போல" என்ற முதியவரிடம் பக்கத்தில் இருந்தவர், "ஐயா, வீடுகளிலெல்லாம் சமையல் இன்னும் நடக்குதுன்னு நினைச்சு சந்தோஷப்படுங்க..." என்று சொன்ன போது தலை தாழ்த்தி நின்ற சிப்பந்தி அம்மாவும் சேர்ந்து சிரித்தார். அரிசியை கண்ணால் பார்த்தே அதன் வரலாறு பூகோளத்தை புட்டுப் புட்டு வைக்கும் நம் பாட்டிமார்கள் ஞாபகத்துக்கு வந்தனர். ஒரு வேளை "உரிமை", "முன்னேற்றம்", "சுதந்திரம்" என்பதையெல்லாம் விருப்பம் போல அர்த்தம் பண்ணிக் கொண்டால் கால்கள் தரையில் பாவாமல் இப்படித்தான் அரிசி கதை போல் ஆகுமோ சார்? சிகரம் தொடும் பொருட்டு முன்னேறி மேலேறுவது எல்லாம் சரிதான்...ஆனால் தரையில் நடக்கத் தெரியாது, நடக்க‌ விருப்பமுமில்லை என்றால் சிகரத்தில் ஏறி என்ன பயன்? காலம் கெட்டுத்தான் கெடக்கு சார்...!

Sunday, August 17, 2014

டெண்டுல்கர் இப்படி இருக்கலாமா?

சில நாட்களாக ஊடகங்களுக்கு கிடைத்த தீனி டெண்டுல்கர். இவர்கள் அனைவரும் அவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள் தான். ஆனால் கிரிகெட் மூலம் இனிமேல் அவரை வைத்து நேரம் ஓட்ட முடியாது. மாற்று வேண்டுமே! இந்த நிலையில் டிவி பத்திரிகைகள் கையில் வகையாய் மாட்டியிருக்கிறார் அவர்.

ஏதோ தேசத்துரோகம் செய்து விட்டது போல அவர் ராஜ்யசபாவிற்கு வராதது குறித்து ஆராயப்படுகிறது. நீங்கள் தானே "ஏற்றி" விட்டீர்கள். அப்போது கண்ணை கட்டிக் கொண்டு ஆதரித்தீர்களே? ஒரு கிரிகெட் வீரர் நாட்டை மாற்ற புரட்சி ஏதேனும் செய்வார் என்று நினைத்தீர்களோ? அவர் பாட்டுக்கு எதைப் பற்றியும் கவலையின்றி ஊர் ஊராகச் சென்று ஏதேதோ நிகழ்ச்சிகளில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விட்டு விடுங்கள் சார்...புகழின் முக்காடு போட்டுக் கொண்டிருந்த அவருக்கு "எனக்கெதுக்கு இப்பதவி என்னால் ஆக்கபூர்வமாக செயல்பட முடியாது நேரமும் இல்லை" என்று சொல்லும் நினைப்பிருந்திருக்காது. அல்லது அப்படி ஏதும் சொல்லியிருந்தால் நாம் சும்மாதான் விட்டு விடுவோமா? "என்ன ஒரு அகங்காரம்... தாய் மண்ணை காக்கும் பொறுப்பு கொடுத்தும் நேரமில்லை என்று சொல்கிறாரே" என்று அடித்து தூள் பண்ணியிருப்போமே! சொல்லுங்கள் சார், எப்படி பேசினாலும் இடக்காக பார்க்கும் கூட்டம் நிரம்பியிருக்கும் நாட்டில் அவர் என்னதான் செய்வார்? அதனால் தான் மனிதர் வாயே திறப்பதில்லை.

"வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்" என்பார்கள். அது அனைத்துக்கும் பொருந்தும். நன்றாக விளையாடியவர் என்பதால் சற்றும் சம்பந்தம் இல்லாத பொறுப்பைக் கொடுத்து உட்கார்த்தினால் இந்த லட்சணத்தில் தான் இருக்கும். நல்ல வேளை இந்தியாவின் மானத்தை கிரிகெட்டில் காப்பாற்றியிருக்கிறார் என்பதற்காக ராணுவ தளபதியாக இருந்து தாய்நாட்டை காப்பாற்றுங்கள் என்று ஏதேனும் செய்யாமல் விட்டார்களே என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்.

சரி டெண்டுல்கர் செய்த தவறு என்ன? அவரவருக்கு ஒரு எல்லை உண்டு. தன் திறமை, பண்பு, ஆர்வம், சாத்தியக்கூறுகள் அனைத்தையும் கலந்து வரையப்பட்ட எல்லை. அந்த எல்லையை அறிதல் ஒரு வகை பக்குவம். அத்தகைய பக்குவம் பெற்றோர் தான் செய்யக்கூடியது என்ன, செய்யத் தகுதியானது என்ன என்பதை அறிந்திருப்பார்கள். கெளரவம் கிடைக்கிறது என்பதற்காக கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போய் கொண்டிருக்க மாட்டார்கள். இதைத்தான் செய்யாமல் விட்டிருக்கிறார்.

யாருக்குத் தெரியும், இந்நேரம் அரசியல் பாலபாடம் ஏதேனும் கற்று வந்து, "சபைக்கு வந்தால் தான் மக்கள் சேவையா நான் மக்களுடன் மக்களாக இணைந்து களத்தில் அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தேன்" என்று ஒரே போடாக போட்டால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும்?

டெண்டுல்கருக்கு ஒரு வேண்டுகோள். சபைக்கு வாருங்கள். உங்களை விட தகுதியற்றவர்கள் எல்லாம் அங்கு ஊருக்கு உழைக்கும் உத்தமர்களாக உலா வருகிறார்கள். எண்பதுகளில் ஒரு மதுரை எம்பி பற்றி காமெடியாகச் சொல்வார்கள். அவர் வருடத்திற்கு இரண்டு முறை பாராளுமன்றத்தில் பேசுவாராம். கோடைகால கூட்டத் தொடரின் போது "ஃபேன் போடுங்க" என்பாராம். குளிர்கால கூட்டத் தொடரின் போது "ஃபேனை அணைங்க" என்பாராம். அது போலவாவது எதையாவது பேசலாமே(!?) சார்! இல்லையென்றால் "ஒவ்வொரு ஊரிலும் பட்டி தொட்டியெங்கும் கிரிகெட் மைதானங்கள் அமைக்க அரசு திட்டமிட வேண்டும்" என்று அடித்து விட்டால் சபையில் அனைவரும் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து வரவேற்பார்களே! எதற்கென்று தெரியாமலேயே மேஜையை தட்டுவது நம் சபை நாகரிகத்தில் ஒன்றல்லவா? எப்படியிருந்தாலும் மேஜையை தட்டுபவர்கள் பயனுள்ளவற்றுக்கா தட்டிக் கொண்டிருக்கிறார்கள்? எனவே யோசியுங்கள் மிஸ்டர் டெண்டுல்கர். அதற்காக ரொம்பவும் யோசிக்காதீர்கள்...நம் நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒன்றும் செய்யாமல் மட்டும் இருந்து விடக் கூடாது. எனவே எதையாவது செய்யுங்கள்! யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எதையாவது பேசியோ செய்தோ அது குண்டக்க மண்டக்க என்று ஆகிப் போனாலும் கவலையில்லை. மிஞ்சிப் போனால் நாலு நாள் தொலைகாட்சிகளில் அனல் பறக்கும் விவாதம் நடக்கும். அதற்குள் இதை விட அதிக அசிங்கமான அதிர்ச்சியூட்டும் ஏதேனும் ஒரு செய்தி வரும். எல்லோரும் அதைப் பற்றி விவாதிக்க கிளம்பி விடுவோம். இது பாரத நாட்டின் மாண்பு என்பது டெண்டுல்கருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?

Sunday, July 27, 2014

அது மட்டுமா அசிங்கம்?

அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சென்ற வாரம் நம் அனைவருக்குள்ளும் ஊடுருவியது... அதிர்ச்சிகள் எப்படியிருப்பினும் சகித்துக்கொள்ளும் அளவுக்கு புரையோடிப்போன சமூகத்தின் அறிகுறியாய் இருக்கக்கூடிய மற்றுமொரு அதிர்ச்சி அது. பெங்களூரில் பெயர் பெற்ற பள்ளி ஒன்றின் வளாகத்துக்குள்ளேயே ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் அதை பள்ளியில் பணிபுரிபவர்களே செய்திருக்கிறார்கள் என்பதுமான செய்திகளை பார்க்கும் பொழுது ஏற்படும் அதிர்வலைகளைத் தாண்டி பள்ளிகள் குறித்த நம் பார்வையும் நம் சிந்தனைக்கு எட்டுகிறதா? எட்டினாற்போல் தெரியவில்லை...!
வழக்கம்போல் சீறியெழுதல்கள், போராட்டங்கள், விவாதங்கள் என பயன் அற்ற பழகிப் போன போலித்தனங்கள் ஒருபுறம் இருக்கட்டும்... இச்சம்பவம் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எத்தனை நடந்திருக்கிறதோ எத்தனை வெளிவரவில்லையோ! ஆனால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற லட்சணத்தில் தான் நம் கல்வி வியாபாரம் கடை விரிக்கப்பட்டிருக்கிறது. சம்பவத்தினால் கொதித்தெழும் பெற்றோர் மற்றும் சமூக நோக்குடையோரிடம் சில கேள்விகள்:
1. "இந்த பள்ளியில் என் பிள்ளை / பெண் படிக்கிறார்" என்று சொல்லிக் கொள்ள விரும்பி, அதன்மூலம் சமூக அடையாளங்களையும் ஆதாயங்களையும் அடைய விரும்பி, பகட்டான பள்ளிகள் கேட்கும் பணத்தை அள்ளிக் கொட்டி, முழுத்தொகைக்கும் ரசீது தரப்படாது என்று அடாவடி காட்டும் நிர்வாகத்திற்கு தலையாட்டி நம் பகட்டை வெளிக்காட்ட முயற்சிக்கிறோமே இந்த அவலத்தை எதிர்த்து நிற்கும் தைரியமும் இப்படிப்பட்ட பள்ளிகளில் எதற்கு நம் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நேர்மை மிக்க யோசைனைத் திறனும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? இனியாவது இருக்குமா?
2. பள்ளிகள் பெற்றோரிடம் பல்வேறு கண்டிஷன்கள் அடங்கிய விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்குகின்றன...அதில் "மாணவ மாணவியருக்கு என்ன நடந்தாலும் பள்ளி பொறுப்பிலை" என்று கூட பல பள்ளிகளில் இருக்கிறது. இந்த‌ விவகாரத்தில் கூட பல பெற்றோர்கள் இந்தப் பள்ளியின் மீது இதே புகாரை வாசித்தனர். இவர்கள் அனைவருமே படித்த அதிமேதாவிகள்! கையெழுத்துப் போட்டு பள்ளியில் சேர்க்கும் பொழுது வாயை மூடிக்கொண்டு ஏன் இருந்தார்கள்? கேள்வி கேட்டால் பேர் பெற்ற பள்ளியில் சீட்டு கிடைக்காது என்பதாலா? இப்போது கூப்பாடு போட்டு என்ன பயன்?
3. கூட்டுக் குடும்பம் என்பது கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டது. குழந்தைகள் மீது முழுக்கவனமும் செலுத்த பெற்றோருக்கு நேரமும் இல்லை, தங்கள் "கேரியரை" விட்டுக் கொடுத்து குழந்தையை நன்றாக வளர்க்க எவருக்கும் மனமுமில்லை. இந்த சமூக சீர்கேட்டை பயண்படுத்தி பள்ளிகள் ஏதேதோ "ஆக்டிவிடீஸ்" என்ற பெயரில் பணத்தை பிடுங்குகின்றன. பிள்ளைகள் பள்ளிகளில் நீண்ட நேரம் இருக்கிறார்கள். இத்தகைய பெற்றோருக்கும் எவ்வளவு நேரம் குழந்தை வெளியில் (பள்ளியில்)இருக்கிறதோ அவ்வளவு "பளு" நமக்கு குறைவு என்று நினைக்கின்றனர். எவ்வளவு பணம் குழந்தை மீது செலவழிக்கிறோமோ அவ்வளவு நன்றாக குழந்தையை வளர்க்கிறோம் என்பது அதிமேதாவிகளின் முட்டாள்தனம். அவ்வளவு நன்றாக குழந்தை வளரும் என்பது அதைவிட அதிமுட்டாள்தனம். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி அதை பள்ளிகளில் கொட்டும் படித்த முட்டாள்களான நமக்கு இது புரியாதா? அல்லது புரிந்தும் ஏதும் செய்ய இயலாத "சமூக விசை" இதில் இருக்கிறதா? அதிக‌ம் ப‌ண‌ம் த‌ந்து பெறும் எதுவும் அதிக‌ த‌ர‌மான‌தாக‌ இருக்கும் என்ற‌ முட்டாள்த‌ன‌ ந‌ம்பிக்கை ந‌ம் மூளைக‌ளில் ஏறி மாமாங்க‌ம் ஆகி விட்ட‌தே!
4. இந்த சம்பவத்தில் பள்ளி நிறுவனர் தனக்கு எதுவும் தெரியாது என்று பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இப்படி ஒரு புளுகு புளுகி தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது யார்? இச்சமூகமே அந்த நம்பிக்கையை அவருக்குக் கொடுத்திருக்கிறது.இன்று கல்வி என்பது மிகப்பெரிய வியாபாரம். பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் அதைத்தான் செய்யும். குளுகுளு வகுப்பறைகள் என்றவுடன் மகிழ்கிறோம்...இயற்கையுடனான தொடர்பை சிறு வயதிலேயே துண்டிக்கும் அறிவற்ற தன்மை இதில் இருக்கிறது என்று யோசித்தோமா? ஒரு உல்லாச விடுதிக்கு உரிய அனைத்து வசதிகளும் இருப்பதாக நீண்ட லிஸ்டை பள்ளிகள் நீட்டும் பொழுது நாம் புளுகாங்கிதம் அடைகிறோம். அறிவு மற்றும் பண்பின் பரிமாணங்கள் பயிற்றுவிக்கப்படும் அறிகுறிகள் கொண்ட அம்சங்கள் அந்த லிஸ்டில் இருக்கிறதா என்று யோசிக்கின்றோமா?
5. இப்பொழுது நம் நாட்டில் புதிய புரட்சி ஒன்று புறப்பட்டிருக்கிறது. கேண்டில் லைட் போராட்டம்! ஒரு நாள் மெழுகுவர்த்தி ஏத்தி அதில் அகலக் கூடியதா நம் சமூக அழுக்கு? அதைப் பற்றி என்ன அக்கறை? ஒரு நாள் போராட்டம் நடத்தி விட்டு நாம் அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவோம்... சில வாரங்களில் "பழைய குருடி கதவை திறடி" கதை தான் நம் நாட்டில் சாசுவதமானது என்பது அக்கிரமக்காரர்களுக்கும் தெரியும் அவர்களை தண்டிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களுக்கும் தெரியும்.
"உயர் தரம்" என்பதற்குள்ளே உளுத்துப் போனவைகள் இருப்பது இதனால்தான்.  எனவேதான் ஒரு பள்ளியின் உள்ளேயே இத்தகைய வக்கிரம் நடந்த பின்னும் வெளிவர பத்து நாட்கள் ஆனது. வெளிவந்த பின்னும் லட்ச லட்சமாய் கொட்டிக் கொடுத்த பெற்றோர்களின் கூக்குரல்களைப் பொருட்படுத்தாமல் சாவகாசமாக பள்ளி நிறுவனர் முகம் காட்ட இரண்டு நாட்கள் ஆனது...பள்ளிக்குள் நடக்கவில்லை என்று முதலில் பொய் சொல்லி பிறகு மாற்றிப் பேச முடிந்தது...பள்ளிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறையை வைத்துக் கொண்டே பொறுப்பிலிருந்து நழுவ முடிந்தது...இது போன்ற‌ ப‌ள்ளிக‌ளின் மீது கூப்பாடு போட்டு என்னாக‌ப்போகிற‌து? அத்த‌னை பெற்றோர்க‌ளும் சேர்ந்து, அத்த‌னை மாண‌வ‌ர்க‌ளையும், இந்த‌ப் ப‌ள்ளி நமக்குத் தேவையில்லை என்று வில‌க்கிக் கொள்ளும் தைரிய‌ம் ந‌ம‌க்கு இருக்கிற‌தா? அப்ப‌டி ந‌ட‌ந்தால் அடுத்த‌ வ‌ருட‌மே ப‌ள்ளி தானாக‌வே இழுத்து மூட‌ப்ப‌டும். பள்ளிகளுக்கு பயம் வரும். எப்படியெல்லாம் காசு பண்ணலாம் என்று யோசிப்பவர்கள் தரம் பற்றியும் சற்று யோசிப்பார்கள். நம்பகமான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமாவது பள்ளிகளுக்கு வரும். இதெல்லாம் ந‌ம்மால் முடியாது. ஏனென்றால் பிள்ளைக‌ளின் ஒரு வ‌ருட‌ம் வீணாகி விடுமே! அவ‌ர்க‌ளின் ஐஐடி ஐஐஎம் அமெரிக்கக் க‌ன‌வுக‌ள் என்னாவ‌து? இதே சாக்கடையில்தானே நாமும் காசு கொட்டி பட்டம் பெற்று "செட்டில்" ஆன பின் வீட்டில் சோபாவில் அமர்ந்தபடி "இந்த எஜுகேஷன் சிஸ்டமே மோசமா போச்சப்பா..." என்று நீலிக்கண்ணீர் வடித்து போலித்தனமாய் கதை பேசிக் கொண்டிருக்கிறோம்? இது தான் ந‌ம் ச‌மூக‌ப் பொறுப்பின் ல‌ட்ச‌ண‌ம்.
முத‌லில் பெற்றோர் மற்றும் சமூக பங்களிப்பாளர் என்ற‌ பொறுப்பை நாம் எத்த‌னை ச‌த‌வீத‌ம் நிறைவேற்றுகிறோம் என்று பாசாங்கின்றி யோசிப்போம். ஏகப்பட்ட அழுக்குகள் வெளிவரும்! பிறகு இது போன்ற வக்கிரங்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் அதில் ஒரு நேர்மை இருக்கும். நேர்மை தோற்றதாக விதி இருக்கிறதா என்ன‌?