/ கலி காலம்

Sunday, July 13, 2014

இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்?



சென்ற வாரம் நம் "தேச பக்தர்கள்" நம்மை புல்லரிக்க வைத்த விதம் அலாதியானது. இதென்ன "தேச பக்தி" போன்ற வார்த்தையெல்லாம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள். அதான் சார் நம் கிரிகெட் ரசிகர்கள் இருக்கிறார்களே... அவர்கள் தானே பாரதத் தாயின் தவப்புதல்வர்களாக வலம் வருகிறார்கள். அவர்களை தேசபக்தர்கள் என்று அழைக்கா விடில் வேறு யார் தேசப்பக்திக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

சரி, விஷயத்திற்கு வருவோம்...மரியா ஷரபோவா என்னும் டென்னிஸ் வீராங்கனை, டெண்டுல்கர் யார் என்று தெரியாது என்று சொல்லி விட்டாராம். அவ்வளவு தான். ஏதோ பாரதத்தாயை இழிவு படுத்தியது போல பொங்கிப் புறப்பட்டு விட்டது நம் தேசப்பக்தர்கள் படை! வேறெங்கு போகும் இந்தப் படை? இருக்கவோ இருக்கிறது சமூக ஊடகங்கள்! எனவே தரக்குறைவு என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல திட்டித் தீர்த்து விட்டார்கள் நம் தேசபக்தர்கள்.

எப்போதுமே நம்மை நாமே அதிமேதாவிகளாக பாவிக்கும் நினைப்பு நமக்கு உண்டு. குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிப் பழகியதால் வந்த அதிமேதாவித்தன நினைப்பு இது. அப்படித்தான் நமக்குத் தெரிந்த கிரிகெட் உலகம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான நினைப்பும் நமக்குள் ஊறியிருக்கிறது.

மரியா ஷரபோவா டெண்டுல்கரை தெரியாது என்று சொன்னது இருக்கட்டும். நம் தேசபக்தர்கள் மூளையை ஒரு கையால் தட்டி, மறுகையை இதயத்தில் வைத்து தனியாக அமர்ந்து ஒரு நிமிடம் யோசிப்பார்கள் எனில், அவர்களின் முட்டாள்தனம் மூளைக்கு எட்டாது போகுமா? நம்மில் எத்தனை பேருக்கு இந்தியாவின் ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் பெயர் தெரியும்? சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி கூட போகாவிடிலும் ஏகப்பட்ட கோல்களை தடுத்த கோலி ஸ்ரீஜிஷ் என்பவரை நமக்குத் தெரியுமா? அட, நம் நாட்டின் சார்பாக எத்தனை விளையாட்டுகளுக்கு
அணிகள் இருக்கின்றன என்ற விபரமாவது நமக்குத் தெரியுமா?

கிரிகெட் என்றால் என்னெவென்றே அறிய வாய்ப்பில்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெண்டுல்கரைத் தெரியாது என்றாராம் இவர்கள் வெகுண்டெழுந்து தங்களின் "பக்தியை" காட்டுவார்களாம்! உலக மக்கள் தொகையில் சொற்பமான மக்கள் ரசிக்கும் விளையாட்டு கிரிகெட். அந்த விளையாட்டை திறமையாக விளையாடுபவர்களில் ஒருவர் டெண்டுல்கர். அவ்வளவே. அதற்கு மேல் எதுவுமே இல்லை. டெண்டுல்கர் என்பவர் உலகம் உய்ய வழி காட்டிய புத்தரும் அல்ல சத்தியத்தின் பாதையை பார் முழுதும் பரப்பிய காந்தியும் அல்ல.

ஆமாம்..."இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்" என்று தலைப்பு வைத்து விட்டு இப்படி எழுதுகிறீர்களே என்கிறீர்களா? இந்தப் பெண்ணை ஒன்று செய்யலாம். நன்றாக பாராட்டலாம்! தெரியாததை தெரியாது என்று சொன்னதற்கு...அத்தகைய பாராட்டுக்களை யார் தெரிவித்தால் பொருத்தமாக இருக்கும்? நாமேதான்! நம்மவர்களே தான்! ஏனென்றால், தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதில் நம்மவர்களுக்கு நிகர் நாம் தானே? வாருங்கள், யார் என்று தெரியாதவரை, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாதவரை, தெரியாது என்று சொன்ன மரியா ஷரபாவோவை பாராட்டுவோம்!

Sunday, July 6, 2014

யாருக்கும் வெட்கமில்லை!

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது...தென்னகத்தின் செல்லக் குரலுக்கான பிரம்மாண்டமான தேடல் என்று சொல்லிக் கொள்ளப்படும் நிகழ்ச்சி...பல வருடங்களுக்கு முன், இசையின் மூலம் பெறும் உணர்வுகளின் நெகிழ்ச்சியை உள்ளத்துக்குள் ஊடாட வைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இன்று கோமாளிகளின் கூத்து பார்க்கிறோமா அல்லது உண்மையிலேயே இசை நிகழ்ச்சியா என்று நம்மை கிள்ளிப்பார்த்துக் கொள்ளத் தூண்டும் அவலமாக மாறிப்போன ஒரு நிகழ்ச்சி...சரி, என்ன விஷயம் என்கிறீர்களா? நீண்ட நாட்களுக்குப் பின் இந்நிகழ்ச்சியைக் காணும் "பாக்கியம்" மீண்டும் வாய்த்தது. பாக்கியம் மட்டுமா? நம் சமூக முன்னேற்றங்களைக் கண்டு புல்லரிக்கும் வாய்ப்பையும் அல்லவா சேர்த்து வழங்கியது அந்நிகழ்ச்சி...
ஒரு பத்து வயது சிறுவன் பாடுகிறான்...வழக்கம் போல தொகுப்பாளர்கள் தங்கள் சிந்தனை முத்துக்களை, கருத்தாழம் மிக்க காவிய வார்த்தைகளை அவ்வப்பொழுது அள்ளித் தெளிக்கிறார்கள். நாம் மதிப்பு வைத்திருக்கும் பழைய‌ பாடகர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்கிறார்கள்...பிறகு அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...எந்த சமூகத்தில் பெண்கள் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே போகிறது என்று கூப்பாடு போடப்படுகிறதோ, எந்த சமூகத்தில் ஆண்கள் அனைவருமே பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கக் கூடியவர்கள் என்ற சித்தரிப்பு இருக்கிறதோ, எந்த சமூகத்தில் குழந்தைகள் நல்வளர்ப்பு பற்றி வெற்றுப்பேச்சு மட்டுமே நிறைந்திருக்கிறதோ அத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தமிழ் சமூகம் கண்டு மகிழ்ந்து போற்றும் அந்த நிகழ்ச்சியில், அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...
அமெரிக்காவிலிருந்து வந்து பாடும் ஒரு இளம்பெண் "கெஸ்டாக" அமர்ந்திருக்கிறார். பத்து வயது கூட நிரம்பாத சிறுவன் ஒருவன் பாடி முடித்தபின் பெண் தொகுப்பாளினி, "என்னை ஆறாவது கேர்ள் பிரண்டாக நீ ஏற்றுக் கொள்வாயா" என்று அந்த அமெரிக்கப் பெண்ணிடம் கேள் என்று அந்தச் சிறுவனைத் தூண்டுகிறார். அரங்கமே கைதட்டி ஊக்குவிக்கிறது! அந்தச் சிறுவனும் கால் மடித்து அமர்ந்து கைநீட்டி அமெரிக்கப் பெண்ணிடம் அவ்வாறே வேண்டுகிறான்...அதைப் பார்க்கும் மற்றொரு பெண் தொகுப்பாளினி, டேய் உனக்கு நானா அமெரிக்கப் பெண்ணா அல்லது அந்த மற்றொரு தொகுப்பாளினியா என்று சொல்லச் சொல்கிறார். அரங்கம் முழுவதும் நிறைந்திருக்கும் சிறு மனங்களில் நச்சின் நாற்றம் வீசப்படுகிறது...

அந்த நாற்றத்தின் சுவாசம் பெற்ற சிறுவனும், "நீங்க ஓல்டு மாடல். அவங்க அமெரிக்கா" என்று தனது தேர்வு முறையை விளக்குகிறான். அரும்பெரும் சொற்பொழிவு கேட்டது போல அரங்கம் புளுகாகிதம் அடைந்து கூச்சலில் குதிக்கிறது. தரமானவர்கள் என்று நாம் நம்பும் நடுவர்களும் கைதட்டிச் சிரிக்கிறார்கள். "தோழி" என்றால் என்ன அர்த்தம் என்று இந்நிகழ்ச்சி பார்க்கும் அத்தனை சிறுவர் சிறுமிகளும் "விபரமாக" புரிந்து கொள்ளும் பெரும்பணியினை செய்த அத்தனை பேரும் பெண்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பாடல் வரியின் ஸ்வரஸ்தானங்களில் பாடுபவர்கள் செய்யும் தவறுகளுக்கே ஏகப்பட்ட "டிப்ஸ்" கொடுக்கும் இந்த நடுவர்கள், நாளை ஒரு தலைமுறையாக மாறப்போகும் பிஞ்சுகளின் நஞ்சை விதைத்து சிதைக்கும் அவலம் நேர்கையில் சிரித்து மகிழ்ந்தது ஏன்? நடுவராக வந்த மூவரில் இருவர் பெண்கள். "என்ன நடக்குது இங்க... இப்படியா பொது நிகழ்ச்சியில் அதுவும் சிறுவர்களிடம் உரையாடுவது" என்று கேட்கவா முடியும்? நடுவர் சான்சு போய்விடுமே! சிறுமிகள் கூட கொடுமைக்குள்ளாகும் நிகழ்வுகள் பெருகுவது குறித்து கொதித்தெழும் பெண்ணுரிமை அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? பெண்ணியம் பேசுபவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு வேளை ஆண்களுக்கு எதிராக மட்டும் தான் இவர்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்களோ?? இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு சிறுவன் நாளை பள்ளியிலோ சாலையிலோ, இதே போலோ இதையும் மீறியோ ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டால் குற்றவாளி யார்?

ப‌ல‌ ல‌ட்ச‌ம் பேர் பார்க்க‌க்கூடிய‌ ஒரு நிக‌ழ்ச்சியில், ச‌ற்றும் பொறுப்பின்றி தனக்குத் தோன்றிய‌தை எல்லாம் பேசும் தொகுப்பாள‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? தான் பேசுவ‌து போதாதென்று விப‌ர‌ம் அறியா சிறுவ‌ர் சிறுமிக‌ளை த‌ர‌க்குறைவாக‌ ந‌ட‌க்க‌த் தூண்டும் அவ‌ர்க‌ளின் அசிங்க‌ங்க‌ளை என்ன‌ செய்ய‌? இவ‌ற்றையெல்லாம் பார்த்தும் ஆட்சேப‌ம் ஏதும் தெரிவிக்காம‌ல் அல‌ங்கார‌மாய் வீற்றிருக்கும் ந‌டுவ‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? த‌ங்க‌ள் க‌ண்ணெதெரிலேயே த‌ங்க‌ள் ம‌ற்றும் பிற‌ குழ‌ந்தைக‌ள் ம‌ன‌தில் விஷ‌ம் விதைக்கும் ப‌ணி ந‌டைபெறுவ‌தை பார்த்தும் பைத்திய‌ங்க‌ள் போல‌ அதில் ப‌ங்கேற்றுச் சிரிக்கும் பெற்றோர்க‌ளை என்ன‌ செய்ய‌? ஒரு ப‌க்க‌ம் அக்கிர‌ம‌ங்க‌ளை க‌ண்டு பொங்குவ‌து போல‌வும் ம‌றுப‌க்க‌ம் அதை மெளனமாய் அனுமதிப்பதும் முடிந்தால் அதையே கூட உள்ளுக்குள் ரசிப்பதுமாய் இர‌ட்டை வேட‌ம் போடும் ந‌ம் அனைவ‌ரையுமே என்ன‌ தான் செய்ய‌? வெட்கம் கெட்ட சமூகத்தில் வாழும் நாம் விவஸ்தை அற்ற மனிதர்களாய் திரிவதில் வினோதம் ஏதும் இல்லையே!

Sunday, May 4, 2014

பிரபலங்களின் ஓட்டு - திடுக்கிடும் தகவல்கள்!

கடந்த வாரம் தேர்தல் நடந்தாலும் நடந்தது... எந்த பத்திரிகையை புரட்டினாலும் சரி ஒரே ஓட்டு சமாச்சாரம் தான்..."ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" ஞாபகம் வரும் வண்ணம் எப்படியெல்லாம் செய்தி போடுகிறார்கள் சார்! மக்களின் பொது அறிவை மேலும் வளர்க்கும் வண்ணம் எப்பேர்ப்பட்ட பெரும்பணி ஆற்றுகின்றன நம் பத்திரிகைகள்...!இதையெல்லாம் படித்த பின் நமக்கும் செய்தியாளர் ஆகும் ஆசை வராமல் இருக்குமா சொல்லுங்கள்? இதோ நம் கை வண்ணத்தில் "தேர்தல் தினம்" பற்றிய செய்திகள் நீங்கள் படித்து மகிழ...!

          "பிரபலங்கள் ஓட்டு - திடுக்கிடும் தகவல்கள்!"

நமது சிறப்பு நிருபர் ‍-

நேற்று நடந்த தேர்தலில் தமிழ் நாட்டின் பிரபலங்கள் பலர் ஓட்டு போட்டதால் சென்னை முழுவதும் பரபரப்பு நிலவியது. இது குறித்த விபரங்கள் வருமாறு:

தேர்தல்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. சுதந்திரம் அடைந்தது முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நம் நாட்டில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். முன் எப்போதும் இருந்திராத அளவில் இந்த முறை தேர்தல் களம் சூடு பிடித்து பல வாரங்கள் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் நேற்று
தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு துவங்கிய காலை ஏழு மணி முதலே ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு

விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் சுமார் 73% சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. இதில் ஆண்கள் 72% சதவீதமும் பெண்கள் 74% சதவீதமும் வாக்கு பதிவு செய்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நமது சிறப்பு நிருபர் குழு தமிழகம் முழுவதும் திரட்டிய தகவல்களின் படி ஆண்களில் 60% பேர் சர்ட் அணிந்து வந்து ஓட்டளித்ததாகவும் 30% பேர் டி‍‍சர்ட் அணிந்து வந்ததாகவும் தெரிகிறது. வெயில் அதிகம் இருப்பதால் தான் பருத்தியிலான டிசர்ட் அணிந்து வந்திருப்பதாக சேலத்தில் முதல் முறையாக வாக்களித்த சேகர் என்னும் இளைஞர் நமது நிருபரிடம் தெரிவித்தார்.

ஐந்தாம் பத்தி பார்க்க‌...

<<..மர்ம அழகி மாயம்! போலீஸ் வலைவீச்சு....!! >>

இரண்டாம் பத்தி தொடர்ச்சி...

கமல்

நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டின் அருகில் உள்ள வாக்கு மையத்தில் தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், "ஓட்டளிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. ஜனநாயக உரிமை என்றும் சொல்லலாம். கடமை என்பதே உரிமையான ஒன்று. கடமையற்ற உரிமையும் உரிமையற்ற கடமையும், உரிமைக்கும் கடமைக்கும் உரிமையான கடமைக்குரிய பயன் அளிக்காது. உரிமையாகவோ கடமையாகவோ அது இருக்காது" என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் நிருபர்கள் குழம்பிய நிலையில் நின்றிருந்தனர்.

ரஜினி

நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரஜினி காந்த். இவரின் இயற்பெயர் சிவாஜி ராவ். நேற்றைய தேர்தலில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டார்.

முதல் ஓட்டு

காலை 7.02க்கு ரஜினி ஓட்டு பொத்தானை அமுக்கி தனது ஒட்டை பதிவு செய்தார். அதற்கு முன் எவரும் அங்கு ஓட்டு போடவில்லை. எனவே ரஜினியின் ஓட்டே முதல் ஓட்டாக அமைந்தது. ஓட்டளித்த பின் வெளியே வந்த ரஜினி தனது மை தடவப்பட்ட விரலை உயர்த்திக் காட்டினார். வெள்ளை உடையணிந்து ரஜினி ஓட்டு பதிவு செய்தார். அவர் தற்போது பெரும்பாலும் வெள்ளை உடை அணிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்

அமராவதி படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் அஜித். இவர் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். பொதுமக்கள் பாராட்டும் வண்ணம் இவர் வரிசையில் நின்று வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னும் பின்னும் வரிசையில் பலர் நின்றிருந்தனர். வாக்களிக்க வரும் முன் ஷாலினி அஜித்தின் இடது பக்கமாகவும், வாக்களித்த பின் வலது பக்கமாகவும் நடந்து வந்தார்.

ஜெயலலிதா

தமிழ் நாட்டின் முதல்வரும் அதிமுக தலைவரும் ஆன ஜெயலலிதா, சசிகலாவுடன் இணைந்து வந்து வாக்களித்தார். ஜெயலலிதாவின் கண்ணாடி சசிகலாவின் பையில் இருந்தது. 10.23க்கு தனக்குக் கண்ணாடி வேண்டும் என்று சசிகலாவை நோக்கி ஜெயலலிதா சைகை செய்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. பிறகு கண்ணாடி அணிந்தபடி ஜெயலலிதா தனது வாக்கை பதிவு செய்தார்.

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது தனது ஜனநாயக கடமை ஆற்றினார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் கருணாநிதி ஐந்து முறை தொண்டையை செருமிக் கொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் இரண்டு கேள்விகளின் போது அவர் இடது கையை வலது கையின் மேல் வைத்தபடி பதிலளித்தார்.

தேனி!

ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள கம்மாபட்டி கிராமத்தில் வாக்குச்சாவடியின் உள்ளே தேனி ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறையின் சுவரில் வைக்கப்பட்டிருந்த ஏணியில் தேனி அமர்ந்திருந்ததாகவும் அவ்வப்பொழுது பறந்து வந்து இடையூறு செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை

நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 16ஆம் தேதி துவங்கும் என்றும் துவங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுகள் வெளிவரும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபலங்கள் நேற்று ஓட்டு அளிக்க பெருமளவில் வந்ததால் சென்னையில் பரபரப்பு நிலவியது.


Saturday, April 5, 2014

இது நம்ம கட்சி!

நமக்கு எல்லாவற்றிலும் சீஸன் உண்டு. அந்தந்த சீஸனில் அதற்கு தகுந்தால் போல் ந‌ம் "பற்று" மாறிக் கொண்டே இருக்கும். இப்போது தேர்தல் சீஸன். எத்தனை நாள் தான் கட்சிகளின் காமெடி டிராமாக்களை பார்த்துக் கொண்டே இருப்பது? நமக்கு போரடிக்காதா சார்?  எத்தனை நாள் தான் ஓட்டை மட்டும் போடுவது? மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடு படும் ஆசை நமக்கு மட்டும் வாராதா என்ன?

எனவேதான் நாமே ஒரு கட்சி துவங்கினால் என்ன என்று ஒரு யோசனை. திகைத்து நிற்காதீர்கள். முதுபெரும் தலைவர்கள் இருந்த நாட்டில் கட்சியும் அரசியலும் அத்தனை மலிவான கிள்ளுக்கீரை விஷயமாகி விட்டதே என்று நினைக்காதீர்கள். இப்பொழுதெல்லாம் கட்சி துவங்க ஒரு விவஸ்தையும் தேவையில்லை என்று உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுதானே?

கட்சி என்றால் கொள்கை வேண்டுமே சார்... என்ன கொள்கை வைக்கலாம்? தமிழ் நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் தமிழை காப்பாற்றுவது முக்கிய கொள்கையாக இருக்கிறது. தமிழுக்காக உயிர் விடும் தலைவர்கள் நிறைய பேர் இருப்பதால் தமிழை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவோம். பாவம் தமிழ். 
மேடை பேச்சில் மயங்கி மயங்கியே தமிழ்நாட்டை தலைகீழாக மாற்றிய‌ பெருமை கொண்டவர்கள் இல்லையா நாம்? எனவே நமது கொள்கைகளும் கொஞ்சு தமிழ் மொழியில் இப்போதைய கட்சிகளை மிஞ்சுவதாக இருக்க வேண்டாமா? உதாரணமாக,

"ஊழல் அற்ற சூழலுக்கு ஊது குழலாக இருந்து சூதுவாதற்ற அரசு அமைப்போம்" என்று முழங்கலாம்...

கச்சத்தீவு பற்றி பேசாமல் கட்சி நடத்த முடியுமா? "ஆதித் தமிழன் அரிசியை உலையிலும் கடலிலே வலையையும் போட்ட வரலாற்றை பறைசாற்றும் கச்சத்தீவை மீட்க இமயத்தின் உச்சதிற்கும் சென்று போராடுவோம்" என்று பொறி பறக்க பேசினால் தானே நாலு பேராவது நம்புவார்கள். கச்சத்தீவுக்கும் இமயமலைக்கும் என்ன சம்பந்தம் என்று யார் கேட்கப் போகிறார்கள்?

"ரோடு போடுவோம்" என்று சொன்னால் என்ன சார் சுவாரஸ்யம்? "காலை மாலை வேளையில் நீங்கள் வெளியே போகையில் காலை வைக்க சாலை தருவோம்" என்றால் கட்சியின் கவிஞர் அணிக்கு தலைமை தாங்கலாமே. ரோடு போட்டோமா இல்லையா என்று யாருக்கு கவலை?

"ஊசியாய் குத்தும் விலைவாசியை பற்றி யோசி தமிழா யோசி" என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசலாம்...

நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும்.
நம் கட்சியின் தலைவர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து வரக்கூடும். அவர்களை எல்லாம் பேர் மட்டும் சொல்லி அழைத்தால் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாம் என்ற பழி நேர்ந்து விடாதா? சாதா பேரில் என்ன சார் இருக்கிறது? பட்டம் வேண்டும் சார் பட்டம்... எனவே, நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும். "நெல்லையின் நெருப்பே" "மதுரையின் குதிரையே" "திருச்சியின் திருப்பமே"  "கொங்கின் சங்கே" என்று என்னவேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் சார்...

கொள்கையெல்லாம் கிடக்கட்டும் முதலில் கட்சிக்கு என்ன பெயர்? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. வல்லினம் மெல்லினம் இடையினம் இவற்றில் எல்லாவற்றையும் சீட்டு போட்டு குலுக்கிப் பார்த்தாயிற்று. எந்த காம்பினேஷன் வந்தாலும் ஏதோ ஒரு கட்சிப் பெயரின் சுருக்கம் மாதிரியே இருக்கு. பேசாமல் "மக்களே கட்சியின் உயிர் அப்புறம் எதற்கு பெயர்?" என்று ஒரே போடா போட்டு விடலாமா?

அது சரி தேர்தல் நெருங்கி விட்டதே நாற்பது தொகுதிகளும் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது என்று கேட்கிறீர்களா? கவலையே இல்லை சார். கட்சியிலே மொத்தம் இருபதே பேர்தான் என்றால் கூட ஆளுக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமே! "அகில இந்திய" என்ற சொல்லை கட்சியின் பெயரின் முன்னே சேர்த்தால் போதும். கட்சியின் பலம் பற்றி யார் சார் கேள்வி கேட்பது? அப்படியென்றால் "சைபர்" தான் கட்சியின் ரிசல்டா என்று கேட்கிறீர்களா? "பூஜ்யம் வெறும் கணக்கு ராஜ்ஜியமே எங்கள் இலக்கு" என்று சிரித்துக் கொண்டே பேட்டி கொடுக்க நமக்குத் தெரியாதா என்ன?

வாங்க சார் வாங்க பொதுக்குழு, செயற்குழு, பாராளுமன்ற குழு, பட்டிமன்ற குழு, நிர்வாகக்குழு, கலைக்குழு கவிதைக்குழு என்று எல்லா குழுக்களிலும் தலைவர் செயலாளர் பதவிகள் காத்திருக்கின்றன மக்கள் தொண்டாற்றும் மாபெரும் பணிக்கு உவகையுடன் அழைக்கிறோம் வாருங்கள்...!

படித்து முடித்து விட்டீர்களா? அநேகமாக இதற்குள் புதிதாக ஏதேனும் ஒரு கட்சி உண்மையிலேயே உருவாகியிருக்கக்கூடும்...அதனாலென்ன? தேர்தல் என்பது நம்மை பொறுத்தவரை அலுவலகத்தில் உணவு வேளையிலும் வீட்டிலும் அமர்ந்தபடி திகட்டத் திகட்ட வெட்டிப் பேச்சு பேசக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம். பொழுது போக்கு. வேறென்ன அக்கறை? நாம் எப்படிப் பட்டவர்கள் என்று நமக்குத் தெரியாதா என்ன?  உதாரணமாக, 
கக்கன் போன்ற ஒருவரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரி கட்டாந்தரையில் கவனிப்பாரின்றி கிடக்க விட்ட கூட்டம் நாம். காலம் மெதுவாகத்தான் வேலை செய்யும். இப்போது இருப்பவர்கள் போதாதென்று புதிது புதிதாய் தலைவர்கள் வருவார்கள், நாட்டையும் நம்மையும் சுரண்டுவார்கள். "கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி" என்பதற்கு அர்த்தம் விளங்கும் வரை அதுவே நமக்குச் சரியான தண்டனை.

Saturday, December 7, 2013

பாரத ரத்னா யாருக்கு?

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அறிவித்ததில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் அது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நமக்கு எப்பொழுதுமே எந்த விஷயத்திலுமே இரண்டு எல்லைகள் மட்டுமே தெரியும். ஒன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது இல்லையேல் காலில் போட்டு மிதிப்பது. ஒன்றை ஆராய்ந்து அதற்குரிய இடத்தில் வைப்பது என்பதை பற்றியெல்லாம் நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

முதலில் கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி, அதை ரசிப்பது என்பதை தாண்டி, கிரிகெட்டை தேசப்பற்றுடன் தொடர்புபடுத்தும் முட்டாள்தனத்தை நாம் நன்றாகவே வளர்த்துள்ளோம். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அது இரு நாடுகளின் போர் போல, வடிவேலு பாணியில் சொல்வதானால் "உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளப் படுத்த...", நாமே அதற்கு ஒரு சாயம் அடித்து களேபரப்படுத்துகிறோம். இதனால், கிரிகெட் வீரர்கள் தேசத்தை காப்பாற்றும் மாபெரும் தொண்டாற்றும் கள வீரர்கள் போல சித்தரிக்கப்பட்டு நம் அடிப்படை சிந்தனைகளே சிதிலமடைந்து கிடக்கிறது. இதன் மேல் எழுப்பப்படும் எத்தகைய எண்ணத்திலும் "லாஜிக்" இருக்குமா?

சச்சின் ஒரு மிகச் சிறந்த கிரிகெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை. கிரிகெட் விளையாட்டுக்காகவும், இந்தியா கிரிகெட்டில் பெரும் வெற்றிகள் பெறவும் அவரின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் மகத்தானவை. அவரின் திறமைக்காக இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள விளையாட்டுத் துறைகளின் எத்தனை விருது வழங்கினாலும் தகும். ஆனால், அத்துடன் அந்த வட்டத்தின் எல்லை நின்று விடுகிறது. சமூகத்திற்கும் அவரின் திறமைக்கும் பொழுது போக்கைத் தவிர வேறெந்த நலன் சார்ந்த தொடர்பும் இல்லை. பலர் அவரை "நாட்டின் தூதுவர்" போலச் சித்தரிக்கின்றனர். அதுவும் முழுமையல்ல. முன்னர் ஒரு முறை வெளிநாட்டு கார் ஒன்று அவருக்கு வழங்கப்பட்ட போது அதற்கான வரி செலுத்துதலில் அவர் நழுவிய பொழுது முதன் முதலாக அவரின் "சமூக இருப்பு" பற்றிய நம்பிக்கை சறுக்கியது. அந்த விவகாரத்தை முடிக்க, காரை வேறொருவருக்கு விற்றதில் மேலும் வழுக்கியது...

ராஜ்ய சபா எம்.பி ஆனார். இதுவரை ஏதேனும் பேசியிருக்கிறாரா?
முதலில், ஆண்டு முழுவதும் போட்டிகளில் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்குமே இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டால் அவையில் என்ன பங்களிப்பு நாம் செய்ய முடியும் என்று சிந்தித்திருந்தால், "ஓய்வு பெறுவதற்கு முன் இந்தப் பதவி எனக்குப் பொருந்தாது" என்று சொல்லியிருப்பார். நாம் அவரிடம் உள்ள பொது நேர்மை குறித்து கொண்டாடியிருப்போம்.

இவர் சில வருடங்களாக ரன்கள் எடுக்கத் திணறிய போது விமர்சனங்கள் எழுந்தன. அப்பொழுது அவர் "எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று நான் தான் முடிவு செய்வேன்" என்றார். சற்றே நிதானம் இழந்தது போலத்தான் இருந்தது. நல்ல வேளை, மேலும் ஏதேனும் அவர் பேசி தன் மதிப்பை மேலும் இழப்பதற்கு முன், பல ஆண்டுகள் அவரின் பங்களிப்பை கருத்தில் கொண்டு காலம் அவருக்கு நூறாவது சதத்தை வழங்கியது. இல்லையேல் நம் கிரிகெட் வாரியம் ஏதேனும் செய்து ஆப்கானிஸ்தானுக்கு கூட "டெஸ்ட் ஸ்டேட்டஸ்" வாங்கிக் கொடுத்து அங்கு சச்சினுக்கு போட்டி ஏற்பாடு செய்து சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கும் என்பது வேறு விஷயம்!

இன்றைய கால கட்டத்தில் "மனிதர்களை" பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இதில் "மாமனிதர்" ஒருவரை எளிதில் பார்க்க முடியுமா என்ன? "பாரத ரத்னா என்பது மிகப்பெரிய விருது. நான் சமூகத்திற்கு அத்தகைய பங்களிப்பு செய்யவில்லை என்று நினைக்கிறேன்" என்று அவர் விருதை நிராகரித்திருந்தால் அவர் மாமனிதர் ஆகியிருப்பார்.

நம்மால் நிதானமாக, கூறு கூறாக எதையும் ஆய்ந்து அதன் பல்வேறு பக்கங்களைப் பிரித்து பார்க்க முடியவில்லை. கிரிகெட்டை தேசபக்தியாக நினைக்கும் முட்டாள்தனம் நம்மிடம் இருக்கும் வரை, இது போன்ற பொருத்தமற்ற செயல்கள் நாட்டில் நடந்து கொண்டேதான் இருக்கும். நல்ல வேளை சச்சின், மைதானத்திலும் வெளியிலும் தனது துறை சார்ந்த ஒழுக்கத்தில் சிற‌ப்பாக நடந்து கொண்டிருக்கிறார் என்று நாம் நிம்மதி அடைய வேண்டியதுதான்.
ஏனென்றால், இப்பொழுது புதிதாக் கிளம்பியிருக்கும் விராட் கோலி என்னும் வீரர் ரன்களாக வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார். ரசிக வர்க்கம் அவரை தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறது. அவர் சென்ற ஆண்டு, புகழ் பெறத் துவங்கும் பொழுதே அதன் போதை தலையில் ஏறி, பல கோடி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு போட்டியின் போதே அச்சில் ஏற்ற முடியாத அநாகரீக செய்கை செய்து நம்மை தலை குனிய வைத்தார். அதெல்லாம் நமக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது. ஒரு சிக்ஸ்ர் அடித்தாலே அனைத்தும் மறைந்தோடி விடுமே...எனவே எதுவும் நம் நாட்டில் நடக்கும். அவருக்கும் பல ஆண்டுகள் கழித்து பாரத ரத்னா விருது வழங்கினாலும் வழங்குவோம். ஏனென்றால் நமக்கு கிரிகெட் என்றால் தேசபக்தி. வேறெதுவும் யோசிக்கவும் தேவையில்லை யோசனைக்கும் வாராது!தகுதியற்றவர்கள் விருது பெறுவதும் தகுதியுள்ளவர்கள் அங்கீகாரம் இன்றி இருப்பதும் நம் நாட்டில் புதிய விஷயமா என்ன?




Friday, November 15, 2013

இலங்கை மேடையில் இன்னொரு நாடகம்...

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. நம்மூர் சிங்கங்கள் இதில் தங்களுக்கு உள்ள அக்கறையை பறை சாற்ற சிலிர்த்தெழுந்து வாதம், விவாதம், விதண்டாவாதம் என அனைத்தையும் செய்து விட்டு ஓயத்துவங்கி விட்டன. இனி அவை வேறு "வாய்ப்புகள்" தேடிப் போய் விட்டு இலங்கை (தமிழர்) குறித்த மற்றொரு நிகழ்வு வரும் பொழுது மீண்டும் சிலிர்த்தெழும்...

தலைவர்களுக்கென்று சில பண்புகள் தேவை என்று பழங்காலம் தொட்டு அறிந்திருக்கிறோம். அதில் குறிப்பிடத்தகுந்தது முடிவெடுக்கும் ஆற்றல். சரியோ தவறோ, முடிவுகளை தகுந்த காலத்தில் எடுத்து, அந்த முடிவுக்கான சிந்தாந்ததையும், காரணிகளையும் தெளிவாக விளக்குவது எந்தவொரு தலைவருக்கும் அவசியமான குணம்.

நம் பிரதமர் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் க‌லந்து கொள்ளப்போவதில்லை என்று சில நாட்கள் முன் முடிவெடுத்தார்.. தெரிவித்த கையோடு, அதை ராஜபக்ஷேவுக்கு தெரிவித்து கடிதமும் அனுப்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் விவகாரத்துறை அமைச்சர் அவருக்கு பதில் கலந்து கொள்வார் என்றொரு நிலைப்பாடு வேறு. சுருங்கச் சொன்னால் "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்" பழமொழி நமக்கு மறந்து விடாமல் இருக்க அதற்கு செயல்முறை விளக்கம் அளித்திருக்கிறார்.

இதென்ன இரட்டை நிலைப்பாடு? ஒன்று பிரதமர் கலந்து கொண்டு, காமன்வெல்த் அவையில், போர்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்று பேசியிருந்தால், அந்த தைரியமான போக்கை பாராட்டியிருக்கலாம். அல்லது மொத்தமாக புறக்கணித்து இந்தியாவிலிருந்து எவருமே கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்து, அதற்கான காரணத்தையும் விளக்கியிருந்தால் முதிர்ச்சியான ராஜாங்க முடிவென்று பாராட்டியிருக்கலாம்.

தான் போகாமல் மற்றொருவரை அனுப்புவதாக சொல்வது மட்டுமின்றி, வராததற்கு வருத்தம் தெரிவிக்கும் செயலால் எவருக்கேனும் எப்பயனேனும் உண்டோ? அட, அவருக்கேனும் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட குறைந்த பட்ச திருப்தி கூட இதில் கிடைக்காதே...நல்ல வேளை, கடிதத்தில் என்ன எழுதியிருப்பார் என்று நமக்குத் தெரியவில்லை. ஒரு வேளை, "கடல் கடந்து வர முடியாத நிலையில் உடல்நிலை இருப்பதால் இந்த மடல்" என்று எழுதியிருந்தாலும் அதிசயமில்லை. கடிதம் எழுதும் கலையை சென்னையில் இருந்து டெல்லி செல்லும் கடிதங்கள் மூலம் கற்காமலா இருந்திருப்பார் நம் பிரதமர்? எதுகை மோனையில் பேசியே ஏமாற்றும் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து "கூடா நட்பு" பாராட்டியே பழக்கப்பட்ட தேசிய பாரம்பரிய கட்சியின் அங்கத்தினர் தானே அவர்?

போர் அத்துமீறல்கள் குறித்து வரும் வீடியோக்களை பார்க்கும் எவருக்கும் மனது என்னவோ செய்யும்.. அதுவும், நம் இனம் என்கிற போது கூடுதல் வலி ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்த உணர்ச்சி குவியல்களில் அரசியல் நெருப்பு பற்ற வைத்து ஆதாயம் காண‌ முயல்வதே இங்கிருக்கும் அனைத்து கட்சிகளின் அடிப்படை கொள்கை. எனவேதான், ராஜாங்க ரீதியான முயற்சிகளோ தீர்வுக்கான தொலைநோக்கு பார்வையோ இன்றி உணர்வு ரீதியான திரிகளை கொளுத்திப் போடுவதே அனைத்துக் கட்சிகளின் வேலையாக இருக்கின்றன.

இலங்கை தமிழர் விவகாரத்தின் இன்னொரு முனையில் சிக்கியிருப்பது நம் மீனவர்கள். "கச்சத்தீவை மீட்டெடுப்போம்" போன்ற வெட்டிப் பேச்சுக்களை விட்டு இவர்களின் அன்றாட மீன்பிடித் தொழிலுக்குரிய‌ பாதுகாப்பை பலப்படுத்தும் வழிமுறைகளுக்கான வரைவுகளை எந்தக் கட்சியாவது எந்த விதத்திலாவது முன்னெடுத்துச் சென்றிருக்கிறதா? தீப்பெட்டியும் தீக்குச்சியும் போல எந்த ஒன்று இன்னொன்றின் மேல் உரசினாலும் விளைவு நெருப்பே என்ற ஆபத்தான நிலைக்கு இந்த இரண்டு சிக்கல்களையும் ஆக்கி வைத்திருக்கிறோம்... என்னதான் இங்கு நாம் பேசினாலும், இலங்கை என்பது தனி நாடு. அதன் உள்விவகாரங்களில் தலையிட, அங்கு நடக்கும் அத்துமீறல்களை கண்டிக்க, உரியவர்களை தண்டிக்க, நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகள் எதையேனும் நாம் பொருத்தமிகு கூட்டமைப்புகளில் விவாதத்திற்கோ, சர்வதேச அரங்குகளின் புரிதலுக்கோ விளக்கமாக வைத்திருக்கிறோமா நாம்? அத்தகைய ராஜ தந்திரமும் பக்குவமும் ஒருசேர பெற்ற தலைவர் எவரேனும் இங்கு இருக்கின்றாரா?

இங்கிருக்கும் பெரிய கட்சிகள் கடிதம் எழுதுவதையும் தீர்மானம் போடுவதையும் தவிர இவற்றுக்கு விடை காணும் வகையில் ஏதேனும் உருப்படியாக யோசித்திருக்கின்றனவா? ஓட்டில் மட்டுமே கண் வைத்திருக்கும் தலைவர்கள் மட்டுமே இன்று மிச்சம். நாட்டை வழிநடத்தும் தகுதி உடையவர் எப்பொழுதேனும் கிடைத்தால் நமக்கு மச்சம்.

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும்? ஒன்று செய்யலாம் - நல்லதோ கெட்டதோ...எந்தவொரு விஷயமும் முடிவுக்கு வந்தாக வேண்டும். அந்த வகையில், இன்றிருக்கும் பொறுப்பற்ற, சிந்தனையற்ற, செயலற்ற அரசியலும் முடிவுக்கு வரும். சரித்திரத்தில் பதியப் பெற்ற அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்கள் போல மீண்டும் எவரேனும் தோன்றக்கூடும் என்ற நம்பிக்கையில், அவரை அடையாளம் தேடியபடியே நாம் இருக்கலாம்...ஆண்டுகள் பல ஆகலாம் தலைமுறைகள் பல கூட தாண்டலாம்...ஆனால் என்றேனும் காலச்சக்கரம் மீண்டும் சுற்றி காமராஜர் போலவோ கக்கன் போலவோ எவரேனும் தோன்றலாம் என்ற நம்பிக்கையில் நாம் வாழலாம் அந்த நம்பிக்கையை அடுத்த‌ தலைமுறைக்கும் ஊட்டலாம்.

அதுவரை இவர்கள் அத்தனை பேரின் நாடகங்களையும் புறக்கணித்து, இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் அமைதியாக வாழவும், எது நமது கடல் எல்லை என்று அறியும் வசதியின்றி எல்லைத் தாண்டி மீன்பிடிக்கப் போனவர்கள் சேதாரமின்றி அவரவர் வீடு திரும்பவும், நமக்கு எதன் மீது நம்பிக்கையோ அதனிடம் வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. இந்த விவகாரங்களுக்கு விடிவுமில்லை.

Saturday, August 17, 2013

வாங்க...லெட்டர் போடுவோம்

என்னங்க? ஊர் உலகம் தேள் கொட்டிய‌ குரங்கு மாதிரி என்னவெல்லாமோ செஞ்சுக்கிட்டுருக்கு...இந்த காலத்துல கடிதம் எழுதவா? என்று என்னை ஏற இறங்க பார்க்காதீங்க...எல்லாம் நம்ம அரும்பெரும் தலைவர்கள் பேணிக் காக்கும் பாரம்பரியத்தை பரப்பும் பணியில் ஏதோ நம்மால் முடிந்த சிறு துளி சார் இது.

சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் ஒரு IAS அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது குறித்து நாடு முழுவதும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் போக்கில் அது நடக்கட்டும். ஆனால், மத்தியில் அரசாளும் கட்சியின் தலைவர் செயல்பாட்டை நாம் வியந்து பார்க்க வேண்டும். என்னே ஒரு வேகம் என்னே ஒரு விவேகம்...தன் கட்சியைச் சேர்ந்த, தனக்கு கீழே பணி செய்யும் பிரதமருக்கு, தான் நினைத்தால் அடுத்த நிமிடம் பார்க்கக் கூடிய ஒருவருக்கு, இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் எப்படி? கடிதம் எழுதி! தகவல் தொழில்நுட்பத்தில் கொடி கட்டிப் பறக்கும் நாட்டில் எப்பேர்ப்பட்ட புரட்சி சார் இது! இவர்களிடம் "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்க முடியுமா? ஏற்கெனவே பிரதமர் ஒரு முறை, "தமிழ் நாட்டின் மூத்த தலைவர் மூலமே நாங்கள் ஆலோசனை பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார். கடிதம் எழுதுவதில் கை தேர்ந்தவரான அவர் தான் இந்த "அட்வைஸ்" தந்திருப்பாரோ? அதற்காக மற்றவர்களை குறைவாக நாம் எண்ணி விடக் கூடாது. இப்பொழுதுள்ள முதல்வரும் முடிந்த வரை மூத்த தலைவரை கடிதம் எழுதும் கலையில் முந்த முடியுமா என்று தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறார். இப்படியாக தமிழகம் நாட்டிற்கு தந்த ஒப்பற்ற கலைவடிவமாக விளங்குகிறது கடிதங்கள்!

நம் பங்குக்கு நாம் என்ன சார் செய்யலாம்? ஒரு உதாரணம் மட்டும் பார்க்கலாம். ஏதாவது பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்...தீயணைப்புத் துறைக்கு போன் செய்தால் விஷயம் சீக்கிரம் முடிந்து விடுமே? முடிய விடலாமா? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா நமக்கு? தலைவர்களின் தாள் தொட்டு அவர்கள் வழி நாம் நடக்க வேண்டாமா சார்? பற்றி எரியும் தீயை உற்றுப் பார்த்து வருந்தியபடி தபால் நிலையம் நோக்கி ஓட வேண்டும். நடந்தால் இன்னும் நல்லது. கூரியர் எல்லாம் வேகமாக பட்டுவாடா செய்யப்படும் என்பதனால் சாதா அஞ்சல் அட்டையை பயன்படுத்தலாம். தீயணைப்பு நிலையத்திற்கு தீயை அணைக்கும் படி அகம் உருகி ஒரு கடிதம் போட வேண்டும் சார் கடிதம்!

"மதிப்புக்குரிய தீயணைப்பு நிலைய தலைவருக்கு, சமூகத்தில் தீ விபத்துக்கள் அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களின் கடமைமிகு படை வீரர்கள் மூலம் மக்களை தொடர்ந்து காத்து வரும் தொண்டு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த சிலிர்ப்புக்கு சிகரம் வைக்கும் தருணம் வந்து விட்டது. நியாய உணர்வுடன் விரைந்து வந்து கொழுந்து விட்டெரியும் கொடிய தீயை
தண்ணீர் கொண்டு தவிடுபொடியாக்கி கண்ணீரில் மிதக்கும் எங்களை பன்னீரில் நனைய வைக்கும்படி மூவுலகிலும் மூத்த குடியாம் தமிழ் குடியின் அடுப்பொடிகளில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்..." - ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக இப்படியொரு கடிதம் எழுதினால் முடிந்தது காரியம் சார்.

ஆனால் கடிதங்கள் எழுதியே காலத்தை ஓட்ட முடியுமா? ஒரு கட்டத்தில் போரடிக்குமே? எனவே பாரம்பரியமிக்க பாரதத்தில் பழங்காலத்தில் இருந்த சீர்மிகு தகவல் சாதனமான புறாவுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என்றொரு புரட்சி ஊற்று நம் தலைவர்களின் சிந்தனையில் உதித்தால் நாட்டின் கதி என்ன ஆகும் சார்? கலக்கமாக இருக்கிறதா? அத்தனை கலக்கத்தையும் அறிக்கை விட்டே அழிய வைக்கும் ஆற்றல் மிக்க அரசியல்வாதிகள் வாழும் நாடல்லவா இது! "சுறாவை சுண்டு விரலால் பிடித்த வீரமிகு வரலாறு கொண்ட தேசத்தில் புறாவை கொண்டு கடிதம் அனுப்பும் கலையை போற்றும் பணி செய்வோம் பாரம்பரியம் காப்போம்" என்று ஆரவாரமாக‌ அறிக்கை விடத்தெரியாதவர்களா நாம்?

"புறா பராமரிப்புத் துறை" ஒன்று துவங்கி அரசாங்க தகவல் பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் தொடர்பு அனைத்தும் புறா அன்றி இரா என்று எதுகை மோனையில் ஒரு சட்டம் இயற்றினால் போதாதா? அப்புறம் நம் அனைவருக்கும் வீட்டுக்கொரு விலையில்லா புறா கிடைக்கும். "புறா தந்த புரவலர்" பட்டம் பெறும் பாக்கியம் நம் நாட்டில் எந்த தலைவருக்கு வாய்த்திருக்கிறதோ! பொறுத்திருந்து பார்ப்போம்!

குறிப்பு: உதாரணத்தை வைத்து நீங்களாக ஏதேனும் உள்ளர்த்தம் செய்து கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு!