/ கலி காலம்

Thursday, January 17, 2013

பவர் ஸ்டார் புதுக்கட்சி துவக்கம்?

என்னய்யா இது புதுசாய் ஒரு குண்டு வீசுகிறாய் என்று ஆச்சரியமா? பதிவை படித்து முடித்த பின் ஆச்சரியம் போய் எதிர்பார்ப்பும் ஒரு வித "பாசப் பிணைப்பும்" நம் பவர் ஸ்டார் மீது வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது...வாருங்கள், என்ன சேதி என்று பார்ப்போம்...

சில மாதங்கள் முன்பு வரை சிலர் மட்டுமே அறிந்திருந்த பவர் ஸ்டார், நீயா நானா கோபிநாத் "உபயத்தில்" பலரின் நெஞ்சுக்குள் இடம் பிடித்தார். பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்! தற்போது கிட்டத்தட்ட தமிழ்நாடே லட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது...

பவர் ஸ்டாரின் பண்புகள் இன்றைய அரசியலுக்கு எப்படி பொருந்தி வருகிறது என்று பட்டியலிட்டு ஒப்பிட்டு பார்ப்போம்:

பண்பு 1: பத்திரிகைகள் இவரை கோமாளி போலவே நடத்தின. இவரின் பேட்டிகளை காமெடி போல பிரசுரித்தன. பின்னர் சேனல்களில் அழைத்து, நையாண்டி என்ற பெயரில் முடிந்த அளவு அவமானப் படுத்தினர். இவை அனைத்திற்கும் இவரின் முகத்திலிருந்து சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது.

நியாயமாக கேட்கப்படும் நிருபரின் கேள்விகளுக்குக் கூட "வரியா சேர்ந்து தீக்குளிக்கலாம்" என்று தப்பிக்கும் அரசியல்வாதிகளும், நாக்கைத் துருத்தும் நாகரீகம் அற்ற அரசியல்வாதிகளும், தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் முடிந்தது கதை என்ற நிலையில் அனைவரும் தன் காலில் விழுந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில், அனைவரின் நக்கல்களுக்கும் சிரித்துக் கொண்டிருக்கும் நம்மவருக்கு "புன்னகை தலைவர்" என்று பட்டம் கொடுக்கலாம் தானே சார்?

பண்பு 2: இவர் தனக்கு 5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது காமெடிதான். ஆனால் இன்று பல letter pad கட்சிகள் தங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்றனர் என்று அடித்து விடுகிறார்களே அதை விடவா சார் இவர் காமெடி செய்கிறார்? அரசியல் அரிச்சுவடியை சரியாகத்தானே செய்கிறார்?

பண்பு 3: தானே தயாரித்து நடித்து வெளியிட்ட படத்தை பார்க்க எவரும் வராமல் தியேட்டர் காற்றாடியதால், தானே காசு கொடுத்து படத்தை ஓட்டுவதாக இவர் மீது விமர்சனம் இருக்கிறது. என்ன சார் இது அநியாயம்? நம் அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொள்வதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா? அவர் பணத்தை வைத்துக் கொண்டு அவர் publicity செய்தால் நமக்கென்ன வந்தது...

பண்பு 4: இவர் விளம்பர பிரியராம். எனவே எப்படியாவது தன் பெயர் வெளியில் தெரியுமாறே எல்லா வேலைகளையும் செய்வாராம்...ஏதாவது சாக்கில் போஸ்டர்களில் பல்லைக் காட்டிக் கொண்டு திரியும் விளம்பர மோகம் பிடித்த‌ தமிழ் நாட்டில் இதெல்லாம் ஒரு விஷயமா சார்?

குறிப்பு: சமீபகாலம் வரை அனைத்து பேட்டிகளிலும் cooling glass அணிந்து வந்தவர், இப்போது மாறி விட்டார். அற்புதமான வாய்ப்பையும் நழுவ விட்டு விட்டார். அவரின் கண்ணாடி பழக்கம் பற்றி நக்கலாக கேள்விகள் கேட்கும் பொழுது, தனது cooling glassஐ தடவியபடி, "இருட்டறையில் உள்ளதடா உலகம்" என்னும் பாரதிதாசன் வரி என்னை மிகவும் பாதித்து விட்டது. சமூகத்திற்கு வெளிச்சம் ஊட்டுவதே என் பணி என்று எப்போதும் நினைவில் நிறுத்தவே cooling glass மூலம் என்னை நானே இருட்டாக்கிக் கொள்கிறேன்" என்று ஒரு போடு போட்டிருந்தார் என்றால், நாமும் "ஆஹா, என்னே ஒரு தமிழ் ரசனை, என்னே ஒரு சமூக அக்கறை" என்று மெய்சிலிர்த்துப் போய் "பக்குவத் தமிழன் பவர் ஸ்டார்" என்று பட்டம் கொடுத்து பாராட்டியிருப்போம்...பட்டம் கொடுத்தே கெட்ட கூட்டம்தானே சார் நாம்...

இப்போது சொல்லுங்கள்...இந்த பதிவின் தலைப்பு விரைவில் உண்மையாகும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை என்று நம்மால் சொல்ல முடியுமா? 

Saturday, January 5, 2013

தமிழ்நாடு பார்த்த‌ 2012


வேறொன்றுமில்லை சார்...புது வருடம் நெருங்கினால் போன வருடத்தில் சமூகத்தில் நிகழ்ந்தவை, சிறந்தவை, மறந்தவை, கடந்தவை என்று அனைத்து ஊடகங்களும் ஆளாளுக்கு கட்டி வெளுக்கிறார்கள். நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? அதான் தமிழ் கூறும் நல்லுலகை தத்தளிக்க வைத்த முக்கிய நிகழ்வுகளை அலசுவோம் என்று புறப்பட்டால்...அப்பப்பா...எத்தனை விஷயங்கள்...மேலே படியுங்கள்...

(i)திருப்பதியில் தரப்படும் லட்டு முன்னர் போல இல்லை என்று பலர் வருத்தப்பட்டனர். நிர்வாகம், சமூகம் என அனைத்து பக்கங்களிலும் தினமும் நம்மிடம் நீட்டப்படும் "சார்...லட்டு" கசப்பது பற்றி நாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.

(ii)"ஈமு" என்றால் ஈசியான முன்னேற்றம் என்று தமிழர்களுக்கு விளக்கப்பட்டது.

(iii)கடல் திரைப்படத்திலிருந்து சமந்தா விலகக் காரணம் என்ன என்று பத்திரிகைகள் பெரும் கலக்கம் அடைந்தன. அதை படித்த நாமும் கவலை கொண்டோம்.

(iv)180 நாட்கள் கெடாமல் இருக்கும் பால் சுவைக்கும் பாக்கியம் பெற்றனர் தமிழ் மக்கள். ஆனால், அது 180 நாட்கள் வருமா என்பதை எப்படி சோதிப்பது என்று தெரியாமலும், 6 மாதம் வரை பால் வாங்காமல் நாம் பாலைவனத்திலா இருக்கப் போகிறோம் என்று புரியாமலும் விழித்தனர்.

(v)ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் சேர்ந்தாலே அதை இரண்டு முறை எண்ணிப் பார்க்கும் நம்மைப் போன்ற சாமானிய பொதுஜனம், அசால்டாக அடிக்கப்பட்ட இருநூறு கோடி முன்னூறு கோடியையெல்லாம் "இவர்கள்" எப்படி "கணக்கு" செய்வார்கள் என்று அவ்வப்பொழுது தலையை சொறிந்த படி 2012ஐ ஓட்டியது...

(vi)ஒரு கிணறு, அதுவும் வற்றாத கிணறு காணாமல் போய்விட்டது என்று சில வருடங்களுக்கு முன் வடிவேலு புகார் கொடுத்தார் ‍ - சினிமாவில். சென்ற வருடம், சில ஆறுகள், பல குளங்கள் உண்மையிலேயே காணாமல் போயின. வடிவேலுவின் காமெடி உண்மையாகிப் போனதை எண்ணி, உச்சி குளிர்ந்தபடி பொழுது போனது நமக்கு.

(vii)புகாரில் சிக்கிய பெருந்தலைகள் புன்னகைக்கும் புகைப்படத்தை, அவர்கள் அடித்த‌ கொள்ளையின் அளவுக்குத் தகுந்தாற்போல‌ பெரிதாக அச்சிட்டு அகமகிழ்ந்தன பத்திரிகைகள். வரும் ஆண்டில், "ஊழல் சிறப்பிதழ்" போன்றவற்றை படிக்கும் பேறும் நமக்குக் கிட்டலாம்.

(viii)"தர்பூசணியை டம்ளர் மறைக்குமா" என்ற புதுமொழி பொய்க்கும் வண்ணம் 120 நாட்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத ஒருவர், முன் ஜாமீன் கிடைத்த மூன்றே நாளில் சிரித்தபடி வந்து நின்று போஸ் கொடுத்ததைக் கண்டு எவரும் அதிர்ச்சியடையவில்லை. "இதெல்லாம் சகஜமப்பா" என்று அவரவர் வேலையை அவரவர் பார்த்தபடி வருடத்தைக் கடத்தினர்.

(ix)அன்னிய முதலீட்டில் அடிக்கப்பட்ட அந்தர் பல்டிகள், இந்த வருடம் நிறைய ஊர்களில் சர்க்கஸ் நடக்காத ஏமாற்றத்தை போக்கியது.

(x)வருடா வருடம் தொடர்வது போல, "மர்ம அழகிகள்" தமிழ் பத்திரிகைகளில் கைது செய்யப்பட்டனர். தாமதமாகும் நீதி பற்றிய சந்தேகங்கள் எழும்போது "சட்டம் தன் கடமையை செய்வதாக" அறம் காப்பவர்கள் பேட்டி கொடுத்தார்கள். பள்ளிக்குள்ளேயே மாணவன் ஆசிரியையை கொன்றும், பட்டப்பகலில் பல கொலைகளைக் கண்டும், இந்தியா வல்லரசாகும் கனவுக்குத் தோள் கொடுத்து தமிழகம் பீடு நடை போட்டது.

சென்ற வருட top 10 நிகழ்வுகள் எப்படி? 2012 அற்புத ஆண்டு தானே சார்? என்னப்பா நீ முக்கியமான நிகழ்வுகளை சொல்கிறேன் என்ற பெயரில் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறாய் என்பீர்கள்தானே?காதை பக்கத்தில் கொண்டு வாருங்கள். ஒரு விஷயம் சொல்கிறேன்.

"குறுவை ஒன்றுமில்லாமல் போனது. சம்பா செத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை, அரசாணை ஆக்க அவகாசம் கேட்டு ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை பற்றி கவலையின்றி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தியும் பார்த்தும் கொண்டிருக்கிறோம்..." இப்படியெல்லாம் கொஞ்சம் சீரியஸாக எழுதத்தான் சார் விருப்பம். ஆனால் "பொறுப்பு" என்பதற்கு இக்காலத்தில் "கிறுக்கு" என்று அர்த்தம் என்று என் நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். நாம் "கிறுக்கு" இல்லைதானே? அதான் சார் பேசாமல் மேற்படி list மட்டும் எழுதி முடித்து விட்டேன்.

Thursday, December 20, 2012

தமிழரும் தண்ணீரும்...


"பொங்கல் சாப்பிடு தமிழா, பொங்கல் சாப்பிடு" - இந்த வாசகத்தை நீங்கள் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில், ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ளே சாலையின் சுவர்களில், நான் சிறுவனாக இருந்த வருடங்களில் இது நிரந்தரமாக இருந்தது.

பொங்கல் சாப்பிடச் சொல்லும் வரிக்கு மேலும் கீழும் அன்றைய சமூக சூழலுக்கு பொருத்தமான‌ "சிக்கல்களை" மாற்றி மாற்றி எழுதுவார்கள். இன்று,  அந்த சுவரில்  "கொக்கோ கோலா" குடித்தால் ஏற்படும் குதூகலம் குறித்து தமிழர்களுக்கு ஒரு விளம்பர யுவதி விளக்கிக் கொண்டிருக்கிறார்...

பழைய வரியும் சுவரும் இன்று இருந்திருந்தால், "நிலத்தில் நீர் தங்கலை நீ வைக்காதே பொங்கலை" என்று எழுதியிருப்பார்கள்.

இன்று 1 டிஎம்சிக்கும் 2 டிஎம்சிக்கும் காய்ந்து கிடக்கும் நம் நீர் மேலாண்மை (water management) எப்படிப் பட்டது? கல்லணையை எடுத்துக் கொள்வோம்... நம்மவர்களுக்கு, செய்யும் வேலைக்கு அலங்காரமாக பெயர்கள் வைத்து விளம்பரப்படுத்த தெரியவில்லை அல்லது மனமில்லை. எனவே, கல்லணை ஆயிரம் வருடமாக‌ இருக்கிறது என்பதை தவிர நமக்கு வேறெதுவும் தெரியவில்லை. இது ஒரு அற்புதமான முன்னோடி என்பதை சொல்வதற்கும் நமக்கு ஆங்கிலேயர்கள் வேண்டியிருந்தது. அமெரிக்காவில் 19ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் முயற்சிக்கப்பட்ட "rock fill method" என்பது வேறொன்றுமில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன் வெவ்வேறு அளவுகளில் உள்ள கற்களை வெவ்வேறு காலங்களில் கொட்டி, கட்டப்பட்ட கல்லணையின் "design" தான். இப்படிப்பட்ட நுணுக்கங்களை அன்றே வடிவமைத்த நாம் எப்பொழுது இத்தகைய ஆற்றல்களை இழக்கத் துவங்கினோம்?

பிரபலமான தேசிய ஊடகங்கள் எதிலும் காவிரி பற்றி ஒரு விவாதம் கூட வரவில்லையே...ஏன்? அதிலும், சமூக பொறுப்புகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல காட்டிக் கொள்ளும் ஒரு சேனலின் "செய்தி நேரத்தில்" கூட இது அரசியல் தவிர வேறு காரணங்களுக்காக வருவதில்லையே...ஏன்? ஆனால், இதே சேனலுக்கு, "கொலை வெறி" பாடலின் மகத்துவத்தை நாட்டுக்கு விளக்க பத்து நிமிடம் ஒதுக்க முடிகிறது...வெட்கக்கேடு!

உள்ளூர் சேனல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை...நடிகைகளின் பாதி முகத்தைக் காட்டி அவர் யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லும் புல்லரிக்கும் புதிர்கள் போடவே இவைகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. காவிரி பற்றி இவர்களை நிகழ்ச்சி தயாரிக்கச் சொன்னால், ஒகேனக்கல் அருவி வரும் சினிமா படக் காட்சிகளாகக் காட்டி ஒப்பேற்றினாலும் வியப்பில்லை. அத்தகைய அறிவுக் களஞ்சியங்கள் கொட்டிக் கிடக்கின்றன பல தமிழ் சேனல்களில்...

எதையும் அரசியலாக்க மட்டும் நாம் நன்றாக கற்று விட்டோம். மற்றவற்றையெல்லாம் விற்று விட்டோம். நதியை காக்க மறக்கும் சமூகத்தின் கதி அதோகதி தான் என்பதை அறிய‌ விதி தேவையில்லை. சாதாரண மதி போதும்.

நான் விவசாயி அல்ல. என்னிடமும் நிலமும் இல்லை. ஆனால், தினமும் தொலைக்காட்சித் திரையின் அடியில் ஓடும் மேட்டூர் அணையின் அளவு குறைந்து கொண்டே வருவதை பார்க்கும் பொழுது மனதுக்குள் ஏதோ ஒன்று சட்டென்று குத்தி விட்டு போகிறது. உங்களுக்கும் அதே உணர்வு இருக்கும்.
நமக்கே இப்படி என்றால், நாளை காலை தனது பயிர் குடிக்க நீர் இல்லை என்பதை நினைக்கும் விவசாயிக்கு எப்படியிருக்கும்?

நமக்கு iphone 5 modelல் என்னவெல்லாம் புதுசு என்று பார்த்து முன்னேறத் துடிப்பதற்கே நேரமில்லை. இதில் ஐஆர் எட்டு என்னவானால் என்ன? பொங்கல் சாப்பிடுவோம் சார் பொங்கல்!

Friday, December 14, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 3


தெரு முனையில் இருக்கும் ""அண்ணாச்சி"" கடையில் உப்பு வாங்கிக் கொண்டிருந்தேன். "அஞ்சு ரூபாய்க்கு மிளகு"..."நூறு உளுத்தம் பருப்பு" என்ற குரல்களை தினசரி பேப்பரை கிழித்து மடமடவென்று பொட்டலமாக்கிக் கொண்டிருந்தார் "555 சோப் நன்றாக வெளுக்கும்" என்று உலகுக்கு அறிவிக்கும் முண்டா பனியன் போட்டிருந்த நம்மூர் "அண்ணன்".

"அன்னிய முதலீடு பாரு
பண்ணிடும் நாட்டுக்கு கேடு
சில்லறை வணிகம்னு பேரு
கல்லறை ஆகிடும் ஊரு"

என்று பாடியபடி வந்தார் குத்தானந்தா. "என்ன தம்பி உப்பு வாங்குறயா? உப்பத் தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும்" என்றார். "சாமி, உப்பை வச்சே பாட்டுக்குள்ளெ "பொடி" தூவறீங்களோ?" என்றேன். "என்னப்பா செய்யறது...அப்படி இப்படி நாட்டோட‌ அடிமடியிலேயே கைவச்சுருவாங்க போல" என்று சீறுவதற்கு தயாரானார்.

"சாமி, அன்னிய முதலீடு நல்லது தானே...சில்லிடும் அடுக்கு மாடி கடைகளில் மிடுக்குடன் பொருள் வாங்கி மிதப்புடன் இருந்து நம் மக்கள் மகிழ்வார்களே...அத்துடன், பருப்பு முதல் செருப்பு வரை, நமக்காய் காய் உணவு முதல் நாய்க்கான உணவு வரை, கீரை, கெட்டி மோரை, விட்டால் ஊரையே அமுக்கி பிளாஸ்டிக் கவரில் போட்டு விற்பனைக்கு வைத்திருப்பதில் எத்தனை வசதி..." என்றேன்.

"உன்னைய மாதிரி ஏட்டுச் சுரைக்காய்க்கு எத்தனை பாட்டு படிச்சாலும் புத்தியில் ஏறாது" என்று கத்திய குத்தானந்தா, "தம்பி, பகட்டா இருக்கும் எதுவும் கரெக்டா இருக்கும்னு நினைக்கற காலமாகிப் போச்சு...விலை நிறைய அப்படின்னா தரமும் அதிகம்னு நம்புற நாகரீக கோமாளிகள் தானே நாம்.

"சாமி, இதுனால நமக்கு என்ன நஷ்டம், தெளிவா சொல்லுங்க..." என்றேன்.

"முதல்ல சில்லறை வர்த்தகம் அப்படினுதான் ஆரம்பிக்கும். அப்புறம், சீப்பா கிடைக்கறதுனால இறக்குமதி பண்றேன், அதை சேமிச்சு வைக்க கோடவுன் கட்றோம்னு இடம் போடுவான். ஆயிரக்கணக்கான‌ ஏக்கர் நிலத்தை வாங்கி, "corporate agriculture join venture" விவசாயம் பண்றேன் அப்படின்னு ஒட்டகத்தை கூடாரத்துக்குள்ள விடுவான். அதுல விதையை போடுறானா விஷத்தைப் போடுறானா நம்ம அரசாங்கமா பார்க்கப் போகுது? எவ்வளவு சீக்கிரம் லாபம் பார்க்கலாமோ அதுக்குத் தகுந்த மாதிரி "BT கத்திரிக்காய்" "BT வெண்டைக்காய்" அப்படினு இயற்கைக்கு எதிரா உருவாக்கின பொருட்களை புழக்கத்துல விடுவான். பார்க்க பளபளப்பா, கவர்ல போட்டு ரெடியா இருக்கும். நம்மூர் இல்லத்தரசிகளின் இன்னல் குறைக்கறேன்னு காய்கறியை வெட்டி கவர்ல போட்டு அதுக்கு விலையை ரெண்டு மடங்காக்கி laebl ஒட்டி விற்பான்...பாலிஷ் செய்யப்பட்ட பருப்பை நமக்கு plastic பாக்கெட்டில் போடுவான்...லாபத்தை அள்ளி தனது பாக்கெட்டில் போடுவான்"

பத்து பதினஞ்சு வருஷத்துக்கு நாமளும், "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்..." கணக்கா பந்தா பண்ணுவோம். அப்புறம் அடுத்த இளிச்சவாய நாடு ஏதாவது மாட்டும். நம்ம நாட்டை விட அங்க லாபம் அதிகமா வரும் அப்படின்னா "வந்தாரை வாழ வைக்கும் நன்னாடே...உனக்கு மொத்தமா டாடாடே" என்று அனைத்தையும் மூடி விட்டு போவான். அப்புறம் நம்ம நிலத்தை உழுதா புழு கூட வராது...கட்டாந்தரையான நிலத்தை காலால சுரண்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான்" என்றார்.

எனக்கு லேசாக கவலை வந்தது. "உணவு பொருட்களுக்கு மட்டும் முதலீட்டுக்கு தடை விதிக்கலாமே" என்றேன். "ஓ நீ அப்படி வரயா?" என்ற குத்தானந்தா "அன்னிய முதலீடு எதுலப்பா வரும்?" என்றார். "டாலர்ல‌ சாமி" என்றேன்.

"அங்கதான் இருக்கு நமக்கு அடுத்த ஆப்பு" என்ற சொல்லியபடி, "அதை அடுத்த வாரம் சொல்றேன். இந்த வாரத்துக்கான உன்னோட இலக்கியப் பாட்டு எங்க?" என்றார். "ஆஹா மாட்டிகிட்டோமே என்று முழித்த என் கண்ணில் peacock brand அரிசி மாவு பாக்கெட் கண்ணில் பட்டது. போன வாரம் படித்த பாட்டு வரி நினைவுக்கு வந்தது ‍ - "மயிலடி இலைய மாக்குரல் நொச்சி".  சாமி, இந்தப் பாட்டு எழுதி ஆயிரம் வருஷத்துக்கு மேல ஆச்சு...எத்தனை ரசனையான மனுசங்க நம்ம மண்ணுல வாழ்ந்து போயிருக்காங்க சாமி...மயில், குயில் அப்படினு நிறைய பாட்டு பார்த்திருக்கோம். ஆனா இந்த வரியிலே, மயிலோட காலடி வடிவம் நொச்சி இலை மாதிரி இருக்கும்னு சொல்றாரு சாமி...என்றேன். "இப்ப நம்மூருல மயிலையே பார்க்க முடியல இதுல அதனோட காலடிய எப்படி பார்க்கறது...அது சரி, நொச்சி இலை பார்த்திருக்கிறாயா? என்றார்...". "அடுத்த வாரம் பேசலாம் சாமி" என்று கடையை விட்டு நகர்ந்தேன்.

Wednesday, December 5, 2012

காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 2


சென்ற பதிவில், திருப்பரங்குன்றம் கோயிலில் நுழைந்த உடனேயே, "காலம் கெட்டுப் போச்சு" என்பதற்கு கந்தன் காட்டிய "sample" பார்த்தோம். அப்படியே "யானை மகால்" பக்கம் சென்றேன். சுத்தமாக இருந்த அந்த விசாலமான அறையில் யானையின் போட்டோவிற்கு மாலை போட்டு வைத்திருந்தார்கள். அறை முழுதுவதும் யானை வாசம் இன்னும் வீசிக்கொண்டிருந்தது. இப்படித்தானே சார் நம் எல்லோருக்கும், கால யானை கடந்து போன பின்னும் மன அறையில் ஞாபக வாசனை வீசிக் கொண்டிருக்கிறது...

"புது யானை எப்போ வரும்" என்று அங்கிருந்தவரிடம் கேட்டேன். என் "யானை(க்) காதல்" தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவர், "லூசா நீ" என்பது போல் என்னைப் பார்த்து விட்டு, நாகரீகம் கருதி "கொஞ்ச நாள் ஆகுங்க" என்றார். முப்பது வருடங்களுக்கு முன், என் அப்பாவின் பாதுகாப்பில், நான் வாரம் தோறும் வருடிக் கொடுத்த திருப்பரங்குன்றம் யானையின் கரும்புள்ளிகள் நிறைந்த ரோஸ் நிற தும்பிக்கை நிழல் படமாய் வீற்றிருக்க, அங்கிருந்து நகர்ந்து, உள்ளத்திற்கு உவகை தரும் பொய்கைக்கு போனேன்.

சரவணப் பொய்கையில் முன்னரெல்லாம் பொரி தூவிய சில நிமிடங்களில் அதற்கான அடையாளமே நீரில் இருக்காது. கால் வைத்த மறு நொடி, மீன்கள் கூட்டம் கூட்டமாக கடிக்கத் துவங்கும். இப்பொழுதோ, ஒரு மீன் கூட கண்ணிலும் காலிலும் படவில்லை. யாரோ எப்பொழுதோ போட்ட பொறி கூட நீரில் மிதக்கிறது...நம் பொய் வாழ்க்கை முறையை எள்ளல் செய்யும் விதமாக பொய்கையிலும் மீன்கள் பொய்த்து போனது போலும்...கோயில் குளத்து மீன்கள் நம்மை விட்டு விலக சில ஆண்டுகள் என்றால், நம் கோயில்களில் இருந்து கடவுள்கள் புறப்பட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்குமோ? logic சரிதானே சார்?

அங்கிருந்து சன்னதிக்கு வரும் வழியில் நந்த‌வனத்தில் ஒரு பெருங்குரங்கு பூச்செடிகளை சேதம் செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. தமிழ் தெரிந்த குரங்கோ என்று எனக்கொரு சந்தேகம் ‍ அதாவது "உள்ளுறை உவமம்" வைத்து நம்மையும் நம் சமூகத்தையும் நக்கல் செய்கிறதோ அந்த குரங்கு என்று தோன்றியதில் வெட்கம் வந்ததால் வேகமாக நடையைக் கட்டினேன்...

கோயில் நிர்வாகம் பக்தர்களை குஷிப்படுத்த புதிர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது சார்...அதிர்ச்சியடையாதீர்கள்! பத்திரிகைகளில் ஒரு சிக்கலின் ஒரு நுனியில் நுழைந்து மறு நுனியில் வெளியில் வரச் சொல்லி புதிர் வருமே...அது போல, ஏகத்துக்கும் அங்கிட்டும் இங்கிட்டுமாய் சாரம் கட்டி வழியை மறித்து, மறைத்து...பாவம் முதியவர்கள்... படிகள் நிறைந்த கோயிலில் இந்த "புதிர்கள்" வேறு அலைக்கழிக்க, பெருமூச்சுடன் பேரின்பம் தேடி நடந்தார்கள்.

மலையின் பாறைகள் தெரிவதனால், அவையே கூரையாக இருப்பதால், இந்த சன்னதி எனக்கு எப்பொழுதுமே பிடித்தமான ஒன்று. எத்தனை யுகமாக‌ அவை இங்கிருக்கிறதோ...எத்தனை தலைமுறைகளின் வேண்டுதல்களை அவை பார்த்துக் கொண்டிருக்கிறதோ...!

சட்டென்று என் கையில் ஒரு "அபிஷேக பாட்டில்" ஒன்றை கொடுத்தார் பட்டர். பிளாஸ்டிக் மூடி இன்னும் திறக்கப்படாததால், கடையில் இருந்து "direct"டாக‌ வந்தது என்று தெரிந்தது. கொடுத்ததோடு மட்டுமல்லாமல் "இருபது ரூபாய்" என்றார். அவரிடம் பாட்டிலை திருப்பிக் கொடுத்தேன். முருகனின் முகம் அசைவற்று இருந்தது. கலி காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று முருகனுக்கு முன்னரே தெரிந்திருந்து தான் அசைவின்றி இருக்கிறார் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயம்தானே சார்?

Friday, November 16, 2012

இவர்களின் தீபாவளி ரகசியங்கள்...


என்ன சார்...ரகசியம் என்றவுடன் நமக்கு ஆர்வமாய் இருக்குமே...அதுவும் அடுத்தவர் பற்றிய ரகசியம் என்றால் வெறும் வாயில் போட்ட அவல் என்பதை விட வெல்லத்தில் போட்ட‌ அவல் போல நமக்கு இனிக்குமே...சரி, விஷயத்திற்கு வருவோம். பதிவை படித்த பின், நீங்கள் எதிபார்த்தது வேறு இங்கு இருப்பது வேறு என்றால் என்னை குற்றம் சொல்லாதீர்கள் என்று இப்போதே சொல்லி விடுகிறேன் சார்.

நாம் பார்க்கப் போகும் "இவர்கள்" யார்?

தீபாவளி அன்று காலை நம் அரசு பேருந்தை கடமையுடன் ஓட்டிக் கொண்டு போகும் ஓட்டுனர் மற்றும் அவரது குடும்பத்து தீபாவளி எப்படி இருக்கும்? பல வருடங்களுக்கு முன், சில தாமதங்கள் காரணமாக, முன்னரே ஊர் சேர்ந்திருக்க வேண்டிய நான், தீபாவளி காலையில் மதுரை நோக்கிய பேருந்தில் இருந்தேன். கைபேசி தன் கைவரிசையை சமூகத்தில் காட்டத் துவங்காத காலம் அது. சுமார் பதினோறு மணியளவில் வண்டியை ஒரு சிற்றூரின் துவக்கத்தில் இருந்த பெட்டிக்கடையை ஒட்டி நிறுத்தியவர், பயணிகளை நோக்கி சத்தமான குரலில், தான் நேற்றிரவே "trip" முடித்து வீடு செல்ல வேண்டியவர் என்றும், இன்னமும் "duty"யில் இருப்பதாகவும், வீட்டில் காத்துக் கொண்டிருப்பவர்களிடம் பேசிவிட்டு வருவதாகவும் சொல்லி இறங்கினார். பயணிகள் அனைவரும் அவரின் மேல் கரிசனம் கொண்டதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலோருக்கு தங்கள் வீடு மனதில் ஓட, அந்த "telephone booth" நீளமானது...அந்த ஓட்டுனர் தொலைபேசியில் தனது குழந்தையிடம், "கட்டாயம் இரவு வரும் பொழுது பட்டாசு வாங்கி வருகிறேன்" என்று  மன்றாடியதும், மதுரை வந்து சேர்ந்த பொழுது இரவாகிப் போனாலும், அப்பொழுதும் அக்கறையுடன் சில பயணிகள் பேருந்திலிருந்து இறங்கும் பொழுது ஓட்டுனரிடம், "மறக்காம பட்டாசு வாங்கிட்டு போங்க பிள்ளைங்க காத்துக் கிடக்க போகுதுங்க..." என்று சொல்லிப் போனதும்  ஒரு படி மேலே போய் ஒருவர் தான் கொண்டு போகும் மத்தாப்புகளில் ஒன்றை அவரிடம் கொடுத்ததும் இன்றும் நினைவில் நிற்கிறது.! இனி நம் சமூகத்தில் இக்காட்சி மீண்டும் நிகழ்வது அரிதினும் அரிது.

தீபாவளிக்கு முந்தைய நாட்களில் அனைத்து கடைத்தெருக்களிலும் அலைமோதும் கூட்டத்தின் நடுவே "எலி மருந்து" விற்பவர் ஒரு சிறு அட்டையில் சக்கரத்தை பொருத்தி தள்ளிக் கொண்டே போவதை பார்த்திருப்போம்.... அந்த விற்பனை பொருட்களின் மொத்த மதிப்பே இன்றைய வேகமான உலகின் சில "mobile recharge"களுக்குள் அடங்கி விடும். எலி மருந்து விற்று வரும் வருமானத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இவரைச் சார்ந்தவர்களின் தீபாவளி எதிர்பார்ப்பு எத்தனை துயரமிக்கது? அதை சுமக்கும் இவரின் முகத்தை நாம் கூர்ந்து நோக்கியிருக்கிறோமா?

தீபாவளியை காரணம் காட்டி, பல வித உணவுகளை அதிகமாக புசித்து, அதன் காரணமாக மதியம் நீண்ட தூக்கம் போட்டு, மாலையில் மறுபடியும் கேளிக்கைகளுக்குத் தயாராகும் நம் கண்ணில், தெரு முழுதும் குவிந்து கிடக்கும் வெடிப் பேப்பர்களுக்கிடையில், வெடிக்காத வெடிகளை தேடிக் கொண்டிருக்கும் சிறுவனின் முகம் கவனத்தில் விழுந்திருக்கிறதா? அந்த சிறுவனிடம் தீபாவளியை பற்றிய எத்தகைய எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்?

"இவர்கள்" பார்த்த பின் "இவரை" பார்ப்போம்...

சென்ற வாரம் பிரபல வார இதழின் தீபாவளி சிறப்பிதழில் வந்திருக்கிறது இவரின் பேட்டி. "தீபாவளி கொண்டாடுவதில்லை" என்ற தலைப்பைப் பார்த்து, "ஆஹா, ஒரு வேளை சமூக அவலங்களையும் மேற்கூறியன‌வற்றை போன்ற மனதில் வலி ஏற்படுத்தும் காட்சிகளையும் கண்டு கங்கையென பொங்கியெழுந்த மங்கை எடுத்த முடிவோ..." என்று ஆர்வத்துடன் பக்கத்தை திருப்பினால், அவரோ, "என் நாய்க்கு வெடிச்சத்தம் கண்டு பயம் எனவே நான் தீபாவளி கொண்டாடுவதில்லை" என்று போட்டிருக்கிறார் ஒரு போடு!

அடுத்த வருடம், இந்த பேட்டி வந்த இதழின் பக்கம், ஒரு லட்சுமி வெடியின் சிதறிய‌ பேப்பராக வீதியில் கிடக்கையில், வெடிக்காத வெடி தேடி வீதி வீதியாக  வரும் சிறுவன்  அந்த பேப்பரை வெறுப்புடன் வீசியெறியும் குப்பையிலிருந்து குப்பென்று அடிக்குமே ஒன்று...அதற்கு ஆன்றோரும் சான்றோருமாய் சேர்ந்து வைத்திருக்கும் பெயர் "சமூகம்".

பின் குறிப்பு: தற்காலத் திரையுலகத் தாரகைகள் மற்றும் தமிழகத்தை தாங்கிப் பிடிக்கும் புரட்சி நாயகர்கள் தங்கள் தீபாவளி ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் பதிவோ என்றெண்ணி இங்கு வந்தவர்கள் என்னை மன்னித்து அருள்வார்களாக...


Friday, November 9, 2012

தீபாவளி விளம்பரங்கள்...உஷார்!

அனுஷ்கா ஆடியபடி வந்து தீபாவளி தள்ளுபடி விலையில் பூச்சிக் கொல்லி மருந்து வாங்குங்கள் என்று விளம்பரம் செய்து விவசாயிகளின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற முயல்வதை பார்த்திருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தீபாவளிக்கு வரும் விளம்பரங்களைப் பார்த்தால், எங்கேயாவது இது போன்ற விளம்பரமும் வந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் நடைபெறவில்லை. விவசாயிகள் தப்பித்தார்கள்.

ஆனால் மற்ற வகை விளம்பரங்களில் நமக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை சார். இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வரை, தீபாவளி தள்ளுபடி என்பது துணிக்கடையில் மட்டுமே இருந்தது. பின்னர் மெதுவாக Mixie, Grinder, TV, Fridge எனப் பரவத்துவங்கியது. இன்றோ, பொதுக் கழிப்பறையில் "சிறுநீர் கழிக்க 1 ரூபாய் தீபாவளி சிறப்பு தள்ளுபடி" என்று போடாதது ஒன்றுதான் பாக்கி.

அதிலும் இந்த "பம்பர் பரிசு" இருக்கிறதே சார் பம்பர் பரிசு...எனக்கொரு தீராத சந்தேகம். ஏன் சார் நமக்கோ, நமக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ பம்பர் பரிசு விழுவதே இல்லையே?

கவிவேந்தன் மட்டும் இன்று இருந்திருந்தால்,

பம்பர் பரிசு உண்டெனும்
வம்பர் வார்த்தை பொய்
அன்பர் நன்மைக்கு - இந்த‌
கம்பர் சொல்வது மெய்.

என்று பாடியிருப்பார்!

சில நாட்களுக்கு முன் ஒரு பிரபல நிறுவனத்தின் தீபாவளி பம்பர் பரிசு விளம்பரம் பார்த்தேன். ‍அதில், இந்த தீபாவளி சீசனில், இதுவரை பரிசு பெற்றவர்கள் போட்டோ வேறு! இதில் காமெடி என்னவென்றால், பொய்யை சரியாக செய்யத் தவறி விட்டார்கள். ஒரே போட்டோவை, பக்கத்தின் இரண்டு இடத்தில், வெவ்வேறு பொருளுக்கு பரிசு பெற்றவராக, வெவ்வேறு முகவரியுடன் போட்டு விட்டார்கள்...அனேகமாக அந்த விளம்பர மேலாளருக்கு சீட்டு கிழிந்திருக்கும் என்று நம்பலாம்.

தொலைக்காட்சியின் எந்த சேனல் பக்கம் திரும்பினாலும் அல்லது பத்திரிகைகளின் எந்தப் பக்கம் திருப்பினாலும், தீபாவளி விளம்பரங்கள் எப்படியிருக்கின்றன? அந்த பொருளுக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நவநாகரீக யுவதியோ அல்லது பண்பாட்டு திலகம் போன்ற பழந்தமிழ் நங்கையோ செயற்கை புன்னகை காட்டியபடி ஒரு அகல் விளக்கின் தீபம் கைகளில் ஏந்தி செயற்கை புன்னகை சிந்துகிறார்கள்.! அதாவது அவர்கள் விளம்பரப் படுத்தும் பொருள் மூலம் நம் வீட்டில் மகிழ்ச்சி தீபம் ஒளிருமாம்...

சும்மா சொல்லக் கூடாது சார்...நம் ஆட்கள் உண்மையிலேயே "ரூம் போட்டு" யோசிப்பவர்கள் தான். இந்த வகையில், எனக்கு ஒரு விளம்பரம் பிடித்திருந்தது ‍"தீபாவளிக்கு தலையில் எண்ணெய் வைக்காமல் குளிக்கின்ற‌ வருத்தமா?" என்று கேள்வி கேட்டு, "சிகிச்சைக்கு முன்" "சிகிச்சைக்கு பின்" என்று இரண்டு போட்டோக்கள். முன்னதில் வழுக்கையுடன் இருக்கும் ஒருவர் பின்னதில் பாகவதர் போல இருக்கிறார். அதன் கீழே "விரைந்து வாருங்கள்...சிறப்பு தள்ளுபடி..." என்று நீள்கிறது விளம்பரம்!

ஆனால் நான் கீழே எழுதியிருப்பது போல் ஒரு விளம்பரத்தை இந்த வருட தீபாவளிக்கு எதிர்பார்த்தேன்:

1. ஒரு இல்லத்தரசி கம்பி மத்தாப்பை நீட்டியபடி சமையல் செய்கிறார். நாம் வியப்புடன் பார்க்கையிலேயே, "இது abc கம்பி மத்தாப்பு. நீண்ட நேரம் எரியும். சமையலே செய்யலாம்னா பாருங்களேன்..." என்பது போன்ற விளம்பரம்.

அனேகமாக, வரும் வருடங்களில் இது போன்றதொரு விளம்பரம் வந்தாலும் வியப்பில்லை:

2. தீபாவளியன்று அனைவரும் வீட்டில் அவரவரது TV அல்லது mobile phone உற்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர் - cut - பயங்கரமான தொடர் பட்டாசு சத்தம் - cut -  பின்னே ஒரு குரல், "வெளியில் சென்று, வெடியை பத்த வைத்து...எதற்கு இத்தனை கஷ்டம்...எங்கள் smart phone / smart tv மூலம் வீட்டில் அமர்ந்தபடி பற்ற வைத்து,   உட்கார்ந்த இடத்திலிருந்தே வெடி வெடித்து, அதை அப்படியே கண்டு மகிழுங்கள்..." என்பது போன்ற விளம்பரம்.

கலி காலத்தில் கண்டதெல்லாம் கெட்டுக் கிடக்கையில் தீபாவளி மட்டும் அப்படியே பழைய மாதிரியாகவேவா இருக்கும்?