/ கலி காலம்

Friday, December 25, 2015

இளையராஜாவுக்கு ஒரு கடிதம்...


மூன்று தலைமுறைகளின் உணர்வுகளுக்கு ஊட்டம் கொடுத்து, இசையின் வழியே மனதின் ஆழ் அகலங்களை காண்பதற்க்கான நாட்டம் கொடுத்து, வாழ்க்கையின் எதிர்பாரா கணங்களின் தோன்றும் வாட்டம் தடுக்கும் அருமருந்தாய், மென்மையும் மேன்மையும் சிந்தனையிலும் செயலிலும் ஊட்டும் நல்விருந்தாய், எண்ணற்ற இதயங்களின் வயதின் தடங்களில் நினைவின் நொடிகளை இசையின் இழைகளின் வழியே பதியச் செய்த உங்களுக்கு, இசையுண்டு வாழும், அதன் வழியே வாழ்க்கையை காணும் கோடிக்கணக்கான மனங்களில் ஒருவனாக எழுதுவது...

இன்றைய சமூகம் தாந்தோன்றித்தனமான போக்கில் திரிவதன் முழுமுதற் காரணம் போதிய வழிகாட்டுதல்கள் இன்மையே என்பதை தங்களைப் போன்ற முதியவர்கள் நன்கு அறிவீர்கள். மூத்தோர் வாக்கை கேட்கும் நிலை இன்றைய சூழலில் இல்லை எனினும், அத்தகையோர் பேசும் தவறான தருணங்களை நன்கு உள்வாங்கிக் கொள்ளும் பொறுப்பற்ற புத்திசாலித்தனம் இங்கு நிறையவே உண்டு. எனவே பெரியவர்கள், அதுவும் பொதுவெளியில் பிரபலமான முதியவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு பல்மடங்கு வீரியமானதாக பலம் பெறுகிறது.

சமூகத்தை நல்வழிப்படுத்துவதை "லோகோ"விற்கு ஏற்ற பன்ச் லைனில் மட்டுமே வைத்துக்கொள்ள விரும்பும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு எதிர்மறை எண்ணங்களை வளர்க்கும் செய்திகளே தங்களை வளர்த்துக் கொள்ளும் தீனியாக தெரிகின்றன. எனவே தான் அவற்றை மீண்டும் மீண்டும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அப்படியொரு நிகழ்வுதான் சமீபத்தில் நீங்கள் உதிர்த்த "அறிவு இருக்கிறதா" என்னும் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வலம் வந்தது.

தனிமனித உணர்வு தத்தளிக்கும் தருணத்தில் சற்றும் பொறுப்பின்றி ஒரு நிருபரால் கேட்கப்பட்ட கேள்விதான் அதை தூண்டியது எனினும், தூண்டிலில் விழாமல் இருப்பது எப்படி என்று சொல்லித்தருவது அல்லவா பெரியோரின் கடமையும் சிறியோரின் எதிர்பார்ப்பும்...பொறுப்பற்ற தன்மையே சுதந்திரம் என்பது இன்றைய சமூகத்தில் எழுதப்படாத விதியாகி விட்டது. ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் அந்த விதியை முன்னின்று எழுதியவையே ஊடகங்கள் தான். எனவே அத்தகையோரிடம் பண்பு எதிர்பார்க்க இயலாது தான். ஆனால் உங்களிடம்....? எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே ஏமாற்றமும் இருக்கிறது. "எந்த சூழ்நிலையில் எதைப் பற்றி கேள்வி கேட்கிறாய்" என்பதோடு நின்றிருந்தால் நீங்கள் முன்மாதிரியாக எங்கள் முன் நின்றிருப்பீர்கள். அதை தாண்டியதால், எங்களுக்கு ஒருமாதிரியாக இருக்கிறது.

இசை மென்மையையும் பொறுமையையும் வளர்க்கும் என்பார்கள். தாலாட்டப்படும் வயதிலிருந்து நாயாட்டம் வாழ்க்கை நம்மை அலைக்கழிக்கும் பொழுது வரை உங்கள் இசை அத்தகைய மென்மையையும் பொறுமையுமே எங்களுக்கு தந்திருக்கிறது. இசையின் கடலிலேயே மூழ்கியிருக்கும் நீங்கள், இதனை பொய் என்று நாங்கள் நினைக்கும் வண்ணம் எந்தவொரு செயலையும் எங்கள் முன் நிகழ்த்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்....

இளையராஜாவின் இயற்பியல் படிக்க‌...


Sunday, October 11, 2015

நயன்தாரா - அதிர்ச்சி தரும் ரகசியம்...!

ரகசியம் என்று சொல்லும் பொழுதே ஒரு சுகம் நம்மைத் தழுவுவதைப் போல இருக்கிறது இல்லையா சார்? அதுவும் அடுத்தவரை பற்றிய ரகசியம் என்றால் சுகமோ சுகம். சாதாரணமாகவே இப்படியென்றால் நயன்தாராவைப் பற்றிய ரகசியம் என்றால் கேட்கவா வேண்டும்? வாருங்கள், பலருக்கும்
 தெரிந்திராத‌ அப்படிப்பட்ட ரகசியத்தை படிப்போம்...

இதுவரை பார்த்திராத கேள்விப்பட்டிராத உருவில் நயன்தாராவை சென்ற வாரம் பார்க்க நேர்ந்தது...பேசாமலேயே ஆயிரம் [சமூகத்திற்கு பயனுள்ள] வார்த்தைகள் சொல்லும் கண்கள்...அடுத்தவரை கூர் தீட்டுவதற்கு ஏற்பட்ட முனை போன்ற நாசி...

இருங்க சார் இருங்க...இந்த நயன்தாரா நம் புத்திக்கும் சித்திக்கும் உணவு தரும் எழுத்தாளர். நேருவின் உறவினர். விஜயலக்ஷ்மி பண்டிட்டின் மகள். கிட்டத்தட்ட 90 வயதை நெருங்கும் முதுமையின் பக்குவ களையை முகத்தில் சுமப்பவர். இந்த வாரம் தலைப்புச் செய்திகளில் அடிபட்டார். கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதை எதிர்த்து தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை துறப்பதாக அறிவித்தது செய்தியாகியது. இப்படித்தான் சார் நயன் தாரா என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். அதுவும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அதையும் திருப்பிக் கொடுத்திருக்கிறார் என்று பல ரகசியங்கள் நமக்குத் தெரிய வந்திருக்கின்றன...விருதை திருப்பித் தருவதால் நசுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து பளபளவென ஆகி விடுமா என்பது இந்தப் பதிவுக்குப் பொருந்தாத விஷயங்கள்...எனவே அதை விட்டு விடுவோம்.

நம் சமூகத்தின் அழகே அழகு சார்...அதாவது நம் சமூக அவலத்தின் அழகே அழகு...! பரவலாக மக்களால் அறியப்படும் "தகுதி" முதலில் அயோக்கியர்களுக்கு கிடைக்கிறது பின்பு அரசியல்வாதிகளுக்கு கிடைக்கிறது (என்னய்யா எதுக்கு இரண்டையும் தனித் தனியே எழுதுகிறாய் ஒரு முறை எழுதினால் போதாதா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது) அதன் பின், நிஜத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத, சமூகத்திற்கு துரும்பேனும் கிள்ளிப் போடாத நடிக நடிகைகளுக்குக் கிடைக்கிறது. ஆசிரியர்களையும் எழுத்தாளர்களையும் "அம்போ" என்று விட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடு நடை போடும் சமூகமல்லவோ நமது...!?

சமீபத்தில் ஒரு பேருந்து பயணத்தின் பொழுது ஒரு தினசரி கையில் சிக்கியது. பசியுடன் இருக்கும் கழுதை, பெயர் பார்த்தா பேப்பர் சாப்பிடும்?
புரட்டிய பொழுது "கேள்வி பதில்" பகுதி கண்ணில் தட்டியது. சாதாரணமாக கை கால்களில் தான் புல்லரிக்கும் ஆனால் அப்பகுதியை படிக்கப் படிக்க கண்களிலேயே புல்லரிப்பு ஏற்பட்ட்டது...தீந்தமிழ் பாகெடுத்து சிந்தையில் வழிய விட்டு புத்தியில் அமிர்தம் சுரக்க வைக்கும் அறிவுசார் கேள்விகளும் அதைவிட அசரடிக்கும் பதில்களுமாய்...அதில் ஒரு கேள்வி. "நயன்தாரா நாய் வளர்க்கிறாரா?" என்னும் அந்த அற்புதமான கேள்வியை அனுப்பியவர் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தால் மன்னிக்கவும். கேள்வியை கேட்டவர் மீதோ அப்பத்திரிக்கை மீதோ அதை படிக்க வைத்த அந்த பேருந்தின் மீதோ அப்படியொரு "நேரத்தை" எனக்குக் கொடுத்த காலம் மீதோ எள்ளளவும் எனக்கு கோபமில்லை. மாறாக...நன்றிகள்...ஆம்...
நயன்தாரா பற்றிய பயனுள்ள செய்திகள் எதுவுமே இச்சமூகத்திடம் கைவசம் இல்லையா என்று அப்பொழுது தோன்றிய கனப்பொழுது எண்ணம் இன்று ஈடேறுகிறது...

அப்படிப்பட்ட ஒரு செய்தியை பகிர்ந்து கொண்ட திருப்தி எனக்கு. வாசித்த உங்களுக்கும் தானே?

பின் குறிப்பு: மாயா படம் நன்றாக இருக்கிறதாமே சார்...

Sunday, August 2, 2015

கலாமின் கடைசி உதவி...!

திரு.அப்துல் கலாம் மறைவினால் மனதளவில் உண்மையாய் மருகி நிற்கும், அவர் போன்று அறம் சார்ந்த வாழ்க்கையை ஒழுகி நிற்கும், எளிதில் கண்ணில் சிக்காத அரிய இனமாகிப் போன சான்றோர் எவரேனும் இக்கட்டுரையை படிக்க நேர்ந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும். இக்கட்டுரை உங்களை நோக்கி எழுதப்பட்டது அல்ல.

கலாமின் இறப்புச் செய்தி வந்த பொழுதிலிருந்து இந்த நிமிடம் வரை ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்கள் எங்கும் "டிரெண்டிங்"கில் இருக்கிறார் அப்புனிதர்.
அயல்நாட்டவர் எவரேனும் இத்தளங்களுக்குள் நுழைய நேர்ந்தால்...ஆளாளுக்கு அப்துல் கலாம் குறித்த கருத்துக்களை அள்ளி வீசும் ஆச்சரியத்தின் அடியிலுள்ள அவலத்தை அறியாமல், "ஆஹா எப்பேர்ப்பட்ட தேசம் இந்த இந்தியா...அத்தேசத்தின் தெருக்களில் இறங்கினால் எதிர்படும் மனிதர்கள் யாவருமே மாசற்ற மாணிக்கங்களாய் இருப்பரோ! அவனி முழுதும் பவனி வந்தாலும் கோடிக்கணக்கான மகான்கள் குடியிருக்கும் பாரதம் போன்றதொரு தேசத்தை பார்க்க இயலாதோ!..." என்றெல்லாம் எண்ணிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

சாலையில் காண நேரும் விபத்தில் அடிப்பட்டுக் கிடக்கும் ஒருவருக்கு தண்ணீர் கொடுத்தால் கூட நாளை கோர்ட்டில் சாட்சிக்கு அலைய வேண்டியிருக்குமோ என்று நழுவும் மனிதத்தின் நரம்பற்ற மானுட கும்பலான நாம், கலாமின் மனிதத்தை படங்களாகவும் சம்பவங்களாகவும் பகிர்கிறோம். அதற்கும் நமக்கும் சற்றேனும் சம்பந்தம் இருக்கிறதா? பயணத்தின் போது பக்கத்து இருக்கைக் காரருக்கு ஒரு கோப்பை தண்ணீர் தர யோசிக்கும் நாம், கலாமின் நதிநீர் இணைப்புக் கனவை பகிர்கிறோம்...மேல்நிலை வகுப்புகளில் தமிழை ஒரு பாடமாகக் கூட எடுப்பதை லாயக்கற்றது என்று நினைக்கும் வர்க்கமான நாம், கலாம் தமிழ்வழி கல்வி பயின்றதை ஏதோ நாமே செய்ததை போல சொல்லிச் சொல்லி மாய்கிறோம்...மாணவர்களின் குரு என்று வெவ்வேறு பள்ளிச் சிறார்களுடன் கலாம் உரையாடுவது போன்ற படங்களைப் பகிரும் நாம், ஒரு குற்றவாளியை சோதனை செய்வது போல் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களை சோதனை செய்யும் அளவு புரையோடியிருக்கும் அவலத்தை, கல்வி நிலையங்கள் அடிக்கும் பகல் கொள்ளைகளை, நம் பிள்ளைகளின் நாளைய அமெரிக்க கனவின் பொருட்டு நைஸாக மறைக்கிறோம்...மறக்கிறோம்....வீட்டிலிருப்பவர்களிடம் கூட விட்டுக்கொடுக்கும் தன்மையற்று சுயநலப் பேய்களாய் அலையும் நாம், தோல்வியின் போது முன்நின்று வெற்றிகளில் அடுத்தவர்களை முன்னிறுத்தும் அற்புதப் பண்பை அப்துல் கலாம்,அவரின் உயரதிகாரியான சதீஷ் தவானிடமிருந்து கற்றதாக சொன்னதை ஆரவாரமாக அனைத்து பதிவுகளிலும் அள்ளி விடுகிறோம்...
டாஸ்மாக்கில் கொழித்த வருமானத்திலிருந்தே மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு ஒதுக்கீடு செய்யும் பைத்தியக்காரத்தனத்தை பத்திரிகையில் படிப்பதோடு நம் வேலை முடிந்தது என்னும் கொள்கையுள்ள வெகுஜனமான நாம், அப்துல் கலாம் அறிவுறுத்திய தனி மனிதன் முன்னெடுக்க வேண்டிய சமூக இயக்கங்களுக்கான காரணிகளை "ஃபார்வார்டு" செய்வது அபத்தமாக இல்லை?
எப்பேர்பட்ட சமூகப் பொறுப்புணர்வு மிக்கவராக கலாம் விளங்கினார் என்பதை விளக்கும் எண்ணற்ற உதாரணங்களை உலா வரச்செய்வது இன்னொரு ரகம்...நம் பொறுப்புணர்வு தான் உலகப்பிரசித்தி பெற்றதாயிற்றே...புராதன சின்னங்களின் மீது சிறுநீர் கழிப்பது துவங்கி, பஸ்ஸில் பொழுது போகவில்லை என்றால் நகத்தால் சீட்டை நோண்டும் சீரிய பண்பு வரை ஒன்றா இரண்டா நம் சமூகப் பொறுப்பின் சான்றுகள்!
பள்ளி கல்லூரிகளுக்கு அவரின் மறைவுக்காய் விடுமுறை விட்டு காணப்போகும் பயன் என்ன? அதற்கு பதில் நாள் முழுதும் அவரின் பேச்சுகளை பள்ளியில் அமர்ந்து கேட்குமாறு செய்திருக்கலாமே? அது சரி, மேம்போக்காக கடைபிடிக்கப்படும் எதிலும் ஆழம் தேடுவது அறிவீனம்தானே...

"கனவு காணுங்கள்" என்ற வாக்கியத்தை வைத்து கணக்கற்ற பதிவுகள்...! குண்டு குழியற்ற சாலையில் பயணம் செய்ய, தனியே வெளியில் சென்ற வீட்டுப்பெண் தாமதமானால் ஆபத்தின்றி வீடு திரும்ப, அரசு அலுவலகங்களில் கையூட்டின்றி காரியம் முடிக்க, சிறுவர்களின் பால்யம் சிதையாமல் இருக்க, மனசாட்சிக்கு விரோதமான எதையும் முடியாதென மறுக்க...என எத்தனை எத்தனை கனவுகள்...ஆனால் இக்கனவு ஒவ்வொன்றையும் இந்நாட்டில், ஏதோ ஒரு மூலையில், ஒவ்வொரு நொடியும் சிதைத்து சின்னாபின்னம் ஆக்குபவர்கள் யார்? நம்மில் ஒருவர் தானே? நம் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு மற்றும் ஊக்குவிப்புக்களில் தானே இவை நிகழ்கின்றன? கலாமின் "கனவு காணுங்கள்" பகிரும் நமக்கு மனசாட்சி உறுத்தாதா? மனசாட்சியா? அதெல்லாம் இப்போது மருத்துவமனையில் பிறப்பு நிகழ்ந்தவுடன் குப்பைக்குப் போகும் பிரசவ கழிவுகளுடனேயே அதுவும் அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறதே என்கிறீர்களா? சரிதான். அதனால் தான், கலாம் புகழ் பாடும் கணத்திலும், வலைதளத்திலும் நம் இரட்டைத்தன்மை குட்டு சட்டென்று வெளிப்படுகிறது. ஒரு அறிமுகமற்ற நபர் "கலாம் மறைவுச் செய்தி கேட்டதிலிருந்து தூக்கமில்லை" என்று ஒரு "போஸ்ட்" போடுகிறார். சில நிமிடங்களில் ஹன்சிகாவின் அடுத்த பட ஸ்டில் ஒன்றும் போடுகிறார். இதைவிட எளிய சான்று தேவையா நாம் யாரென்று தெரிந்து கொள்ள? அந்த அறிமுகமற்ற நபர் நம்மில் பெரும்பாலானவர்களின் பிம்பம் காட்டும் கண்ணாடி தானே!

நாளைய பாரதம் பற்றி நாளும் பொழுதும் யோசித்த நற்குணங்களின் தொகுப்பான அவருக்கு, சாமானியன் என்னும் சாக்கு போர்த்தி  நாடெங்கும் நிறைந்திருக்கும் நம்மை போன்று களைகளைப் பற்றி தெரியாமலா இருந்திருக்கும்? அதனால் தான் போகும் பொழுதிலும், போன பின்னும் நமக்கு நச்சென்று ஒன்றை புரிய வைத்துப் போயிருக்கிறார். நாமறியாது, நாமே கருவியாகி, நமக்கு நாமே பொருளாய் புரிபடும் வண்ணம் கலாம் பற்றிய எண்ணற்ற பகிர்வுகளின் வழி புகுந்து அவருக்கு மிகவும் பிடித்த வடிவமான ஆசிரியரின் உருக்கொண்டு உதவியிருக்கிறார். பாரதி பாடிய சின்னஞ்சிறு கதைகள் பேசி பிறர் வாடப் பல செயல்கள் செய்யும் வேடிக்கை மனிதர்கள் நாம் என்று பொட்டிலடித்தாற் போல் புரிய வைத்திருக்கிறார்.
கலாம் வாழ்ந்து காட்டியனவற்றை கதைகள் போல் பகிர்கிறோம் அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லா வண்ணம் நம் அன்றாட வாழ்வில் நடக்கிறோம். நாம் வேடிக்கை மனிதர்களேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

அப்துல் கலாம் நடமாடிய மண்ணில் இருக்கும் நமக்குள், அவரின் அளப்பரிய பண்புகளின் வாசனையின் ஒரு அணுவேனும் நமக்குள் இறங்கியிருக்காதா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்வோம். அவரைப் பற்றிப் பேசுவதை விட அவர் வாழ்வின் அடிப்படைத் தத்துவமான சுயநலமற்ற மனிதத்தை நாமும் பயின்று, நமக்கென்று இல்லாது பிறர் பொருட்டு ஒரு துரும்பையேனும் நகர்த்த முயற்சிப்போம். முகநூலில் கலாம் படங்களை பொழுது போக்கு போல போஸ்ட் செய்வதை விட்டுவிட்டு நம் அகநூலில் அடைந்திருக்கும் அழுக்குகளை நீக்கும் வேலையில் இறங்குவோம்...!

Sunday, June 14, 2015

அம்மா நூடுல்ஸ்...!

அடடா... புதுப்புனலின் வேகத்துடன் ஒரு புரட்சிக்குரிய எழுச்சியுடன் சில நாட்களாக தூள் கிளப்புகிறது மேகி விவகாரமும் விவாதங்களும்...உணவு மற்றும் நுகரும் பொருட்களில் கலப்படமா என்று வெகுண்டு எழுந்து கொதிக்கிறது தேசம்! சாதாரண தேசமா இது? அறிவு ஜீவிகள் நிறைந்த நாடல்லவா? அதான் "இரண்டு நிமிடங்களில்" கொதித்து எழுகிறது. ஆனால் சற்றே அக்கடா என்று அமர்ந்து ஆலோசித்மென்றால், புத்தி கெட்ட தேசத்தில் இது போன்று நிகழ்வதில் வியப்பேதும் இல்லையே என்ற "தெளிவு" கிட்டும்.

நம் குழந்தை வளர்ப்பு முறை மீதும் குடும்ப வாழ்வியல் கட்டுமானம் மீதும் தோண்டிச் சிதைக்க என்பதுகளில் முன்னெடுக்கப்பட்ட முதல் கடப்பாறை மேகி என்றால் மிகையாகாது. விடுமுறை தினங்களில் ஓடியாடி அயர்ந்து வரும் சிறார்களுக்கு ஊட்டமிகு தின்பண்டங்களுக்கு மாற்றாக இரண்டு நிமிடங்களில் போஷாக்கு காட்டுவதாய் வந்த விளம்பரங்களில் வீழ்ந்த குடும்பத் தலைவிகளின் பகுத்தறியும் பக்குவத்தின் நீட்சி தான் இன்று நாம் காணும் அர்த்தமற்ற கூப்பாடு...சற்று யோசித்தால்...

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான் வாழ்க்கை வண்டி ஓடும் என்பது காலத்தின் கட்டாயம் என்றால், சமையலறையின் பளுவையும் பாங்கையும் இருவரும் பங்கிட்டு செய்வது தானே அதற்கேற்ற நியதியாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால் "உலகமயமாக்கல்" மூலம் நாம் அடைந்த ஏராளமான சிதைவுகளில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவற்றின் முக்கியமானது சமையலறைகளின் சிதைவு இல்லையா?
இன்று கட்டப்படும் வீடுகளில் சமையலறையும் அலங்காரம் மிக்கதாக இருக்கிறதே தவிர அதன் பணி செய்கிறதா? எத்தனை வீடுகளில் தினமும் "புதுச் சமையல்" நடை பெறுகிறது? வார இறுதியில் துணி துவைப்பது அடுத்த வாரத்திற்கான ஏற்பாடு எனலாம். ஆனால் அந்த வாரத்திற்கான சமையலை செய்து ஃபிரிட்ஜில் வைத்து வாரம் முழுதும் பயன்படுத்துவதை?

மக்களின் நாடியை நன்றாக படிக்கத் தெரிந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. சமையல் செய்ய நேரமும் விருப்பமும் இல்லாமல் பணத்தின் பின் மட்டுமே ஓடும் சமூகத்தை ஏமாற்ற, நேரத்தை சேமிப்பதாகச் சொல்லும் கவர்ச்சி விளம்பரங்கள் போதுமே? ஒரு சாதாரண நகர ஓட்டலில் கூட "தோசை" என்று சொல்பவர்கள் பாமரர்கள் எனவும் "தோசா" என்று சொல்பவர்கள் படித்த அறிவுஜீவிகள் என்றும் புரிந்து கொள்ளப்படும் புத்தி கெட்ட தேசத்தில் எதையும் எப்படி வேண்டுமானாலும் விற்கலாம்...கொழுக்கட்டையை ஓட்டலில் சாப்பிட முடியுமா நம்மால்? "மோமோஸ்" என்று பெயரிட்டால் உயர ரகக் காரில் வந்திறங்கி சாலையோரத்தில் கூட நாம் "கொழுக்கட்டை" சாப்பிடுவோம். என்ன, அதன் விலை ஐம்பது ரூபாய் இருந்தால் தான் "சாப்பிடத் தகுந்தது" என்று நாம் நம்புவோம். ஐந்து ரூபாயில் விற்கும் கம்பங்கூழ் குடித்தால் நம் இமேஜ் என்னாவது? தாவர ஜங்கமத்தில் ஒரு பிறப்பாக நம்மை சமூகம் ஒதுக்கி விடுமோ என்ற அச்சம் தோன்றுமே?

நம்மாழ்வார் எடுத்துரைத்த இயற்கை உணவு வகைகளை விட நடிகைகள் விளம்பரப்படுத்தும் பகட்டு வகைகள் தானே நம் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது? சமூகமே இப்படி இருக்கும் பொழுது வியாபாரம் செய்பவர்களை சாடுவது நகைச்சுவையாக இல்லை?

சமீபத்தில் ஒரு ரயில் பயணத்தின் போது பக்கத்து இருக்கையில், இந்தியாவின் வல்லரசு கனவின் ஒரு துகளான ஐ.டி இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். முந்தைய தலைமுறை பயணங்களில் வயல்வெளிகளையும் வானத்தையும் பார்த்து மகிழ்ந்தபடி பயணம் செய்தது. இப்போதெல்லாம் அப்படி பயணம் செய்தால் "பொன்மாலைப் பொழுது" பாட்டில் ராஜசேகரின் பார்வை போல நம்மை நோக்கி பல பார்வைகள் வரக்கூடும்! அவர் மடிக்கணிணியில் மூழ்கியிருந்தார். பயணத்தின் போது கூட சயனிக்க முடியாத அளவு வேலைப்பளுவை அவருடைய பன்னாட்டு நிறுவனம் அளித்திருக்கக் கூடும்...நடுவே "ஸ்மால் சைஸ்" பிசாவையும் ஒரு கையில் வைத்துக் கொண்டு பசியாறினார். அந்த இடைவெளியில் நிகழ்ந்த பேச்சில் அவர் பிசா பிரியர் என்று உணர முடிந்தது. அப்படி இப்படியாக பேச்சு இயற்கை உணவு பக்கம் போய், "அதுக்கெல்லாம் ஏது சார் நேரம்..." என்று வளைந்து "ஹூ இஸ் நம்மாழ்வார்" என்பதோடு முடிவுக்கு வந்தது. அவர் அமெரிக்க பிறப்போ ஆஸ்திரிலேய குடியோ அல்ல. தென் தமிழ் நாட்டின் குறுநகரம் ஒன்றிலிருந்து "உழைத்து முன்னேறியவர்". நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை தெள்ளந்தெளிவாய் உணர்த்தும் உதாரணம் இது.


இரண்டாயிரம் நெல்வகைகள் இருந்த மண்ணின் மரபு பற்றிய அறிவேதும் அற்றுத் திரியும் நாம், இரண்டு நிமிட ஆச்சரியங்களில் வீழ்வதில் வியப்பேதும் இல்லையே! இப்போது உலகம் இருக்கிற இருப்பில், கிறுக்குப் பிடித்து பறக்கும் வாழ்க்கை முறையில், மெதுவாக கொல்லும் விஷம் என்று சொன்னாலும், "மெதுவாகத் தானே..." அதற்குள் "முன்னேறுவோம்" என்ற பித்தம் பிடித்துத் திரிகிறோம் நாம். அப்புறம் எந்த நச்சுப் பொருள் எந்த அளவில் எதில் இருந்தால் என்ன? மேகிக்கு இத்தனை கூச்சல் எதற்கு? ஷாம்பூக்களில் கலந்திருக்கும் நச்சு குறித்து அதன் மேலேயே அச்சடித்திருக்கிறார்களே? கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்று விவாதித்த பெரும்பரம்பரை அல்லவா நமது? ஷாம்பூவே பயண்படுத்தாமல் சீயக்காய் தேய்த்து குளிப்பவர்கள் சிரிப்புக்குரியவர்களாகி விட்டனரே இன்று! ஊறுகாய் முதற்கொண்டு உண்ணும் அனைத்தும் பாட்டிலில் வந்து விட்டதே...அதன் மீதே பிரிசர்வேட்டிவ் லிஸ்ட் இருக்கிறதே...வாங்காமல் விட்டோமா நாம்? வீட்டில் ஊறுகாய் போடுவது வீண் வேலை என்ற எகத்தாளம் அல்லவா இன்றைய நிலை?

இதில் இன்னொரு காமெடியும் உண்டு. விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது நடவடிக்கை என்றால், அதை காட்டிய ஊடகங்களும் அதற்கு உடந்தை தானே? அவர்களே விவாதம் நடத்துவது விந்தையிலும் விந்தை. அதை நாம் பார்த்து மகிழ்வது உணர்த்துவது நாமெல்லாம் ஒரு மந்தை என்பதை. எல்லாவற்றிற்கும் மேலாக, மேகி விளம்பரத்திற்கு சேனல்கள் கோடியாய் கோடியாய் வாங்கியிருக்கும் இல்லையா? ஆனால், இந்த விவகாரம் பற்றிய செய்தி முழுவதும் திரையின் ஒரு பக்கத்தில் அதே விளம்பரத்தை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஒண்ணுமே புரியலையே...ஒரு வேளை எல்லோருமே எல்லோரையும் ஏமாற்ற பழகி விட்டதனால் தான் இப்படியோ?

சரி, "அம்மா நூடுல்ஸ்" என்று போட்டு விட்டு அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்கிறீர்களா? எண்பதுகளில் மேகி எங்கள் தெருமுனை கடைகளில் தலைகாட்டிய பொழுது அழுது அடம்பிடித்து நான் வாங்கிய மேகி பாக்கெட்டை முன்னும் பின்னும் பார்த்த அம்மா, "இதெல்லாம் நமக்கெதுக்குடா...என்னத்தையெல்லாம் கலந்துருக்கானோ" என்றது நினைவிருக்கிறது. அம்மாக்கள் சொல்வது பெரும்பாலும் பொய்ப்பதில்லை இல்லையா?

Sunday, May 31, 2015

ஒரு பரபரப்பான செய்தி...

நடிகை வீட்டு நாய் குட்டிக்கு நகம் வெட்டப்பட்டது துவங்கி பள்ளத்தில் விழுந்த பேருந்தில் சிக்கிய கள்ளக் காதல் ஜோடி தப்பிய தகவல் வரை (அதென்ன சார் "கள்ளக் காதல்"? கலிகாலத்தில் இது ஒரு பொருட் பன்மொழி அல்லவா? சரி விடுங்கள் இந்தப் பதிவு அதை விட பயனுள்ள பொருள் பற்றியது என்று நம்புவோம்...) நம் பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் கிளப்பும் பரபரப்புக்கு பஞ்சமேயில்லை. பரபரப்பு இருந்தால் தான் அது செய்தி என்ற நிலைக்கு நாம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே நம் பங்குக்கு நாமும் பரபரப்பு செய்தி கொடுக்க வேண்டாமா? என்ன,  மேற்சொன்ன உதாரணங்கள் போன்றவற்றை செய்தியாய் கருத மனசாட்சி உறுத்துவதால் சற்றே "பரபரப்பு குறைந்த" செய்தி ஒன்றைத் தருகிறேன். வாசித்து மகிழுங்கள்....


இரண்டு வருடங்களாய் பொழுது விடிந்தால் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது சார்...எப்படி என்று கேளுங்கள்...உதாரணமாக ஒரு உற்சாக நிகழ்வு ஒன்றை பகிர்கிறேன்..சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தொட்டியில் வெண்டைக்காய் விதை போட்டு மொட்டை மாடியில் வைத்தோம். "தொட்டியில வெண்டைக்காய் வரும்னு நினைக்கிற மண்டைக்குள்ள மண் தான் இருக்கும்" என்று கூட சிலர் சொன்னார்கள். நாங்களும் ஒரு வேளை அப்படித்தானோ என்று சந்தேகப்பட்டோம். ஆனால் சில வாரங்களில் பச்சை நிற சீரியல் பல்புகள் போல சில மொட்டுக்கள் தோன்றின.



தினமும் அந்த மொட்டுக்கள் என்னவாயிற்று என்ற எதிர்பார்ப்பு காலை பல் துலக்கும் போதே முளைத்து விட, ஆளாளுக்கு மொட்டை மாடிக்கு போய் ஒரு பார்வை பார்த்து "பரபரப்பை" தனித்துக் கொள்வோம். ஒரு வாரம் கழித்து அந்த மொட்டுக்களில் இருந்து மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கத் துவங்கின.





அக்கம் பக்கத்தார் மகரந்த சேர்க்கை இல்லாமல் பூ அடுத்த கட்டத்தை எட்டாது என்று அச்சம் ஏற்றினர். எங்களின் அதிகாலை பரபரப்பு இன்னும் அதிகமானது...மேனிக்கே தண்ணீர் கிட்டாத கான்கிரீட் கூடுகள் நிறைந்த நகரத்தின் இடுக்குகளில் தேனியை தேடித் திரிவது பைத்தியக்காரத்தனம் தான்... ஆனால் நம் கண்ணுக்குத் தெரியா அதிசயங்களை இயற்கை நொடி தோறும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆம். ஒரு காலைப் பொழுதில் தண்ணீர் விடச் சென்ற நானும் மனைவியும் கண்களை அகல விரித்து பார்க்கும் வகையில் ஆச்சரியம் நிகழ்ந்திருந்தது. மலர் வாடுமோ என்ற எங்கள் அலர் நீக்கும் வகையில் பூத்திருந்த மலர்கள் அனைத்தும் பூசியடைத்தது போல் மூடி புடைத்தபடி இருந்தன நக அளவு வெண்டைகளாய் மாறி,,,!





ஒரு வாரம் உச்சகட்ட பரபரப்பு. ஆனால் பரபரப்பு எப்படி அமைதி தரும்? கட்டாயம் தரும். செடி நன்றாக வளர வேண்டும் என்ற பரபரப்பு மனதுக்கு அமைதியைதான் தருகிறது. இயற்கையின் எத்தகைய பரபரப்பும் அமைதியை நோக்கி தான் நம்மை இட்டுச் செல்லுமோ? ஒரு வாரத்தில் விரல் நீளத்தை தாண்டிய வெண்டைக்காய்கள் எங்களை பார்த்து கைகொடுப்பது போல தொட்டி முழுதும் நீண்டு நின்றபோது மனதுக்குள் ஒரு அற்புதமான வாசனை பரவுவது போன்ற "பரபரப்பு" தோன்றியது. மண் வாசனையாக இருக்குமோ?

சொல்லுங்கள் சார்...அர்த்தமற்ற, அறிவை மழுங்கடிக்க வைத்து, மனதை அழுகிப் போக வைக்கும் செய்திகளை விட இதில் சற்று பரபரப்பு குறைவு எனினும் இந்த "செய்தி" எப்படி? இச்செய்தி உங்களுக்கு புதிதென்றால், பிடித்தமென்றால், நீங்களும் முயன்று பாருங்கள். ஒரு தொட்டி மண்ணும் சில விதைகளும் உங்கள் நாட்களை எத்தகைய "பரபரப்பு" மிகுந்தவை ஆக்குகின்றன என்று...அதிலும், அனுதினமும் அந்த பரபரப்பு உங்களுக்கு தரும் அமைதியை...ஆனந்தத்தை...பரபரப்பின் அடியிலும் அமைதி உண்டு என்னும் ஆச்சரியத்தை...!


Sunday, May 3, 2015

இது தேவையா?

தமிழர்களாகிய நாம் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் சும்மா உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதோடு நிறுத்தினால் நம் பெருமை என்னாவது? எனவே அவ்வப்பொழுது நாம் கண்மூடித்தனமாக உணர்ச்சிவசப்படுவோம் என்பதையும் காட்டிக் கொண்டால் தானே "உணர்ச்சிவசப்படுதல்" பெருமையை புதியதொரு தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்!.

அதன் மற்றொரு பரிமாணமாக நாம் சமீபத்தில் கண்டது தான் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" குறித்த பரபரப்பு. ஒரு குழுவோ கூட்டமோ நினைத்தால் ஐந்து வருடத்திற்கு முன்பு வந்த ஒரு நாவலை எடுத்து, அதிலிருந்து சில பக்கங்களை பிரதியெடுத்து பிரம்மாண்டமாக்கி போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி, அதை எழுதியவரை "இனி எழுதப்போவது இல்லை" என்று சொல்ல வைக்க முடியும். அந்த எழுத்தாளரும் நம் போல தமிழர் தானே? அவரும் போராட்டக்காரர்களுக்கு இணையாக உணர்ச்சிவசப்படுவார் இல்லையா? பட்டார்..."உள்ளே இருக்கும் எழுத்தாளன் இறந்து விட்டான். நாவலின் அத்தனை பிரதிகளையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டார். மக்கள் தான் இப்படி... சமூகத்தை காக்கும் அதிகார வர்க்கம்? அவர்கள் என்ன சளைத்தவர்களா? காவல்துறையும் தன் பங்குக்கு, "எதற்கு வீண் சிக்கல்கள்" என்ற ரீதியில் எழுத்தாளருக்கு அறிவுரை (எச்சரிக்கை?) கொடுக்க, வெறும் வாய்க்கு கிடைத்த அவலாக "கருத்து சுதந்திரம்" என்று ஒரு கூட்டம் வழக்கமான குரலெழுப்ப, பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் ஒரு வாரம் நல்ல தீனி.

முதலில் பெருமாள் முருகனை பார்ப்போம். அவர் ஒரு ஆசிரியர். ஒரு உண்மையான நிகழ்வாகவே இருந்தாலுமே, அதைப் பற்றி பேசுவதாலோ எழுதுவதாலோ யோசிப்பதாலோ எப்பயனும் இல்லையெனிலோ அல்லது பலர் மனதை புண்படுத்தக் கூடும் எனிலோ அதை தவிர்க்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர் பணி செய்பவர். அத்தகைய தவிர்த்தல் என்பது கருத்துப் பக்குவம் ஆகும். கருத்துச் சுதந்திரத்தை விட கருத்துப் பக்குவம் சாலச் சிறந்தது என்று அவர் அறிந்திருக்க மாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனாலும், மேற்சொன்ன விளக்கத்தின் படி, கருத்துப் பக்குவம் அற்றது என்று கருத்தில் கொள்ள வேண்டிய‌ ஒரு நிகழ்வை தன் படைப்பினூடே வெளியிடுகிறார். "கருத்துப் பக்குவம்" அவரிடமிருந்து அக்கணமே நீங்கி விடுகிறது. மீதமுள்ள பரிமாணமான கருத்துச் சுதந்திரத்தையாவது அவர் உறுதியாக பற்றினாரா? அப்படியென்றால், எக்காரணத்தைக் கொண்டும் அவர் "இனி எழுதுவதில்லை" என்பது போன்ற நிலைக்குச் சென்றிருக்க முடியாது.

எழுத்து என்பது தெய்வத்தை தொழுதல் போன்றது. நம்பிக்கை அற்று அதை செய்ய இயலாது. பெருமாள் முருகன், அவர் தன் எழுத்தின் மீது, மேற்சொன்ன கருத்துப் பக்குவம், கருத்துச் சுதந்திரம் என்ற இருவகை நம்பிக்கைகளையும் இழந்து விட்டவராகவே நமக்குத் தெரிகிறார். எதிர்ப்பை தீவிரமாக முன் நின்று எதிர்கொண்டு ஏன் தன் எழுத்தை தொழவில்லை பெருமாள் முருகன்?

இப்போது "பற்ற" வைத்த‌ பண்பாளர்களைப் பார்ப்போம்...இவர்கள் உண்மையிலேயே மேற்சொன்ன "கருத்துப் பக்குவத்தின்" கூறுகள் குறித்த அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால், நாவல் எழுதியவரை ஒரு குழுவாக தனியே சந்தித்து சில பகுதிகளின் தேவையற்ற தன்மை குறித்து விவாதித்து, அதை நீக்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்தால் அவர்கள் எப்படி "வெளியே" தெரிவார்கள்? விஷயம் முடிவுக்கு வருவதா முக்கியம்? அது எத்தனை பெரிதாக வெளியில் தெரிகிறதோ அதில் தானே "வெற்றி" இருக்கிறது? எனவே இவர்களிடமிருந்து அப்படிப்பட்ட அணுகுமுறையை நாம் எதிர்பார்க்க முடியாது. சரி, ஒரு நாவலில் எழுதப்பட்ட பழைய நடைமுறையை சினங்கொண்டு எதிர்க்கும் சிங்கங்களாகிய இவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவைத் தாண்டி, ஒட்டு மொத்த மனிதப் பண்பாடு, உறவு மற்றும் உணர்வு முறைகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து, காணச் சகிக்காத  வக்கிரங்களை காட்சிகளிலும் கேட்கச் சகிக்காதவற்றை பாடல்களாகவும் தமிழ்நாடு முழுக்க புகட்டிக் கொண்டே இருக்கும் படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒன்றும் பேசாமல் இருப்பதெப்படி? ."பற்ற" வைக்கும் சிங்கங்கள் இந்த அசிங்கங்கள் பற்றி வாய் திறவாமல் இருப்பது ஏனோ? ஒரு வேளை இலக்கியத்தை மட்டும் தான் இவர்கள் எதிர்ப்பார்களோ?

மீடியாவுக்கு வருவோம். அவை என்ன செய்தன? பரபரப்பாக பேசக் கூடிய பத்து பேரை நாளுக்கு ஒன்றாய் அழைத்து வந்து பிழைப்பை பார்த்தன. "மாதொரு பாகன்" முழுதாக நீங்கள் படித்து விட்டுத்தான் பேசுகிறீர்களா என்று கேட்கவா முடியும்?

ஆக மொத்தம் அத்தனை கோணங்களிலும் அனைத்து வகை கோணல்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பேணி வளர்த்து வரும் தமிழ் சமூகத்திற்கு இது போன்றதொரு பரபரப்பு தேவைப்படுகிறது. தேவைப்படுவதை எப்படியேனும் உருவாக்கி பெரிதாக்கி உற்சாகம் அடைபவர்களில் நம்மிலும் சிறந்தோர் உலகினில் உண்டோ?

சரி சார்...என்னய்யா நீ? ஜனவரி மாதம் நடந்ததைப் பற்றி இப்போது எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஆனால் காரணம் இருக்கிறது சார். நம்முடைய தேசத்தின் சிறப்பு குணமே எதிலும் "இன்ஸ்டண்ட்" முறையில் வெட்கம் மானம் ரோஷம் காட்டி விட்டு, பின் அதை மறந்து விடுவதுதான். மறக்கக் கூடாதவற்றை மறந்து போன நேரத்தில் ஞாபகப்படுத்துவது தானே சரி?


Sunday, January 11, 2015

ரகசியமாய் கேட்டுக்குங்க...

ஆமாம் சார். கொஞ்சம் காதை பக்கத்தில் கொடுங்க. இந்த விஷயத்தை சத்தமில்லாம காதில் சொல்லி விடுகிறேன். ஏற்கெனவே உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமோ இல்லையோ எப்படி இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களை இன்னொரு முறை சொல்வதில் எந்த நஷ்டமும் இல்லை.

சரி, என்ன ரகசியம் என்கிறீர்களா? ரகசியம் என்றால் வெளியில் தெரியாமல் இருப்பது தானே? அப்படியென்றால், நல்ல புத்தகம் என்பதே ஒரு ரகசியமான விஷயம் போல ஆகிவிட்டது இல்லையா? வருடா வருடம் போல் இந்த வருடமும் புத்தகக் கண்காட்சி துவங்கி விட்டது. வீட்டுக்கு ஒரு விவேகான‌ந்தர் இல்லையென்றாலும் வீட்டுக்கு ஒரு எழுத்தாளர் தமிழ் நாட்டில் இருக்கிறார்களோ என்று நினைக்கும் அளவுக்கு,  எந்த புத்தகத்தை வாசிப்பது என்று பெருங்குழப்பம் ஏற்படும் அளவுக்கு, ஏகப்பட்ட புது புத்தகங்கள்...

மேலும், "அந்த காலத்து" அற்புதங்களையே இன்னும் படித்து முடிக்கவில்லையாதலால் புதியன உடனே வாங்குவதில் நிறைய தயக்கங்கள் உண்டு. இருப்பினும், புதிய வருகைகள் பற்றி அறிந்து கொள்வதற்கேனும் புத்தகக் கண்காட்சி நிரம்ப உதவுகிறது. சென்னையில் வசித்தால் தான் புத்தகக் கண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. எந்தெந்த ஊர்களில் இருந்தெல்லாமோ ஏதேதோ "புண்ணிய தலங்களுக்கு" செல்வதை விட, கண்காட்சியில் புத்தகங்களை திரட்டுவதும் அதன் மூலம் சிந்தனை வித்துக்களை நமக்குள் விதைப்பதும் அதிக புண்ணியம் சேர்க்கும் வழியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

இந்த முறை, ஒரு நல்ல (புது) கவிதை புத்தகத்தையேனும் தேடிப் பிடித்து விட வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன். இப்போது வரும் கவிதை புத்தகங்களை மனது ஏற்க‌ மாட்டேன் என்கிறது. கவிதை என்ற பெயரில் உரைநடையை, இன்னும் சொல்லப் போனால் பேச்சு நடையை வரிகளுக்கிடையில் மடக்கி நீட்டி எழுதும் வகையே இன்று கவிதை என்று அழைக்கபடுவது மிகவும் வருந்தத்தக்கது. இது போன்ற கவிதைகள் எழுதுவோரையும் வெளியிடுவோரையும் "மொழித் துரோகம்" என்றொரு புதிய சட்டப் பிரிவு ஏற்படுத்தி தண்டித்தால் தேவலையோ? மனதுக்குள் நீண்ட காலம் உழலும் ஒரு வரியேனும் ஒரு கவிதை புத்தகத்தில் இருக்காதா என்ற ஆயாசம் இந்த முறை நீங்கும் என்ற நம்பிக்கை...

தற்போதைய சமூக இருப்பில், பன்னுயிர் பேணுதல் நம் அனைவரும் பங்கெடுக்க வேண்டிய முக்கிய தேவையாக மாறி விட்டது. இயற்கையை சீரழிப்பதன் மூலம் அவ்வாறு ஆக்கி வைத்திருக்கிறோம் நாம். தியோடர் பாஸ்கரன் எளிய தமிழில் எழுதியிருக்கும் கானுயிர் கட்டுரைகள் மாணவர்கள் முதல் முதியோர் வரை படிக்க வேண்டிய ஒன்று.

தமிழ் இலக்கணம் ஒரு எளிய அறிமுகம், வண்னதாசனின் "நொடி நேர அரை வட்டம்",  நாஞ்சில் நாடனின் "வல்விருந்து", மகுடேஸ்வரனின் "களிநயம்", எஸ்.ராவின் "சஞ்சாரம்" ஆகியவை இவ்வருடம் வசீகரிக்கின்றன. "தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்" என்றொரு புத்தகம் தமிழினி மூலம் வந்திருக்கிறது. வெங்கட் சாமிநாதனின் "நினைவுகளின் சுவட்டில்" இரண்டாம் பாகத்தை மெய்ப்பொருள் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.

புத்தகங்கள் வாங்குகிறோமோ இல்லையோ...சில வருடங்கள் கண்காட்சிக்கு போய் வந்தால், ஒரு புத்தகம் எத்தனை கவர்ச்சியான அட்டை மற்றும் கட்டுமானம் கொண்டிருந்தாலும் அதில் ஏமாறாமல் சில வரிகளை படித்தவுடன் அந்த புத்தகத்தை எந்த "இடத்தில்" வைக்கலாம் என்று எடை போட பயிற்சி பெறும் சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதுவே புத்தக கண்காட்சி நமக்குத் தரும் மிகப்பெரிய அனுபவம்.

மற்றபடி, கண்ணதாசனின் "நீ எனக்காக உணவு உண்ண எப்படி முடியும்?" பாடல் வரி போல, அவரவர் வாசிப்பு அவரவர் "வயிறு" சம்பந்தப்பட்டது. அஜீரணம் ஏற்படாமல் உடலுக்கும் மனதுக்கும் "சாப்பாடு" சாப்பிடுவது அவரவர் விருப்பம். சரி தானே?

Sunday, December 28, 2014

அம்மாடி...! ஐயோடி...!

"அம்மாடி...அந்த நாளை மறக்க முடியுமா...!"  இப்படியெல்லாம் இந்தக் காலத்தில் வார்த்தைகளை பயன்படுத்தி கேட்டிருக்கிறோமா?
சிறு வயதில் நம்மூர்களில் ஆச்சரியத்தையும் ஆயாசத்தையும் தெரிவிக்க "அம்மாடி" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது நம் ஞாபகத்தில் இருக்கக்கூடும். இன்று உலகமயமாக்கலின் சூறாவளியில் இது போன்ற வார்த்தைகள் காணாமல் போனதோடு மட்டுமின்றி பயன்படுத்தினால் நம் இமேஜுக்கு இழுக்கு வந்து விடுமோ என்று தமிழ் சமூகம் அஞ்சும் அளவுக்கு நாம் முன்னேறி விட்டோம்! "சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்டா" என்ற வடிவேலு காமெடி போல், ஆங்கிலம் பேசினால் அவர்கள் அறிவுடையவர்கள் என்ற ஆணித்தரமான நம்பிக்கை நமக்கு உண்டு. அதிலும், நாக்கில் நகாசு வேலை செய்து "wow..." "" என்று உச்சரித்தால் உள்ளூரக் கிடைக்கும் கிளுகிளுப்பு "அம்மாடி"யில் இல்லையோ?

நாகரிக கோமான்கள் என்ற நினைப்பு நம் அனைவருக்குமே உண்டு. உலகமயமாக்கல் அந்த எண்ணத்திற்கு நன்றாகவே தூபம் போட்டு வைத்திருக்கிறது...உதாரணமாக நானும் நீங்களும் தஞ்சாவூர் பெரியகோயிலில் அண்ணாந்து அதன் கோபுரத்தை பார்த்தால் வாயில் "wow..."தான் வருகிறது. "அம்மாடி"யெல்லாம் பிரயோகத்தை விட்டு வெகுதூரம் பிரயாணம் போய் விட்டது.

சரி சரி, விஷயத்துக்கு வாருங்கள் என்கிறீர்களா? சென்ற வாரம் "அஞ்ஞாடி" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதாக செய்தி வெளியானது. தலைப்பும் புத்தகத்தின் சைசும் புது வாசிப்பாளர்களை பயப்பட வைக்கும். ஆனால் தமிழ் நாட்டில் 1800களின் இறுதியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களையும் அதனிடையே மனிதர்களின் உணர்வுகளையும் ஊடாட விட்டு அற்புதமான ஒரு படைப்பை தந்திருக்கும் பூமணி,  பல ஆண்டுகள் உழைத்திருக்கக்கூடும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

நாவல் முழுவதும் மண் வாசனை  வீசிக் கொண்டே இருக்கிறது. அவர் பயண்படுத்தும் சொல் வழக்குகள் புழங்கிய பகுதியில் நாமோ நம் மூத்த குடியோ இல்லாதிருந்திருப்பினும் அச்சமூகத்தினுள் கொண்டு போய் நம்மை அமர்த்துகிறது இந்நாவலின் நடை அழகு!

ஆனால், வாசிப்பு ஆர்வம் உள்ள ஒரு சராசரி தமிழன், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்குவானா? வாங்க முடியுமா? இது போன்ற ஒரு படைப்பு, எச்சமூகத்தின் பின் புலத்தை முன் வைக்கிறதோ, அதை சார்ந்த மக்களை சென்றடைய வேண்டாமா? 2013 சென்னை புத்தகச் சந்தையில் [அந்த கண்காட்சி பற்றிய பதிவு இங்கே ] "அஞ்ஞாடி" நிறைய இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. புத்தகத்தை வாங்க விலையைப் பார்த்து "அம்மாடி!" என்றேன் நான்...ஆமாம் சார், "அஞ்ஞாடி" என்பதன் அர்த்தம் விலையிலும் பிரபலித்தது வருந்தத்தக்க ஒன்று. அற்புதமான புத்தகங்களுக்கு விலையில்லை எனினும், அது, படைப்பின் அஞ்ஞாடியை பரவலாக தடையாகப் போய் விடும்!

அந்த வருடம், கண்காட்சி அரங்கை விட கூட்டம் நிறைந்து வழிந்த கேண்டீனில், பஜ்ஜி வாங்குவதற்கு நின்று கொண்டிருந்த‌ பொழுது, கல்லூரி மாணவி ஒருவர் "அஞ்ஞாடி" என்றால் என்னடி? என்று தோழியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். வரிசையில் இருந்த இன்னொருவர், "வாழைக்காய் பஜ்ஜி ரொம்ப சிவப்பா இருக்கே...பவுடர் அதிகம் போட்டிருப்பானோ" என்று தன் உறவினரிடம் சத்தமாக‌ கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் மற்றொரு மாணவி "அஞ்ஞாடி"க்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என்ற என் ஆர்வம் பஜ்ஜி வாசனையில் கரைந்து போனது...

இரண்டு வருடம் கழித்து சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறது இந்நாவல். தரமான எதுவும் எளிதில் வெளியில் தெரிவதில்லை. தரமான கதைகள் தரும் பூமணியையும் அவரின் கதைகளையும் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்றும் தெரியவில்லை. இந்த விருது அக்குறையினை ஓரளவேனும் நீக்கும் என்று நம்புவோம். இன்றைய உலக இருப்புக்கு பொருத்தமான பாணியில் அஞ்ஞாடியை சொல்ல வேண்டுமென்றால், "voila! this novel has a wow factor" என்று தூய தமிழில்  சொன்னால்தான் தமிழ் சமூகத்திற்கு இந்நாவல் பற்றிய ஈர்ப்பு பிறக்கும்!

அம்மாடி! ஐயோடி! அஞ்ஞாடி!

Sunday, December 7, 2014

காலம் கெட்டு கெடக்கு...

வழக்கமான மாத மளிகை சாமான் வாங்கிட கடைக்கு போயிருந்தேன். அண்ணாச்சி கடையல்ல. அவை அழியத்துவங்கிதான் ஆண்டுகள் பல ஆகி விட்டதே...வர்ணஜாலங்களுடன் வசீகரிக்கும் வணிகவளாகங்கள் தானே திசையெங்கும் கடை பரப்பி நிற்கின்றன...வாழ்க்கையே வணிகமாகி விட்ட பிறகு இத்தகைய வணிக வசீகரங்கள் சமூகத்தை ஈர்ப்பதில் விசித்திரமுமில்லை வியப்புமில்லை. ஊரோடு ஒத்து வாழ் என்று சும்மாவா சொன்னார்கள்? எனவே அதை சாக்கிட்டு நானும் அந்த பல்பொருள் விற்பனை அங்காடியில் மக்கள் திரள் நடுவே "டிராலி" தள்ளியபடி நகர்ந்து கொண்டிருந்தேன்...

கீரை கிழவிகளை ஊரை விட்டு அனுப்பிய பின், அவர்களிடம் பேரம் பேசி வீரம் காட்டிய நடுத்தர வர்க்கத்து சிங்கங்கள் ஒரு கட்டு பத்து ரூபாயெனினும் பாக்கெட்டிலிருப்பதால் பதவிசானது என்றெண்ணி மெளனமாய் அள்ளிப்போடும் கீரைகள் பகுதி தாண்டி தானியங்கள் பிரிவு அருகில் வருகையில் சத்தமும் குழப்பமுமாய் இருந்தது. தெருவாக இருந்தாலும், பளபளப்பு காட்டும் பலமாடி அங்காடியாக இருந்தாலும், ஏதேனும் சத்தம் வந்தாலே சண்டையாக இருக்குமோ என்ற‌ அவல் கிடைக்கக்கூடும் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்கும் இயல்பு நமக்குள் ஊறிப் போன ஒன்றாயிற்றே...என்ன நடக்கிறது என்று கூட்டத்திற்குள் நுழைந்து பார்த்தேன்.

கடை சீருடை அணிந்த‌ ஒரு பெண் சிப்பந்தி சற்றே தலை குனிந்தவாறு நின்றிருந்தார். அவரின் மானேஜர் "சாரி மேடம்" என்று தற்கால "முன்னேற்றம் மற்றும் உரிமை" அடையாளங்களின் நாகரீக நகல் போன்று இருந்த ஒரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தார். "you people are cheating. I should complain " என்று மேனேஜரை விளாசிய அவர் அங்கிருந்து விருட்டென்று விலகிப் போன பின் ஆங்காங்கே பேச்சும் சிரிப்பும் கேட்டது. மேனேஜர் சிப்பந்தியிடம் வந்து, "சரி விடும்மா...கஸ்டமராக இருக்கப்போய் இதெல்லாம் பொறுத்துக்க வேண்டியிருக்கு" என்று சொல்லிச் சென்றார்.

நமக்கு இருப்பு கொள்ளுமா? விஷயம் என்னவென்று தெரியா விட்டால் தலை வெடித்து விடுமே...இன்னும் சிலர் அந்த விஷயத்தை பேசிக்கொண்டு இருந்ததால் தலை தப்பியது. இதான் சார் விஷயம். அந்தப் பெண் அரிசி வாங்க வந்திருக்கிறார். பெரிய பெரிய டின்களில் அரிசியும், அதன் மேல் ஒரு அட்டையில் அதன் வகையின் பெயரையும் எத்தனை வருடம் பழையது என்பதையும் எழுதிச் சொருகியிருப்பார்கள் இல்லையா? அதைப் பார்த்து அந்தப் பெண் "ஒரு வருடம்" என்று எழுதிய "பொண்ணி"யில் தருமாறு சிப்பந்தியிடம் கேட்டிருக்கிறார். அடுத்தவருக்கு உதவலாம் என்று நீங்கள் நினைத்தால் பெரும்பாலும் இன்றைய உலகில் ஆபத்து உங்களுக்குத்தானே? பாவம் சிப்பந்தி. "மூணு வருஷம்" போட்டுருக்கறத எடுத்துக்குங்க பழைய அரிசி" என்றிருக்கிறார். நாகரிக நகலுக்கு பெரும் கோபம் வந்திருக்கிறது. புதுசு இருக்க பழையதை தன்னிடம் தள்ளி விடப் பார்க்கிறார் என்ற கோபம்!
பழைய அரிசிதான் நல்லாயிருக்கும் என்று சிப்பந்தி சொன்னதை ஏமாற்று வேலையாக பார்த்திருக்கிறார் அப்பெண்.

இதில் உச்சக்கட்ட தமாஷ் அருகில் இருந்தவர் அடித்த கமெண்ட்தான். "இப்படித்தான் நம்மூர்ல இப்பெல்லாம் குடும்பம் ஓடுது போல" என்ற முதியவரிடம் பக்கத்தில் இருந்தவர், "ஐயா, வீடுகளிலெல்லாம் சமையல் இன்னும் நடக்குதுன்னு நினைச்சு சந்தோஷப்படுங்க..." என்று சொன்ன போது தலை தாழ்த்தி நின்ற சிப்பந்தி அம்மாவும் சேர்ந்து சிரித்தார். அரிசியை கண்ணால் பார்த்தே அதன் வரலாறு பூகோளத்தை புட்டுப் புட்டு வைக்கும் நம் பாட்டிமார்கள் ஞாபகத்துக்கு வந்தனர். ஒரு வேளை "உரிமை", "முன்னேற்றம்", "சுதந்திரம்" என்பதையெல்லாம் விருப்பம் போல அர்த்தம் பண்ணிக் கொண்டால் கால்கள் தரையில் பாவாமல் இப்படித்தான் அரிசி கதை போல் ஆகுமோ சார்? சிகரம் தொடும் பொருட்டு முன்னேறி மேலேறுவது எல்லாம் சரிதான்...ஆனால் தரையில் நடக்கத் தெரியாது, நடக்க‌ விருப்பமுமில்லை என்றால் சிகரத்தில் ஏறி என்ன பயன்? காலம் கெட்டுத்தான் கெடக்கு சார்...!

Sunday, August 17, 2014

டெண்டுல்கர் இப்படி இருக்கலாமா?

சில நாட்களாக ஊடகங்களுக்கு கிடைத்த தீனி டெண்டுல்கர். இவர்கள் அனைவரும் அவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள் தான். ஆனால் கிரிகெட் மூலம் இனிமேல் அவரை வைத்து நேரம் ஓட்ட முடியாது. மாற்று வேண்டுமே! இந்த நிலையில் டிவி பத்திரிகைகள் கையில் வகையாய் மாட்டியிருக்கிறார் அவர்.

ஏதோ தேசத்துரோகம் செய்து விட்டது போல அவர் ராஜ்யசபாவிற்கு வராதது குறித்து ஆராயப்படுகிறது. நீங்கள் தானே "ஏற்றி" விட்டீர்கள். அப்போது கண்ணை கட்டிக் கொண்டு ஆதரித்தீர்களே? ஒரு கிரிகெட் வீரர் நாட்டை மாற்ற புரட்சி ஏதேனும் செய்வார் என்று நினைத்தீர்களோ? அவர் பாட்டுக்கு எதைப் பற்றியும் கவலையின்றி ஊர் ஊராகச் சென்று ஏதேதோ நிகழ்ச்சிகளில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விட்டு விடுங்கள் சார்...புகழின் முக்காடு போட்டுக் கொண்டிருந்த அவருக்கு "எனக்கெதுக்கு இப்பதவி என்னால் ஆக்கபூர்வமாக செயல்பட முடியாது நேரமும் இல்லை" என்று சொல்லும் நினைப்பிருந்திருக்காது. அல்லது அப்படி ஏதும் சொல்லியிருந்தால் நாம் சும்மாதான் விட்டு விடுவோமா? "என்ன ஒரு அகங்காரம்... தாய் மண்ணை காக்கும் பொறுப்பு கொடுத்தும் நேரமில்லை என்று சொல்கிறாரே" என்று அடித்து தூள் பண்ணியிருப்போமே! சொல்லுங்கள் சார், எப்படி பேசினாலும் இடக்காக பார்க்கும் கூட்டம் நிரம்பியிருக்கும் நாட்டில் அவர் என்னதான் செய்வார்? அதனால் தான் மனிதர் வாயே திறப்பதில்லை.

"வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்" என்பார்கள். அது அனைத்துக்கும் பொருந்தும். நன்றாக விளையாடியவர் என்பதால் சற்றும் சம்பந்தம் இல்லாத பொறுப்பைக் கொடுத்து உட்கார்த்தினால் இந்த லட்சணத்தில் தான் இருக்கும். நல்ல வேளை இந்தியாவின் மானத்தை கிரிகெட்டில் காப்பாற்றியிருக்கிறார் என்பதற்காக ராணுவ தளபதியாக இருந்து தாய்நாட்டை காப்பாற்றுங்கள் என்று ஏதேனும் செய்யாமல் விட்டார்களே என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்.

சரி டெண்டுல்கர் செய்த தவறு என்ன? அவரவருக்கு ஒரு எல்லை உண்டு. தன் திறமை, பண்பு, ஆர்வம், சாத்தியக்கூறுகள் அனைத்தையும் கலந்து வரையப்பட்ட எல்லை. அந்த எல்லையை அறிதல் ஒரு வகை பக்குவம். அத்தகைய பக்குவம் பெற்றோர் தான் செய்யக்கூடியது என்ன, செய்யத் தகுதியானது என்ன என்பதை அறிந்திருப்பார்கள். கெளரவம் கிடைக்கிறது என்பதற்காக கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போய் கொண்டிருக்க மாட்டார்கள். இதைத்தான் செய்யாமல் விட்டிருக்கிறார்.

யாருக்குத் தெரியும், இந்நேரம் அரசியல் பாலபாடம் ஏதேனும் கற்று வந்து, "சபைக்கு வந்தால் தான் மக்கள் சேவையா நான் மக்களுடன் மக்களாக இணைந்து களத்தில் அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தேன்" என்று ஒரே போடாக போட்டால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும்?

டெண்டுல்கருக்கு ஒரு வேண்டுகோள். சபைக்கு வாருங்கள். உங்களை விட தகுதியற்றவர்கள் எல்லாம் அங்கு ஊருக்கு உழைக்கும் உத்தமர்களாக உலா வருகிறார்கள். எண்பதுகளில் ஒரு மதுரை எம்பி பற்றி காமெடியாகச் சொல்வார்கள். அவர் வருடத்திற்கு இரண்டு முறை பாராளுமன்றத்தில் பேசுவாராம். கோடைகால கூட்டத் தொடரின் போது "ஃபேன் போடுங்க" என்பாராம். குளிர்கால கூட்டத் தொடரின் போது "ஃபேனை அணைங்க" என்பாராம். அது போலவாவது எதையாவது பேசலாமே(!?) சார்! இல்லையென்றால் "ஒவ்வொரு ஊரிலும் பட்டி தொட்டியெங்கும் கிரிகெட் மைதானங்கள் அமைக்க அரசு திட்டமிட வேண்டும்" என்று அடித்து விட்டால் சபையில் அனைவரும் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து வரவேற்பார்களே! எதற்கென்று தெரியாமலேயே மேஜையை தட்டுவது நம் சபை நாகரிகத்தில் ஒன்றல்லவா? எப்படியிருந்தாலும் மேஜையை தட்டுபவர்கள் பயனுள்ளவற்றுக்கா தட்டிக் கொண்டிருக்கிறார்கள்? எனவே யோசியுங்கள் மிஸ்டர் டெண்டுல்கர். அதற்காக ரொம்பவும் யோசிக்காதீர்கள்...நம் நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒன்றும் செய்யாமல் மட்டும் இருந்து விடக் கூடாது. எனவே எதையாவது செய்யுங்கள்! யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எதையாவது பேசியோ செய்தோ அது குண்டக்க மண்டக்க என்று ஆகிப் போனாலும் கவலையில்லை. மிஞ்சிப் போனால் நாலு நாள் தொலைகாட்சிகளில் அனல் பறக்கும் விவாதம் நடக்கும். அதற்குள் இதை விட அதிக அசிங்கமான அதிர்ச்சியூட்டும் ஏதேனும் ஒரு செய்தி வரும். எல்லோரும் அதைப் பற்றி விவாதிக்க கிளம்பி விடுவோம். இது பாரத நாட்டின் மாண்பு என்பது டெண்டுல்கருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?

Sunday, July 27, 2014

அது மட்டுமா அசிங்கம்?

அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சென்ற வாரம் நம் அனைவருக்குள்ளும் ஊடுருவியது... அதிர்ச்சிகள் எப்படியிருப்பினும் சகித்துக்கொள்ளும் அளவுக்கு புரையோடிப்போன சமூகத்தின் அறிகுறியாய் இருக்கக்கூடிய மற்றுமொரு அதிர்ச்சி அது. பெங்களூரில் பெயர் பெற்ற பள்ளி ஒன்றின் வளாகத்துக்குள்ளேயே ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் அதை பள்ளியில் பணிபுரிபவர்களே செய்திருக்கிறார்கள் என்பதுமான செய்திகளை பார்க்கும் பொழுது ஏற்படும் அதிர்வலைகளைத் தாண்டி பள்ளிகள் குறித்த நம் பார்வையும் நம் சிந்தனைக்கு எட்டுகிறதா? எட்டினாற்போல் தெரியவில்லை...!
வழக்கம்போல் சீறியெழுதல்கள், போராட்டங்கள், விவாதங்கள் என பயன் அற்ற பழகிப் போன போலித்தனங்கள் ஒருபுறம் இருக்கட்டும்... இச்சம்பவம் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எத்தனை நடந்திருக்கிறதோ எத்தனை வெளிவரவில்லையோ! ஆனால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற லட்சணத்தில் தான் நம் கல்வி வியாபாரம் கடை விரிக்கப்பட்டிருக்கிறது. சம்பவத்தினால் கொதித்தெழும் பெற்றோர் மற்றும் சமூக நோக்குடையோரிடம் சில கேள்விகள்:
1. "இந்த பள்ளியில் என் பிள்ளை / பெண் படிக்கிறார்" என்று சொல்லிக் கொள்ள விரும்பி, அதன்மூலம் சமூக அடையாளங்களையும் ஆதாயங்களையும் அடைய விரும்பி, பகட்டான பள்ளிகள் கேட்கும் பணத்தை அள்ளிக் கொட்டி, முழுத்தொகைக்கும் ரசீது தரப்படாது என்று அடாவடி காட்டும் நிர்வாகத்திற்கு தலையாட்டி நம் பகட்டை வெளிக்காட்ட முயற்சிக்கிறோமே இந்த அவலத்தை எதிர்த்து நிற்கும் தைரியமும் இப்படிப்பட்ட பள்ளிகளில் எதற்கு நம் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நேர்மை மிக்க யோசைனைத் திறனும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? இனியாவது இருக்குமா?
2. பள்ளிகள் பெற்றோரிடம் பல்வேறு கண்டிஷன்கள் அடங்கிய விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்குகின்றன...அதில் "மாணவ மாணவியருக்கு என்ன நடந்தாலும் பள்ளி பொறுப்பிலை" என்று கூட பல பள்ளிகளில் இருக்கிறது. இந்த‌ விவகாரத்தில் கூட பல பெற்றோர்கள் இந்தப் பள்ளியின் மீது இதே புகாரை வாசித்தனர். இவர்கள் அனைவருமே படித்த அதிமேதாவிகள்! கையெழுத்துப் போட்டு பள்ளியில் சேர்க்கும் பொழுது வாயை மூடிக்கொண்டு ஏன் இருந்தார்கள்? கேள்வி கேட்டால் பேர் பெற்ற பள்ளியில் சீட்டு கிடைக்காது என்பதாலா? இப்போது கூப்பாடு போட்டு என்ன பயன்?
3. கூட்டுக் குடும்பம் என்பது கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டது. குழந்தைகள் மீது முழுக்கவனமும் செலுத்த பெற்றோருக்கு நேரமும் இல்லை, தங்கள் "கேரியரை" விட்டுக் கொடுத்து குழந்தையை நன்றாக வளர்க்க எவருக்கும் மனமுமில்லை. இந்த சமூக சீர்கேட்டை பயண்படுத்தி பள்ளிகள் ஏதேதோ "ஆக்டிவிடீஸ்" என்ற பெயரில் பணத்தை பிடுங்குகின்றன. பிள்ளைகள் பள்ளிகளில் நீண்ட நேரம் இருக்கிறார்கள். இத்தகைய பெற்றோருக்கும் எவ்வளவு நேரம் குழந்தை வெளியில் (பள்ளியில்)இருக்கிறதோ அவ்வளவு "பளு" நமக்கு குறைவு என்று நினைக்கின்றனர். எவ்வளவு பணம் குழந்தை மீது செலவழிக்கிறோமோ அவ்வளவு நன்றாக குழந்தையை வளர்க்கிறோம் என்பது அதிமேதாவிகளின் முட்டாள்தனம். அவ்வளவு நன்றாக குழந்தை வளரும் என்பது அதைவிட அதிமுட்டாள்தனம். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி அதை பள்ளிகளில் கொட்டும் படித்த முட்டாள்களான நமக்கு இது புரியாதா? அல்லது புரிந்தும் ஏதும் செய்ய இயலாத "சமூக விசை" இதில் இருக்கிறதா? அதிக‌ம் ப‌ண‌ம் த‌ந்து பெறும் எதுவும் அதிக‌ த‌ர‌மான‌தாக‌ இருக்கும் என்ற‌ முட்டாள்த‌ன‌ ந‌ம்பிக்கை ந‌ம் மூளைக‌ளில் ஏறி மாமாங்க‌ம் ஆகி விட்ட‌தே!
4. இந்த சம்பவத்தில் பள்ளி நிறுவனர் தனக்கு எதுவும் தெரியாது என்று பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இப்படி ஒரு புளுகு புளுகி தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது யார்? இச்சமூகமே அந்த நம்பிக்கையை அவருக்குக் கொடுத்திருக்கிறது.இன்று கல்வி என்பது மிகப்பெரிய வியாபாரம். பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் அதைத்தான் செய்யும். குளுகுளு வகுப்பறைகள் என்றவுடன் மகிழ்கிறோம்...இயற்கையுடனான தொடர்பை சிறு வயதிலேயே துண்டிக்கும் அறிவற்ற தன்மை இதில் இருக்கிறது என்று யோசித்தோமா? ஒரு உல்லாச விடுதிக்கு உரிய அனைத்து வசதிகளும் இருப்பதாக நீண்ட லிஸ்டை பள்ளிகள் நீட்டும் பொழுது நாம் புளுகாங்கிதம் அடைகிறோம். அறிவு மற்றும் பண்பின் பரிமாணங்கள் பயிற்றுவிக்கப்படும் அறிகுறிகள் கொண்ட அம்சங்கள் அந்த லிஸ்டில் இருக்கிறதா என்று யோசிக்கின்றோமா?
5. இப்பொழுது நம் நாட்டில் புதிய புரட்சி ஒன்று புறப்பட்டிருக்கிறது. கேண்டில் லைட் போராட்டம்! ஒரு நாள் மெழுகுவர்த்தி ஏத்தி அதில் அகலக் கூடியதா நம் சமூக அழுக்கு? அதைப் பற்றி என்ன அக்கறை? ஒரு நாள் போராட்டம் நடத்தி விட்டு நாம் அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவோம்... சில வாரங்களில் "பழைய குருடி கதவை திறடி" கதை தான் நம் நாட்டில் சாசுவதமானது என்பது அக்கிரமக்காரர்களுக்கும் தெரியும் அவர்களை தண்டிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களுக்கும் தெரியும்.
"உயர் தரம்" என்பதற்குள்ளே உளுத்துப் போனவைகள் இருப்பது இதனால்தான்.  எனவேதான் ஒரு பள்ளியின் உள்ளேயே இத்தகைய வக்கிரம் நடந்த பின்னும் வெளிவர பத்து நாட்கள் ஆனது. வெளிவந்த பின்னும் லட்ச லட்சமாய் கொட்டிக் கொடுத்த பெற்றோர்களின் கூக்குரல்களைப் பொருட்படுத்தாமல் சாவகாசமாக பள்ளி நிறுவனர் முகம் காட்ட இரண்டு நாட்கள் ஆனது...பள்ளிக்குள் நடக்கவில்லை என்று முதலில் பொய் சொல்லி பிறகு மாற்றிப் பேச முடிந்தது...பள்ளிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறையை வைத்துக் கொண்டே பொறுப்பிலிருந்து நழுவ முடிந்தது...இது போன்ற‌ ப‌ள்ளிக‌ளின் மீது கூப்பாடு போட்டு என்னாக‌ப்போகிற‌து? அத்த‌னை பெற்றோர்க‌ளும் சேர்ந்து, அத்த‌னை மாண‌வ‌ர்க‌ளையும், இந்த‌ப் ப‌ள்ளி நமக்குத் தேவையில்லை என்று வில‌க்கிக் கொள்ளும் தைரிய‌ம் ந‌ம‌க்கு இருக்கிற‌தா? அப்ப‌டி ந‌ட‌ந்தால் அடுத்த‌ வ‌ருட‌மே ப‌ள்ளி தானாக‌வே இழுத்து மூட‌ப்ப‌டும். பள்ளிகளுக்கு பயம் வரும். எப்படியெல்லாம் காசு பண்ணலாம் என்று யோசிப்பவர்கள் தரம் பற்றியும் சற்று யோசிப்பார்கள். நம்பகமான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமாவது பள்ளிகளுக்கு வரும். இதெல்லாம் ந‌ம்மால் முடியாது. ஏனென்றால் பிள்ளைக‌ளின் ஒரு வ‌ருட‌ம் வீணாகி விடுமே! அவ‌ர்க‌ளின் ஐஐடி ஐஐஎம் அமெரிக்கக் க‌ன‌வுக‌ள் என்னாவ‌து? இதே சாக்கடையில்தானே நாமும் காசு கொட்டி பட்டம் பெற்று "செட்டில்" ஆன பின் வீட்டில் சோபாவில் அமர்ந்தபடி "இந்த எஜுகேஷன் சிஸ்டமே மோசமா போச்சப்பா..." என்று நீலிக்கண்ணீர் வடித்து போலித்தனமாய் கதை பேசிக் கொண்டிருக்கிறோம்? இது தான் ந‌ம் ச‌மூக‌ப் பொறுப்பின் ல‌ட்ச‌ண‌ம்.
முத‌லில் பெற்றோர் மற்றும் சமூக பங்களிப்பாளர் என்ற‌ பொறுப்பை நாம் எத்த‌னை ச‌த‌வீத‌ம் நிறைவேற்றுகிறோம் என்று பாசாங்கின்றி யோசிப்போம். ஏகப்பட்ட அழுக்குகள் வெளிவரும்! பிறகு இது போன்ற வக்கிரங்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் அதில் ஒரு நேர்மை இருக்கும். நேர்மை தோற்றதாக விதி இருக்கிறதா என்ன‌?

Sunday, July 13, 2014

இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்?



சென்ற வாரம் நம் "தேச பக்தர்கள்" நம்மை புல்லரிக்க வைத்த விதம் அலாதியானது. இதென்ன "தேச பக்தி" போன்ற வார்த்தையெல்லாம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள். அதான் சார் நம் கிரிகெட் ரசிகர்கள் இருக்கிறார்களே... அவர்கள் தானே பாரதத் தாயின் தவப்புதல்வர்களாக வலம் வருகிறார்கள். அவர்களை தேசபக்தர்கள் என்று அழைக்கா விடில் வேறு யார் தேசப்பக்திக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

சரி, விஷயத்திற்கு வருவோம்...மரியா ஷரபோவா என்னும் டென்னிஸ் வீராங்கனை, டெண்டுல்கர் யார் என்று தெரியாது என்று சொல்லி விட்டாராம். அவ்வளவு தான். ஏதோ பாரதத்தாயை இழிவு படுத்தியது போல பொங்கிப் புறப்பட்டு விட்டது நம் தேசப்பக்தர்கள் படை! வேறெங்கு போகும் இந்தப் படை? இருக்கவோ இருக்கிறது சமூக ஊடகங்கள்! எனவே தரக்குறைவு என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல திட்டித் தீர்த்து விட்டார்கள் நம் தேசபக்தர்கள்.

எப்போதுமே நம்மை நாமே அதிமேதாவிகளாக பாவிக்கும் நினைப்பு நமக்கு உண்டு. குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிப் பழகியதால் வந்த அதிமேதாவித்தன நினைப்பு இது. அப்படித்தான் நமக்குத் தெரிந்த கிரிகெட் உலகம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான நினைப்பும் நமக்குள் ஊறியிருக்கிறது.

மரியா ஷரபோவா டெண்டுல்கரை தெரியாது என்று சொன்னது இருக்கட்டும். நம் தேசபக்தர்கள் மூளையை ஒரு கையால் தட்டி, மறுகையை இதயத்தில் வைத்து தனியாக அமர்ந்து ஒரு நிமிடம் யோசிப்பார்கள் எனில், அவர்களின் முட்டாள்தனம் மூளைக்கு எட்டாது போகுமா? நம்மில் எத்தனை பேருக்கு இந்தியாவின் ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் பெயர் தெரியும்? சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி கூட போகாவிடிலும் ஏகப்பட்ட கோல்களை தடுத்த கோலி ஸ்ரீஜிஷ் என்பவரை நமக்குத் தெரியுமா? அட, நம் நாட்டின் சார்பாக எத்தனை விளையாட்டுகளுக்கு
அணிகள் இருக்கின்றன என்ற விபரமாவது நமக்குத் தெரியுமா?

கிரிகெட் என்றால் என்னெவென்றே அறிய வாய்ப்பில்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெண்டுல்கரைத் தெரியாது என்றாராம் இவர்கள் வெகுண்டெழுந்து தங்களின் "பக்தியை" காட்டுவார்களாம்! உலக மக்கள் தொகையில் சொற்பமான மக்கள் ரசிக்கும் விளையாட்டு கிரிகெட். அந்த விளையாட்டை திறமையாக விளையாடுபவர்களில் ஒருவர் டெண்டுல்கர். அவ்வளவே. அதற்கு மேல் எதுவுமே இல்லை. டெண்டுல்கர் என்பவர் உலகம் உய்ய வழி காட்டிய புத்தரும் அல்ல சத்தியத்தின் பாதையை பார் முழுதும் பரப்பிய காந்தியும் அல்ல.

ஆமாம்..."இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்" என்று தலைப்பு வைத்து விட்டு இப்படி எழுதுகிறீர்களே என்கிறீர்களா? இந்தப் பெண்ணை ஒன்று செய்யலாம். நன்றாக பாராட்டலாம்! தெரியாததை தெரியாது என்று சொன்னதற்கு...அத்தகைய பாராட்டுக்களை யார் தெரிவித்தால் பொருத்தமாக இருக்கும்? நாமேதான்! நம்மவர்களே தான்! ஏனென்றால், தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதில் நம்மவர்களுக்கு நிகர் நாம் தானே? வாருங்கள், யார் என்று தெரியாதவரை, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாதவரை, தெரியாது என்று சொன்ன மரியா ஷரபாவோவை பாராட்டுவோம்!

Sunday, July 6, 2014

யாருக்கும் வெட்கமில்லை!

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது...தென்னகத்தின் செல்லக் குரலுக்கான பிரம்மாண்டமான தேடல் என்று சொல்லிக் கொள்ளப்படும் நிகழ்ச்சி...பல வருடங்களுக்கு முன், இசையின் மூலம் பெறும் உணர்வுகளின் நெகிழ்ச்சியை உள்ளத்துக்குள் ஊடாட வைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இன்று கோமாளிகளின் கூத்து பார்க்கிறோமா அல்லது உண்மையிலேயே இசை நிகழ்ச்சியா என்று நம்மை கிள்ளிப்பார்த்துக் கொள்ளத் தூண்டும் அவலமாக மாறிப்போன ஒரு நிகழ்ச்சி...சரி, என்ன விஷயம் என்கிறீர்களா? நீண்ட நாட்களுக்குப் பின் இந்நிகழ்ச்சியைக் காணும் "பாக்கியம்" மீண்டும் வாய்த்தது. பாக்கியம் மட்டுமா? நம் சமூக முன்னேற்றங்களைக் கண்டு புல்லரிக்கும் வாய்ப்பையும் அல்லவா சேர்த்து வழங்கியது அந்நிகழ்ச்சி...
ஒரு பத்து வயது சிறுவன் பாடுகிறான்...வழக்கம் போல தொகுப்பாளர்கள் தங்கள் சிந்தனை முத்துக்களை, கருத்தாழம் மிக்க காவிய வார்த்தைகளை அவ்வப்பொழுது அள்ளித் தெளிக்கிறார்கள். நாம் மதிப்பு வைத்திருக்கும் பழைய‌ பாடகர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்கிறார்கள்...பிறகு அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...எந்த சமூகத்தில் பெண்கள் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே போகிறது என்று கூப்பாடு போடப்படுகிறதோ, எந்த சமூகத்தில் ஆண்கள் அனைவருமே பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கக் கூடியவர்கள் என்ற சித்தரிப்பு இருக்கிறதோ, எந்த சமூகத்தில் குழந்தைகள் நல்வளர்ப்பு பற்றி வெற்றுப்பேச்சு மட்டுமே நிறைந்திருக்கிறதோ அத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தமிழ் சமூகம் கண்டு மகிழ்ந்து போற்றும் அந்த நிகழ்ச்சியில், அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...
அமெரிக்காவிலிருந்து வந்து பாடும் ஒரு இளம்பெண் "கெஸ்டாக" அமர்ந்திருக்கிறார். பத்து வயது கூட நிரம்பாத சிறுவன் ஒருவன் பாடி முடித்தபின் பெண் தொகுப்பாளினி, "என்னை ஆறாவது கேர்ள் பிரண்டாக நீ ஏற்றுக் கொள்வாயா" என்று அந்த அமெரிக்கப் பெண்ணிடம் கேள் என்று அந்தச் சிறுவனைத் தூண்டுகிறார். அரங்கமே கைதட்டி ஊக்குவிக்கிறது! அந்தச் சிறுவனும் கால் மடித்து அமர்ந்து கைநீட்டி அமெரிக்கப் பெண்ணிடம் அவ்வாறே வேண்டுகிறான்...அதைப் பார்க்கும் மற்றொரு பெண் தொகுப்பாளினி, டேய் உனக்கு நானா அமெரிக்கப் பெண்ணா அல்லது அந்த மற்றொரு தொகுப்பாளினியா என்று சொல்லச் சொல்கிறார். அரங்கம் முழுவதும் நிறைந்திருக்கும் சிறு மனங்களில் நச்சின் நாற்றம் வீசப்படுகிறது...

அந்த நாற்றத்தின் சுவாசம் பெற்ற சிறுவனும், "நீங்க ஓல்டு மாடல். அவங்க அமெரிக்கா" என்று தனது தேர்வு முறையை விளக்குகிறான். அரும்பெரும் சொற்பொழிவு கேட்டது போல அரங்கம் புளுகாகிதம் அடைந்து கூச்சலில் குதிக்கிறது. தரமானவர்கள் என்று நாம் நம்பும் நடுவர்களும் கைதட்டிச் சிரிக்கிறார்கள். "தோழி" என்றால் என்ன அர்த்தம் என்று இந்நிகழ்ச்சி பார்க்கும் அத்தனை சிறுவர் சிறுமிகளும் "விபரமாக" புரிந்து கொள்ளும் பெரும்பணியினை செய்த அத்தனை பேரும் பெண்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பாடல் வரியின் ஸ்வரஸ்தானங்களில் பாடுபவர்கள் செய்யும் தவறுகளுக்கே ஏகப்பட்ட "டிப்ஸ்" கொடுக்கும் இந்த நடுவர்கள், நாளை ஒரு தலைமுறையாக மாறப்போகும் பிஞ்சுகளின் நஞ்சை விதைத்து சிதைக்கும் அவலம் நேர்கையில் சிரித்து மகிழ்ந்தது ஏன்? நடுவராக வந்த மூவரில் இருவர் பெண்கள். "என்ன நடக்குது இங்க... இப்படியா பொது நிகழ்ச்சியில் அதுவும் சிறுவர்களிடம் உரையாடுவது" என்று கேட்கவா முடியும்? நடுவர் சான்சு போய்விடுமே! சிறுமிகள் கூட கொடுமைக்குள்ளாகும் நிகழ்வுகள் பெருகுவது குறித்து கொதித்தெழும் பெண்ணுரிமை அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? பெண்ணியம் பேசுபவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு வேளை ஆண்களுக்கு எதிராக மட்டும் தான் இவர்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்களோ?? இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு சிறுவன் நாளை பள்ளியிலோ சாலையிலோ, இதே போலோ இதையும் மீறியோ ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டால் குற்றவாளி யார்?

ப‌ல‌ ல‌ட்ச‌ம் பேர் பார்க்க‌க்கூடிய‌ ஒரு நிக‌ழ்ச்சியில், ச‌ற்றும் பொறுப்பின்றி தனக்குத் தோன்றிய‌தை எல்லாம் பேசும் தொகுப்பாள‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? தான் பேசுவ‌து போதாதென்று விப‌ர‌ம் அறியா சிறுவ‌ர் சிறுமிக‌ளை த‌ர‌க்குறைவாக‌ ந‌ட‌க்க‌த் தூண்டும் அவ‌ர்க‌ளின் அசிங்க‌ங்க‌ளை என்ன‌ செய்ய‌? இவ‌ற்றையெல்லாம் பார்த்தும் ஆட்சேப‌ம் ஏதும் தெரிவிக்காம‌ல் அல‌ங்கார‌மாய் வீற்றிருக்கும் ந‌டுவ‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? த‌ங்க‌ள் க‌ண்ணெதெரிலேயே த‌ங்க‌ள் ம‌ற்றும் பிற‌ குழ‌ந்தைக‌ள் ம‌ன‌தில் விஷ‌ம் விதைக்கும் ப‌ணி ந‌டைபெறுவ‌தை பார்த்தும் பைத்திய‌ங்க‌ள் போல‌ அதில் ப‌ங்கேற்றுச் சிரிக்கும் பெற்றோர்க‌ளை என்ன‌ செய்ய‌? ஒரு ப‌க்க‌ம் அக்கிர‌ம‌ங்க‌ளை க‌ண்டு பொங்குவ‌து போல‌வும் ம‌றுப‌க்க‌ம் அதை மெளனமாய் அனுமதிப்பதும் முடிந்தால் அதையே கூட உள்ளுக்குள் ரசிப்பதுமாய் இர‌ட்டை வேட‌ம் போடும் ந‌ம் அனைவ‌ரையுமே என்ன‌ தான் செய்ய‌? வெட்கம் கெட்ட சமூகத்தில் வாழும் நாம் விவஸ்தை அற்ற மனிதர்களாய் திரிவதில் வினோதம் ஏதும் இல்லையே!

Sunday, May 4, 2014

பிரபலங்களின் ஓட்டு - திடுக்கிடும் தகவல்கள்!

கடந்த வாரம் தேர்தல் நடந்தாலும் நடந்தது... எந்த பத்திரிகையை புரட்டினாலும் சரி ஒரே ஓட்டு சமாச்சாரம் தான்..."ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" ஞாபகம் வரும் வண்ணம் எப்படியெல்லாம் செய்தி போடுகிறார்கள் சார்! மக்களின் பொது அறிவை மேலும் வளர்க்கும் வண்ணம் எப்பேர்ப்பட்ட பெரும்பணி ஆற்றுகின்றன நம் பத்திரிகைகள்...!இதையெல்லாம் படித்த பின் நமக்கும் செய்தியாளர் ஆகும் ஆசை வராமல் இருக்குமா சொல்லுங்கள்? இதோ நம் கை வண்ணத்தில் "தேர்தல் தினம்" பற்றிய செய்திகள் நீங்கள் படித்து மகிழ...!

          "பிரபலங்கள் ஓட்டு - திடுக்கிடும் தகவல்கள்!"

நமது சிறப்பு நிருபர் ‍-

நேற்று நடந்த தேர்தலில் தமிழ் நாட்டின் பிரபலங்கள் பலர் ஓட்டு போட்டதால் சென்னை முழுவதும் பரபரப்பு நிலவியது. இது குறித்த விபரங்கள் வருமாறு:

தேர்தல்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. சுதந்திரம் அடைந்தது முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நம் நாட்டில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். முன் எப்போதும் இருந்திராத அளவில் இந்த முறை தேர்தல் களம் சூடு பிடித்து பல வாரங்கள் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் நேற்று
தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு துவங்கிய காலை ஏழு மணி முதலே ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு

விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் சுமார் 73% சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. இதில் ஆண்கள் 72% சதவீதமும் பெண்கள் 74% சதவீதமும் வாக்கு பதிவு செய்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நமது சிறப்பு நிருபர் குழு தமிழகம் முழுவதும் திரட்டிய தகவல்களின் படி ஆண்களில் 60% பேர் சர்ட் அணிந்து வந்து ஓட்டளித்ததாகவும் 30% பேர் டி‍‍சர்ட் அணிந்து வந்ததாகவும் தெரிகிறது. வெயில் அதிகம் இருப்பதால் தான் பருத்தியிலான டிசர்ட் அணிந்து வந்திருப்பதாக சேலத்தில் முதல் முறையாக வாக்களித்த சேகர் என்னும் இளைஞர் நமது நிருபரிடம் தெரிவித்தார்.

ஐந்தாம் பத்தி பார்க்க‌...

<<..மர்ம அழகி மாயம்! போலீஸ் வலைவீச்சு....!! >>

இரண்டாம் பத்தி தொடர்ச்சி...

கமல்

நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டின் அருகில் உள்ள வாக்கு மையத்தில் தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், "ஓட்டளிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. ஜனநாயக உரிமை என்றும் சொல்லலாம். கடமை என்பதே உரிமையான ஒன்று. கடமையற்ற உரிமையும் உரிமையற்ற கடமையும், உரிமைக்கும் கடமைக்கும் உரிமையான கடமைக்குரிய பயன் அளிக்காது. உரிமையாகவோ கடமையாகவோ அது இருக்காது" என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் நிருபர்கள் குழம்பிய நிலையில் நின்றிருந்தனர்.

ரஜினி

நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரஜினி காந்த். இவரின் இயற்பெயர் சிவாஜி ராவ். நேற்றைய தேர்தலில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டார்.

முதல் ஓட்டு

காலை 7.02க்கு ரஜினி ஓட்டு பொத்தானை அமுக்கி தனது ஒட்டை பதிவு செய்தார். அதற்கு முன் எவரும் அங்கு ஓட்டு போடவில்லை. எனவே ரஜினியின் ஓட்டே முதல் ஓட்டாக அமைந்தது. ஓட்டளித்த பின் வெளியே வந்த ரஜினி தனது மை தடவப்பட்ட விரலை உயர்த்திக் காட்டினார். வெள்ளை உடையணிந்து ரஜினி ஓட்டு பதிவு செய்தார். அவர் தற்போது பெரும்பாலும் வெள்ளை உடை அணிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்

அமராவதி படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் அஜித். இவர் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். பொதுமக்கள் பாராட்டும் வண்ணம் இவர் வரிசையில் நின்று வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னும் பின்னும் வரிசையில் பலர் நின்றிருந்தனர். வாக்களிக்க வரும் முன் ஷாலினி அஜித்தின் இடது பக்கமாகவும், வாக்களித்த பின் வலது பக்கமாகவும் நடந்து வந்தார்.

ஜெயலலிதா

தமிழ் நாட்டின் முதல்வரும் அதிமுக தலைவரும் ஆன ஜெயலலிதா, சசிகலாவுடன் இணைந்து வந்து வாக்களித்தார். ஜெயலலிதாவின் கண்ணாடி சசிகலாவின் பையில் இருந்தது. 10.23க்கு தனக்குக் கண்ணாடி வேண்டும் என்று சசிகலாவை நோக்கி ஜெயலலிதா சைகை செய்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. பிறகு கண்ணாடி அணிந்தபடி ஜெயலலிதா தனது வாக்கை பதிவு செய்தார்.

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது தனது ஜனநாயக கடமை ஆற்றினார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் கருணாநிதி ஐந்து முறை தொண்டையை செருமிக் கொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் இரண்டு கேள்விகளின் போது அவர் இடது கையை வலது கையின் மேல் வைத்தபடி பதிலளித்தார்.

தேனி!

ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள கம்மாபட்டி கிராமத்தில் வாக்குச்சாவடியின் உள்ளே தேனி ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறையின் சுவரில் வைக்கப்பட்டிருந்த ஏணியில் தேனி அமர்ந்திருந்ததாகவும் அவ்வப்பொழுது பறந்து வந்து இடையூறு செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை

நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 16ஆம் தேதி துவங்கும் என்றும் துவங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுகள் வெளிவரும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபலங்கள் நேற்று ஓட்டு அளிக்க பெருமளவில் வந்ததால் சென்னையில் பரபரப்பு நிலவியது.


Saturday, April 5, 2014

இது நம்ம கட்சி!

நமக்கு எல்லாவற்றிலும் சீஸன் உண்டு. அந்தந்த சீஸனில் அதற்கு தகுந்தால் போல் ந‌ம் "பற்று" மாறிக் கொண்டே இருக்கும். இப்போது தேர்தல் சீஸன். எத்தனை நாள் தான் கட்சிகளின் காமெடி டிராமாக்களை பார்த்துக் கொண்டே இருப்பது? நமக்கு போரடிக்காதா சார்?  எத்தனை நாள் தான் ஓட்டை மட்டும் போடுவது? மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடு படும் ஆசை நமக்கு மட்டும் வாராதா என்ன?

எனவேதான் நாமே ஒரு கட்சி துவங்கினால் என்ன என்று ஒரு யோசனை. திகைத்து நிற்காதீர்கள். முதுபெரும் தலைவர்கள் இருந்த நாட்டில் கட்சியும் அரசியலும் அத்தனை மலிவான கிள்ளுக்கீரை விஷயமாகி விட்டதே என்று நினைக்காதீர்கள். இப்பொழுதெல்லாம் கட்சி துவங்க ஒரு விவஸ்தையும் தேவையில்லை என்று உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுதானே?

கட்சி என்றால் கொள்கை வேண்டுமே சார்... என்ன கொள்கை வைக்கலாம்? தமிழ் நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் தமிழை காப்பாற்றுவது முக்கிய கொள்கையாக இருக்கிறது. தமிழுக்காக உயிர் விடும் தலைவர்கள் நிறைய பேர் இருப்பதால் தமிழை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவோம். பாவம் தமிழ். 
மேடை பேச்சில் மயங்கி மயங்கியே தமிழ்நாட்டை தலைகீழாக மாற்றிய‌ பெருமை கொண்டவர்கள் இல்லையா நாம்? எனவே நமது கொள்கைகளும் கொஞ்சு தமிழ் மொழியில் இப்போதைய கட்சிகளை மிஞ்சுவதாக இருக்க வேண்டாமா? உதாரணமாக,

"ஊழல் அற்ற சூழலுக்கு ஊது குழலாக இருந்து சூதுவாதற்ற அரசு அமைப்போம்" என்று முழங்கலாம்...

கச்சத்தீவு பற்றி பேசாமல் கட்சி நடத்த முடியுமா? "ஆதித் தமிழன் அரிசியை உலையிலும் கடலிலே வலையையும் போட்ட வரலாற்றை பறைசாற்றும் கச்சத்தீவை மீட்க இமயத்தின் உச்சதிற்கும் சென்று போராடுவோம்" என்று பொறி பறக்க பேசினால் தானே நாலு பேராவது நம்புவார்கள். கச்சத்தீவுக்கும் இமயமலைக்கும் என்ன சம்பந்தம் என்று யார் கேட்கப் போகிறார்கள்?

"ரோடு போடுவோம்" என்று சொன்னால் என்ன சார் சுவாரஸ்யம்? "காலை மாலை வேளையில் நீங்கள் வெளியே போகையில் காலை வைக்க சாலை தருவோம்" என்றால் கட்சியின் கவிஞர் அணிக்கு தலைமை தாங்கலாமே. ரோடு போட்டோமா இல்லையா என்று யாருக்கு கவலை?

"ஊசியாய் குத்தும் விலைவாசியை பற்றி யோசி தமிழா யோசி" என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசலாம்...

நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும்.
நம் கட்சியின் தலைவர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து வரக்கூடும். அவர்களை எல்லாம் பேர் மட்டும் சொல்லி அழைத்தால் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாம் என்ற பழி நேர்ந்து விடாதா? சாதா பேரில் என்ன சார் இருக்கிறது? பட்டம் வேண்டும் சார் பட்டம்... எனவே, நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும். "நெல்லையின் நெருப்பே" "மதுரையின் குதிரையே" "திருச்சியின் திருப்பமே"  "கொங்கின் சங்கே" என்று என்னவேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் சார்...

கொள்கையெல்லாம் கிடக்கட்டும் முதலில் கட்சிக்கு என்ன பெயர்? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. வல்லினம் மெல்லினம் இடையினம் இவற்றில் எல்லாவற்றையும் சீட்டு போட்டு குலுக்கிப் பார்த்தாயிற்று. எந்த காம்பினேஷன் வந்தாலும் ஏதோ ஒரு கட்சிப் பெயரின் சுருக்கம் மாதிரியே இருக்கு. பேசாமல் "மக்களே கட்சியின் உயிர் அப்புறம் எதற்கு பெயர்?" என்று ஒரே போடா போட்டு விடலாமா?

அது சரி தேர்தல் நெருங்கி விட்டதே நாற்பது தொகுதிகளும் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது என்று கேட்கிறீர்களா? கவலையே இல்லை சார். கட்சியிலே மொத்தம் இருபதே பேர்தான் என்றால் கூட ஆளுக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமே! "அகில இந்திய" என்ற சொல்லை கட்சியின் பெயரின் முன்னே சேர்த்தால் போதும். கட்சியின் பலம் பற்றி யார் சார் கேள்வி கேட்பது? அப்படியென்றால் "சைபர்" தான் கட்சியின் ரிசல்டா என்று கேட்கிறீர்களா? "பூஜ்யம் வெறும் கணக்கு ராஜ்ஜியமே எங்கள் இலக்கு" என்று சிரித்துக் கொண்டே பேட்டி கொடுக்க நமக்குத் தெரியாதா என்ன?

வாங்க சார் வாங்க பொதுக்குழு, செயற்குழு, பாராளுமன்ற குழு, பட்டிமன்ற குழு, நிர்வாகக்குழு, கலைக்குழு கவிதைக்குழு என்று எல்லா குழுக்களிலும் தலைவர் செயலாளர் பதவிகள் காத்திருக்கின்றன மக்கள் தொண்டாற்றும் மாபெரும் பணிக்கு உவகையுடன் அழைக்கிறோம் வாருங்கள்...!

படித்து முடித்து விட்டீர்களா? அநேகமாக இதற்குள் புதிதாக ஏதேனும் ஒரு கட்சி உண்மையிலேயே உருவாகியிருக்கக்கூடும்...அதனாலென்ன? தேர்தல் என்பது நம்மை பொறுத்தவரை அலுவலகத்தில் உணவு வேளையிலும் வீட்டிலும் அமர்ந்தபடி திகட்டத் திகட்ட வெட்டிப் பேச்சு பேசக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம். பொழுது போக்கு. வேறென்ன அக்கறை? நாம் எப்படிப் பட்டவர்கள் என்று நமக்குத் தெரியாதா என்ன?  உதாரணமாக, 
கக்கன் போன்ற ஒருவரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரி கட்டாந்தரையில் கவனிப்பாரின்றி கிடக்க விட்ட கூட்டம் நாம். காலம் மெதுவாகத்தான் வேலை செய்யும். இப்போது இருப்பவர்கள் போதாதென்று புதிது புதிதாய் தலைவர்கள் வருவார்கள், நாட்டையும் நம்மையும் சுரண்டுவார்கள். "கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி" என்பதற்கு அர்த்தம் விளங்கும் வரை அதுவே நமக்குச் சரியான தண்டனை.

Saturday, December 7, 2013

பாரத ரத்னா யாருக்கு?

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அறிவித்ததில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் அது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நமக்கு எப்பொழுதுமே எந்த விஷயத்திலுமே இரண்டு எல்லைகள் மட்டுமே தெரியும். ஒன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது இல்லையேல் காலில் போட்டு மிதிப்பது. ஒன்றை ஆராய்ந்து அதற்குரிய இடத்தில் வைப்பது என்பதை பற்றியெல்லாம் நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

முதலில் கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி, அதை ரசிப்பது என்பதை தாண்டி, கிரிகெட்டை தேசப்பற்றுடன் தொடர்புபடுத்தும் முட்டாள்தனத்தை நாம் நன்றாகவே வளர்த்துள்ளோம். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அது இரு நாடுகளின் போர் போல, வடிவேலு பாணியில் சொல்வதானால் "உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளப் படுத்த...", நாமே அதற்கு ஒரு சாயம் அடித்து களேபரப்படுத்துகிறோம். இதனால், கிரிகெட் வீரர்கள் தேசத்தை காப்பாற்றும் மாபெரும் தொண்டாற்றும் கள வீரர்கள் போல சித்தரிக்கப்பட்டு நம் அடிப்படை சிந்தனைகளே சிதிலமடைந்து கிடக்கிறது. இதன் மேல் எழுப்பப்படும் எத்தகைய எண்ணத்திலும் "லாஜிக்" இருக்குமா?

சச்சின் ஒரு மிகச் சிறந்த கிரிகெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை. கிரிகெட் விளையாட்டுக்காகவும், இந்தியா கிரிகெட்டில் பெரும் வெற்றிகள் பெறவும் அவரின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் மகத்தானவை. அவரின் திறமைக்காக இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள விளையாட்டுத் துறைகளின் எத்தனை விருது வழங்கினாலும் தகும். ஆனால், அத்துடன் அந்த வட்டத்தின் எல்லை நின்று விடுகிறது. சமூகத்திற்கும் அவரின் திறமைக்கும் பொழுது போக்கைத் தவிர வேறெந்த நலன் சார்ந்த தொடர்பும் இல்லை. பலர் அவரை "நாட்டின் தூதுவர்" போலச் சித்தரிக்கின்றனர். அதுவும் முழுமையல்ல. முன்னர் ஒரு முறை வெளிநாட்டு கார் ஒன்று அவருக்கு வழங்கப்பட்ட போது அதற்கான வரி செலுத்துதலில் அவர் நழுவிய பொழுது முதன் முதலாக அவரின் "சமூக இருப்பு" பற்றிய நம்பிக்கை சறுக்கியது. அந்த விவகாரத்தை முடிக்க, காரை வேறொருவருக்கு விற்றதில் மேலும் வழுக்கியது...

ராஜ்ய சபா எம்.பி ஆனார். இதுவரை ஏதேனும் பேசியிருக்கிறாரா?
முதலில், ஆண்டு முழுவதும் போட்டிகளில் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்குமே இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டால் அவையில் என்ன பங்களிப்பு நாம் செய்ய முடியும் என்று சிந்தித்திருந்தால், "ஓய்வு பெறுவதற்கு முன் இந்தப் பதவி எனக்குப் பொருந்தாது" என்று சொல்லியிருப்பார். நாம் அவரிடம் உள்ள பொது நேர்மை குறித்து கொண்டாடியிருப்போம்.

இவர் சில வருடங்களாக ரன்கள் எடுக்கத் திணறிய போது விமர்சனங்கள் எழுந்தன. அப்பொழுது அவர் "எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று நான் தான் முடிவு செய்வேன்" என்றார். சற்றே நிதானம் இழந்தது போலத்தான் இருந்தது. நல்ல வேளை, மேலும் ஏதேனும் அவர் பேசி தன் மதிப்பை மேலும் இழப்பதற்கு முன், பல ஆண்டுகள் அவரின் பங்களிப்பை கருத்தில் கொண்டு காலம் அவருக்கு நூறாவது சதத்தை வழங்கியது. இல்லையேல் நம் கிரிகெட் வாரியம் ஏதேனும் செய்து ஆப்கானிஸ்தானுக்கு கூட "டெஸ்ட் ஸ்டேட்டஸ்" வாங்கிக் கொடுத்து அங்கு சச்சினுக்கு போட்டி ஏற்பாடு செய்து சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கும் என்பது வேறு விஷயம்!

இன்றைய கால கட்டத்தில் "மனிதர்களை" பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இதில் "மாமனிதர்" ஒருவரை எளிதில் பார்க்க முடியுமா என்ன? "பாரத ரத்னா என்பது மிகப்பெரிய விருது. நான் சமூகத்திற்கு அத்தகைய பங்களிப்பு செய்யவில்லை என்று நினைக்கிறேன்" என்று அவர் விருதை நிராகரித்திருந்தால் அவர் மாமனிதர் ஆகியிருப்பார்.

நம்மால் நிதானமாக, கூறு கூறாக எதையும் ஆய்ந்து அதன் பல்வேறு பக்கங்களைப் பிரித்து பார்க்க முடியவில்லை. கிரிகெட்டை தேசபக்தியாக நினைக்கும் முட்டாள்தனம் நம்மிடம் இருக்கும் வரை, இது போன்ற பொருத்தமற்ற செயல்கள் நாட்டில் நடந்து கொண்டேதான் இருக்கும். நல்ல வேளை சச்சின், மைதானத்திலும் வெளியிலும் தனது துறை சார்ந்த ஒழுக்கத்தில் சிற‌ப்பாக நடந்து கொண்டிருக்கிறார் என்று நாம் நிம்மதி அடைய வேண்டியதுதான்.
ஏனென்றால், இப்பொழுது புதிதாக் கிளம்பியிருக்கும் விராட் கோலி என்னும் வீரர் ரன்களாக வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார். ரசிக வர்க்கம் அவரை தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறது. அவர் சென்ற ஆண்டு, புகழ் பெறத் துவங்கும் பொழுதே அதன் போதை தலையில் ஏறி, பல கோடி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு போட்டியின் போதே அச்சில் ஏற்ற முடியாத அநாகரீக செய்கை செய்து நம்மை தலை குனிய வைத்தார். அதெல்லாம் நமக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது. ஒரு சிக்ஸ்ர் அடித்தாலே அனைத்தும் மறைந்தோடி விடுமே...எனவே எதுவும் நம் நாட்டில் நடக்கும். அவருக்கும் பல ஆண்டுகள் கழித்து பாரத ரத்னா விருது வழங்கினாலும் வழங்குவோம். ஏனென்றால் நமக்கு கிரிகெட் என்றால் தேசபக்தி. வேறெதுவும் யோசிக்கவும் தேவையில்லை யோசனைக்கும் வாராது!தகுதியற்றவர்கள் விருது பெறுவதும் தகுதியுள்ளவர்கள் அங்கீகாரம் இன்றி இருப்பதும் நம் நாட்டில் புதிய விஷயமா என்ன?




Friday, November 15, 2013

இலங்கை மேடையில் இன்னொரு நாடகம்...

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. நம்மூர் சிங்கங்கள் இதில் தங்களுக்கு உள்ள அக்கறையை பறை சாற்ற சிலிர்த்தெழுந்து வாதம், விவாதம், விதண்டாவாதம் என அனைத்தையும் செய்து விட்டு ஓயத்துவங்கி விட்டன. இனி அவை வேறு "வாய்ப்புகள்" தேடிப் போய் விட்டு இலங்கை (தமிழர்) குறித்த மற்றொரு நிகழ்வு வரும் பொழுது மீண்டும் சிலிர்த்தெழும்...

தலைவர்களுக்கென்று சில பண்புகள் தேவை என்று பழங்காலம் தொட்டு அறிந்திருக்கிறோம். அதில் குறிப்பிடத்தகுந்தது முடிவெடுக்கும் ஆற்றல். சரியோ தவறோ, முடிவுகளை தகுந்த காலத்தில் எடுத்து, அந்த முடிவுக்கான சிந்தாந்ததையும், காரணிகளையும் தெளிவாக விளக்குவது எந்தவொரு தலைவருக்கும் அவசியமான குணம்.

நம் பிரதமர் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் க‌லந்து கொள்ளப்போவதில்லை என்று சில நாட்கள் முன் முடிவெடுத்தார்.. தெரிவித்த கையோடு, அதை ராஜபக்ஷேவுக்கு தெரிவித்து கடிதமும் அனுப்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் விவகாரத்துறை அமைச்சர் அவருக்கு பதில் கலந்து கொள்வார் என்றொரு நிலைப்பாடு வேறு. சுருங்கச் சொன்னால் "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்" பழமொழி நமக்கு மறந்து விடாமல் இருக்க அதற்கு செயல்முறை விளக்கம் அளித்திருக்கிறார்.

இதென்ன இரட்டை நிலைப்பாடு? ஒன்று பிரதமர் கலந்து கொண்டு, காமன்வெல்த் அவையில், போர்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்று பேசியிருந்தால், அந்த தைரியமான போக்கை பாராட்டியிருக்கலாம். அல்லது மொத்தமாக புறக்கணித்து இந்தியாவிலிருந்து எவருமே கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்து, அதற்கான காரணத்தையும் விளக்கியிருந்தால் முதிர்ச்சியான ராஜாங்க முடிவென்று பாராட்டியிருக்கலாம்.

தான் போகாமல் மற்றொருவரை அனுப்புவதாக சொல்வது மட்டுமின்றி, வராததற்கு வருத்தம் தெரிவிக்கும் செயலால் எவருக்கேனும் எப்பயனேனும் உண்டோ? அட, அவருக்கேனும் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட குறைந்த பட்ச திருப்தி கூட இதில் கிடைக்காதே...நல்ல வேளை, கடிதத்தில் என்ன எழுதியிருப்பார் என்று நமக்குத் தெரியவில்லை. ஒரு வேளை, "கடல் கடந்து வர முடியாத நிலையில் உடல்நிலை இருப்பதால் இந்த மடல்" என்று எழுதியிருந்தாலும் அதிசயமில்லை. கடிதம் எழுதும் கலையை சென்னையில் இருந்து டெல்லி செல்லும் கடிதங்கள் மூலம் கற்காமலா இருந்திருப்பார் நம் பிரதமர்? எதுகை மோனையில் பேசியே ஏமாற்றும் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து "கூடா நட்பு" பாராட்டியே பழக்கப்பட்ட தேசிய பாரம்பரிய கட்சியின் அங்கத்தினர் தானே அவர்?

போர் அத்துமீறல்கள் குறித்து வரும் வீடியோக்களை பார்க்கும் எவருக்கும் மனது என்னவோ செய்யும்.. அதுவும், நம் இனம் என்கிற போது கூடுதல் வலி ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்த உணர்ச்சி குவியல்களில் அரசியல் நெருப்பு பற்ற வைத்து ஆதாயம் காண‌ முயல்வதே இங்கிருக்கும் அனைத்து கட்சிகளின் அடிப்படை கொள்கை. எனவேதான், ராஜாங்க ரீதியான முயற்சிகளோ தீர்வுக்கான தொலைநோக்கு பார்வையோ இன்றி உணர்வு ரீதியான திரிகளை கொளுத்திப் போடுவதே அனைத்துக் கட்சிகளின் வேலையாக இருக்கின்றன.

இலங்கை தமிழர் விவகாரத்தின் இன்னொரு முனையில் சிக்கியிருப்பது நம் மீனவர்கள். "கச்சத்தீவை மீட்டெடுப்போம்" போன்ற வெட்டிப் பேச்சுக்களை விட்டு இவர்களின் அன்றாட மீன்பிடித் தொழிலுக்குரிய‌ பாதுகாப்பை பலப்படுத்தும் வழிமுறைகளுக்கான வரைவுகளை எந்தக் கட்சியாவது எந்த விதத்திலாவது முன்னெடுத்துச் சென்றிருக்கிறதா? தீப்பெட்டியும் தீக்குச்சியும் போல எந்த ஒன்று இன்னொன்றின் மேல் உரசினாலும் விளைவு நெருப்பே என்ற ஆபத்தான நிலைக்கு இந்த இரண்டு சிக்கல்களையும் ஆக்கி வைத்திருக்கிறோம்... என்னதான் இங்கு நாம் பேசினாலும், இலங்கை என்பது தனி நாடு. அதன் உள்விவகாரங்களில் தலையிட, அங்கு நடக்கும் அத்துமீறல்களை கண்டிக்க, உரியவர்களை தண்டிக்க, நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகள் எதையேனும் நாம் பொருத்தமிகு கூட்டமைப்புகளில் விவாதத்திற்கோ, சர்வதேச அரங்குகளின் புரிதலுக்கோ விளக்கமாக வைத்திருக்கிறோமா நாம்? அத்தகைய ராஜ தந்திரமும் பக்குவமும் ஒருசேர பெற்ற தலைவர் எவரேனும் இங்கு இருக்கின்றாரா?

இங்கிருக்கும் பெரிய கட்சிகள் கடிதம் எழுதுவதையும் தீர்மானம் போடுவதையும் தவிர இவற்றுக்கு விடை காணும் வகையில் ஏதேனும் உருப்படியாக யோசித்திருக்கின்றனவா? ஓட்டில் மட்டுமே கண் வைத்திருக்கும் தலைவர்கள் மட்டுமே இன்று மிச்சம். நாட்டை வழிநடத்தும் தகுதி உடையவர் எப்பொழுதேனும் கிடைத்தால் நமக்கு மச்சம்.

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும்? ஒன்று செய்யலாம் - நல்லதோ கெட்டதோ...எந்தவொரு விஷயமும் முடிவுக்கு வந்தாக வேண்டும். அந்த வகையில், இன்றிருக்கும் பொறுப்பற்ற, சிந்தனையற்ற, செயலற்ற அரசியலும் முடிவுக்கு வரும். சரித்திரத்தில் பதியப் பெற்ற அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்கள் போல மீண்டும் எவரேனும் தோன்றக்கூடும் என்ற நம்பிக்கையில், அவரை அடையாளம் தேடியபடியே நாம் இருக்கலாம்...ஆண்டுகள் பல ஆகலாம் தலைமுறைகள் பல கூட தாண்டலாம்...ஆனால் என்றேனும் காலச்சக்கரம் மீண்டும் சுற்றி காமராஜர் போலவோ கக்கன் போலவோ எவரேனும் தோன்றலாம் என்ற நம்பிக்கையில் நாம் வாழலாம் அந்த நம்பிக்கையை அடுத்த‌ தலைமுறைக்கும் ஊட்டலாம்.

அதுவரை இவர்கள் அத்தனை பேரின் நாடகங்களையும் புறக்கணித்து, இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் அமைதியாக வாழவும், எது நமது கடல் எல்லை என்று அறியும் வசதியின்றி எல்லைத் தாண்டி மீன்பிடிக்கப் போனவர்கள் சேதாரமின்றி அவரவர் வீடு திரும்பவும், நமக்கு எதன் மீது நம்பிக்கையோ அதனிடம் வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. இந்த விவகாரங்களுக்கு விடிவுமில்லை.

Saturday, August 17, 2013

வாங்க...லெட்டர் போடுவோம்

என்னங்க? ஊர் உலகம் தேள் கொட்டிய‌ குரங்கு மாதிரி என்னவெல்லாமோ செஞ்சுக்கிட்டுருக்கு...இந்த காலத்துல கடிதம் எழுதவா? என்று என்னை ஏற இறங்க பார்க்காதீங்க...எல்லாம் நம்ம அரும்பெரும் தலைவர்கள் பேணிக் காக்கும் பாரம்பரியத்தை பரப்பும் பணியில் ஏதோ நம்மால் முடிந்த சிறு துளி சார் இது.

சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் ஒரு IAS அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது குறித்து நாடு முழுவதும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் போக்கில் அது நடக்கட்டும். ஆனால், மத்தியில் அரசாளும் கட்சியின் தலைவர் செயல்பாட்டை நாம் வியந்து பார்க்க வேண்டும். என்னே ஒரு வேகம் என்னே ஒரு விவேகம்...தன் கட்சியைச் சேர்ந்த, தனக்கு கீழே பணி செய்யும் பிரதமருக்கு, தான் நினைத்தால் அடுத்த நிமிடம் பார்க்கக் கூடிய ஒருவருக்கு, இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் எப்படி? கடிதம் எழுதி! தகவல் தொழில்நுட்பத்தில் கொடி கட்டிப் பறக்கும் நாட்டில் எப்பேர்ப்பட்ட புரட்சி சார் இது! இவர்களிடம் "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்க முடியுமா? ஏற்கெனவே பிரதமர் ஒரு முறை, "தமிழ் நாட்டின் மூத்த தலைவர் மூலமே நாங்கள் ஆலோசனை பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார். கடிதம் எழுதுவதில் கை தேர்ந்தவரான அவர் தான் இந்த "அட்வைஸ்" தந்திருப்பாரோ? அதற்காக மற்றவர்களை குறைவாக நாம் எண்ணி விடக் கூடாது. இப்பொழுதுள்ள முதல்வரும் முடிந்த வரை மூத்த தலைவரை கடிதம் எழுதும் கலையில் முந்த முடியுமா என்று தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறார். இப்படியாக தமிழகம் நாட்டிற்கு தந்த ஒப்பற்ற கலைவடிவமாக விளங்குகிறது கடிதங்கள்!

நம் பங்குக்கு நாம் என்ன சார் செய்யலாம்? ஒரு உதாரணம் மட்டும் பார்க்கலாம். ஏதாவது பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்...தீயணைப்புத் துறைக்கு போன் செய்தால் விஷயம் சீக்கிரம் முடிந்து விடுமே? முடிய விடலாமா? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா நமக்கு? தலைவர்களின் தாள் தொட்டு அவர்கள் வழி நாம் நடக்க வேண்டாமா சார்? பற்றி எரியும் தீயை உற்றுப் பார்த்து வருந்தியபடி தபால் நிலையம் நோக்கி ஓட வேண்டும். நடந்தால் இன்னும் நல்லது. கூரியர் எல்லாம் வேகமாக பட்டுவாடா செய்யப்படும் என்பதனால் சாதா அஞ்சல் அட்டையை பயன்படுத்தலாம். தீயணைப்பு நிலையத்திற்கு தீயை அணைக்கும் படி அகம் உருகி ஒரு கடிதம் போட வேண்டும் சார் கடிதம்!

"மதிப்புக்குரிய தீயணைப்பு நிலைய தலைவருக்கு, சமூகத்தில் தீ விபத்துக்கள் அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களின் கடமைமிகு படை வீரர்கள் மூலம் மக்களை தொடர்ந்து காத்து வரும் தொண்டு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த சிலிர்ப்புக்கு சிகரம் வைக்கும் தருணம் வந்து விட்டது. நியாய உணர்வுடன் விரைந்து வந்து கொழுந்து விட்டெரியும் கொடிய தீயை
தண்ணீர் கொண்டு தவிடுபொடியாக்கி கண்ணீரில் மிதக்கும் எங்களை பன்னீரில் நனைய வைக்கும்படி மூவுலகிலும் மூத்த குடியாம் தமிழ் குடியின் அடுப்பொடிகளில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்..." - ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக இப்படியொரு கடிதம் எழுதினால் முடிந்தது காரியம் சார்.

ஆனால் கடிதங்கள் எழுதியே காலத்தை ஓட்ட முடியுமா? ஒரு கட்டத்தில் போரடிக்குமே? எனவே பாரம்பரியமிக்க பாரதத்தில் பழங்காலத்தில் இருந்த சீர்மிகு தகவல் சாதனமான புறாவுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என்றொரு புரட்சி ஊற்று நம் தலைவர்களின் சிந்தனையில் உதித்தால் நாட்டின் கதி என்ன ஆகும் சார்? கலக்கமாக இருக்கிறதா? அத்தனை கலக்கத்தையும் அறிக்கை விட்டே அழிய வைக்கும் ஆற்றல் மிக்க அரசியல்வாதிகள் வாழும் நாடல்லவா இது! "சுறாவை சுண்டு விரலால் பிடித்த வீரமிகு வரலாறு கொண்ட தேசத்தில் புறாவை கொண்டு கடிதம் அனுப்பும் கலையை போற்றும் பணி செய்வோம் பாரம்பரியம் காப்போம்" என்று ஆரவாரமாக‌ அறிக்கை விடத்தெரியாதவர்களா நாம்?

"புறா பராமரிப்புத் துறை" ஒன்று துவங்கி அரசாங்க தகவல் பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் தொடர்பு அனைத்தும் புறா அன்றி இரா என்று எதுகை மோனையில் ஒரு சட்டம் இயற்றினால் போதாதா? அப்புறம் நம் அனைவருக்கும் வீட்டுக்கொரு விலையில்லா புறா கிடைக்கும். "புறா தந்த புரவலர்" பட்டம் பெறும் பாக்கியம் நம் நாட்டில் எந்த தலைவருக்கு வாய்த்திருக்கிறதோ! பொறுத்திருந்து பார்ப்போம்!

குறிப்பு: உதாரணத்தை வைத்து நீங்களாக ஏதேனும் உள்ளர்த்தம் செய்து கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு!

Sunday, July 21, 2013

மெதுவா தந்தி அடிச்சானே...

என்ன சார்...தலைப்பு பார்த்து விதவிதமான எதிர்பார்ப்புக்களுடன் படிக்க ஆரம்பித்து விட்டீர்களா? எதிர்பார்ப்பு நிறைவாகிறதா இல்லை ஏமாற்றமா என்று இறுதியில் தெரிந்து விடும். இப்பொழுது விஷயம் என்னவென்று பார்ப்போம்.

தாத்தாவிற்கு தாத்தா காலம் தொட்டு அவசர நேரங்களில் தகவல் பரிமாற உதவிய தந்திக்கு அந்திம காலம் சென்ற வாரம் முடிந்தது நாம் அனைவரும் அறிந்ததே...இந்த நேரத்தில் தந்தியுடன் நாம் கொண்ட தொடர்பு குறித்து நமது நினைவலைகள் புரண்டு கொண்டிருக்கும். எனக்கு, நான் முதன் முதலாய் தந்தி கொடுக்கச் சென்ற அனுபவம் ஞாபகம் வந்தது. ஞாபகம் என்றால் நம் சொல் கேட்குமா சார்? ஒன்றிலிருந்து இன்னொன்று என்று அது போன போக்கில் போய் கொண்டேதானே இருக்கும்? நாமும் அதன் போக்கில் போக வேண்டியதுதானே...

அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு உறவினரின் மறைவுச் செய்தியை பல பேருக்கு தந்தி மூலம் தெரிவிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. சூழல் காரணமாக எப்படி தந்தி அனுப்புவது என்று எவரிடமும் கேட்க இயலாமல் நேரே "தந்தி ஆபிஸ்" சென்றேன். கையில் பேப்பரில் நிறைய முகவரிகள். தந்தி கவுண்டரில் நல்ல கூட்டம். மகிழ்ச்சி, துக்கம் என வெவ்வேறு ஸ்வரங்களை மாறி மாறி அடிக்கும் "டக் டக்" சத்தம் தொடர்ந்து கேட்க, வரிசையில் நிற்போர் "கதை" பேசாமல் மெளனம் காக்கும் விசித்திரமான இடமாக தெரிந்தது தந்தி ஆபீஸ்.

அனைவரும் வயதில் என்னை விட மிகப் பெரியவர்களாக இருந்தார்கள். ஒரு வேளை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் தந்தி அனுப்ப முடியுமோ என்று ஒரு திடுக் சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அப்படியென்றால் வீட்டில் என்னை அனுப்பியிருக்க மாட்டார்கள் என்று மனம் சமாதானம் சொன்னாலும், அத்தனை நீள வரிசையில் நின்று இறுதியில் வயதாகவில்லை என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற கவலை வேறு! ஒருவரிடம், நேரடியாக வயது வரம்பு பற்றி கேட்கத் தயங்கி, "தந்தி அனுப்ப address proof வேணுமா?" என்றேன். அட்ரஸ் இருந்தா போதும் புரூப் வேண்டாம் என்றார். மதுரைக்காரர் என்றாலே பதிலை ருசியாகத்தானே சொல்வார்? அடுத்து, "ஸ்கூல் படிக்கறவங்க அனுப்பலாமா?" என்றேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தவர், கவுண்டரை கைகாட்டி "அங்க போய் கேளு" என்றார்.

பெரிய குங்குமப் பொட்டுடன் ஒரு பெண்மணி கவுண்டரில் இருந்தார். "மேடம் நான் பத்தாவது படிக்கறேன். தந்தி அனுப்பலாமா" என்று பொட்டென்று போட்டு உடைத்தேன். ஒரு பெரும் பாரம் இறங்கியது போல் இருந்தது. "யார் வேணாலும் அனுப்பலாம்பா" என்று form ஒன்றை கொடுத்தார். ஏற்கெனவே முகவரிகளை எண்ணி வைத்திருந்த நான், கொஞ்சம் "extra" இருக்கட்டுமே என்று சற்று கூட்டி, ஒரு ஐம்பது form கொடுங்க" என்றேன். அங்கிருந்தவர்கள் அனைவருமே என்னை பார்வையால் துளைப்பது போல இருந்தது. பெண்மணி ஒருவரை பெயர் சொல்லி அழைக்க, எங்கிருந்தோ வந்தவரிடம், "5 நிமிஷம் பார்த்துக்கங்க" என்று சொல்லி விட்டு என்னை பார்த்தபடி எழுந்தார். "ஆஹா... ஐம்பது எல்லாம் கேட்கக்கூடாது போலிருக்கே" என்று எனக்கு படபடப்பானது. சுற்றி நடந்து வெளியே வந்தவர், "இப்படி வாப்பா தம்பி" என்று அருகிலிருந்த பெஞ்சுக்கு கூட்டிப் போனார்...

சரி...தனியாக அழைத்துச் சென்று திட்டும் அளவுக்கேனும் பக்குவப்பட்டவராக‌ இருக்கிறாரே என்ற எண்ணத்துடன் அவரின் பின்னே சென்றேன். யார் இறந்தது என்று விசாரித்து, சுவற்றின் மேலே தொங்க விடப்பட்டிருந்த "தந்தி விதிமுறைகள்" போர்டை காட்டி, ஒவ்வொரு சொல்லுக்கும் காசு உண்டு என்று விளக்கி, நான் ஒரு form முடிக்கும் வரை சரி பார்த்து, "மற்றவற்றை எழுதிக் கொண்டு வா" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

ஐந்து நிமிடம் கழித்து அனைத்தையும் "ரெடி" செய்து நிமிர்ந்த நான் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டுமா என்ற பிரமிப்புடன் மெதுவாக வரிசை நோக்கி நகர்ந்தேன்...கவுண்டரில் இருந்த அவர், சத்தமாக "வரிசை வேண்டாம் இங்க வா" என்றார். அனைத்தையும் சரி பார்த்து அனுப்பி, "acknowledgement" கொடுத்து, கரெக்டா போயிரும் போயிட்டு வா" என்றார். எத்தனை உணர்வு பூர்வமான வேலையை இவர்கள் செய்கிறார்கள் என்று அனுபவத்தில் அறியும் அற்புதமான வாய்ப்பு அன்று எனக்கு கிடைத்தது.

சில‌ வருடங்கள் கழித்து, ஒரு மாலை நேரத்தில், மதுரை சக்தி சிவம் தியேட்டரில்,  புதிய‌ வகையில் தந்தியடிக்கும் முறைகள் குறித்து அரவிந்த் சாமியும் சிவரஞ்சனியும் "மெதுவா தந்தி அடிச்சானே..." என்ற பாடல் மூலம்   செயல்முறை விளக்கங்களுடன்  மக்களுக்கு மாபெரும் ஞானம் அளிக்க‌ தங்கள் கலைத்தொண்டு மூலம் முயன்று கொண்டிருந்தனர். "தாலாட்டு" படத்தில் வரும் இப்பாடலை நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரிதான்...இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? அதான் சொன்னேனே சார்...ஞாபகம் என்றாலே எங்கெங்கெல்லாமோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நம் மனதை திரிய வைத்து எப்படியோ ஒரு சம்பந்தத்தை எதன் இரண்டிற்கோ இடையில் கொண்டு சேர்த்து விடும் என்று... எனவே இதிலும் சம்பந்தம் இருக்கு சார் இருக்கு. எனது முதல் தந்தி அனுபவ ஞாபகமும் "மெதுவா தந்தி அடிச்சானே" பாட்டு ஞாபகமும் எப்படியோ சேர்ந்து இப்பொழுது எனக்கு ஒரு கவலையைத் தந்திருக்கிறது...அதாவது, இன்னும் ஒரு நானூறு ஐநூறு ஆண்டுகள் கழித்து எஞ்சியிருக்கும் தமிழ் தெரிந்த எவரோ ஒருவர், "முற்கால தமிழ் அகராதி" என்று எதையேனும் தயாரிக்க முயன்று கொண்டிருக்கையில் அவர் காதில், "மெதுவா தந்தி அடிச்சானே" பாடல் விழுந்து, ஆர்வம் உந்தித் தள்ள அந்த பாடல் காட்சியை பார்க்கும் அவலமும் நேர்ந்து, அதன் மூலம் அவர் அறிவுக்கு எட்டியதை, "தந்தி என்ற சொல், பண்டைய தமிழ் நாட்டில் காதலர்கள் ஒருவரை ஒருவர் கையாளும் முறையை குறிக்கும்" என்ற ரீதியில் எதையேனும் எழுதி வைத்தால் என்ன செய்வது சார்?

Sunday, June 9, 2013

எப்படியிருந்த கிரிகெட்...

அது ஒரு பிற்பகல் வேளை. நான் சென்று கொண்டிருந்த பேருந்தை திடீரென்று சாலையோரம் நிறுத்தி விட்டு ஒரு கடை நோக்கி இறங்கிப் போன டிரைவர், திரும்பி வந்து பயணிகளிடம் "Chetan Sharma செஞ்சுரி அடிச்சுட்டான்" என்று உற்சாக அதிர்ச்சியை உரக்கச் சொல்லி விட்டு வண்டியை எடுத்த தினம் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். பேருந்து முழுவதும் "Chetan Sharma" மந்திரமாக ஒலித்தார். அதற்கு சற்று காலம் முன்பு கடைசி பந்தில் சிக்ஸ்ர் கொடுத்த போது திட்டித் தீர்த்த பல வாய்களே அந்த பேருந்தில் அன்று இருந்திருக்கக் கூடும். எனினும் அனைவருக்கும் அன்று அது நினைவில் இல்லை. எவரும் "எதுக்குய்யா வண்டியை நிப்பாட்டின?" என்று கேள்வி கேட்கவில்லை. இப்படித்தான் நம் தேசம் கிரிகெட் கிறுக்கு பிடித்து வருடக்கணக்கில் அலைந்தது.

பரந்த மைதானத்தில் விளையாடும் ஆட்டம் என்றாலும் பத்துக்குப் பத்து ரூமுக்குள் கூட, வீட்டு பீரோ நெளிந்து போக, கண்ணாடி உடைபட விளையாட வைத்தது...ரப்பர் பந்து பிய்ந்து போனால், அதன் ஒரு பகுதியை வைத்தே விளையாடினாலும் உற்சாகம் தந்தது...தரிசு நிலங்களில் உடைந்த மரப்பட்டையை பேட்டாகவும் உலர்ந்த சோளத்தட்டையை பந்தாகவும் உருமாற வைத்தது...காற்றில் கைகளை சுற்றி பெளராகவும், விதவிதமான ஷாட்களுக்கு வாயினாலேயே "டொக்" என்று சத்தம் கொடுத்து பந்துமில்லாமல் பேட்டுமில்லாமல் கற்பனையிலேயே விளையாடியபடி தெருவில் நடந்து போகும் சிறுவர்களைக் கொடுத்தது...சின்னஞ்சிறு மைதானத்தில் எந்தப் பந்து எந்த "மேட்சில்" இருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பது கூட கடினமாக குறுக்கும் நெடுக்குமாக பல குழுக்கள் விளையாடினாலும் பொறுத்துக் கொள்ள வைத்தது...

கிரிகெட் நம் நாட்டில் பரவுவதற்கு பெருமளவு பங்காற்றியது தூர்தர்ஷன் என்பதை நாம் மறந்து விட முடியாது. "ஆடி அசைந்து" விளையாடுவதற்கு பெயர் பெற்ற ரவி சாஸ்திரி "ஆடி" கார் பரிசு பெற்ற 1985 ஆண்டின் "" போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பி பட்டி தொட்டியெங்கும் கிரிகெட் மோகத்தை கிளறியது தூர்தர்ஷன். ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தப் போட்டிகளை, வெறும் கோடுகள் மட்டுமே திரையில் தெரியும் போதே டிவியை ஆன் செய்து, இரண்டு முந்திரி வடிவங்கள் இசையுடன் திரையில் சுற்றி வருகையில் சற்று உற்சாகம் தொற்றி, பல் துலக்கிய கையோடு டிவியின் முன் தவம் கிடந்த வீடுகள் பல உண்டு.

டி.வி என்பது வசதி படைத்தவர்கள் வாங்க யோசிக்கும் இருந்த அந்நேரத்தில், ஏதேனும் ஒரு டிவி ஷோ ரூமின் வாசலில் நின்று "Dyanora" மற்றும் "Solidaire" வகையறாக்கள் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் கிரிகெட் மாட்சை சாலையில் போகும் பிச்சைகாரரும் பிசினஸ்மேனும் அருகருகே நின்று ஆனந்தமாக பார்த்துச் சென்ற "கலாச்சாரம்" தோன்றியது.ரிக்க்ஷா ஓட்டுபவர் "ஒரு நிமிஷம்" என்று சவாரியை நிறுத்தி கடைசி ஓவர் பார்ப்பதும், தெருவை அடைத்தபடி கூட்டம் நிற்பதுமாய், கிரிகெட் என்ற "மதம்" பரவியது.


ஒரு முறை உறவினர் ஒருவரை பார்க்க மருத்துவமனை சென்ற பொழுது, ஆபரேஷன் தியேட்டரிலிருந்து கொண்டு வரப்பட்டு அப்போதுதான் நினைவு திரும்பிய‌ ஒருவர் "இந்தியா தப்பிச்சாச்சா" என்று ["டை" ஆன சென்னை டெஸ்ட் போட்டியின் போது] கேட்டது ஞாபகம் இருக்கிறது.

எனது பெரியப்பா ஒருவர், வீட்டில் டிவி வராத காலங்களிலேயே, உலகில் எந்த மூலையில் டெஸ்ட் போட்டி நடந்தாலும் தனது டிரான்ஸிஸ்டரை எப்படியோ தட்டித் திருகி , ABC... BBC என்று எதிலாவது மாட்சை பிடித்து விடுவார். எங்கேனும் காதை கழற்றி ரேடியோவிற்குள் போட்டு விடுவாரோ என்று பயப்படும் அளவு ரேடியோவை காதோடு வைத்து, பெரும் இரைச்சலுக்கு நடுவே ஸ்கோரை "கண்டு பிடித்து" விடுவார்.

ஞாயிற்று கிழமைகளில் போட்டி நடந்தால் மகிழ்ச்சிக்கு பதில் பதட்டம் தோன்றும். ஏன் என்றால், தூர்தர்ஷனில் பாதி நேரம் போட்டியை ஒலிபரப்புவதற்கு பதில் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். "ரோம் எரியும் பொழுது பிடில் வாசிப்பது" என்பதை போல நாம் " ஸ்ரீகாந்த் என்னவானோரோ" என்று பரபரக்கும் மதியம், காது கேளாதோருக்கான செய்தி ஓடிக்கொண்டிருக்கும். நாட்டில் அனைவருக்கும் நன்றாக காது கேட்கும் நிலை வந்து விடாதா என்று ஏங்குவோம். சில சமயம் அசாரூதின் பவுண்டரிகளாக அடித்து கொண்டிருக்கையில் இவர்கள் அசாம் தேயிலை தோட்டத்தில் இலைகளில் பூச்சி மருந்து எப்படி அடிப்பது என்று விளக்கிக் கொண்டிருப்பார்கள். போட்டியின் இறுதிக் கட்டம் நெருங்கும் போது "ந் ந்ர்" என்று நரோத்தம் பூரி வந்து விடுவார். இவர், பஞ்சாபில் நடந்த கிராமிய விளையாட்டுகளில் வழுக்கு மரம் ஏறுவது, தேசிய பில்லியட்ஸ் போட்டிகள் (இப்படியொரு விளையாட்டி இருக்கிறது என்பதே பாதி இந்தியர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலமே அன்று தெரிய வந்திருக்கும்) என்றெல்லாம் சுற்றி முடித்து, நடந்து கொண்டிருக்கும் கிரிகெட் போட்டிக்கு கனெக்க்ஷன் கொடுப்பார். இருப்பினும், மதியம் துவங்கி, எந்த நேரத்தில் போட்டியை காட்டுவார்களோ என்ற தவிப்பில், மேற்கூறிய அனைத்தையும் பார்த்துத் தவித்தோம். ஒரு வேளை, இந்தியர்களிடம் சகிப்புத்தன்மை என்பதே இதிலிருந்துதான் ஏகத்துக்கும் வளர்ந்து விட்டதோ என்று கூட சந்தேகம் வரலாம்.

1980களின் நடுவே ஒரு முறை மதுரைக்கு இந்திய அணி வந்திருந்தது. அவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் "சும்மா" போட்டி ஒன்றில் விளையாடினார்கள். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊரே திருவிழா கோலம் பூண்டது போல கூட்டம் கூட்டமாக மைதானம் நோக்கி படையெடுத்தது. கம்பு கட்டைகளால் அமைக்கப்பட்ட இருக்கைகள், வேலிகளை கடந்து, கபில் தேவின் கைகளை தொட்டுப் பார்த்த‌ அந்த நொடியின் மகிழ்ச்சி இன்றும் மனதில் பதிந்திருக்கிறது.

இன்று காரிலிருந்து இறங்கி, தொலைக்காட்சி கேமிராக்கள் தொடர‌ திமிருடன் நடந்து போகும் கோட்டு போட்ட கோமாளிகள் எவராலும் கிரிகெட் வளரவில்லை. அந்த விளையாட்டின் எளிமையில் இருக்கிறது அதன் உயிர். நமக்கு உற்சாகம் அளித்த இந்த விளையாட்டிற்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒன்றே ஒன்று போதும் IPL போன்ற கூத்துக்களை புறக்கணித்து, மைதானங்கள் இரண்டு வருடங்கள் காற்றாடினால் போதும். "ஆட்டம்" மட்டும் நிலைத்து நிற்கும். மற்ற "ஆட்டங்கள்" சிறிது சிறிதாய் அடங்கி விடும்.