/ கலி காலம்: ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 1

Sunday, April 22, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 1

என்ன இது அபத்தமான தலைப்பாக இருக்கிறது என்கிறீர்களா? பட்டொளி  வீசும் மணிக்கொடி பறக்கும் பாரத நாட்டில் பிறந்த அனைவருக்கும் பல special மரபணுக்கள் (gene) உண்டு.
அத்தகைய மரபணுக்களில் சில, நாம் ரயிலில் பயணம் எப்படி பயணம் செய்ய வேண்டும் என்று வழி நடத்துகின்ற விதத்தையும் அதன் மூலம் காணக்கிடைக்கும் நம் "பண்பாட்டு களஞ்சியத்தையும்" விரிவாக பார்ப்போம்...
நமக்கு புதிதான ஒரு ஊரில் இருக்கிறோம் என்று வைத்து கொள்வோம். எப்படி ரயில் நிலையத்தை கண்டு பிடிப்பது? ரொம்ப easy. ரயில்வே துறைக்கு நம் மீது பரிவும் பாசமும் அதிகம். நாம் அலையாமல் எளிதில் கண்டுபிடிக்க வசதியாக பெரும்பாலான ரயில் நிலைய வாயிலருகில் கழிப்பறை கட்டியிருப்பார்கள். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாயிற்றே! எனவே நிறைய பேர் நிற்பதற்கு நேரமின்றி ஓடிக்கொண்டிருப்பார்கள் - அதாவது, கழிப்பறை உள்ளே சென்றால் ஒரு நிமிடம் வீணாகி விடுமே என்று வெளியிலேயே "போகும்" முன்னேறத்துடிக்கும் மனிதர்கள்...இவர்கள் உதவியுடன் அந்த வட்டாரம் முழுதும் வீசும் சுகந்தமான வாசம் நம் மூக்கையும் தாக்கும். அதைத் தொடர்ந்து சென்றால் ரயில் நிலையம் சேர்ந்து விடலாம். இது சிற்றூர்களில். இதுவே பெரிய நகரமென்றால் இன்னும் பெரிய idea இருக்கும் - மாநகராட்சி உதவியுடன்...ரயில் நிலையம் அருகில் உள்ள subway மற்றும் நடைபாதைகளில் நீக்கமற நிறைந்திருக்கும் குப்பைகளில் பரவிக்கிடக்கும் பயன்படுத்தப்பட்ட பயணச்சீட்டுக்களை தொடர்ந்து சென்றால் ரயில் நிலையம் சேரலாம். என்ன இது ரொம்ப ஓவரா இருக்கே என்பவர்கள் chennai central railway station அருகில் உள்ள subway உள்ளே நடந்து பார்க்கவும். என்ன இது தரை இவ்வளவு மெத்தென்று இருக்கிறதே என்று நினைப்போம் - குனிந்து பார்க்கும் வரை. "குட்டையில் மூழ்கி ஒருவர் பலி" செய்தி பார்த்திருப்போம் ஆனால் "குப்பையில் மூழ்கி பலி" என்று தினத்தந்தி செய்தி வரும் வாய்ப்பு இந்த இடத்திற்கு உண்டு!
சரி. ரயில் நிலையம் வந்தாயிற்று. உடனே ரயிலையும் நம் இருக்கையையும் அடைந்து விட முடியுமா என்ன? கூட்ட நெரிசலில் "இளங்காதலர்கள்" என்றொரு வகை உண்டு. இவர்கள், "உள்ளே நுழைந்து விட்டேன், தண்ணீர் bottle வாங்கப்போகிறேன், வாங்கிக்கொண்டிருக்கிறேன்,வாங்கி விட்டேன், coach அருகில் வந்து விட்டேன், முதல் படியில் கால் வைத்துவிட்டேன், ஏறி விட்டேன் என்ற ரீதியில் தங்கள் வருங்கால வாழ்க்கைத்  துணைக்கோ அல்லது காதலே ஒரு "time pass" என்ற தார்மீகத்தில் தழைத்தோங்கும் காதலன் or காதலிக்கோ mobile கமெண்டரி கொடுத்தபடி கனவுலக மிதப்பில் நத்தை போல் நடை போடும் இவர்கள் காதில் எந்த சங்கும் ஏறாது. நாம்தான் வளைந்து நெளிந்து இவர்களை கடந்து போக வேண்டும்.
ரயில் வந்து விட்டது...coach வாயிலில் தேனடையில் தேனீக்கள் போல கூட்டம் அம்மும். ஒரு பெட்டியில் இத்தனை பேர்தான் என்பதும், reservation செய்த நம் இடமும் உறுதி என்றாலும் வரிசையாக நின்று ஏறினால் நம் வீரம் என்னாவது? எனவே இடித்து தள்ளிக்கொண்டுதான் ஏற வேண்டும். அதிலும் பெட்டியை வைத்து லேசாக அடுத்தவர் முழங்கையிலோ முட்டியிலோ தட்டிவிட்டு கிடைக்கும் "gap "இல் முன்னே செல்லும் வித்தையை கண்டுபிடித்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த சூழலில், ரயில்வே ஊழியர் ஒருவர், ஒரு கையில் கோந்து வாளியும் மறு கையில் reservation பட்டியலையும் வைத்துக்கொண்டு அதை ஒவ்வொரு  பெட்டியாக ஒட்டிக்கொண்டு வருவார். தங்கள் seat நம்பர் check செய்ய கூட்டம் அங்கும் மொய்க்கும். சிலருக்கு தங்கள் பெயரை மட்டும் பட்டியலில் பார்த்தால்  போதாது. அந்தப்  பெட்டியில் பயணம் செய்யும் அனைவரின் பெயர்கள் மற்றும் வயதை ஒரு "look" விட்டுத்தான்  நகர்வார்கள். அதுவரை நாம் அவர்களின் முதுகை மோப்பம் பிடித்தபடி பின்னால் நிற்க வேண்டும்.
அப்பாடா... ஒரு வழியாய் புழுக்கத்திலும் நெரிசலிலும் அடித்து பிடித்து இடித்து முடித்து நம் இருக்கைக்கு வந்து விட்டோம்! அண்ணாந்து பார்த்தால் fan சுற்றாமல் நம்மை முறைத்து பார்த்தபடி இருக்கும். ரயில்களில் சுற்றாத மின்விசிறியை சுற்றவைப்பது எப்படி என்ற வழிமுறைகளை தலைமுறை தலைமுறையாக ஒரு மரபணு நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. முதலில் "ச்சே..." என்று நம் எரிச்சலை காட்டியபடி தென்படும் சுவிட்சுகள் அனைத்தையும் (அது light சுவிட்சா fan சுவிட்சா என்று பேதம் பார்க்கக் கூடாது) மாறி மாறி on/off seyya vendum. இதில் சில மின்விசிறிகள் போனால் போகிறதென்று ஓடத்துவங்கும். ஆனால் சில கல்லால் செய்த fan சிற்பம் போல் அசையாமல் இருக்கும். சீப்பை பயன்படுத்தி ரயிலில் மின்விசிறியை சுற்ற வைக்கும் கலை பாரத பாரம்பரியங்களில் பலகாலமாக பின்பற்றப்படும் ஒன்று. இந்த உன்னத கலையை காப்பாற்றவே, நமக்கு வழுக்கையோ தலைமுடி இருக்கிறதோ ரயில் பயணத்தில்  சீப்பு வைத்திருப்பது நலம்.நம் இருக்கையில் கால் வைத்து ஏறினால் நாம் உட்காரும் இடம் அழுக்காகி விடுமே எனவே அடுத்தவரின் இடத்தில் கால் வைத்து ஏற வேண்டும். காலணியுடன் அடுத்தவர் இருக்கையில் கால் வைத்து ஏறுதல் இன்னும் சிறப்பு. இவ்வாறு கால் வைத்து ஏறியவுடன் நம்மிடமிருந்து மின்விசிறியையும், மின்விசிறியிலிருந்து நம்மையும் பாதுகாக்கும் இரும்பு இடைவெளிகளுக்குள் சீப்பை விட்டு லாவகமாக சுற்ற வேண்டும். தகர டப்பாவை தரையில் உருட்டியது போன்ற சத்தத்துடன் fan சுற்றத்துவங்கும். "நான் மின்விசிறியை ஓட வைத்துவிட்டேன்" என்ற பெருமித பார்வையை அருகிலிருப்போர் மீது வீசி விட்டு அமர்வதற்கும், தர்மம் கேட்போர் வருவதற்கும் சரியாக இருக்கும். உடனே நாம் அனைவரும் ஞானி ஆகிவிடுவோம் - எப்படி என்கிறீர்களா? அதான் - எதிலுமே பற்றில்லாதது போல் வானத்தையும் தரையையும் வெறித்து பார்த்து யோசனை செய்வது போல் நடித்து, தர்மம் கேட்பவர் நம் கண்ணை விட்டு மறையும் வரை ஞானி போல் பாவனை செய்கிறோமே...
fan சுற்றுகிறது... காற்று வருகிறது... இப்போது தண்ணீர் குடிக்கத்தோன்றுமே...பிளாட்பாரம்களில் "குடிநீர்" என்று எழுதியிருக்கும் குழாய்களில் வரும் தண்ணீரை இப்போது முகம் கழுவக்கூட நிறைய பேர் பயன்படுத்த தயங்குகிறார்கள். அங்கு வரும் தண்ணீர் மீது நமக்கு அவ்வளவு நம்பிக்கை. அங்கு ஒரு நெளிந்த டம்ளரை இரும்பு சங்கிலியில் கட்டி வைத்திருப்பார்கள். டம்ளரை விட சங்கிலியின் விலை அதிகம் இருக்கும். இது, அரசு மக்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. நமக்கும் அரசுக்கும் என்னே ஒரு பொருத்தம்! இத்தகைய இடங்களில் புது டம்ளர் நாம் யாரேனும் பார்த்திருக்கிறோமா? ஒரு வேளை புதியதாய் வாங்கினாலும் அதை நன்றாக அடித்து நெளித்து பழையதாக்கித்தான் மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும் என்று ரயில்வே விதி இருந்தாலும் இருக்கலாம்...யார் கண்டது? இப்போதெல்லாம் எல்லோரின் கையிலும் "rail neer" இருக்கிறது. விரைவில் "bus neer" வந்தாலும் வரலாம். நமக்கென்ன கவலை? நாம் எந்த நீரையும் விலை கொடுத்து வாங்குவோம். நகரங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் குழாய் என்று ஒன்று உண்டு என்பதையே நாம் மறந்து பல வருடங்கள் ஆகி விட்டதே! இன்னும் சில வருடங்களில் ஆங்கிலேயர்கள் போல் நீருக்கு பதில் பீர் குடித்தாலும் குடிப்போம். "rail neer" மறைந்து ரயில் நிலையங்களில் "rail beer" விற்பனை அமோகமாக நடக்கும். உலகமயமாக்கல் முழுமை அடைய வேண்டாமா?

அன்பு, பிரிவு, எதிர்பார்ப்பு,  தனிமை, வெறுமை என எத்தனை உணர்வுகளை தின்று ஏப்பம் விடுகின்றன ரயில் நிலையங்கள்...! எத்தனை விதமான மனிதர்கள்...எத்தனை விதமான பாசாங்குகள்...! இவற்றை பார்த்து பார்த்து சலித்து போன ரயில், கூக்குரலிட்டு station விட்டு ஓடத்துவங்கும்...ஓடும் ரயிலில் நாம் அடிக்கும் கூத்துக்களை அடுத்த வாரம் பார்ப்போம்...

 

7 comments:

  1. அருமையான பதிவு,

    நாம் இந்த மாதிரி செயலேன்னாதான் ஆச்சேர்யம்..........

    ReplyDelete
  2. ரொம்ப நொந்து போயிருப்பிங்க போலருக்கு....

    ReplyDelete
  3. Indian Railway is the best. Than cursing the system enjoy the Journey. Most safest journey for Indians than any other mode of tranport that too on unbelievable prices.

    ReplyDelete
  4. ரசிகர் சார் நீங்க!

    ReplyDelete
  5. @Soms! There are two ways to think about the system.First one is to be a rebellion mind of why India is like this?and the second one is a mind set of Gowndamani comedy of sagajamabba attitude of it is part of our way of life and move on.We Indians mostly fall into second category.

    Highly recommend a film "Outsourced" for those who read this comment column.Thanks.

    ReplyDelete
  6. நல்ல கவனிப்பு நண்பரே... தொடர்ந்து அடுத்த பகுதிகளையும் படிக்கிறேன்.

    ReplyDelete